Wednesday, March 7, 2012

மகளிர் தினமும் காமட்டிபுரமும்


இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 4 பெண்கள் பாலியல் தொழில்
செய்ய ஆரம்பிக்கிறார்கள், அவர்களில் 3 பேர் நிர்பந்தம் காரணமாக இத்தொழில்
செய்ய வந்தவர்கள் .அதிலும் 35.47% பெண்கள் 18 வயது கூட நிரம்பாதவர்கள்
என்பதை இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பக அமைச்சர்
ரேணுகா சவுத்ரி ஒத்துக்கொள்கிறார்.
அடிமைத்தனத்தையும் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து பணம்
சம்பாதிப்பதையும் எதிர்த்து சட்டங்கள் பல எழுத்தில் இருக்கின்றன. இப்பெண்களின்
புனர் வாழ்வுக்காக பல்வேறு நலத்திட்டங்கள், சட்டங்கள், ஆய்வுகள்,
அறிக்கைகள், தொண்டு நிறுவனங்கள் என்று வரிசையாக ஒரு பக்கம்
அணிவகுப்பு நடந்தவண்ணம் இருக்கின்றது.
எனினும் சுதந்திரம் பெற்று சட்டங்கள் மனித உரிமைகள் என்ற தளத்திற்கும்
அப்பால், கற்பு என்ற பெண் ஒழுக்கத்தை அதி தீவிரமாக கொண்டாடும்
இந்திய மண்ணில் இன்னும் இருக்கின்றன வேஷியா கிராமங்கள்.
தமிழில் அப்படியே சொல்வதனால் தேவடியா கிராமங்கள்.அப்படித்தான்
அவை அழைக்கப்படுகின்றன.
குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்திலிருந்து 210 கி,மீ தொலைவில் இருக்கும்
வாடியா கிராமம் தான் வேஷியா கிராமம் என்றழைக்கப்படுகிறது.
பல நூறு வருடங்களுக்குப் பின் வருகின்ற மார்ச் மாதம் 11 ஆம் தேதியில்(11/3/2012)
தான் முதல் முறையாக இங்கிருக்கும் பெண்கள் 15 பேருக்கு முறைப்படி
திருமண வைபவம் நடக்க இருப்பதாகவும் அதற்கு அழைப்பிதழ் தயாராகி
அனுப்பப்பட்ட பின், இத்திருமண நிகழ்ச்சியை முன்னின்று நடத்தும்
தொண்டு நிறுவனத்திற்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவமும்
நிகழ்ந்திருக்கிறது. செய்திகளுக்காக அலையும் இன்றைய ஊடகங்களுக்கு
இச்செய்தி பெருந்தீனியாக இருப்பதும் என்னவோ இந்த ஓரிடத்தில்
மட்டுமே இம்மாதிரி கிராமம் இருப்பது போலவுமான தோற்றம்
ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
மனித இன வரலாற்றின் மிகப் பழமையான இத்தொழில் நடக்காத
மாநில்மே கிடையாது என்பது தான் உண்மை. பாரதமாதாவும் இதற்கு
விதிவிலக்கல்ல.
ஆடலும் பாடலுமாக வாழ்ந்த பெண்கள் பேரரசர்களின் ஆசைநாயகிகளாக
இருந்தார்கள் என்பதும் அவர்கள் அரசியலிலும் பொருளாதரத்திலும்
மிகவும் செல்வாக்குடையவர்களாக விளங்கினார்கள் என்பதும்
வரலாற்றில் மறுபக்கமாக இருப்பதை எவரும் மறுப்பதற்கில்லை.
ஜஹாங்கீர், அவுரங்கசீப் முதல் தஞ்சையை ஆண்ட அரசர்களுடன்
மிகவும் அதிகாரம் செலுத்திய அக்காமார்கள் வரை … …
மும்பையை இன்றுவரை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் தாதாக்களின
காதலிகளைப் பற்றி வெளிவந்திருக்கும் ஹூசைன் சைதியின்
மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பை என்ற சமகால வரலாறுவரை
பாலியல் தொழிலும் பெண்களும் பற்றிய பல்வேறு செய்திகளையும்
அதற்கான காரண காரியங்களையும் அவரவர் பார்வையில்
பார்த்துக் கொண்டும் விமர்சித்துக் கொண்டும் இருக்கின்றோம்.
இச்சூழலில் தான் வாடியா கிராமம் குறித்த மேற்கண்ட செய்தி
பத்திரிகை உலகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருப்பதை
நாம் கவனிக்க வேண்டும்.
இப்பகுதியில் வாழும் 80 சரனியா ஆதிவாசி குடும்பங்களில்தான்
இத்தொழில் த்லைமுறை தலைமுறையாக தொடர்ந்து வருகிறது.
தொடர்ந்து போரில் ஈடுபட்ட ரஜபுத்திரர்களின் பிறப்பு விகிதம்
போர் ம்ரணங்கள் காரணமாக மிகவும் குறைந்த நிலையில் குழந்தை
இல்லாத பெண்ணுடன் , அவள் விருப்பத்துடன் இன்னொரு ஆண்
உடலுறவு கொள்ளவும் குழந்தையைப் பெற்றெடுக்கவும் இச்சமூகம்
ஏற்படுத்திக்கொண்ட ஒரு சடங்காகவே ஆரம்ப காலத்தில் இம்முறை
இருந்தது என்று சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆனால்
அம்மாதிரி ஏற்பாடுகள் காலப்போக்கில் மறக்கப்பட்டு கைவிடப்பட்ட
நிலையில் இப்பழக்கம் மட்டும் மாறாமல் அச்சமூகத்தில் இருந்ததாகவும்
பின்னர் அதுவே அவர்களுககான தொழிலாக மாறியதும்
அச்சமூகத்தில் பிறந்த ஒவ்வொரு பெண்ணும் இத்தொழில் செய்ய
நிர்பந்திக்கப்பட்டதும் நிக்ழ்ந்தது.
கொடா வழக்கம் , (goda system) என்றழைக்க்ப்படும் வழக்கத்தில்
நாக்ரா செருப்பை அப்பெண்ணின் படுக்கையறை வாசலில் வைத்திருந்தால்
அப்பெண் வேறொரு ஆடவனுடன் படுக்கையறையில் இருக்கிறாள் என்பதை
உணர்த்தும். அதிலும் குறிப்பாக அப்பெண்ணின் கணவனுக்கு இம்முறையால்
இது அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்ததாக தெரிகிறது.
அரச ப்ரம்பரை, ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், நிலக்கிழார்கள்
முதல் இன்றைய அரசியல் வாதிகள், தாதாக்கள் வரை இதில் அடக்கம்.
குஜராத் அரசாங்கம் 208 ஏக்கர் நிலத்தை இச்சமூகத்தின் ந்லத்திட்டத்திற்கு
கொடுத்து உதவியது. ஆனால் அத்திட்டமும் முழுமையாக வெற்றி பெறவில்லை.
இத்தொழில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்தது, இருக்கிறது.
ஒவ்வொரு இரவும் 3 முதல் 4 ஆண்கள் வரை இப்பெண்களின்
படுக்கையறைக்கு வருகிறார்கள், மாதவருமானம் 2000 வரை
இதன் மூலம் இப்பெண்கள் சம்பாதிக்கிறார்கள்.
பாரிய பெண்கள், நாட் பெண்கள், கொல்டா & டாம் பெண்கள், டெராடூனிலிருக்கும்
ஜானுசர், வடகாசியிலிருக்கும் ரபைய் பெண்கள் என்று பல்வேறு ஆதிவாசி
இனக்குழு பெண்கள் தங்கள் பெற்றொரால், கண்வனால், சகோதரனால்
இத்தொழிலுக்கு கொண்டுவரப்படுகிறார்கள். 1000 ரூபாய் கடன் வாங்கி
இவர்களில் ஒருத்தியைத் திருமணம் செய்பவன் இரண்டொரு ஆண்டுகளின்
வாங்கியக் கடனை திருப்பிக்கொடுக்க முடியாமல் இப்பெண்களை
ஆடு மாடுகளைப் போல விற்றுவிடுகிறான். வாங்கியவன் பயன்படுத்திவிட்டு
அவனும் விற்றுவிடுகிறான், இப்படியாக இந்த விற்பனைச் சங்கிலி மாநில
எல்லைகளை மட்டுமல்ல, எல்லைக்கோடுகளைத் தாண்டி பாகிஸ்தான்,
ஆப்கானிஸ்தான் என்று நீண்டு கொண்டே போகிறது
வாங்குபவன் இருக்கும் வரை எந்த ஒரு பொருளின் விற்பனையையும்
எந்த ஒரு சட்டமும் தடை செய்துவிட முடியாது.! பெண் விற்பனைப் பொருளா?
கேட்காதீர்கள்… விற்கப்படுகிறாள் என்பது தான் உண்மை.
இந்தக் கசப்பான உண்மையை கற்பொழுக்கத்தை த்லையில் வைத்துக்
கொண்டாட கற்றுக் கொடுத்திருக்கும் இசசமூகம் அவ்வளவு எளிதில்
வெளிப்படையாக ஒத்துக்கொள்வதில்லை.
அத்னால் தான் இத்தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு முறையான
ஆயுள்காப்பீடு வசதியும் மருத்துவ வசதியும் செய்து கொடுக்கப்பட
வேண்டும் என்ற குரல் எழுந்தப் போது அப்படிக் குரல் கொடுப்பவர்களை
எல்லாம் வேசியராக விமர்சிப்பதன் மூலம் தங்கள் கற்பைக்
காப்பாற்றிக் கொண்டது நம் பண்பாடு..
இதோ அவள் பேசுகிறாள்:
.
உங்கள் கற்பை பிரசவித்தக்
கருவறையில் தான்
நானும் பிறந்தேன்.
உங்கள் கண்ணகி
என்னுடன் பிறந்தவள்
என்பதால்
எனக்கு எதுவும்
பெருமை வரப்போவதில்லை.
ஏகபத்தினி விரதனாக
உங்கள் ஸ்ரீராமனை
கட்டாயப்படுத்தியக்
காரணத்தாலேயே
சீதை நான்
பாஞ்சாலியாகப் பிறந்து
பரிதவித்தேன்
உங்கள் பாண்டவர்பூமியில்
கற்பு(உ)டன் பிறந்த
என்னை
இருட்டடிப்பு
செய்வதன் மூலமே
தங்கள் கற்பைக்
காப்பாற்றிக் கொண்டன
உங்கள் காவியங்களும்
கதைகளும்.
என்னிடம் முதலில் வந்தவன்
உங்கள் ஆதிசிவன்.
இப்போது வந்துப் போனவன்
அவன் வாரிசுகளின்
வப்பாட்டி பேரன்
காமவேட்டையில்
கிழிந்து தொங்கும் யோனிகளுக்கு
எப்போதுமே வயதாவதில்லை!
என் பெயர் பத்ரகாளி
என்றாலும் பயப்படாதீர்கள்
என் பெயருக்கும்
உங்கள் தேவிக்கும்
சம்பந்தமே இல்லை.
பாரதநாடு பழம்பெரும்நாடு
அதையும்விட
பழமையானது
என் தொழில்
என் மூலதனம்
என் சந்தை
என் கதை.
நான் -
உங்கள்
பத்தினிக்கு முன்பிறந்த பரத்தை.
பெண்கள் தின வாழ்த்து சொல்லும்
பெண்டீரே..
எனக்காக நீங்கள் போராட வேண்டாம்
கற்புடைய உங்கள் கணவன்மார்
உங்களைத் தீக்குளிக்க வைத்துவிடும்
அபாயத்திற்கு நீங்கள்
அச்சப்படுவது நியாயம்தான்.
காந்திய தேசத்தில்
ஆண்டுக்கு ஒருமுறையாவது
மதுவிலக்கு இருப்பது போல
இன்று மட்டுமாவது
எனக்கும்
விடுமுறை வேண்டும்
“மகளிர்தினம் கொண்டாட”
——————————

1 comment:

  1. காமாட்டிபுரம் கட்டுரை மனதில் ஆறாத காயமாய்.பெண்ணை பெண்ணாய் பார்க்காமல் சக உயிராய் பார்க்கும் காலம் எப்போது ?

    ReplyDelete