Tuesday, January 17, 2012

மும்பை ஜனக்கடலில்





மும்பையை முழுசா பாக்கனுமா... மும்பை வி.டி ஸ்டேஷனைப் பாருங்க. (இப்போ அதுப் பேரு சி.எஸ்.டி ங்க)
இல்லைனா தாதர் ஸ்டேஷனுக்கு வாங்க. தாதர் ஸ்டேஷனில் நீங்க நடக்க வேண்டாம். போற திசையை நோக்கி நின்னாப் போதும். அப்படியே ஜனக்கூட்டமே உங்களை விர்ருனு எடுத்திட்டு போயிடும்.

மும்பை பெண்களுக்கு ஓர் அசாதரணமான திறமை உண்டு. அதைப் பார்க்கனும்னா நீங்க
வி.டி. ஸ்டேஷனுக்குப் போனா ரொம்ப வசதியா இருக்கும். டிரெயின் வந்து ப்ளாட்பாரத்தில்
நிக்கறதுக்கு முந்தியே ஹேண்ட் பேக்கை இறுக்கமா முன்பக்கம் போட்டு பிடிச்சிக்கிட்டு
துப்பட்டாவை இழுத்து சொருகிக்கொண்டோ அல்லது துப்பட்டாவை மடிச்சி பேக்கில்
வைத்துக் கொண்டோ ரைட் சைட் விண்டோ ஸீட்டை பிடிக்கறதுக்கு ஒரு ஜம்ப் அடிப்பாங்கப்
பாருங்க... எம்மாடியோவ் அந்தக் காட்சி கண்கொள்ளாக் காட்சியா இருக்கும்.
ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிகளில் இந்த மாதிரி ஒரு போட்டியை வச்சா
எங்க ஊரு துப்பட்டாக்கள் தூள் கிளப்பி விடுவார்கள்.
ஜல்லிக்கட்டில் காளை மாடு அடக்குவதெல்லாம் இந்த வீர சாகசத்திற்கு முன்னால்
வெறும் ஜிஜிப்பி.

அப்புறம் இந்த டிரெயினில் ஏறி உட்காந்த வுடனே இரண்டு நிமிடங்களுக்குள் நிக்கிறதுக்கு
இடமில்லாமல் நிரம்பிவிடும். நிற்பவர்கள் உட்கார்ந்திருப்பவர்களிடம் "ஸீட் ஸீட் ' என்று
கேட்பார்கள். அதிலும் சிலர் சைகையால் 'எங்கே?" என்று கேட்பார்கள். உட்கார்ந்திருப்பவர்கள்
சொல்லியாக வேண்டும். உடனே நிற்பவர் ஸீட்டை ரிசர்வ் செய்துவிடுவார்.
அதிலும் ஒரு சிலர் பைகுல்லாவிலோ தாதரிலோ வந்து அதே வண்டியில் ஏறப்போகும்
தன் தோழியருக்காக ஸீட் ஒதுக்குவது... இதில் நடக்கும் குளறுபடிகள், வாக்குவாதங்கள்,
சண்டைகள், இத்தனைக் கூட்டத்துக்கு நடுவிலும் ஜோராக நடக்கும் வளையல், காதணி,
பொட்டு, நகப்பாலிஷ், ஹேர்க்கிளிப் , நைட்டி, சுடிதார் டிரெஸ் மெட்டிரியல்,சிக்கு, ஆரஞ்சு பழ விற்பனை என்று ஒரு சில்லறை வணிக வளாகமே ஏறி இறங்கி மும்மரமாக வியாபாரம் நடக்கும்.




இந்த மும்பைக்கு நான் நான்காவது தலைமுறை தமிழ்க்குடும்பம். நான் ஓடி விளையாடிய
கடற்கரையைக் காணவில்லை என்று இப்போது சொன்னால் உங்களுக்கு வடிவேல் தன்
கிணறு காணவில்லை என்று ஜோக் அடித்த மாதிரி இருக்கலாம். ஆனா என் கடற்கரை
காணாமல் போனது ரொம்பவும் நிசமானது. என் வீட்டு பெரிய ஜன்னலிருந்து பார்த்தால்
கடற்கரை தெரியும். மாலை நேரத்தில் மட்டுமல்ல, பள்ளிக்கூடத்திற்கு போன நேரம் தவிர
மற்ற நேரமெல்லாம் அந்தக் கடற்கரை தான் எங்கள் விளையாட்டு மைதானம்.
கொளுத்துகின்ற வெயிலிலும் விளையாண்டிருக்கிறேன். பாடப்புத்தகம் எடுத்துப்
படித்தாகவோ ஹோம் வொர்க் எதுவும் செய்ததாகவோ நினைவில் இல்லை.
எங்களைக் கண்டு கடற்கரை பயப்படவில்லை. பெற்றோர்கள் தான் பயந்துப் போய் தமிழ்நாட்டில் விடுதிகளுடன் கூடிய பள்ளிக்கூடங்களில் சேர்த்துவிட்டு நிம்மதியாக இருந்தார்கள்.
நாங்கள் வளர வளர ஒவ்வொன்றாக இந்த மும்பையின் காட்சிகளும் மாறிக்கொண்டே
வந்தது. அந்த மாற்றத்தில் தான் என் கடற்கரையும் காணாமலே போய்விட்டது.
இப்போது என் கடற்கரை இருந்த இடத்தில் தான் பாந்திரா சயான் ஹைவே..
அந்த ரோட்டில் காரில் போகும் போதெல்லாம் இப்பொதும் என் காதுகளில்
அந்தக் காணாமல் போன கடலலைகளின் சப்தம் கேட்கிறது.


பாந்திரா என்று சொன்னவுடன் இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
மும்பையில் அய்யா வரதராசன் கொடி கட்டிப் பறந்த நேரம். அவர் மும்பையில்
இருக்கும் வரை செண்ட்ரல் மாதுங்கா ரயிலடிக்கு அருகில் தான் அவருடைய
கணபதி விழா பத்து நாட்களும் நடக்கும். சும்மா ஜே ஜேனு. தமிழ்நாட்டின்
சினிமா பிரபலப் பாடகர்கள் அனைவரும் வந்திருக்கிறார்கள்.
ஒருமுறை அவர் போட்ட பந்தல் தீ பிடித்து எரிந்துப் போய்விட்டது.
அதிகாலை விடியவில்லை. வரதராசன் காலகில்லாவுக்கு வருகிறார்.
காலகில்லா பகுதி சயானுக்கும் தராவிக்கும் நடுவில் இருக்கும் இடம்.
அங்கிருந்த என் மாமா சண்முகராசன் அவர்களை எழுப்பி கூட
அழைத்துக் கொண்டு பாந்திராவில் இருக்கும் சிவசேனா பால்தாக்கரே
வீட்டுக்கு அவர் கார் விரைகிறது. அவர்கள் இருவரும் என்ன பேசிக்கொண்டார்கள்?
தெரியாது. ஆனால் வரதராசன் கோபமாக இருந்திருக்கிறார்.
அன்று மாலைக்குள் எரிந்தப் பந்தல் மீண்டும் எழுந்து நின்றாக வேண்டும் என்று
சொல்லிவிட்டு வந்துவிட்டார்கள்.
அன்று மாலை வழக்கம் போல திட்டமிட்ட படி அங்கே பந்தலில் நிகழ்ச்சி நடந்தது.
இந்த்ச் சம்பவம் மணிரத்தினத்தின் "நாயகன் " அறியாத நாயகன் கதை.




கடந்த ஞாயிறன்று மாலை எழுத்தாளர் மன்றத்தின் மாதாந்திர ஆய்வுக்கூட்டம். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் நினைவுச் சொற்பொழிவுனு என்னைப் பேசச் சொல்லியிருந்தார்கள்.
சரி என்று ஒத்துக்கொண்டு பேசிவிட்டு வந்தேன். இன்று காலை 20/12/2011 தினத்தந்தியில்
புகைப்படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது.
செய்தியில் : புதியமாதவி, விசுவநாதன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்னு எழுதியிருக்காங்க.
மற்ற பத்திரிகைகளில் எப்படி வந்திருக்கிறதோ..! தெரியாது. இதற்காகவெல்லாம் நாங்க
பத்திரிகையாளர்களுடன் சண்டை போடுவதில்லை. தினசரிகளில் நகைச்சுவை வரக்கூடானு
யார் சொன்னது? !!!


நன்றி : வடக்கு வாசல் ஜன.2012

No comments:

Post a Comment