Monday, May 12, 2014

நாம்தியோ தாசலும் மல்லிகா அமர்ஷேக்கும்



இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவர் நாம்தியோ தாசல்.
மராத்திய கவிதைகளுக்கு உலக அரங்கில் மிக முக்கியமான இடத்தைக்
கொடுத்ததில் நாம்தியோ தாசலின் பங்கு மகத்தானது.

நாம்தியோ தாசலின் காதல் மனைவி மல்லிகா அமர்ஷேக்.
இருவரும் கவிஞர்கள் என்பது  நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய
புள்ளி.

இந்த இரு கவிஞர்களும் ஒருவரில் ஒருவர் அடங்க மறுக்கின்றார்கள்.
இருவருக்குமான அடையாளங்கள் தனித்து அவரவர் சுயத்துடன் நிற்கின்றன.
அதனால் தான் என்னால் நாம்தியோ தாசலும் அவர் மனைவி மல்லிகா அமர்ஷேக்கும் என்று எழுத முடியவில்லை. அண்மையில் புதுவிசைக்காக
இருவரின் கவிதைகளில் நான் விரும்பியதை மொழியாக்கம் செய்திருந்தேன்.
(புதுவிசை இதழ்  ஏபரல் -ஜூன் 2104) அதிலிருந்து இரு கவிதைகள்:



நாம்தியோ தாசல்:




அவள் போன அந்த நாளில்....
----------------------------------------------------

அவள் போன அந்த நாளில்
என் முகத்தில் கறுப்பு வண்ணத்தைப் பூசிக்கொண்டேன்.
கொடூரமான மூளைக்கோளாறு பிடித்தக் காற்றை
ஓங்கி அறைந்தேன்.
என் வாழ்க்கையின் சிறிய துண்டுகளைப் பொறுக்கி
எடுத்துக் கொண்டேன்.
உடைந்தக் கண்ணாடியின் முன்னால் நிர்வாணமாக நின்றேன்.
என்னை நானே பழிவாங்கிக்கொள்ள அனுமதித்தேன்.
"நீ பைத்தியமா?" என்று பாவப்பட்டு சூரியனைப் பார்த்து கேட்டேன்.
கனவுகளை ஓவியங்களாகத் தீட்டிய கலைஞர்கள் மீது
சாபங்களை அர்ச்சித்தேன்.
கிழக்கிலிருந்து மேற்காக நடந்தேன்.
வழியில் அகப்பட்ட கற்களைப் பொறுக்கி
என் மீதே வீசிக்கொண்டேன்.
மலைகள், பள்ளத்தாக்குகளின் ஊடாக
அளவான புன்னகையுடன் பறவையைப் போல ஓடும் தண்ணீர்
எந்தக் கடலைத் தேடி சந்திக்க அலைகிறது?
அல்லது கடல் மட்டத்தில் கசிந்து ஒழுகி மண்ணுக்குள் போய்விடுமோ?
நான் எனக்குச் சொந்தமானவன் தானா?
அவளுடைய இறந்த உடலை நெஞ்சோடு அணைத்து
இதயம்வெடிக்க கதறி அழ என்னால் முடியவில்லை.
அவள் போன அந்த நாளில்
என் முகத்தில் கறுப்பு வண்ணத்தைப் பூசிக்கொண்டேன்.

----------



மல்லிகா அமர்ஷேக் கவிதை:



பெருநகரம் 1
-------------------


அவள் பெண்
கருப்பையால் முழுமையான பெண்
நிறைவான மழைக்காலம்
குறைவில்லா குளிர்காலம்
ஓர் ஆகாயம்
ஓரு கடல்.


அவள் முலைகளிலும் தொடைகளிலும்
நீ
வாழ்க்கையின் அர்த்தங்களைத் தேடி 
அலைகிறாய்.
விடைத்தெரியாத உன் கேள்விகளுக்கு
அவளிடம்
விடைகாணத் துடிக்கிறாய்.

அவள் அமுதக்கலசமோ?
மாறிவிடும் தோற்றமோ?
மனைவி
காதலி
விலைமாது
இவர்களுக்குள்
என்ன வேறுபாடு கண்டாய்?
எண்ணிக்கையத் தவிர.


அந்த உடல்களுக்கு அப்பால்
உயிர்ப்புடனிருக்கும் 'அவள்களை'
நீ வேண்டுமென்றே
உதாசீனப்படுத்துகிறாய்.

உண்மையில்
உன் கேள்விகளுக்கெல்லாம்
படுக்கையறை மட்டுமே
பதிலாக முடியுமா?


உன் காமம் தணிந்த இரவில்
உன்னோடு உறங்கிய அவளை
அறிந்திருக்கவில்லை நீ.
.அவள் பெண்ணோ
ஊத்தைக் கண்ணோ
மாயப்பிசாசோ
இத்தருணத்தில்
கவிதைகளைப் பற்றிய
உன் பேச்சு
ஆச்சரியம்தான்.
ஆனால்
வருத்தமாகவும் இருக்கிறது
இன்னும் எத்தனைக் காலங்கள்
அர்த்தமில்லாத சொற்குவியலாய்
மரப்பாச்சி வாழ்க்கையில்
பொய்யான கீரிடத்தைச்
சுமந்து கொண்டு
திரியப் போகிறாய்?


உன் படகுகள்
பெண்ணின் தொடைகளைச் சுற்றிவந்து
பாய்மரத்தை விரிக்கின்றன
கருப்பை என்ற கைக்குட்டையை
பெண்கள் அசைக்கிறார்கள்
'பாவம் அவன் தீவை
அவன் கண்டடையட்டும்!'
என்கிறார்கள்.
மூன்றாவது கடற்கரையாக
அவர்கள் மாறுகிறார்களோ
இல்லை
அவர்கள் முலைக்காம்புகளில்
உன் படகு இளைப்பாறுகிறதோ..
சத்தமாகப் பாடுகின்றாய்.

அமெரிக்கா அமெரிக்கா
உரேக்கா யுரேக்கா..
இப்படியாக ஏதோ ஒரு பாடலை
கடலலைப் போன்ற அவள் கூந்தலில்
உன் சரீரம்
தொங்கிக்கொண்டிருக்கிறது.


அவள் கண் இமைகளில் ஈர உதடுகளில்
காய வைக்கிறாய்
உன் சுவையான அதிகப்படியான
தர்க்க நியாயங்களை.


மகிழ்ச்சி அலையின் உச்சக்கட்டத்தில்
நிறைவுகளின் விளிம்பில் நீ.


இப்போதும்
நான் சொல்லவரவில்லை
அவள் தேவதை என்று!
ஆனால்
அரைநிர்வாணமாகிப் போன
உன் ஆன்மாவுக்கு
அவள் மட்டுமே
ஆடையாக முடியும்!.

---------------------






No comments:

Post a Comment