
வடக்கு வாழ்கிறது
தெற்குத் தேய்கிறது..
இது-
அரசியல் கோஷமல்ல.
வடக்கில் வங்கத்துப் போர்முனையில்
வடக்கில் பஞ்சாபின் படுகொலையில்
பாய்ப்போட்டு
படுத்து உறங்கிய
இந்திய இறையாண்மை
தெற்கே
இந்துமாக்கடலில் மட்டும்
இரவெல்லாம் விழித்திருந்து
காத்திருந்து
காவல் காக்கிறதாம்!
யாருக்காக?
எதற்காக?
இப்போதும் வடக்குத்தான் வாழ்கிறது
தெற்குத்தேய்கிறது
பக்கத்துவீட்டு பாகிஸ்தானின்
பங்காளிச்சண்டையில்
வங்கதேசம் வந்துதித்த வரலாற்றை
எழுதி எழுதி
பூரித்துப்போன பாரதமாதாவுக்கு
தெற்கே
இலங்கைத் தேசத்தில்
ஈழம் மட்டும்
கசக்கிறதா..?
வடக்குத்தான் வாழ்கிறது
தெற்குத் தேய்கிறது
இந்திய தேசத்தில்
இவர்தான் "தேசப்பிதா" என்று
பாடப்புத்தகத்தில்
எங்களைப் படிக்க வைத்தீர்கள்
அந்த தேசப்பிதாவைக்
கொன்றவனின் கூட்டத்தைக் கூட
உங்கள் அரசியல் வானத்தில்
தலைவர்களாக
அடையாளம் கண்டீர்கள்.
ஒரு பாரதப் பிரதமரைக்
கொன்றவர் என்பதற்காய்
தலைப்பாகைக் கூட்டத்தை
ஒதுக்கவில்லையே..!
ஏ.. பாரதமாதா..
இதெல்லாம் உனக்கு
மறந்துப் போயிருக்கலாம்
மன்மோகன்சிங்கே ..
உங்களுக்கு எப்படி
மறந்துப் போனது?
இப்போதும்
வடக்குத்தான் வாழ்கிறது
தெற்குத் தேய்கிறது
சரித்திர உண்மைகளை
மாற்றி எழுதிய
உங்கள் பொய்முகத்தை
அண்ணாவின் ஆரியமாயை
கிழித்து எரிந்ததை
அவாள்கள் மறக்கலாம்
அண்ணாவின் தம்பியர் மறந்தது ஏன்?
ஆரியமாயையின் புதியநாமம்
இந்தியமாயை.
ஆங்கிலேயன்
அடிமைகள் கழுத்தில் தொங்கவிட்ட
அந்த அடையாள அட்டையுடன்
உலாவருகிறீர்கள்
வரலாற்றில் கறைப்படிந்த
உங்கள் கரங்களால்
ராஜீவின் கதையைச் சொல்லிச்சொல்லி
எங்கள் வரலாற்றைக்
களங்கப்படுத்தாதீர்கள்!
முடிந்தால்-
ஒரு கணமேனும்
உங்கள் முகமூடியைக்
கழட்டி வைத்துவிட்டு
உங்கள் முகத்தைப் பாருங்கள்
பஞ்சாபி என்றும்
வங்காளி என்றும்.
மராட்டியன் என்றும்
அசாமி என்றும்
பீகாரி என்றும்
காஷ்மீரி என்றும்
உங்கள் முகங்கள்
உங்கள் முகங்களாக
ஒப்பனைகளின்றி தெரியும்.
அந்தப் பிம்பங்களுக்கு நடுவில்தான்
உங்களால் பார்க்கமுடியும்
எங்களை-
எங்கள் தமிழ் முகத்தை
எங்கள் ஈழ தமிழ் நிலத்தை.
வடக்கு வாழ்கிறது
தெற்குத் தேய்கிறது
இது இனி அரசியல் கோஷமல்ல.
உலகச்சந்தையில்
இந்திய முகங்களைப்
பட்டா போட்டு
விற்றுத் திரியும்
பாரதமாதாவே..
உன் புதல்வர்களிடன் சொல்லிவை.
வடக்கு வாழ்கிறது
தெற்கு தேய்கிறது
இது அன்று பாடிய மரபுக்கவிதையல்ல.
இது போராளிகள் எழுதும் புதுக்கவிதை.
இதில் மரபுச் சட்டங்கள் உடையும்
பயமுறுத்தும் சீர்-தளை சிதையும்
";நவீனக்கவிதை";
இங்கேதான் விதைக்கப்பட்டது என்று
நாளைய வரலாறு
எங்கள் கல்லறைகளில் எழுதும்.
இது எங்கள்
உயிர் எழுத்துகளின்
போர்ப்படை அணிவகுப்பு.
மெய்யெழுத்துகளில்
புதைத்து வைத்திருக்கும்
புதிய கண்ணிவெடிகள்.
இது வெடிக்கும்.
வெடிப்போம்..
எங்கள் களத்திலிருந்து
அக்னிக்குஞ்சாய்
புறப்படும்
அமைதிப் புறா.
எங்கள் பிள்ளைகளுக்கு
கற்றுக்கொடுக்கும்
கூடுகள் கட்டும் வித்தையை.
குஞ்சுகளைப் பறக்க வைக்கும்
வாழ்க்கையை.
----------------------------------