Wednesday, April 29, 2009

சென்னைத்தமிழ்




குப்பத்து மொழியும் சில குழப்பங்களும்






அன்பின் Pudiyamadavi





தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் வருகிற பலரின் கேலிக்கு உள்ளாவது சென்னை மொழி (குப்பத்து மொழி) இதனை ஒரு பெரிய நகைச்சுவையாக பாவித்து பேசுவதுடன் கொஞ்சமும் யோசிக்காமல் அதற்கு எழும் கைத்தட்டல்களும் அதனை தொடர்ந்து சிங்கப்பூரில் தான் தமிழ் வாழ்கிறது இங்குதான் தூயதமிழை நான் கண்டேன் தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் காதில் கேட்பது தமிங்கிலீஸ் என்ற மேதமைப் பேச்சுகளால் பல நேரத்தில் கடுப்பானதுண்டு. (இது போன்று பேசுபவர்களை ஒரு ஞாயிறு முழுமைக்கும் சிங்கப்பூர் நூலக வாயிலில் நிறுத்தி அங்கு சேமிக்கப்பட்டுள்ள தமிழ் புத்தகங்களை எத்துனை பேர் (சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்கள்) வாசித்து இன்புறுகின்றனர் என்பதை கணக்கெடுக்கச் செய்யவேண்டும் என்ற ஆவா நெடுநாளாக என்னுள் உள்ளது).





சமீபத்தில் புவிநாள் விழாவினை கொண்டாட தென் தமிழகத்தில் இருந்து வந்திருந்த குருமகான் மகாமகரிஷி பரஞ்ஜோதியார் கூட சென்னை பாஷை(மொழி)-யை விட்டுவைக்கவில்லை. இஸ்திகுனு வா இதுக்கு எந்த அகராதியை வைத்து நாம் பொருள் அறிந்துகொள்வது என்று நகைத்து அதற்கு எழுந்த கையொலியில் இன்புற்று இங்குதான் (சிங்கப்பூர்) தமிழ் தமிழாக இருக்கிறது என்ற பேச்சால் அதற்கு பின்பு அவர் ஆற்றிய சொற்பொழிவை கேட்கவிரும்பாதவனாக அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட்டேன்(அதற்கு பின்புதான் அவரது சொற்பொழிவே ஆரம்பமானது).



சென்னை மொழிபற்றிய உங்களின் பார்வையை தெரிந்துகொள்வதன் வழியே இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து உற்றுநோக்க ஏதுவாக அமையும்.



1. குப்பத்து பாஷை (மொழி) உருவானதற்கு ஏதேனும் பின்னணி உண்டா? (அதாவது எப்படி தோன்றியிருக்ககூடும்-ஆக தமிழில் சமீபத்தில் தோன்றிய வட்டார பாஷை அல்லவா?)



2. குப்பத்து பாஷை (மொழி) வட்டார வழக்கில் வருமா எடுத்துக்கொள்ளலாமா?



3. சென்னை பாஷை (மொழி) என்றாலே பொதுவாக குப்பத்து பாஷை (மொழி) தானா அல்லது இதில் இருந்து வேறுபட்டதா? தற்போதைய பொதுவான சென்னை மொழி குப்பத்து பாஷையிலிருந்து மருவியதா?



4. குப்பத்தில் பிறக்கும் உணர்வுள்ள இசை பாடல்களை சில மேதமைகள் மிக இழிவாக சுட்டிக்காட்டியுள்ளனர் குப்பத்து மொழியை இழிவாக காணச்செய்வதுபோல் அவர்களின் இசை வாழ்வாதரங்கள் என் இன்னபிறவற்றையும் சேர்த்து சிலர் இழிவுபடுத்துகின்றனர். ஆக இதையெல்லாம் எவ்வையில் எடுத்துக்கொள்வது .



5. குப்பத்து பாஷை (மொழி)யால் தமிழ் சிதைவுறுகிறதா?



பாண்டித்துரை

சிங்கப்பூர்


http://pandiidurai.wordpress.com

சிலர்தான் மாற விரும்புகிறார்கள்
மீதிப்பேர் மாற்றத்தைபற்றி சும்மா பேசவே விரும்புகிறார்கள்



அன்பினிய பாண்டித்துரை அவர்களுக்கு,
வணக்கம்.




தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் வருகிற பலரின் கேலிக்கு உள்ளாவது சென்னை மொழி (குப்பத்து மொழி) இதனை ஒரு பெரிய நகைச்சுவையாக பாவித்து பேசுவதுடன் கொஞ்சமும்

யோசிக்காமல் அதற்கு எழும் கைத்தட்டல்களும் அதனை தொடர்ந்து சிங்கப்பூரில் தான் தமிழ் வாழ்கிறது இங்குதான் தூயதமிழை நான் கண்டேன் தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் காதில்

கேட்பது தமிங்கிலீஸ் என்ற மேதமைப் பேச்சுகளால் பல நேரத்தில் கடுப்பானதுண்டு. (இது போன்று பேசுபவர்களை ஒரு ஞாயிறு முழுமைக்கும் சிங்கப்பூர் நூலக வாயிலில் நிறுத்தி அங்கு

சேமிக்கப்பட்டுள்ள தமிழ் புத்தகங்களை எத்துனை பேர் (சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்கள்) வாசித்து இன்புறுகின்றனர் என்பதை கணக்கெடுக்கச் செய்யவேண்டும் என்ற ஆவா

நெடுநாளாக என்னுள் உள்ளது).

>> சிங்கப்பூர் வருகிற என்பதை மாற்றி மும்பை வருகிற என்றும்
சிங்கப்பூர் நூலக வாயிலில் என்பதை மும்பைத் தமிழ்ச்சங்க நூலக வாயிலில் என்றும் மாற்றிக்கொண்டால் ...
மும்பையிலும் இதே நிலைமைதான்!





சமீபத்தில் புவிநாள் விழாவினை கொண்டாட தென் தமிழகத்தில் இருந்து வந்திருந்த குருமகான் மகாமகரிஷி பரஞ்ஜோதியார் கூட சென்னை பாஷை(மொழி)-யை விட்டுவைக்கவில்லை.

இஸ்திகுனு வா இதுக்கு எந்த அகராதியை வைத்து நாம் பொருள் அறிந்துகொள்வது என்று நகைத்து அதற்கு எழுந்த கையொலியில் இன்புற்று இங்குதான் (சிங்கப்பூர்) தமிழ் தமிழாக

இருக்கிறது என்ற பேச்சால் அதற்கு பின்பு அவர் ஆற்றிய சொற்பொழிவை கேட்கவிரும்பாதவனாக அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட்டேன்(அதற்கு பின்புதான் அவரது

சொற்பொழிவே ஆரம்பமானது).



சென்னை மொழிபற்றிய உங்களின் பார்வையை தெரிந்துகொள்வதன் வழியே இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து உற்றுநோக்க ஏதுவாக அமையும்.



1. குப்பத்து பாஷை (மொழி) உருவானதற்கு ஏதேனும் பின்னணி உண்டா? (அதாவது எப்படி தோன்றியிருக்ககூடும்-ஆக தமிழில் சமீபத்தில் தோன்றிய வட்டார பாஷை

அல்லவா?)

* குப்பத்து பாஷை என்ற உங்கள் சொல்வழக்கு புரிந்து கொள்ள எளிதாக இருந்தாலும் அது சரியல்ல என்பது என் கருத்து.
சென்னை வட்டார வழக்கு என்றோ சென்னை குடிசைவாழ் மக்களின் பேச்சுமொழி என்றோ இருந்திருந்தால் சரியாக இருக்கும்.
முதலில் குப்பத்தில் வாழும் மக்கள் யார்?என்ற அறிந்து கொண்டால் சில முடிச்சுகள் அவிழும்.
அனைவரும் உழைக்கும் வர்க்கத்தினர். உடல் உழைப்பு இழிவானதாக கருதப்படும் சமுதாயம் உழைப்பவர்களைத் ஊர்க்கோடியில்
ஒதுக்கி வைத்துள்ளது. தீண்டத்தாகதவர்கள் என்று ஒடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள்.
சற்றொப்ப 2000 ஆண்டுகள் கல்வி இவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்களிடம்தான் தமிழ் தன் உயிர்ப்பை
இழந்துவிடாமல், புராண இதிகாச கற்பனைக்குக்குள் தன்னை இழந்துவிடாமல் தன் சுயமிழக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
தமிழை 2000- ஆண்டுகள் தொடர்ந்து வாழ வைத்துக் கொண்டிருப்பவர்கள் இந்த குப்பத்து வாழ் தமிழர்கள் தான்.

சென்னை குடிசை வாழ் மக்களின் வழக்குத்தமிழ் இன்றொ நேற்றோ உருவானதல்ல.
ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னை மாநகரம் உருவான காலகட்டத்தில் உடல் உழைப்புக்கான தேவையும்
வாய்ப்பும் சென்னையிலும் சென்னையைச் சுற்றி இருந்த இடங்களிலும் உருவான காலக்கட்டத்தில்
நம் கிராமப்புறங்களிலிருந்து வயிற்றுப்பிழைப்புக்காக இடம் பெயர்ந்து வந்தவர்கள் தான் பெரும்பாலான
சென்னை குடிசை வாழ் தமிழர்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னை - மெட்ராஸ் மாகாணமாக இருந்தப்போது
தெலுங்கர்களும் கன்னடர்களும் அதிகமாக சென்னையில் வசித்தார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு பார்த்தால்
சென்னை தமிழ் உருவான வரலாறு ஒரளவு புரியவரும்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் என்பதாலும் பல்வேறு மாவட்ட தமிழ் வழக்கு மொழிகளும்
கலந்து ஓர் அவியல் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு.

சென்னை மொழி மற்ற வட்டார வழக்குகளிலிருந்தும் மிகவும் வித்தியாசமானதாகவும் எதற்குள்ளும் அடைக்கமுடியாமல்
திமிறி நிற்கும் மாநகரக்குரலாகவும் இருப்பது இதனால்தான்.



2. குப்பத்து பாஷை (மொழி) வட்டார வழக்கில் வருமா எடுத்துக்கொள்ளலாமா?

* வட்டார வழக்கில்வரும்.



3. சென்னை பாஷை (மொழி) என்றாலே பொதுவாக குப்பத்து பாஷை (மொழி) தானா அல்லது இதில் இருந்து வேறுபட்டதா? தற்போதைய பொதுவான சென்னை மொழி குப்பத்து

பாஷையிலிருந்து மருவியதா?

வழக்கம்போல மொழியும் பேசப்படும் மனிதர்களின் வர்க்க சாதி இட வேற்பாடுகளைச் சுமந்து கொண்டுதான் வருகிறது.
சென்னையில் பொதுவாக மேல்தட்டு மக்கள் பேசும் மொழி சமஸ்கிருதம் கலந்த/ஆங்கிலம் கலந்த தமிழாக இருக்க
குடிசைவாழ் மக்களின் பேச்சுதமிழ் முன்னதிலிருந்து மாறுபட்டதாக இருக்கிறது. மாறுபட்டது என்பதாலேயே கலப்படமில்லாத
தூயதமிழ் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. ஆனால் குடிசை வாழ் மக்களின் மொழிக்கலப்பு இயல்பானதாக அமைந்துள்ளது.
அவர்களுக்கே பிறமொழிச் சொல் என்பதெல்லாம் தெரியாது.






4. குப்பத்தில் பிறக்கும் உணர்வுள்ள இசை பாடல்களை சில மேதமைகள் மிக இழிவாக சுட்டிக்காட்டியுள்ளனர் குப்பத்து மொழியை இழிவாக காணச்செய்வதுபோல் அவர்களின்

இசை வாழ்வாதரங்கள் என் இன்னபிறவற்றையும் சேர்த்து சிலர் இழிவுபடுத்துகின்றனர். ஆக இதையெல்லாம் எவ்வையில் எடுத்துக்கொள்வது .

* சாதிப்படிநிலை சமூகத்தில் உடல் உழைப்பு > ஏழ்மை > தீண்டாமை எல்லாம் நேர்க்கோட்டில் அமைந்திருப்பதை உன்னிப்பாக கவனித்தால்
குடிசைவாழ் பேச்சுமொழியை யார் எதற்காக இழிவாக சுட்டிக்காட்டுகிறார்கள் என்பதைப் புர்நிதுகொள்ள முடியும்.
பஞ்சமர் நாவல் எழுதிய ஈழத்து தமிழ் எழுத்தாளர் கே.டானியல் அவர்கள்

" ஈழத்துத் தமிழறிஞர் சிலரால் நையாண்டி செய்யப்படும் 'இழிசனர் வழக்கு'
மொழியிலேயே இந்த நாவலைச் செய்திருக்கிறேன். தமிழ்ச் சான்றோர் அன்னிய நாகரிகத்தில் மோகம் கொண்டு தமிழைச் சீரழித்தபோதும்,
ஏகாதிபத்திய அடிவருடிகள் தமிழை மறந்து மறுத்து நையாண்டி செய்த போதும் பண்டித வித்துவ பரம்பரையினர் தமிழன்னையை மூடி முக்காடிட்டு
இருள் சிறைக்குள் வைத்த போதும் தமிழ் அன்னையை சிறைமீட்டு தேறுதல் கூறிப் பாதுகாத்தவர்கள் இந்த பஞ்சமர் கூட்ட மக்களேயாகும்.
இவர்களே தமிழுக்கு எஜமானர்களுமாவர்கள். அதனால் அந்த எஜமானர்கள் பேசிய வழக்கையே தமிழென ஏற்று இதன் பாத்திரங்களுக்கு
பூரண சுதந்திரம் கொடுத்து இவர்களைப் பேச வைத்திருக்கிறேன்" என்றும்
"மக்களின் எதிரிகள் எதைப் பிழை என்கிறார்களோ அந்த அதுவே மிகவும் சரியானதாகும்" என்றும் சொல்லியிருப்பதையும் நினைவு படுத்த
விரும்புகிறேன்.

மும்பை தமிழ்ச்சங்கத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து நெல்லை கண்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். தொலைக்காட்சிகளில்
பட்டிமன்றங்கள், கம்பர் விழாக்களில் அவருடைய பேச்சை சில நேரங்களில் ரசித்தது உண்டு! ஏனவே அவருடைய பேச்சைக் கேட்க
போயிருந்தேன். அப்போது இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் இருவரின் இசையையும் அவர்கள் சார்ந்த சாதி, மதம் கலந்து
அவர் நகைச்சுவை என்று பேசிய அபத்தம் என போன்றவர்களுக்கு எரிச்சல் மூட்டியது. அதுவரை அவர் மீதிருந்த மரியாதை
மறைந்து சில பிம்பம் உடைந்து போனது.


5. குப்பத்து பாஷை (மொழி)யால் தமிழ் சிதைவுறுகிறதா?

எந்த வட்டார வழக்குகளாலும் தமிழ் சிதைவுறுவதில்லை!


சில குறிப்புகள் :

> என் வாழ்விடம் மும்பை, என் சொந்தவூர் தமிழ்நாட்டின் தாமிரபரணி என்பதால் எனக்கும் சென்னைக்குமான தொடர்பு
மும்பைக்கும் சிங்கைக்குமான தொடர்புளவுதான். எனவே சென்னை குடிசைவாழ் மக்களின் மொழியுடனோ வாழ்க்கையுடனோ
எனக்கு அதிகத் தொடர்பில்லை. தெரியாது என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.

> சென்னை வழக்கு மொழி குறித்த மேற்சொன்ன என் கருத்துகள் என் சிற்றறிவுக்கு எட்டிய அளவு மொழி சமூகம் சார்ந்த
பார்வையின் ஊடாக கண்ட ஒரு பருந்து பார்வை தான்.

> வட்டார வழக்கு மொழியின் தாக்கம் படிப்படியாக புலம் பெயர்ந்த தமிழர்களிடம் இல்லாமல் போய்விடுவதற்கான சாத்தியக்கூறுகள்
இருக்கின்றன. இன்றைய தொலைக்காட்சி ஊடகம் அறிந்தோ அறியாமலோ அதைத்தான் செய்கிறது .

> பேச்சுதமிழில் கதைகள் எழுதும்போது என் போன்றவர்களுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு.
எல்லோரும் வட்டார மொழி வழக்கில் எழுதுவது போல என்னால் எழுத முடியுமா?
எங்கள் மும்பை டமிளரின் (தமிழரின்) பேச்சு மொழியில் சரளமாகக் கலந்துவிட்ட இந்தி, மராத்தி.குஜராத்தி
மொழிச்சொற்களைக் கலக்காமல் எப்படி எழுதுவது?
அதனால் தான் குறைந்தப்பட்சம் "அச்சா, நஹி, சலோ, க்யா, பானி, இத்தியாதி மினிகலப்புகளுடன்
என் கதைமாந்தர்களின் பேச்சுதமிழை எடிட்டிங் செய்கிறேன்.!

சென்னை குடிசைவாழ் மக்களின் பேச்சு தமிழ், வட்டார வழக்குகள் குறித்து கொஞ்சம் யோசிப்பதற்கான
வாய்ப்பை உங்கள் மடல் கொடுத்துள்ளது. மிக்க நன்றி.

வாழ்த்துகளுடன்,

புதியமாதவி,
மும்பை.

1 comment:

  1. அன்பு புதிய மாதவி வணக்கம் நலமா?
    ஒங்க கருத்து ரொம்ப நல்ல இருந்துச்சு.
    பாராட்டுக்கள்

    ReplyDelete