Tuesday, December 23, 2025

பெய்யென பெய்யும் மழை ?

"நாங்களும் திருக்குறளுக்கு உரை எழுதுவோமில்ல!"


"ஆண் பெண் உறவில் பெண்ணை இழிவுப்படுத்தி

அதைக்கொண்டுபோயி பெய்யற மழையோட 

தொடர்புபடுத்தி எழுதப்பட்ட உரைகள்தான்

தமிழ் இலக்கிய உலகில் புனைவுகளின் பித்தலாட்டம்." 


தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் 

பெய்யெனப் பெய்யும் மழை. 

குறள் எண் – 55. 


அறத்துப்பால், இல்லறவியல், வாழ்க்கைத் துணைநலம்.

திருக்குறளில் காலமெல்லாம், அனைத்து உரையாசிரியர்களும் தவறாகப் பொருள் கண்ட திருக்குறள் இதுதான். இதில் அதிசயமாக உரை எழுதிய பெண்களும் விதிவிலக்கல்ல,

பெண்ணின் கற்புக்கும் பெய்யும் மழைக்கும் தொடர்புண்டு  என்று சொன்னதுதான் தமிழ் இலக்கியத்தில் ஆகப்பெரிய புனைவு.

பித்தலாட்டம்.

மழை அறிந்தவன் வள்ளுவன்.

மழை நேரமும் காலமும் அறிந்தவன், நட்சத்திரங்களின் இருப்பை அறிந்தவன், அரசனுக்கு நேரம் கணித்து சொன்னவன் வானவியல் அறிவுடன் வாழ்ந்தவன் வள்ளுவன். 

அவன் “பெய்யெனப் பெய்யும் மழை” என்று எதைச் சொல்லி இருப்பான்? 

இக்குறளில் ஏன் : தெய்வம் தொழாஅள்” என்றான்?

யார் இந்த தெய்வம்?

ஓர் இல்லறவியல் பெண்ணை அடையாளம் காட்டுபவன்

எதற்காக “தெய்வம் தொழாஅள்” என்று உச்சமான 

ஒர் அடையாளத்தைக் கொண்டு வந்து சேர்க்கிறான்? 


“கணவன் திரும்பிவர பொய்கையில் புனித நீராடலுக்கு 

புண்ணிய ஸ்தலங்களுக்கு அழைத்தப்போது

“பீடன்று” என்று சொன்ன சிலப்பதிகாரம்

பெண்ணின் பீடு எது? என்று சொல்கிறது!

தினமும் தெய்வத்திற்கு பூஜை, விரதம். கோவில் கோவிலாக சுற்றி வருவது.. இதெல்லாம் அறத்துப்பாலின் இல்லறவியல் அல்ல,

இல்லறவியலின் வாழ்க்கைத்துணை நலமும் அல்ல.

இதெல்லாம் வேண்டாம் இல்லறவியலுக்கு என்று சொன்னவன் வள்ளுவன்.

உன்னோடு வாழ்கிறவனைக் கொண்டாடு.

அதுபோதும், அப்படி ஒரு துணை கிடைத்துவிட்டால் 

அந்த வாழ்க்கைத்துணை நலம் என்பது

 “பெய்யெனப் பெய்யும் மழை”

அவ்வளவுதான்..! 

வெரி சிம்பிள். வெரி லாஜிக்.

இதை விட்டுட்டு அடேங்கப்பா…

கற்பரசி சொல்லிட்டா மழைவரும்னு சொல்லி

சொல்லியே மழையை வரவிடாம பயமுறுத்தி

.. நீங்களும் உங்கள் உரைகளும்..பித்தலாட்டங்கள்.


மழைனா பெய்ய வேண்டிய இடத்தில பெய்யனும்.

அன்பும் மரியாதையும் பூஜையும் நம்பிக்கையும்

இருக்க வேண்டிய இடத்தில இருக்கனும்.

அதுதான்டா இல்லறவியல்.

அப்படி இருந்திட்டா… 

ஆஹா.. அவள் பெய்யெனப் பெய்யும் மழை..

எல்லா மழையும் வாழ்விப்பதில்லை.

பெய்கிற மழை எல்லாம் அறத்துப்பால் பேணுவதில்லை.

இப்படி ஒரு பெண் உனக்கு வாழ்க்கைத்துணையா இருந்தா அவ “பெய்யென பெய்யும் மழை” மாதிரிடா. 


காட்சி 1

என்ன இசக்கியம்மா வயக்காடு நட்டாச்சா?

எங்க நட, குளத்தில தண்ணி நிரம்பலியே

 நாத்து  நடறதுக்கு யோசனையா இருக்கு..

கிணறு இருக்குல்ல, ஒரு வயலையாவது நட்டுப்போடு,


“நாறப்பய மழ ..பெய்ய வேண்டிய இடத்தில பெய்யாம

சம்சாரி பொழப்பக் கெடுக்குது..!”

ஊரில் கனமழை என்று தொலைக்காட்சியில் செய்திகள்

ஓடிக்கொண்டிருந்தப்போதுதான் இப்படி ஒரு காட்சியை நான் பார்த்தேன்.

மழை மலையடிவாரத்தில் பெய்யவில்லை.குளம் நீர் நிலைகள் நிரம்பாது. 

ஊரில் பெய்து என்ன பயன்?

எங்கே மழை வேண்டுமோ அங்கே பெய்திருந்தால்தான்

மழையும் இனிது. இல்லை என்றால் மழையால் என்ன பயன்!

மழைன்னா அது ‘பெய்யெனப் பெய்யும் மழை”யா இருக்கனும். இதுதான் வாழ்க்கை.


காட்சி 2..

வானம் கருக்கிறது. வறண்ட பூமி, மழை வருமா என்று

காத்திருக்கும் ஊர்.. ( லகான் திரைப்படத்தில் மழைப்பாடல்)

அப்போது கொட்டுகிறது பாருங்கள் வானம்.

ஊரே கூடி ஆடிப்பாடி .. கொண்டாடும்.

பெய்யெனப் பெய்யும் மழை 

அது மகிழ்ச்சியின் உச்சம்.


 நேரம் கணித்து சொல்லும் வள்ளுவனையே

அவன் அறிவையே இம்புட்டு கேவலப்படுத்த முடியும்னா

அதில பெருமைப்பட்டுக்க என்னடா இருக்கு?!


#புதியமாதவி_வள்ளுவம்

Friday, December 19, 2025

அம்பேத்கர் தனிமைப்படுத்தப் பட்டாரா?

 



அண்ணல் அம்பேத்கர் தனிமைப்படுத்தப்பட்டாரா?

நாக்பூரில் இலட்சக்கணக்கான தன் ஆதரவாளர்களோடு 1956 அக்டோபர் 14ல் இந்து மதத்திலிருந்து வெளியேறி பெளத்தம் தழுவினார்.அதன்பின் 53வது நாளில் டிச 06 அவர் டில்லியில் திடீரென மரணம் அடைந்தச் செய்தி..

இது குறித்த சந்தேகங்கள்

வழக்குகள்

அம்பேத்கருடன் இருந்தவர்கள் எழுதி இருக்கும் புத்தகங்கள்

எல்லாமும் அப்படியே மெளனத்தில் உறைந்துப் போயிருக்கின்றன.

என்ன நடந்தது,?

ஏன் நடந்தது?

யார் காரணம்,?

யார் அறிவார்,?!

இது குறித்து எனக்குத் தெரிந்ததைப் பதிவு செய்தாக வேண்டும்.

அன்றைய பம்பாய் தாராவி தமிழ் இளைஞர்கள் எப்போதாவது தாதரில்  அம்பேத்கரின் இல்லத்தில் அவரைச் சந்திப்பதுண்டு.

அதில் முக்கியமானவர்கள்

தொல்காப்பியனார்,

என் தந்தை எஸ். வள்ளிநாயகம், நெல்லை இராமானுஜம்புதூர் இளைஞர்கள் . அண்ணலின் இறுதிக் காலங்களில் தாராவியிலிருந்து இவர்கள் சந்திக்கச் செல்லும் போதெல்லாம் கதவு திறக்கப்படவில்லை!சந்திப்பு மறுக்கப் பட்டிருக்கிறது.

அம்பேத்கர் குறித்து இந்திய பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளைச் சேகரித்து இவர்கள் அண்ணலிடம் கொடுப்பது வழக்கம்.

தங்களின் தலைவர் தனிமைப்படுத்தப் பட்டார் என்று இவர்கள் வருந்தினார்கள். அண்ணலின் உடல்நிலை ஓய்வு நேரம் இதெல்லாம் காரணமாக இருந்திருக்கும்,

தாராவிக்காரர்கள் என்பதால் இவர்களுக்கு அனுமதி இல்லை என்று இவர்கள் நினைத்துக் கொண்டார்கள். இப்படித்தான் நானும் நினைத்தேன்.

அண்ணலின் மரணம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த தாராவியும் நிலை குலைந்துப் போனது.

என் வீட்டில் என் தந்தை காரணமே சொல்லாமல் பட்டினி கிடந்திருக்கிறார். அண்ணலின் உடல் மறுநாள்தான் பம்பாய் வந்தது. டில்லியிலிருந்து மும்பை விமானத்தில் வந்த அண்ணலின் உடலைப் பார்க்க  சயான் சாலையில் கூடி இருந்த தாராவி தமிழர்கள் அந்த வாகனத்தின் பின்னால் ஓடி இருக்கிறார்கள்.

என் அப்பாவின் மெளனத்தை அம்மா புரிந்துக் கொள்ளவில்லை,!அப்பாவும் அதை தன் மனைவியுடன் பகிர்ந்துக் கொள்ளவில்லை. ஆனால் அப்பாவின் மெளனம் ஒரு பெண்ணாக என் அம்மாவை குழப்பியது. கைக்குழந்தையோடு என் அம்மா தன் பிறந்த வீட்டுக்குப் போய்விட்டார். மூன்று ஆண்டுகள் அம்மா தன் பிறந்த வீட்டில்தான் இருந்தார். அதன்பின் அப்பா போகிறார். எதுவும் பேசவில்லை அம்மா. அப்பாவுடன் கிளம்பி மீண்டும் பம்பாய் வந்துவிடுகிறார்.

அப்பாவுக்கும் அன்றைய தாராவி இளைஞர்களுக்கும் தங்கள் தலைவர் பாபாசாகிப் தனிமைப்படுத்தப்பட்டார் என்ற வருத்தம் ஒரு குற்றச்சாட்டாக கடைசிவரை இருந்தது.

இது குறித்து மாமா சீர்வரிசை சண்முகராசனிடம் பேசி இருக்கிறேன்.அவருக்கும் இதே கருத்துதான்.

வரலாறு பல மர்மங்களைக் கொண்டது.

உண்மைகள் சைத்யபூமியில் உறங்குகின்றன.


ஜெய்பீம்.

Tuesday, December 16, 2025

ஆண்டாளும் ஆத்தங்கரை சாமியும்

 

m

வெளியில் காத்திருக்கும் அவனை அடையாளம் தெரிகிறாதா ? ‘

மேளச்சத்தம் மிக நெருக்கத்தில்.. சாமி நம்ம தெருவிற்குள் வந்துவிட்டதுனு புத்தகத்தை மூடிவிட்டு

சன்னலருகில் வந்து எட்டிப் பார்த்தேன். அவர்கள் தெருவில் நுழையும்போது மட்டும் சாமியின்

ஒற்றைக்கால் மடித்துக் கட்டப்பட்டது.

இனி ஒற்றைக் காலுடந்தான் அவர்கள் தெருவில் சாமியின் ஆட்டம். காலை மடித்துக் கட்டியாதாலோ என்னவோ

குதித்து குதித்து ஆத்தங்கரைச் சாமி அவர்கள் தெருவில் ஆடிக் கொண்டே வந்தார்..

எல்லா பெண்களும் குடத்தில் மஞ்சள் தண்ணி வைத்து சாமியின் தலையில் கொட்டினார்கள்..

சாமி ஒற்றைக் காலுடன் அவர்களுக்கு விபூதிக் கொடுத்து அருள்வாக்குச் சொல்லிக்கொண்டே வந்தார்.

ஒற்றைக்காலுடன் ஆடும் அந்த இளைஞனின் ஆட்டத்தில் ஒரு வெறி.. ஒரு பலி தீர்க்கும் வெறி..

கண்களில் நெருப்பின் துண்டுகள்..அவன் ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் மேளக்காரன்

கை சோர்ந்து போனான்.

அவனின் அவள் அந்த தெருவில் ஏதொ ஒரு வீட்டின் மாடியிலோ கதவிடுக்கிலோ நின்று

கொண்டு அவன் ஆடுவதைப் பார்த்து அழுதுக் கொண்டிருப்பாளோ என்று எனக்கு

எண்ணத் தோன்றியது.

எங்கள் தெருவில் எல்லா பெரிசுகளும் சாமி அள்ளித்தந்த விபூதியை பயபக்தியுடன் பூசிக்கொள்வதைப்

பார்க்கும்போது அவர்கள் பேச்சுதான் நினைவுக்கு வந்தது.

பள்ளு பறையனுக இப்போ எல்லாம்..!

கால் மடித்துக் கட்டிய வலியின் வேதனைத் தெரியாமாலிருக்க இந்த ஆட்டமா ?

அல்லது வேறு எந்த வலியை மறக்க இந்த வலி மறந்து ஆடுகிறாய் ?

ஆண்டாளின் தோல்வி அருள்தரும் அம்மன்சந்நிதியில் கற்பூர ஆரத்தியாய்..

ஆத்தங்கரையானின் தோல்வி இன்னும் ஒற்றைக்காலுடன் ..உயிரின் வலியாய்..

.

ஆண்டாளின் சந்நிதிக்குப் போகும்போதெல்லாம் இப்போதெல்லாம் ஆத்தங்கரைச் சாமியும்

நினைவுக்கு வந்து ஒற்றைக்காலுடன்.. வெறியுடன் பலிதீர்க்கும் வெறியுடன் என் கர்ப்பஹிரகத்தில்.

( மீள்)

மின்சாரவண்டிகள் சிறுகதை தொகுப்பு 2005.

Sunday, December 14, 2025

பாரதியும் சாதியும்



பாரதியார் குறித்து இரண்டு பக்கமும் ஆதாரங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் பாரதியின் எழுத்துகளில் இருந்தே தங்கள் தரப்பு நியாயங்களை வைக்கிறார்கள்.

அப்படியானால் பாரதி யார்?

பாரதிக்குள் இருந்த அந்த அசல் மனிதன் யார்?

இந்தக் கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாது.

பாரதி 

மகாகவி பாரதி

விதிவிலக்கல்ல.

எந்த ஒரு மனிதனும் தான் வாழும் சமூகத்திலிருந்து முழுவதுமாக தன்னை விடுவித்துக் கொண்டு தனித்திருப்பது சாத்தியமில்லை.

ஆனால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பாரதி அதற்காக போராடிக் கொண்டே வாழ்ந்திருக்கிறார்.

எல்லோருக்குள்ளும் ' சாதி' 

வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.

அதிலும் பிறப்பிலேயே மேலடுக்கிலிருக்கும் மனிதனுக்குள் சாதி அவனையும் அறியாமல் 

வினை புரிகிறது.

அது அவர்களின் நனவிலி மனதிலிருந்து வெளிப்படுகிறது.

இப்போதும் கூட அது அவ்வாறகத்தான் செயல்படுகிறது.

உதாரணமாக  தான் ஜாதி பார்ப்பதில்லையாக்கும் என்பதை வெளிப்படுத்துவதாக நினைத்து ' நான் புதியமாதவி வீட்டில் கூட சாப்பிட்டு இருக்கிறேன்' என்று பேச்சுவாக்கில் சொல்லத்தான் செய்கிறார்கள். அவர்கள் எனக்கு நெருக்கமானவர்கள்தான். என் நம்பிக்கைக்குரியவர்கள் தான். அவர்கள் என் வீட்டுக்கு வந்தது உண்மை. உணவு உண்டது உண்மை. ஆனால் அதை அவர்கள் வெளிப்படுத்தும்போது அவர்களின் நனவிலி மனதின் சாதி மேட்டிமை வெளிப்படத்தான் செய்கிறது. ஆனால் அவர்கள் வீட்டு சமையலறை வரை நானும் போயிருக்கிறேன். என் உரையாடலில் அது இடம் பெற்றதே இல்லை. காரணம் எனக்கு அது சாதாரணமான நிகழ்வு. அவர்களுக்கு ?!

பாரதியின் அரசியலில் செல்வாக்கு செலுத்திய திலகர் சாதி சமூகத்தின் முகம். பெண்களுக்கு ஆங்கிலமும் கணக்குப் பாடமும் ஏன் என்று கேசரியில் எழுதியவர். அவர்தான் ஆங்கிலேயர் ஆட்சியில் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு எதிராக தன் போராட்டத்தில் வேத இந்தியாவை முன் நிறுத்துகிறார். ஆர்யதேசம் என்று பேசுகிறார். இவை எல்லாமே பாரதியும் தன் போராட்ட அரசியலின் பண்பாட்டு தளத்தில் அப்படியே கையாண்டிருக்கிறார்.

அது சரியா? என்ற கேள்வியைத் தாண்டி பாரதியிடம் வெளிப்பட்ட திலகரின் தாக்கமாகவே இதைப் பார்க்கிறேன்.

பாரதி புதுவையில் சந்தித்த மனிதனின் கதையை ' தம்பலா'  பாரதி வசந்தன் எழுதி இருக்கிறார். இதெல்லாம் சேர்ந்துதான் பாரதி.

பாரதி என்ற தனிமனிதன் தான் சார்ந்த சாதி சமூகத்தில் வாழ்ந்துக் கொண்டே போராடி இருக்கிறான்.

பாரதி சாதியாக கட்டமைக்கப் பட்டிருக்கும் சமூகத்துடன் மட்டும் போராடவில்லை. தனக்குள் இருக்கும் அந்த சாதி மனிதனுடனும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறான்.

சாதியே மனிதனின் அடையாளமாக

சாதியே சமூகமாக கட்டமைக்கப் பட்டிருக்கும் இந்தியச் சமூகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம்.

யாரும் இங்கே விதிவிலக்கல்ல!🙏