Wednesday, June 18, 2025

கவிதையாகவே வாழ்ந்த தம்பதியர்


 கவிதையாகவே வாழ்ந்த தம்பதியர்.

மரணப்படுக்கையிலும் அவள் கவிதை வாசித்தாள்.அவன் புன்னகைத்தான்..!

இது எதோ கற்பனை அல்ல.

அவள் வாழ்வின் தருணங்கள்.

❤️❤️❤️


17 வயதில் அவரைத் திருமணம் செய்து கொண்டேன். அது இளமைக்கால காதலா என்றால் அக்காலத்தில் என்னை விரட்டி விரட்டி காதலித்தவர்கள் பலருண்டு. ஆனால் நான் இவரைத்தான் காதலித்தேன். இவர் கவிதைகள் ஒரு காரணம் என்றால் இவர் ஒரு மார்க்சிஸ்ட் என்பதும் இன்னொரு காரணம்.

மார்க்சிஸ்ட் கவிஞர்கள் நல்ல மனிதர்கள் என்ற நம்பிக்கை என் தந்தையின் வழியாக எனக்கு ஏற்பட்டது. என் பெற்றோர்கள் மார்க்சிஸ்டுகள்!

அவர் நல்ல மனிதர்தான். ஆனால் என் நடுத்தர வர்க்க

மதிப்பீடுகள் அவருடைய கட்டுப்பாடற்ற வாழ்க்கைமுறையுடன்

 எப்போதும் மோதிக் கொண்டே இருந்தது.

நாங்கள் இருவரும் எங்கள் நிலைப்பாடுகளில் பிடிவாதமாக இருந்தோம்.


அவர் என்னையும் எங்கள் திருமணத்தையும் விரும்பினார். நான் அவரை மட்டும் விரும்பினேன். அவர் திருமண உறவின் பாதுகாப்பையும் விரும்பினேன்.அவருக்கோ உலகம்தான் குடும்பம்.

அவரின் அந்தக் குடும்பத்திலிருந்து யார் எப்போது வந்தாலும் சமைத்துப் போட்டு கவனிப்பது என் கடமையானது. அதற்கான பணம் பற்றி அவர் கவலைப்பட்டதே இல்லை!அதை ஒரு மனைவி எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்?

அவர் கையில் எப்போதாவது பணம் வந்தால் அதை இயக்கத்திற்கும் பேரணிகளுக்கும் போராட்டங்களுக்கும் செலவு செய்துவிடுவார்.

இவை ஒருபோதும் எனக்கு திருப்தியாக இல்லை. ஆனாலும் எங்கள் மகன் அசுதோஷுக்காகவும்..  கவிதைகளுக்காகவும் நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தோம். 


" நீ இல்லாதபோது எனக்குள் ஒரு பாதுகாப்பற்ற உணர்வு தோன்றுகிறது. " என்பார் அவர். என் மனம் அதில் நெகிழ்ந்து விடும்.

இன்னும் சொல்லப்போனால் இரவெல்லாம் வால்ட் விட்மண் மற்றும் சதாநந்ந் ரேகே கவிதைகளை ஒருவருக்கொருவர் வாசித்து கேட்டுக் கொண்டிருப்போம்.

சில நேரங்களில் எங்கள் கவிதைகளை நாங்கள் பகிர்ந்துக் கொண்டோம். எங்கள் கவிதைகளின் முதல் வாசகராக நாங்களே இருந்தோம்.


அவர் மருத்துவமனையில் இருந்தப்போது இரவு இரண்டு மணியாக இருந்தாலும் காலை ஆறு மணியாக இருந்தாலும் நான் அவருக்கு கவிதைகள்  வாசிப்பேன். சில சமயங்களில் அவர் புன்னகைப்பார். சில சமயங்களில் அவர் மெளனமாக தலை அசைப்பார்.

💥💥💥💥💥

கவிதையாக வாழ்ந்த அவரும் அவளும்..

அவர் பெயர் நாம்தேவ் தசல். அவள் மல்லிகா அமர்ஷேக்.

#நாம்தேவ்தசல்

#NamdeoDhasal

#MallikaAmarsheikh

#MallikaNamdeo

Saturday, June 14, 2025

தலித் அரசியல்

 


இதை அவ்வளவு எளிதாக என்னால் கடந்து செல்ல முடியவில்லை! 

காரணம் திரு. தொல். திருமாவளவன் மீதிருக்கும் நம்பிக்கையும் எதிர்பார்ப்புகளும் மட்டுமல்ல. அதற்கும் அப்பால் நாம் கவனிக்க வேண்டிய அரசியல் இது.


* தலித் அரசியல் / ஒடுக்கப்பட்டோர் தலைமைத்துவம் என்பது தனித்துவமானது. அது எல்லாவகையிலும் சமத்துவம் மற்றும் சம உரிமைக்கான அரசியல்.


*அப்படியான அரசியலை முன்னெடுத்து செல்லும் கட்சியும் அதன் தலைவரும் ஒரு முதலாளித்துவ அரசியல் செயல்பாடுகளை நகல் எடுப்பதும் நிலவுடைமை அதிகார பிம்பத்தை ' போல செய்வதும்' ( copy) கவலை அளிக்கிறது.


*தங்களின் அடிப்படை கோட்பாடுகளை இலட்சியங்களை மறந்து ' மேனிலை ஆக்கத்தின்' உத்திகளை உள்வாங்கும் செயல்பாடுகள் தலித்திய அரசியலை நீர்த்துப் போக செய்துவிடும்.


*தலித் அரசியல் மட்டுமல்ல, ஜனநாயக தேசத்தில் எந்த அரசியல் கட்சியோ அதன் தலைவர்களோ கூட எதைச் செய்யக்கூடாது என்று இன்றைய ஜனநாயக பொதுச்சமூகம் எதிர்பார்க்கிறதோ.. அதை நோக்கிச் செல்வது ஆபத்தானது.


*அதிகார வர்க்க அரசியலைப் போலவே நாங்களும் செயல்படுவோம் என்றால் அவர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு?!!


We are different.

We are unique.

We prove that in our ever step.

#தலித்அரசியல்

#dalithpolitics

#விசிக

#தொல்திருமாவளவன்