Tuesday, January 15, 2008

இவைப் பேசினால்...

தமிழ்த்தாய் வாழ்த்து!!
-------------------

மன்னிக்கவேண்டும்
தமிழ்தாய் வாழ்த்து
நான் பாடப்போவதில்லை
தமிழ்த்தாய் இப்போதெல்லாம்
'மம்மி'யாகி
வெறும் 'டம்மி'யாகிப் போனதினால்
மன்னிக்க வேண்டும்
கவிஞர்களே
நான் தமிழ்த்தாய் வாழ்த்துப்
பாடப்போவதில்லை.

எவரையாவது
வாழ்த்திதான்
கவியரங்கை
ஆரம்பிக்க வேண்டும் என்றால்
வாழ்த்துகிறேன்
-என்னை-
என்னுடன் இருக்கும் உங்களை
நம்முடன் இருக்கும்
நட்பு மலர்களை..
வாழ்க
வணக்கம்.

----

எழுதுகோல்
-----------

எழுதுகோல் அறியாத
குகைகளின் கவிதையை
யார் எழுதியது?
ஆதிசிவனிடம் கேளுங்கள்.

எழுதுகோல் ஏமாற்றிய
ஏழைகளின் கவிதையை
ஆர் எழுதியது?
அதிரும் பறையிடம்
கேளுங்கள்..

உண்மைகளைத் தாலாட்டி
உறங்க வைத்த கவிதைகளை
தட்டி எழுப்பிடவே
தரணிக்கு வந்த
ஆதவனின்
ஹைபுன்

கட்டைவிரல்
தொட்டுப்பார்க்காத
ஏகலைவனின்
புதிய ஹைக்கூ.

இந்த மூன்றடிகளில்
முடியப்போவது
துரோணச்சாரிகள்
மட்டுமல்ல
துரோணச்சாரிகளுக்கு
துரோகிகள் என்ற
முத்திரைக் குத்திய
பிதாமகன்களின்
ஆதிக்ககீரிடமும் தான்...

------


தொலைக்காட்சி
----------------------

நிஜங்கள் எல்லாம்
நிழல்களுடன் உறவாடுவதால்
நம் பிள்ளைகள்
'பெப்சி உமா'விடம்
நலம் விசாரிக்கிறார்கள்.

பகுத்தறிவு பேசிய -நம்
அன்னைப் பராசக்தி
இப்போதெல்லாம்
அண்ணா-மலையாகி
ஆருடம் சொல்கிறாள்

மக்களாட்சியின்
அரசிளங்குமாரர்களை
அட்ரஸ் இல்லாமல்
ஆக்கும் வல்லமை
வாக்குப் பெட்டிக்கு
இருக்கிறதோ இல்லையோ
நம் வீட்டு
காட்சிப் பெட்டிக்கு
கட்டாயம் இருக்கிறது.

பாண்டவர் வென்ற
பங்காளிச் சண்டையில்
வாரிசுகளின் கதை
முடிந்து போனதாக
முனிவன் சொன்னதும்
பொய்த்துப் போனது.

கோட்டையைத் தாக்கும்
குடும்பச் சண்டையில்
எல்லோருக்கும் வெற்றி
எல்லோருக்கும் ராஜ்யம்
அட..எல்லோருக்கும் தொலைக்காட்சி!
ஆஹா..இதுவல்லவோ
எங்கள் தமிழன் வென்ற
புதிய குருஷேத்திரம்..

_

பதவி நாற்காலி
---------------
மக்களாட்சி கண்டுபிடித்த
மந்திர நாற்காலியில்
மனிதர்கள் அமரலாம்
மந்திரி ஆகலாம்.
ஆனால்
மீண்டும்
மனிதர்கள் ஆகமுடியாது.

நகையை அடகுவைப்பது
நம்முடைய கதை.
நாட்டையே அடகுவைப்பது
நாற்காலிகளின் கதை.

பதவி நாற்காலிகளே
எம் பாரதநாடு
நீங்கள் பட்டாபோட்டு
விற்பதற்கல்ல...
-------------------

செருப்பு
-------

மாறி மாறி
ஓட்டுப்போட்டு
மக்கள் கண்ட
மாற்றம் என்ன?

போதும்...
மாண்புமிகு மந்திரிகளே
போதும் போதும்
இனி,
உங்களுக்குப் பதிலாக
உங்கள் செருப்புகளே
ஆளட்டும்.
அது ஒன்றும்
எங்களுக்குப் புதிதல்லவே..
இனி,
செருப்புகள் பேசட்டும்
இது-
கல்யாண வீட்டில்
கால்மாறிய செருப்பா?
கடவுள் வீட்டில்
களவுப் போன செருப்பா?
சட்டசபை
ஆயுதமா?

---

அலைபேசி
------------

அலைகளைவிட
பெருகிப்போன
அலைபேசிகளில்
மூழ்கிவிட்டது
மனித பூமி.

படுக்கையில்
பாத்ரூமில்
பயணத்தில்
பாக்கெட்டில்
கைப்பையில்
கால்பையில்
எவ்விடத்தும்
எக்காலமும்
ஜனக்கடலில்
அலைகளின் பேரிரைச்சல்.

இதில்
படம் பார்க்கலாம்
படம் பிடிக்கலாம்
பாட்டு கேட்கலாம்
செய்திப் படிக்ககலாம்
கடிதம் அனுப்பலாம்
காதல் கூட பண்ணலாம்
பேசுவதைத் தவிர
எல்லாம் செய்யலாம்.

பேச வேண்டுமா..
அலைவரிசையில்
"நீங்கள் தொடர்பு கொள்ளும்
வாடிக்கையாளர்
தொடர்பு எல்லைக்குள் இல்லை.."

அந்நியனின்
அலைபேசியில்
இந்தியனின்
கைபேசி எழுதிய
ஹைக்கூ
" miss-call"

-----

ஆடை
----
தமிழர் திருநாளாம்
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு
சிறப்பு பட்டிமன்றம்
காணத் தவறாதீர்கள்.

"ஆடைகள்
உடலுக்கு அவசியமா? அலங்காரமா?"

இரண்டு அணிகளும்
பேசப்பேச
தொடரும் கைதட்டல்..
ஆமாம்..
அசத்தப் போவது யாரூஊ..?

துப்பட்டா இல்லாமல்
நுழைய அனுமதி மறுக்கும்
கல்லூரி வாசல்களில்
கிழிந்து தொங்குகிறது
ஆடைகளின்
பண்பாட்டு அடையாளங்கள்.

---

வாக்குப்பெட்டி
--------------

விளம்பரங்களில்
சிரிக்கும்
கிரிக்கெட் வீரர்கள்
எங்கள் வாக்குப்பெட்டிகள்

எப்போதாவது
எங்களுக்கும்
கிடைக்கலாம்
'உலகக்கோப்பை'
நம்பிக்கையில்
காத்திருக்கும்
100 கோடி ஜனங்கள்.

ஜயஜய ஜயஜய
ஜயஜய ஹே
வந்தேமாதரம்..
"வாக்குப்பெட்டி சின்னத்தில்
வாக்களியுங்கள்"
வந்தேமாதரம்.

----

கோவில் உண்டியல்
-------------------
சாமிகளில்
சாதி இருக்கிறதோ
இல்லையோ
சமத்துவம் இருக்கிறதா
திருப்பதி
ஏழு மலையானுக்கு
எத்தனை உண்டியல்..!
அலுத்துக் கொண்டது
ஆத்தங்கரையில்
அனாதையாக நிற்கும்
உண்டியல் இல்லாத- எங்கள்
ஊர்க்காவல் தெய்வம்.


தவணை முறையில்
தவறுகள் செய்துவிட்டு
மொத்தமாக வந்து
மொட்டை அடித்ததில்
கோவில் உண்டியல்
ஊதிப் பெருத்தது
கர்ப்பஹிரகத்தின்
வயிறு வீங்கி வெடித்தது.

திருப்பதி மொட்டையோ
திருத்தணி மொட்டையோ
பழநி மொட்டையோ-நாம்
பார்த்திராத மொட்டையோ
உண்டியல் வருகிறது
கோவில் உண்டியல் வருகிறது

"ஜாக்கிரதை ஜாக்கிரதை
திருடர்கள் ஜாக்கிரதை
உங்கள் கைப்பைகள் பணப்பைகள்
ஜாக்கிரதை"
-இப்படிக்கு
கோவில் தேவஸ்தானக் கமிட்டி.

((தமிழர் நட்புறவுப் பேரவையின் ஜந்தாம் ஆண்டுவிழா
-தருண் பாரத் நற்பணி மன்றம் அரங்கு, செம்பூர்,

மும்பை. 13-01-2008ல் நடைபெற்ற கவியரங்கத்
தலைமையில் வாசித்த 'உரைவீச்சுகள்")

1 comment:

  1. -என்னை-
    என்னுடன் இருக்கும் உங்களை

    ReplyDelete