Saturday, February 8, 2025

வலசை காலத்தின் கல்வெட்டு

தமிழ் வாசகர்கள் மட்டுமல்ல, உலக வாசகர்கள் வாசிக்க வேண்டிய நாவல்  'சிறகொடிந்த வலசை'

- சம்பத் ஜி



 💥💥💥

                  வலசை

             ----------------------


  புதைந்து கிடக்கும் கோடானுகோடி

 எலும்புக்கூடுகள் மீது அமைதியாக

 உறங்கியெழும் நாம் யார்?

என்ற அறிவுமதி அவர்களின் கனத்த கேள்வியினூடே புதியமாதவி அவர்களின் ‘சிறகொடுந்த வலசை’  என்ற இந்த நூலை அணுகலாம் என்றே நினைக்கிறேன். நூல் விமர்சனம் என்பதே இலக்கியத்தையும் சமூகத்தையும் வாசகர்களோடு இணைத்து ஒருசேர புரிந்து முன்னெடுக்கும் கூட்டு முயற்சிதானே.

 இடர்களால் நிரம்பியதே மனித வாழ்வு. நகுலன் அவர்கள் ஓரிடத்திலே சொல்லியிருப்பார். ‘அலைகளைச் சொல்லி பிரயோஜனமில்லை கடல் இருக்கிறவரை’ என்று . அவரே மற்றுமொரு இடத்தில் சொல்லியிருப்பார். ‘இருப்பதற்கென்று வருகிறோம் இல்லாமல் போகிறோம்’ என்று வாழ்வு நிலையாமை அடிப்படையாக கொண்டதென்றாலும்கூட அந்த நிலையாமை தனக்கான எல்லையின் நிறைவோடு பறந்து கடந்து விடுவதில்தான் யாவரின் விருப்பமாக இருக்க முடியும். வலசையை துவங்கும் போதே சிறகுகள் முறிக்கப்பட்டால் அந்தக்  கொடுந்துயர் தீராதுதானே! இப்படியாக பறத்தலுக்காக காத்திருந்து வயது பேதமற்ற எத்தனையோ உயிர்களை கொத்து கொத்தாக கவ்விச் சென்றது கொரோனா . உலகம் தழுவிய கொரோனா தொற்றில் பலியான உயிர்களின் தரப்பிலிருந்து ஒற்றை சாட்சியாக எழும் கூக்குரல்தான் இந்நாவல்.

 இயற்கையின் பேரிடர்களாலோ மதக்கலவரங்களாலோ , இன்னபிற இயற்கைச் சீற்றங்களாலோ அழிபடுதல் என்பது மனித வாழ்வின் பேரவலம். மனித குலம் திட்டமிட்டு வைத்திருக்கும் அட்டவணையை திடுமென கலைத்துப் போடுவதால் மனிதகுலம் திட்டமிட்டு வைத்திருக்கும் அட்டவணையை திடுமென கலைத்துப் போடும் வாழ்வு பெருந்துயர் நிரம்பியது.  நிலத்தின் வரலாறு எங்கும் இது போன்ற ஏராளமான ரத்த சாட்சிகள் உலவிக்கொண்டேதான் இருக்கின்றன.   இது விதிவசமா, இயற்கையின் சமன்பாட்டுக் கோட்பாடா  என்று அறிய முடியவில்லை.  கிரேக்க துன்பங்கள் தொடங்கி,  இந்திய புராணங்கள் வரை ஒரு தகுந்த இடைவெளியில் ஏதேனும் ஒரு வகையில் இந்த அழித்தொழிப்பு நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.  இதை முற்றிய கலியின் அடையாளம் என்று வேதாந்தம் கூறுகிறது.  எதேச்சதிகாரத்தின்  திட்டமிடல் என்று சித்தாந்தம் கூறுகிறது.


  மனித குலத்தின் அறம் சார்ந்த அடுத்த நகர்வை நிர்மாணிக்க எப்போதுமே ஒரு பெரும் பாய்ச்சல் தேவையாகிறது.  அது ஒரு சிறு கலகத்தில் துவங்கி  யுத்தத்தில் முடிவடைகிறது.  ஜான்ரீடு அவர்கள்  எழுதிய உலகைக்  குலுக்கிய ‘பத்து நாட்கள் ‘ என்ற நூல் ரஷ்யாவின் அக்டோபர் புரட்சியைக் கூறும் முக்கிய நூல். வரலாற்றில் புதிய சகாப்தத்திற்கு வழிகோலிய முக்கிய நூலாகவே இதைப் பார்க்க முடிகிறது.  இதே அக்டோபர் புரட்சியின் காலகட்டத்தில் மக்சீம்கார்க்கி அவர்களின் ‘தாய்’ என்ற புனைவு நாவல் மிகக் காத்திரமாக  தொழிலாளர் போராட்டத்தையும்,  புரட்சியையும் கூறும் முக்கிய நூல்.  லெனின் அவர்கள் இந்நூல்  குறித்து கூறும்போது ‘பொதுவுடமை போராட்டத்தில் பாதி வேலையை இந்த நூல் ஒன்றே எளிதாக செய்த முடித்து விட்டது ‘ என்று கூறி பிரமித்து இருக்கிறார்.  வரலாற்றுப் புனைவு அவ்வளவு வல்லமை நிரம்பியது.  வயலிலே எத்தனை நெல் மகசூல் இருந்தாலும்,  விதை  நெல்லையே விவசாயி தேடிப் பாதுகாப்பது போலவே பல் சுவையில் எத்தனை புனைவுகள் வெளியானாலும் கூட இம்மாதிரியான வரலாற்றுப் புனைவுகளை வாசகர்கள் தேடித்தேடி வாசித்தும் பாதுகாத்தும் வைக்கக் கூடும் என்பதே நிஜம்.  இம்மாதிரியான நூல்கள் காலத்தின் ரத்த சாட்சியாக எப்போதுமே நம் முன் நிற்கிறது.  லியோ டால்ஸ்டாய் அவர்களின் ‘போரும் அமைதியும்’ , பிரான்சிஸ் காஃப்காவின் ‘கொள்ளை நோய்’,  சி.சு. செல்லப்பாவின் ‘சுதந்திரதாகம் ‘ , ப. சிங்காரத்தின்  ‘புயலிலே ஒரு தோணி,’ ந. சிதம்பர சுப்பிரமணியன் அவர்களின் ‘மண்ணில் தெரியுது வானம்’, கி. ராஜ நாராயணன் அவர்களின் ‘கோபல்லபுரத்து மக்கள்’ என்று பல  புதினங்களைச் சொல்லமுடியும். கி.ராவின் நாவல் ஆந்திராவில் இருந்து இன வெறியர்களால் விரட்டப்பட்ட நாயக்கர்கள் தமிழ்நாட்டு காடுகளில் குடியேறி காடுகளை எரித்து கரிசல் நிலமாக்கி வாழ்விடமாக மாற்றிக் கொண்ட கரிசல் வரலாற்றை பேசுகிறது.  தவிரவும் தமிழ் ஈழப் போர்கள்  குறித்த ஏராளமான நூல்களும் முக்கியமானவை.  1947 ஆகஸ்ட் 15 தேச விடுதலையை கொண்டாடும் நாள் மட்டுமல்ல.  இந்திய பாகிஸ்தான் பிரிவினையில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும்,  பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கும் மதவாதிகளால் விரட்டப்பட்ட ஏராளமான அப்பாவி மக்கள் பலியாகி சொந்த மண்ணில் இருந்தே அகதிகளாக புலம் பெயர்ந்த ஒரு கருப்பு தினமும் கூட. நள்ளிரவில் சுதந்திரம் என்ற நூல் இதை மிக காத்திரமாக பேசுகிறது.  இவைகள் எல்லாமே போர்களையும் புலம்பெயர் மனிதர்களையும் பேசுகிறது.  அந்த வரிசையில்தான் புதிய மாதவி அவர்களின் சிறகொடிந்த வலசை நாவல் ஓர் அறச்சீற்றத்தோடு கூடிய முக்கியமான நாவலாக என் அளவில் அணுக முடிகிறது.

 1945 இரண்டாம் உலகப் போரில் இடையிலேயே ஹிட்லர் இறந்த பின் ஜெர்மன் அதிகாரிகள் வேறு வழியின்றி சரண் அடைந்து விடுகின்றனர். இந்நிலையில் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வருகிறது. ஆனால் ஜப்பான் அதை ஏற்றுக் கொள்ளாமல் அமெரிக்காவின் விமானம் தாங்கிய கப்பல் ஒன்றின் மீது குண்டு வீசுகிறது.  இந்த குண்டு வீச்சில் 343 பேர் இறந்து போகின்றனர் . இந்த நிலையில் யுத்தத்தை நிறுத்த ஜப்பானை ஒடுக்குவதுதான் ஒரே வழி என்று நினைத்த அமெரிக்கா ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மீது ‘லிட்டில் பாய்’ என்ற மிக சக்தி வாய்ந்த  அணுகுண்டு வீச்சு நிகழ்த்துகிறது ஆயிரம் சூரியன்கள் ஒன்றாக வெடித்தது போன்ற அச்சம்பவம் சுமார் ஒன்றரை லட்சம் பேரை பலி கொண்டது.  ஒரு புல் பூண்டை கூட விட்டு வைக்கவில்லை.  அப்போதும் ஜப்பான் சரணடையாததால் அடுத்தக் கட்டமாக நாகசாகியில் ஒரு குண்டை வீசி சுமார் 40 ஆயிரம் பேரைக் கொன்றது.  இதை எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் தனது ‘ஹிரோஷிமாவில் மணி ஒலிக்கிறது’ என்ற கட்டுரையில் மிக ஆதங்கத்தோடு பதிவு செய்திருப்பார்.  உலகையே உலுக்கி எடுத்த சம்பவத்திற்கு காரணம் என்ன? அதிகாரத்தின் நாவுகள் உலகெங்கும் ருசித்துப் பார்த்து விட வேண்டும் என்ற ஆதிக்க வெறியில்லாமல் வேறு என்ன?  குண்டுகளைப் புசிக்கிற சமூகம் நெருப்பைதானே உமிழும் என்று இந்த அதிகார வர்க்கங்களுக்கு புரியாமலே இருப்பதுதான் காரணம்.

 ஜெயமோகன் அவர்களின் ‘வெள்ளையானை’  என்ற நாவல் இந்தியாவின் மிகப்பெரிய பஞ்சமான ராஜதானி பஞ்சம் என்றும் டெக்கான் பஞ்சம் என்றும் கூறப்பட்ட 1870 இல் நடைபெற்ற பஞ்சத்தைப் பற்றிப் பேசுகிறது . பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் உலகம் முழுவதையும் ஒரு போதைக்கு உள்ளாக்கி வெகு எளிதாக அடிமையாக்கி கொள்கிற வித்தையை லாவகமாக கையாண்டு கொண்டிருந்தது.  சீனாவில் இவர்களைப் பற்றி ஒரு பழமொழி உண்டு. ‘  அவர்கள் கப்பலில் இருந்து இறங்கி எங்களிடம் ஒரு தடித்த புத்தகத்தை கொடுத்து கண்மூடி ஜெபம் செய்யச் சொன்னார்கள்.  நாங்களும் கண்மூடி ஜெபம் செய்தோம்.  கண் திறந்து பார்க்கையில் புத்தகம் எங்களிடமிருந்தது. தேசம் அவர்கள் கையில் இருந்தது’ என்று. இப்படித்தான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவிற்குள் நுழைந்து ஒரு நூற்றாண்டுக்குள் இந்தக் கொடூர பஞ்சம் ஏற்பட்டது..  இந்த பஞ்சத்தினால் அன்றைய இந்திய மக்கள் தொகையில் நாளில் ஒரு பங்கு செத்து அழிந்தார்கள்  என்று வரலாற்று கணக்கெடுப்பு சொல்கிறது. பஞ்சத்திற்கு முன்பு வரை இந்திய கிழக்கிந்திய கம்பெனி ஆதிக்கத்தின் கீழ் இயங்கிக் கொண்டிருந்தது.  இந்த பஞ்ச காலமே கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரம் முற்றாக கலைக்கப்பட்டு விக்டோரியா அரசி தன் அதிகாரத்தின் கீழ் நாட்டை தானே எடுத்துக் கொள்கிறார்.  நன்றாக இழிவுபடுத்த தெரிந்தவனே அதிகாரியாக தகுதி உடையவர் என்பதே. பிரிட்டனின் அன்றைய கருத்தியலாக இருந்தது.  இந்தியனை பூச்சியினும் கேலியாக இழிவுப்படுத்துவதையே தனது அடிப்படை கோட்பாடாகக் கொண்டிருந்தனர்.  இந்த ராஜதானி பஞ்சம் தலைவிரித்து ஆடியது.  இந்த பஞ்சத்தின் போது எலிகள் உண்ணும் தானியம் கிடைத்திருந்தால் கூட எங்கள் பிள்ளைகளில் பாதி பேர் உயிருடன் இருந்திருப்பார்கள் என்று கதறுகிறார்கள்.  பஞ்சத்தில் சாகும் மக்களின் தானியம் இங்கிருந்து மூட்டை மூட்டையாக அவர்கள் நாட்டுக்கு கப்பலில் சென்று கொண்டிருந்தது அதற்கு பதிலாக அங்கிருந்து உறைந்த தண்ணீரான பனிக்கட்டிகளை உருகாமல் பொத்தி பொத்தி ஒரு கப்பல் நிறைய கொண்டுவரப்பட்டது. இந்தப் பனிக்கட்டியை ஆங்கிலேயர் தம் சொகுசு வாழ்விற்கும் தனது மதுவில் கலந்து குடிக்கும் ஆடம்பர தேவைக்கும் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.  எட்டு கப்பல் தானியத்திற்கு ஒரு பனிக்கட்டி கப்பல் சமம்.  இப்படியாக  இந்தியர்களின் எரிந்து கொண்டிருக்கும் பிணங்களின் மீதான இவர்களின் மது சல்லாபம் கொடூரமாக நிகழ்ந்தது.  அப்போது இருந்த ஏய்டன்  என்ற கவர்னர் இந்த பஞ்சத்தை பார்வையிட சென்றபோது தனது சாரட்டின் கூண்டுகளில் தலை இடித்துக் கொள்கிறது.  அப்போது ஏய்டன்  மேடு பள்ளங்களை சரி செய்து ஓட்டு என்று சீற்றத்துடன் ஆணையிடுகிறான்.  அப்போது அந்த சாரட்டு ஓட்டி “சார் வழியெங்கும் மனித உடல்களே மலிந்து கிடக்கிறது.  மனித உடல்களின் மீதுதான் வண்டி சென்று கொண்டிருக்கிறது” என்று கூறுகிறான் .  அதிர்ச்சி அடைந்த ஏய்டன் தன் சாரட்டு கதவைத் திறந்து வெளியே பார்க்கிறான்.  ஒரு கணத்துக்கு பின் அமிலத்துளி விழுந்த புழு போல அந்தக் காட்சியை பார்த்து துடித்து விழுகிறான்.  பெரிய ஆலமரத்தின் அடியில் பிணங்கள் அள்ளிக் கொட்டியவை போல  இருக்கின்றன.  பாதிக்குமேல்  குழந்தைகள்.  நாலைந்து  நாய்கள் பிணங்களைக் கிழித்து குடலை  கவ்வி இழுத்து வெளியே எடுத்து தின்று கொண்டிருந்தன.  அவற்றின் உறுமல்களும் கடித்து சப்புக் கொட்டி இழுக்கும் முனகல்களும் உரக்கக் கேட்டன.  மரக்கிளையில் காகங்களும் பிற பறவைகளும் பெரிய சந்தை போல இரைச்சல் இட்டன.  காகங்கள் துணிந்து கீழே இறங்க நாய்கள் உறுமியபடி  அவற்றை துரத்தின என்ற கோரக்காட்சியை பதிவு செய்கிறார்.  இப்படியான மூர்க்கமான பஞ்சத்தை  இந்தியா சந்தித்திருக்கிறது.  பொதுவாக இயற்கையின் பேரிடர் கால் பாகம் என்றிருந்தால் முக்கால் பாகத்தை அதிகாரம் கையில் எடுத்து அழித்தொழித்திருக்கிறது.  இந்த கொடூரமான பஞ்சத்தைப் பற்றி விரிவாகவும் இதயங்களில் ரத்தம் வடியும் அளவுக்கு அலசி இருக்கிறது ஜெயமோகன் அவர்களின் வெள்ளையானை நாவல்.  இது இங்கு குறிப்பிட காரணம் பேரிடர்களையும் பஞ்சங்களையும் ஆவணப்படுத்துதல் என்பதே மனித குலத்திற்கு வாழ்தலின்  பொறுப்பு உணர்த்தும் கவனப்படுத்துகிற பணியாகும். இந்த நிகழ்வுகளை ஆவணப்படுத்த தவறுவது என்பது வாரன் ஹேஸ்டிங் என்பவர் சொன்னது போல  ‘தன் வால் தீப்பற்றி எரியும் போது  அதை அறியாமல் தூங்கும் மலைப்பாம்பை ‘ போன்றதாகும்.  யுத்தங்களையும் பேரிடர்களையும்  புலம்பெயர்தலையும் படைப்புகளாக பதிவு செய்யப்படும் போதுதான் தான் வாழும் காலத்தின் மனித மாண்புகளை உணர முடியும்.  தன் இருத்தல் எத்தனை சுகவாழ்வுக்கான ஆசீர்வாதம் என்பதை அறிந்து வீண் புலம்பல்களில் இருந்து சக மனிதனை ஆற்றுப்படுத்தும் இந்த நிலைப்பாட்டில் எழுத்தாளர் புதியமாதவி அவர்கள் தொடர்ந்து வரலாற்றில் உலவும் ஒரு துயர நிகழ்வை பதிவு செய்திருப்பது என்பது அவரின் தீராத சமூக அக்கறையை காட்டுகிறது. 

 போர்களில் விழுப்புண் பட்டு இறந்தோரின் வீர மரணம் குறித்து படித்திருக்கிறோம்.  தேச எல்லையில் ரத்த காயங்களுடன் நாள் கணக்கில் பட்டினி கிடந்து துடித்து சாய்கிற ராணுவ வீரர்களை அறிந்திருக்கிறோம்.  பஞ்சகால பட்டினியின் கொடுமை தாளாது கண் எதிரிலேயே இந்த வாழ்வை விட மரணமே மேலானது என்று இறந்தோரைக் கூட அறிந்திருக்கிறோம்.  ஆனால் அறிவியலின் உச்சத்தில் மருத்துவத்துறையின் அபரீத வளர்ச்சியில் ஓங்கி கிடக்கும் 21 ஆம் நூற்றாண்டில் உலகையே உலுக்கி எடுத்து விட்டது கொரோனா பெரும் தொற்று.  இது அறிவிக்கப்படாத மனித குலத்தை சூறையாடிய மறைமுகப் போராகவே அச்சமூட்டியது.  ஒரு ஓசையற்ற வேட்டையை நிகழ்த்தியது.  கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் ரத்தம் குடிக்கும் வெளவால்களைப் போலவே  தொடர்ந்து பறந்து தூய்மை என்னும் கரு மேகத்தால் இந்த பூமியை முற்றாக இருட்டில் ஆழ்த்தியது  மனித குலம் மறக்க முடியாத ஒன்றுதானே.  வரலாற்றையே புரட்டிப் போட்ட காலம் இதுவாகத்தான் இருக்க முடியும். மனித குலத்துக்கும் மருத்துவத்திற்கும் ஆகப்பெரும் சவாலோடு சூறைக்காற்றென  சுழன்று அடித்த கோரமான பெருந்தொற்று இதுவாகவே இருக்க முடியும்.  சுவாசங்களையே விலைக்கு வாங்கிய மலிவான காலமானது இது.  கிபி மற்றும் கி.மு என்று காலத்தை பிரித்த வரலாறு மிரண்டு  நின்று கொ.மு மற்றும் கொ.பி  கொரோனாவுக்கு முன்பு மற்றும் கொரோனாவுக்கு பின்பு  என்று காலத்தையே பிளக்கிற ஆயுதமாக  மாற்றிவிட்டது.  உலகம் முழுவதிலும் சிறிதேனும் இதிலிருந்து தப்பாத  குடும்பங்களோ மனிதர்களோ இருப்பது அரிது.  எப்படி மாக்ஸின் கார்க்கி தாய் என்ற நூலில் பாவெல் என்ற பாத்திரத்தில் வாயிலாக  ஒட்டுமொத்த ரஷ்ய புரட்சியை மையப்படுத்தினாரோ அதேபோல சிறகொடிந்த வலசை என்ற இந்த நாவலின் ஊடாக எழுத்தாளர் புதியமாதவி அவர்கள் தனம் என்ற ஒற்றை பாத்திரத்தின் வாயிலாகவே உலகையே புரட்டிய கொரோனா பெருந்தொற்றின் துயர்களை நம் கண்முன் காட்சிகளாக நிறுத்துகிறார்.  இது நாவல் என ஒற்றை தகுதிக்குள் அடக்கி விட முடியாது. இதன் ஊடாக பல்வேறு துயர்களை மனித நேயத்தின் விழுமியங்களை ,நுட்பமான அரசியலை, உடனிருந்து துரோகம் நிகழ்த்தும் உறவுகளின் மூர்க்கதனத்தை,  விளிம்பு நிலை மனிதர்களின் இயலாமையை , குழந்தைகளின் மனஉலகை , பெண்ணியத்தை ,புலம்பெயர் மனிதர்களுக்கு இழைக்கப்படுகிற அநீதி என கிளைத்து கிளைத்து  விரிந்து கொண்டே இருக்கிறது நாவல்.  சுமார் 140 பக்கங்களைக் கொண்ட இந்த நாவல் புரட்டுகிற பக்கம் எங்கும் பெரும் துயர் கசிந்து கொண்டே இருக்கிறது.

 உலகின் ஆகப்பெரும் குடிசைவாழ்  பிராந்தியமான மும்பை தாராவியின் கொரோனா கால பெருந்தொற்றை கோரச்சித்திரமாக காட்டுகிறது இந் நாவல்.  தமிழ்நாட்டில் குக்கிராமம் ஒன்றில் இருந்து  தனம் என்ற பெண் குமார் என்பவரை காதலித்து வீட்டில் இருந்து வெளியேறி மணம் முடித்து  மும்பை தாராவிக்கு சென்று வாழ்கின்றார்.  இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு கொரோனாவில் கணவனை இழக்கிறாள் தனம்.  மீதமுள்ள உயிர்களையாவது காப்பாற்றிக் கொள்ள சொந்த கிராமங்களுக்கே சென்று விட தாராவியிலிருந்து ஒரு தமிழர் குழுவுடன் சேர்ந்து தனது இரண்டு குழந்தைகளுடன் தாராவியை விட்டு  வெளியேறுகிறாள் தனம். கர்நாடக எல்லையில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக அந்தக் குழுவை ஒரு பாழடைந்த மண்டபத்தில் சிறைப்படுத்துகின்றனர்.  அங்கேயே தனம் இறந்து விடுகிறாள்.  குழந்தைகள் இரண்டும் அனாதையாகிறது.  தனத்தின் தோழி மைனி மூலமாக அந்த இரண்டு குழந்தைகளையும் அவர்களின் சொந்த ஊரில் சேர்த்து தனத்தின் தாய் வீட்டில் அடைக்கலமாக விடப்படுகிறார்கள்.  தனத்தின் அண்ணன் தாய் மாமனின் மனைவி வாயிலாக அவர்களுக்கு கொடுமைகள் இழைக்கப்படுகிறது. பின்பு கொரோனா தொற்றால் இறந்தவர்களுக்கான அரசாங்க நிதி ரூபாய் 10 லட்சத்தை குழந்தைகளின் பாதுகாப்புக்காக அரசிடம் இருந்து பெற்றதை தனத்தின் அண்ணனும் அண்ணியும் குழந்தைகளை ஏமாற்றி  குழந்தைகளை அனாதை ஆக்குகின்றனர்.  இதுதான் கதையின் சாரம்சம்.


 இது ஒரு சராசரி நேர்கோட்டு கதை சொல்லும் முறை நாவல்தான். இதில் நவீனத்துவ சொல்லாடலோ பின் நவீனத்துவ அடர்வோ எதுவும் இல்லை.  எளிய சொல்லாடலின் ஊடாகவே கதை நகர்கிறது.  எனினும் ஒரு அங்கதச்சுவை கூடிக் கொண்டே போகிறது.  சாதாரண வரிகளில் அசட்டையாக சில அசாதாரணங்களை கடத்தியப்படியே நகர்கிறார் புதியமாதவி.

 கதையின் ஏராளமான இடங்களில்  கொடுந்துயரின் சித்திரங்கள் காட்சிகளாக விரிந்து கொண்டே இருக்கிறது.  பறந்து விரிந்த தாராவியின் குடிசை பிராந்தியத்தை ஒரு கழுகு பார்வையோடு காட்சிப்படுத்துகிறார்.  கொரோனா காலத்தில் சுடுதண்ணீர் போடுவதற்கு ஸ்டவ் இல்லாமல் ரேஷன் அட்டையைக் கூட வீட்டு ஓனரிடம் ஐந்து மாத வாடகை பாக்கிக்கு கொடுத்துவிட்டு குழந்தைகளோடு தவிக்கிற இடங்களில் வறுமையின் உச்சத்தை காட்சிப்படுத்துகிறார்.  அதோடு மாத்திரமில்லாமல் 'எல்லாமே பூஜ்ஜியம்தான் என்றாலும் சிலர் வாழ்க்கை மட்டும் பெரிய எண்ணுக்கு பின்  வரும்  பூஜ்ஜியமாய் மதிப்பு மிக்கதாய் வாழ்ந்ததில் அடையாளமாய்தானே இருக்க செய்கிறது.  பூஜ்ஜியங்களை எங்கே போடுவது எங்கே எழுதுவது என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்?  காலமா? என்று பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு யார் காரணம் என்பதை ஆற்றாமையோடு பதில் அற்ற கேள்வியாக நம்முன் வைக்கிறார்.  விலகிப் போகிற உறவுகளைப் பற்றி இவர் ஓர் இடத்தில் கூறுகிறார் "  மரங்கள் வேண்டாத இலைகளை இரவு நேரத்தில் உதிர்த்துவிட்டு விடிந்தவுடன் எதுவும் தெரியாத மாதிரி இலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தன.  உதிர்ந்த இலைகளுக்குத் தெரியும் இனி கிளைகளில் ஓட்டுவது சாத்தியம் இல்லை என்று" என  பிரிந்த உறவுகள் குறித்து ஆழ்ந்த விசாரிப்பை நிகழ்த்துகிறார்.


 அதுபோல் இறந்த காதல் கணவனின் நினைவேறிய வலிகளை  ஆற்றாமையோடு நாவலெங்கும் பரவி நிற்கிறது.  இந்த ஏக்கங்களை ஆங்காங்கே பதிவு செய்கிறார். '  தனது பத்துக்கு 15 அடி வீட்டில் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு அடியிலும் தன் கணவன் குமாரின் வாசம் இருந்தது என்கிறார். தனது கணவனின் போட்டோவை அணைத்துக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்து கண்ணாடி சில் ஏறி  ரத்தம் கசிகையில் அந்த ரத்தம் அவனது வாசனையோடு கலந்துவிட்டன என்று கூறி காதலில் பெருமூச்சு விடுகிறாள் தனம்.  இந்த வரிகள் இணை இழந்து ஆற்றாமையோடு வாழும் ஒட்டுமொத்த பெண்களுக்கான பெருமூச்சாகவே படுகிறது.

 சில இடங்களில் கவித்துவமான தத்துவார்த்த வரிகள் மிகச் சரளமாகவே வந்து விழுந்திருக்கிறது.  அவர்கள் சொந்த கிராமத்திற்கு ஒரு லாரியில் அடைந்தபடி செல்லும்போது வலியின் நிறை காட்சிகளை நாவலின் நெடி மாறாது சொல்கிறார். '  போகும் வழி எங்கும் மரணத்தின் பயம் கவிந்து அமைதியில் உறைந்து கிடந்தன ஊர்கள்"  என்றும் "  மரத்தின்  வேர்கள் மட்டும் வழக்கம் போல தியானத்தில்" என்றெல்லாம் கொரோனா கால வெறுமையை மொழியின் ஊடாக அச்சத்தை நம் கண் முன் நிறுத்துகிறார்.  இவையெல்லாம் நாவலின் ஆன்மாவை அந்நியப்படுத்தாத எளிமையான வலிமையான போற்ற வேண்டிய வரிகளாகவே பார்க்க முடிகிறது. 

 விளிம்பு நிலை மனிதர்களுக்கான மதிப்பீடுகளையும் புலம்பெயர்ந்தோரின் அவலத்தையும் வெகு காத்திரமாக பதிவிடுகிறார்.  குழுவாக சொந்த ஊருக்கு லாரியில் செல்லும் இவர்களைப் பிடித்து கர்நாடக எல்லையில் சிறை வைக்கிற போது ஆதரவற்ற அவர்களின் நிலையை இப்படியாக  பதிவிடுகிறார்." பயிரை மேய்ந்த மாடுகளை பவுண்டில்  அடைத்து வைப்பார்கள்.  மாட்டின் சொந்தக்காரர் அபராதம் கட்டி விட்டு ஓட்டிச் செல்வார்கள். மாட்டிற்கு ஒரு தேவை இருக்கிறது.  ஒரு விலையும் இருக்கிறது. மதிப்பும் இருக்கிறது. இவர்களுக்கு அப்படி எதுவுமே இல்லையே?  இவர்களை யார் வந்து கூட்டிப் போவார்கள்.  மாட்டை விட கேவலமானதா மனித உயிர்கள்?"  என்ற வரிகள் மனதை பிசையத்தான் செய்கிறது.

 தாராவிலிருந்து சொந்த ஊருக்கு லாரியில் நெருக்கியடித்தபடி  சென்று கொண்டிருக்கையில்,  லாரியின் குலுங்கலும் நெருக்கலும்  பெரும் உபாதைக்கு தள்ளி விடுகிறது.  சற்று நேரத்தில் உபாதை தாளாமல் பெண்கள் கூச்சலிட லாரியை ஒரு ஆற்றோரமாக ஓரம் கட்டுகிறான்.  எல்லோரும் குதித்தும் பிடித்தும் கீழிறங்குகிறார்கள். தனம் மட்டும் குதிக்கவும் முடியாமல் பிடித்து இறங்கவும் இல்லாமல் தடுமாறுகிறாள்.  ஓர் ஆண்  பலவாறு அவளை இறக்க முயன்று   அவள் இடுப்பை இரு கைகளாலும் இறுகப் பிடித்து இறக்கி விடுகிறான்.  உடம்பு எவ்வளவு சூடு என்று சொல்லியப்படியே இவளை இறக்கிய கைகளை ஒன்றோடு ஒன்று உரசி தீப்பிடிக்க வைத்து அதை கன்னத்தில் வைத்து தேய்த்துக் கொள்கிறான்.  தனத்திற்கு கங்குகள் உடலில் எரிய ஆரம்பித்து விடுகின்றன.  அணு அணுவாக  அவள் தேகம் எரிய ஆரம்பித்தது. எரிவதை எரிக்கணும்  எரிக்கணும்  என்று தனக்குள் சொல்லிக் கொண்டே கடந்து பெண்கள் பக்கமாக ஒதுங்குகிறாள். தன் பத்து வயது பெண் தான் பருவம் அடைந்தது தெரியாமலே வயிற்று வலியால் துடிப்பதைக் கண்டு ரகசியம் காத்தப்படியே லாரிக்கு செல்கிறாள்.  முன்போலவே  அந்த அவன் அவளது இடுப்பை பிடித்து ஏற்றி விட எத்தனிக்கையில்  அதை தவிர்த்து தானாகவே மெல்ல ஏறி கொள்கிறாள்.  இது மிக நுட்பமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு இடமாகவே பார்க்க முடிகிறது.  ஒரு பெண்ணுக்குள் எப்போதுமே தீராத கன்னி ஒருத்தி  இருந்து கொண்டே இருக்கிறாள்.  அதன் பொருட்டு அவளுக்குள் காமம் குறித்த வேட்கை எட்டிப் பார்க்கக்கூடும். ஆனால் தாய்மை என்பது அவளுக்குள் ஆதியில்  முளைவிட்ட சூல்.   லாரியிலிருந்து இறக்குவதற்கு அவனோடு உடன்பட்டவள் திரும்பி வரும்போது பூப்படைந்த மகள் மீதான பொறுப்பில் அதைத் தவிர்த்து விடுகிறாள்.  இவையெல்லாம். நுட்பமான பெண் மனதை காட்டுகிற இடமாகவே பார்க்க முடிகிறது.  அதேபோல் அந்த சிறுமி வயிற்றைப் பிடித்தபடி உபாதையில் நெளியும்போது கூட கூட்டத்தின் நடுவே ரகசியம் காத்து வலியோடு பயணிக்கிற இடத்தில்  அந்தப் பூப்படைந்த சிறுமியின் ரகசிய உபாதையை வாசகர்களிடமே பகிர்ந்து கொடுத்து விடுகிறார் எழுத்தாளர்.  மற்றொரு இடத்தில் தனது மாமன் வீட்டில் வளரிளம்  பெண்ணான தனத்தின் மகள் தேனோ சிறுமியின் போக்கிலேயே தன் மார்புகள் குலுங்க நடப்பதை அவளது மார்புகளைச் சுட்டிக்காட்டி அவளது அத்தை அருவருப்பாக பேசும் போது,  கூனிக்குருகி திடீரென்று  அந்தப் பெண் இரு கைகளாலும் தன் மார்பின் மீது சிலுவை விட்டு அவமானம் குன்ற மறைத்துக் கொள்கிறாள்.  இது பெண்ணுக்குள் திணிக்கப்பட்டிருக்கும் காலாதீத  அச்சத்தை காட்டுகிற இடமாகவே இருக்கிறது.  கவிஞர் குட்டி ரேவதி அவர்கள் மார்புகளைப்  பற்றி  ஓரிடத்திலே  கூறியிருப்பார்"  ஒரு நிறைவேறாத காதலில்  துடைத்தகற்ற முடியாத இரு கண்ணீர் துளிகளாக தேங்கி தளும்புகின்றன முலைகள் "என்கிறார்.

ஆம் பெண்களின் தீராத கண்ணீர் திட்டுகள்தான் அவைகள் என்றே எண்ணத் தோன்றுகிறது.  மேலும் அந்த அனாதை பெண்ணின் மீது அவள் மாமன் மகன் விபரீத சீண்டல்களை நிகழ்த்துகிறான்.   அதை கூறுகிற இடம் ஒரு குறியீட்டுத் தன்மையோடு நாகரிகமான மொழிகளில்,  முகம் சுளிக்க வைக்காத வரிகளை கையாண்டு இருப்பது இவரது எழுத்து மேன்மையைக் காட்டுகிறது.  

இவ்வாறாக இவர் பெண்ணின் பாதுகாவல் குறித்த காத்திரமான பதிவுகளை  நாவல் எங்கும் நிகழ்த்துகிறார். , இவர் பெண்ணியத்தின் மீது தீராத நேசமும் அக்கறையும் கொண்டவர் என்பதை நூலெங்கும் நிரூபித்தப்படியே இருக்கிறார். 


 வரலாற்றில் உலவிக்கொண்டே இருக்கும் முக்கிய பேசு பொருளான கொரோனா பெரும் தொற்றுப் பற்றி மிகக் காத்திரமான நாவலாக பொறுப்புணர்ந்து பதிவு செய்துள்ளார் எழுத்தாளர் புதியமாதவி அவர்கள். தமிழ் வாசகர்கள் மட்டுமல்லாமல் உலக வாசகர்களே வாசிக்க வேண்டிய நாவல் இது.  

  இந்த சிறகொடிந்த வலசை ஒருபோதும் வீழ்ந்து விடாது.  மாறாக ராஜாளியாக உருப்பெற்று எழுத்துலகில் வலம் வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். 


- சம்பத் ஜி




வெளியீடு : அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்

சென்னை.


#புதியமாதவி_நூல்கள்

Saturday, February 1, 2025

மைக்ரோ கடவுள்கள்

 மைக்ரோ கடவுள்கள்

🦋🦋🦋



 கடவுள்களின் விசுவரூபங்களை வியந்து எழுதிய காலங்கள் முடிவுக்கு வருகின்றன. இலக்கியம் தனக்கான வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் அது எழுதப்படும் காலத்தின் துளியிலிருந்துதான் எடுத்துக் கொள்கிறது. கைபேசிகளின் காலமிது. கடவுளும் கைபேசிக்குள் அடக்கமாக அவதாரமெடுக்கிற காலமிது. இலக்கியமும் விதிவிலக்கல்ல.

 அவசரமான வேகமான கைபேசி காலத்தினூடாக பயணிக்கும் போது இலக்கியமும் அதற்கான வடிவத்தை இயல்பாகவே மைக்ரோ வடிவமாக பெறுகிறது என்றுதான் சொல்லவேண்டும்.

 பக்கம் பக்கமாக எழுதுவதை இன்றெல்லாம் யாருக்கும் வாசிக்க நேரமிருப்பதில்லை என்பதுதான் உண்மை ! எனவே குறுங்கதைகள், மைக்ரோ கதைகளுக்கான காலமாக இன்றைய கைபேசி இலக்கியவடிவமாக குறுங்கதைகளின் வரவு கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

 பஞ்சதந்திர கதைகள், ஜாதக கதைகள் , அக்பர் பீர்பால் கதைகள் இவை அக்காலத்திய குறுங்கதைகள். உலகத்தின் மிகச்சிறிய கதை என்று எர்னெஸ்ட் ஹமிங்க்வே எழுதிய ஆறு சொற்கள் கொண்ட சிறுகதையைத்தான் குறிப்படுவார்கள். அக்கதை : FOR SALE : BABY SHOES, NEVER WORN” அவ்வளவுதான்! இந்த ஆறுசொல் மைக்ரோ கதையை அவர் சவாலாக எடுத்துக் கொண்டு எழுதினார் என்றும் சொல்கிறார்கள்.


தமிழ் இலக்கியப் பரப்பில் , “ஒரு ஊர்ல ஒரு நரி, அதோட கதை சரி”  என்பதும் அவர் கதையைப் போலவே மைக்ரோ கதைதான். எழுதியவர்தான் யாரென்று தெரியவில்லை. ! 80களில்  ஈழம் எழுத்தாளர்  ஐ சாந்தன் எழுதிய கடுகுக்கதைகள் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தியவை என்பார். பா. ராகவன்.

அதன் பாதிப்புதான் வார இதழ்களில் வெளிவந்த ஒருபக்க கதைகள் .

ஆனால் இன்று வெளிவரும் மைக்ரோ கதைகள், குறுங்கதைகள் நவீன மைக்ரோ கதைகள். காரணம் வடிவத்தில் மட்டுமே இக்கதைகள் குறுங்கதைகள் என்ற பகுப்பில் இடம்பெற்றாலும் முந்தைய குறுங்கதைகளிலிருன்டு மாறுபட்டவை. 

இன்றைய குறுங்கதைகள்,

கவிதையிடமிருந்து கவித்துவத்தையும் சிறுகதையிடமிருந்து கதை சொல்லலையும் பெற்று உருப்பெற்ற வடிவம். “ என்று குறுங்கதையின் புதிய பாய்ச்சலை அடையாளம் காட்டுகிறார் மலேசிய எழுத்தாளர் கே. பாலமுருகன். எழுத்தாளர் அன்பாதவன் எழுதிய “   நேத்ராவதியின் கடவுள்” குறுங்கதைகளும் நவீனத்துவத்தின் இதே பாய்ச்சலைக் கொண்டு அவருக்கே உரிய மொழி நடையில் தனித்துப் பயணிக்கின்றன.

“செய்திகள் வழியாகவும் பிறரின் நேரடி அனுபவங்கள் வாயிலாகவும் சொல்லக்கேட்ட குறிப்புகளாகவும் கிடைத்தவை இக்கதைகள் “ என்று கதைகளின் முகவரியை தெளிவாக முன்வைக்கிறார் அன்பாதவன்.. * *  * 

• உயிர்த்துளி கதை, (பக் 13) கதையில் சமகால ரயிலில் ஒரு கவித்துவம்  கதையாகிறது.

• நீளமான தாஜ்மஹால் (பக் 73) அன்பு, காதல் என்பது வெள்ளைப்பளிங்குகளால் கட்டப்பட்ட்தல்ல, அலங்காரமோ ஆடம்பரமோ அல்ல. அது வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் டிரெயின். ஆம்.. அது ஒரு  நீளமான  தாஜ்மஹால். என்று கதையின் முடிவு. வானுயர நிற்கும் தாஜ்மஹாலைக் கண்டு போட்டோ எடுத்து காதலின் சின்னம்  தாஜ்மஹால் என்று கொண்டாடி உலக அதிசயமாக பார்க்கும் பார்வையின் நடுவில்  நாம் நம் அன்றாட வாழ்விலும் பயணங்களிலும் காணும் தாஜ்மஹாலை பிரதி எடுக்கிறது இக்கதை. காதலும் நேசமும் பிரமாண்டங்களில் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளும்போது வாழ்தல் இனிதாகிறது.

• 60 (பக் 60) கதை அன்பாதவனின் தனித்துவமான எள்ளல் தொனி கொண்ட எழுத்து. அன்பாதவனின் தனித்துவமே எந்த வடிவமாக இருந்தாலும் அதில் அவர் சமகாலத்தை எள்ளலுடன் நகைச்சுவையுடனும் பார்க்கும் பார்வையாகும். குறுங்கதைகளும் விதிவிலக்காகவில்லை. அதிலும் குறிப்பாக ‘60’ கதை.. இதன் உச்சம் தொட்டிருக்கிறது.

• கவித்துவமே கதையாக குறுங்கதைகள் தன் வடிவ நேர்த்தியை கண்ட டைகின்றன என்பதற்கு ‘எம்பாவாய்’ சிறுகதை (பக் 93). மார்கழி நீராடல், ஆண்டாளின் பாடல் வரிகள் எல்லாமும் சமகாலத்துடன் சேர்ந்து ஒரு கரம்சாய் .. குளிருக்கு இதமாக மாறுகிறது. 

‘வங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் ஈந்த பாலில் செய்வோம்.. கரம்சாய்….”! (பக் 93)


• தைலம் (பக் 69) ஒரு பாலியல் கதையும் உண்டு! அது என்னவோ தெரியவில்லை… இந்த எழுத்தாளர்களுக்கு “அண்ணியைக் கண்டால் பாலியல் பிம்பமாகவே தெரிகிறது , பாவம் அண்ணிமார்கள்!” 

வாழ்வின் எந்த ஒரு துளியிலிருந்தும் படைப்புக்கான மூல விதைகளைக் கண்டறிய முடியும் என்பதில் இக்கதைகள் வெற்றி பெற்றிருக்கின்றன.

வாழ்த்துகள் அன்பாதவன்.💐💥

வெளியீடு : இருவாட்சி பதிப்பகம்.@ 2024.

பக் 128 விலை ரூ. 150

Monday, January 27, 2025

ஃ கவிதைகள் தஞ்சை தவசி

 


"மாடித் தோட்டத்தில் பனை மரங்கள் 

             முளைப்பதில்லை " ...

............................................................

உங்கள் மாடித் தோட்டத்தில்

ரோஜாக்கள் பூக்கலாம்

துளசியைக்கூட வளர்க்கலாம்

ஆனால்  ....

பனை மரங்கள்

முளைப்பதில்லை...

~ புதியமாதவி ~

..................................................

ஃ கவிதைகள்

நூலாசிரியர் : புதிய மாதவி

....................................................

"கவிதை நூல் வாசிப்பனுபவம் "

........................................................

புதிய மாதவி தமிழின் முதன்மையான

பெண்ணியக் கவிஞர்களில் ஒருவர்...

அவரது புனைக் கதைகள் உள்ளடக்கத்தில் 

தொடர்ந்து விசாரணைகளை முன் வைத்துக் கொண்டிருப்பவை ...அதற்கேற்ப புதிய வடிவ 

சோதனைகளையும் செய்பவர்...

தொடர்ச்சியாக பயணங்களை மேற்கொண்டு 

புதிய புதிய பெண்களை சந்தித்துக் கொண்டிருக்கும் 

அவர்.பெண்கள் சந்திப்பின் வெளிப்பாடாக இருக்கும்

 ஊடறுவின் முதன்மையான பங்கேற்பாளராகவும் இருக்கிறார் ...அவரது குரல் தமிழின் பெண்ணியக் 

குரல்களில் தனித்துவமானது...

~ பேராசிரியர் அ. ராமசாமி ~

.............................................................

பெண்ணுயிரின் வாதனையை  நேர்படப்பேசி 

கைநீட்டி உணர்த்தலும் வீச்சுமொழியும் கொண்ட

புதியமாதவியின்  ஃ கவிதைகள் ,சுவை புதிது ,

பொருள் புதிது ,வளம் புதிது ,சொல் புதிது ,

ஜோதிமிக்க நவ கவிதை ,எந்நாளும் அழியாத 

மா கவிதைகள் பாரதி புத்திரி புதிய மாதவியின்

ஃதொகுப்பிலிருந்து சில அக்கினி தெறிப்புகள்...

🔳🔳..........................................................

🍁🍁

பாடல்களையும் கதைகளையும்

வாய்மொழியாக 

வாழ வைத்தவர்களுக்கு

அ ஃகேனம் தலை வணங்குகிறது...

உயிரும் இல்லை மெய்யும் இல்லை

தனி நிலையாக நிற்கிறாய்

தனித்தும் இருக்கிறாய்

என் அஃகேனம்  நீ...

காற்று உன்னைத் தீண்டி வெளியேறும் 

போதெல்லாம் இசையாகிறது...

சிரசில் பிறக்கும் உன் ஒலியின் மெல்லிய

அதிர்வில் படபடக்கின்றன சிகரங்களின் 

நெற்றிக்கண் இமைகள்...

பசியில் அலையும் சொற்களும் பாறைகளின் 

மௌனமும் கவிதை மொழியாய் மாறும்போது முப்பாற்புள்ளிகளை மறைத்திருக்கும் 

திரை விலகி ரகசியக்கதவு திறக்கிறது...

கடவுச்சொல் : ஃ

~ ஃ கவிதைகள் ( பக் : 10 ) ~

🍁🍁....................................................................

~இந்த வரிகளுடன் திறக்கிறது  ஃ கவிதைகள்

பிரவாகமெடுக்கும் படைப்பில் உணர்வுகளும்,

கொந்தளிப்புகளும், பாத்திர உருக்களும்,

சம்பவங்களும் குழைந்து சமைந்து விடுகின்றன.

இழைபோல் அவற்றைப் பிரித்தெடுப்பது நமக்கு

இந்த நூல் வாசிப்பில் சாத்தியமாகலாம்...

அங்ஙனம் எந்திரத்தினத்தைக் கட்டுடைக்கும்

கூட்டுத் திரளாக பயணங்களில் அடைகாத்து

பதியப்பட்ட மொழி திரண்டிருப்பதை உள்வாங்க

வாசகர்களுக்கு ஒரு முயற்சி தேவைப்படுகிறது...

🔳🔳 ..............................................................

முற்றுப்புள்ளிகள் அர்த்தமுள்ளவை

ஒரே ஒரு புள்ளி 

அதை "கமா "வாக மாற்றி தொடரலாம் ...

ஒரே ஒரு புள்ளி அதோடு 

இன்னும் ரெண்டு புள்ளிகள்

விழிகளானால்

ஆயுத எழுத்தாக்கி போராடலாம்...

ஒரே ஒரு புள்ளி

அதை புள்ளிகளின் தொடராக்கி

தொடரும் போடலாம்...

ஒரே ஒரு புள்ளி 

எத்தனையோ அர்த்தங்கள் ...

ஆனாலும் தொட நினைத்தபோது

புள்ளிகள் வெடித்து அதிலிருந்து

புறப்படுகின்றன ஓராயிரம் புள்ளிகள்...

புள்ளிகளால் நிரம்பி இருக்கிறது 

என் பிரபஞ்சம்...

~  ஃ கவிதைகள் ( பக்: 103  ) ~

🍁🍁........................................................

விலகிச் செல்லும் உன்னிடம்

நெருங்கி நெருங்கி வருகிறது 

திருவந்தாதி...

திரும்பிக் கூட பார்க்கவில்லை நீ...

இமயத்தின் பனிக்கட்டி வெடித்து 

கங்கையில் வெள்ளக்காடு...

~ ஃ கவிதைகள் (பக் : 72 ) ~

🍁🍁...............................................................

ஆறுதல்களற்ற தனிமையில் வரம்புகளற்று

விரிகிற வானத்தின் கீழே அடைபட்டுக் கிடக்கிற

அத்தனை கதவுகளையும் மறுபடியும் திறக்கிற

கவிதைகள் இவை. இன்மையின் அதீதம் பாரித்த 

இருப்பின் அகவெளியை இப்படி முன்வைக்கிற 

உயிரும் உணர்வும் உறைந்த லயம் பிசகாத 

இயக்கம் வாழ்வின்மேல் கவிகிற பரிவுணர்ச்சி   

இத் தொகுப்பில் மிகநுட்பமானது.

🔳🔳..................................................................

🍁🍁

 வெள்ளை உடையில் இருக்கிறேன்

யாரும் என்னைத் தொட்டுவிடாதீர்கள்

எந்தக் கறையுமின்றி 

இந்த இரவைக் காமாட்டிபுரம் 

கடந்து விட வேண்டும்...

🍁🍁.................................................................

ஹே சென்னிமல்லிகார்ஜுனா

ஒவ்வொரு இதழாக 

இரவின் விரல்கள் தீண்டி 

உதிர்வதற்குள் விடிந்து விடாதா

காமனை எரித்த முதல் இரவு ...

~ஃ கவிதைகள் : பக் : 13 ~

🍁🍁..................................................................

~ என்று நவராத்திரி முதல்  நாள் இரவு

பரிசோதனைகளின் நோவுடன்  பிசிரற்ற 

அன்பின் பூரணத்தில் தொடங்குகிறது 

நவராத்திரி  ஃ கவிதைகள்....

🔳

நவராத்திரி நான்காம் நாள் இரவில் ~

🔳

எரித்தாயா? புதைத்தாயா?

என்ன செய்து அவளைத் தொலைத்தாய்?

பரணி வெள்ளம் மூச்சு திணறிய பஃறுளி

இறுகப் பற்றிய விரல்களில்

மதுரையின் தீராத பசி

வைகை படிக்கட்டுகளில் 

ஒட்டிக் கொண்டிருக்கும்

பச்சை மஞ்சள் காய்வதற்குள்

ஹே ... சென்னிமல்லிகார்ஜுனா....வந்துவிடு...

சிறை எடுத்த நெற்றிக்கண்ணைத்

தந்து விடுகிறேன் வாடா...

~ ஃ கவிதைகள் : பக் : 16 ~

🍁🍁.........................................................

~ என்று கூவி அழைக்கும் மூடிக்கிடந்த 

ஞாபகத்தின் வனாந்திரத்திலிருந்து

வெவ்வேறு உருவமெடுக்கும் ஒவ்வொரு

கதவையும் தட்டும் புராணபூதம்  ஏகமாய்

விரிந்த கவிதையாய் நிகழ்காலத்துடன் 

பாதை வெட்டிக்கொண்டே கடக்கிறது..

🍁

🔳

நவராத்திரி ஆறாம் நாள் இரவில் ~

🔳

எல்லம்மாவின் இரவுக்கு

விடியல் எப்போது சாமுண்டி ?

இன்னும் இருக்கிறது 

கண்ணுக்குத் தெரியாத 

யுத்தகளம் ...

இரவுப் பசி தீர்க்க 

மிச்சமிருக்கிறது 

கருக்கலின் படையல்...

~ ஃ கவிதைகள் : பக்: 18 ~

🔳 ~ என்று 

தொடர்கிற அறுந்த உரையாடல்களின்

துண்டங்கள் தொங்கிக் கொண்டிருக்க

நவராத்திரி எட்டாம் நாள் இரவில்...

🍁🍁

காரைக்கால் வீதிகள் 

தலை குனிந்த இரவு 

ஆயிரம் கண்ணுடையாள் 

அகிலாண்டேஸ்வரி 

அருள் வந்து ஆடுகிறாள்...

 பராசக்திக்கு 

ஏதடா பழியும் பாவமும்?

ருத்ராட்சக் காடுகள் 

விழித்துக் கொள்ளும் சாமம் 

நெற்றிக்கண் படபடக்கிறது

பேயுரு களைந்த திருவந்தாதி 

தலைகீழாய் நடக்கிறாள்

படைப்புக்கு பிரம்மத்திற்கும் 

நடுவில் வெந்து தணியுமோ காடு?

~ ஃ கவிதைகள் : பக் : 21 ~

🍁🔳

~ என்று இருளில் நகரும் பயணம் 

மஹா ஆழத்தின் ஊற்றுக்கண் 

ஃகவிதையாய் அரூப நடனமாடுகிறது...

🔳🔳............................................................

இப்படியாக இன்னுமாக நவராத்திரி ஒன்பது 

இரவின் கவிதைகளும் அதிகாரத்தின்  

புகை கவிழ்ந்த காலவெளியில் ஒழுங்கைச் 

சிதறடிப்பதன் மூலம் தொன்மத்துக்குள் 

அழைத்துச் செல்லும் கவிதைகளில் இருப்பின் 

பொருள்தேடி நின்று சுடரும் ஒளிக்கசிவில் அசல்

பெண்ணிய மொழியை  தரிசிக்க முடிகிறது...

🔳 🔳    ..........................................................

ஒரு பெண்ணால் மட்டுமே எழுத இயலுமான 

இப்படியான ஆயுத எழுத்தை ஒரு ஆணால் 

எழுத முடியுமா? எனக்குத் தெரியவில்லை..

🔳🔳

ஒரு எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையில்

வார்த்தைகள்தான் இருக்கின்றன..

இத்தொகுப்பின் தனித்துவமான  58 கவிதைகள் 

பெண்ணின் மனம், உடல் தாங்கிய  சிறுமை,

குரூர வலிகளை மெய்யான மனத்தகிப்புகளை 

தெருப்புழுதியில் வீசிஎறியப்பட்ட பழங்காகிதமாக

பெண்கள் மீது ஏவப்படும் பயங்கரவாதத்தை

எங்கோ நடக்கிற அதிகார அநீதியை இங்குள்ள 

நீதிக்கான அச்சுறுத்தலை வெற்று ஆக்ரோஷம்

 சற்றேனும் இல்லாத தத்தளிக்கும் வலியின் 

மொழியிலேயே பேசுகிற ஃகவிதைகள்; யார் 

யாரோவுடையதோ அல்ல. நாங்கள் நீங்கள்

அவர்கள் அங்கும் இங்கும் இங்கும் எங்கும்

இருக்கும் ஒன்றுதான் அது...  எல்லைகள் 

வெவ்வேறாயினும் வலிகள் ஒன்றுதான்...

முரண்பாடுகளின் சமநிலை எல்லைகளை

அழிக்கும் அற்புதம்; சமகால களநடைப் பாடல்

இந்நூலில் எந்தக் கவிதையை படித்தாலும்

நமக்குள் இருப்பது தான் இத்தொகுப்பில் 

இருக்கிறது; அதை மீறி ஒன்றுமில்லை...

🔳🔳....................................................

"போக வழியின்றி

பூனையை மரித்துப் பார்

புலியைக் காண்பாய் ... "

~ என்றெழுதிய இன்குலாப் விட்ட 

இடத்திலிருந்து தொடர்வது போல

தொடங்குகிறது 

 ஃ கவிதைகளின்  உரையாடல்கள்...

வாசலுக்கு விடிந்தால் வீட்டிற்கும் வந்துவிடும்...

🔳 🔳  .......................................................

 "பூமியின் மீது அக்கினியைப் போடவந்தேன்

அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டும் 

என்று விரும்புகிறேன்... " ~ கனலும் இத்தகு 

விவிலிய நடைச்செறிவின் புதிய வீச்சுடன் 

தனக்குள் தான் விரையும் ஒரு நதியின் விசை

புதியமாதவியின் ஃ கவிதைகள்...

யுத்தத்தின் எதிர்பாராத கட்டங்களை சொல்லில் 

நிகழ்த்தும் இவரது 

மொழியில் காலம் உறைந்து கிடக்கிறது. 

அதில் வெளியும் நுண்மையாக உறைந்திருக்கிறது...இலக்கியத்தில் சுவையம்சம்

இப்படியான ஜீவத்துடிப்பில்தான் இருக்கிறது...

🔳

நமது சமூகம் விசித்திரமானது ஜாதியாலும் 

மதத்தாலும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது...

வாழ்ந்து தீராத ஒரு கனவில் இருக்கிறது 

சமூகம் விழித்தெழும் வேளை வரவே இல்லை...

ஒரு கலாச்சாரம் எவ்வளவு நாகரிகமானது 

என்று தெரிந்து கொள்ள அவர்கள் பெண்களை 

எப்படி நடத்துகிறார்கள் என்பது ஒன்றே போதும்.

வரலாறு அறியாமல் ஒரு வரலாற்றை படைக்க 

முடியாது ..இது இலக்கியத்திற்கும் எழுத்திற்கும் 

பொருந்தும்.. இலக்கியம்தான் அத்தனை

சீரழிவுகளுக்கு மத்தியிலும் ஒரு நீதியின் 

குரலாக ஒரு சரியான வழிகாட்டியாக திகழ்கிறது...

🔳🔳🔳🔳🔳🔳🔳🔳🔳🔳

🍁🍁

கொலையுதிர் காலத்தின் சங்கீதம்

குயில்களுக்கு ஆயுள் தண்டனை

காக்கையின் கூடுகளில்

காக்கைப்பாடினிகள் பிறக்கட்டும்...

அந்நாளில் 

எழுதுவேன் என் முகவரியை...


உன் முகவரியை அழித்து 

எழுதப்போவதாக உத்தேசமில்லை...

என் முகவரியே 

உனக்குமானதாக எழுதும் காலம் ...

அந்நாளில்

எழுதுவேன் நம் முகவரியை ...

~ ஃ கவிதைகள் (பக் : 32 )~

🍁🍁

ஹே சென்னிமல்லிகார்ஜுனா

சுடுகாட்டில் ஆடும் உன் ஆட்டத்தில்

நீண்டு தொங்கும் சடைமுடிகள்

மறைத்திருக்கின்றன 

உன் முதுகில் இருக்கும் 

பொய்யின் தழும்புகளை ...


ஆடியது போதும் , வா

பொய்கள்தான் பொய்களை அறியும் ...

காதல் பிணங்களை எரிக்க 

பொய்களால் மட்டுமே முடியும் ...

அவள் பிணம் எரியும் வாசனை

 உன் தேசமெங்கும் 

பொய்களை விதைக்கட்டும் ...

அதில் உன் 

நெற்றிக் கண்ணும் சிதையட்டும்...

கொற்றவை களி நடனம் ...

அடியே மீனாட்சி அழுகை நிறுத்து...

~ ஃ கவிதைகள் (பக் : 34 ) ~

🍁🍁

என்னிடம் 

ஒட்டிக்கொண்டிருக்கும்

உன்னைப் பிய்த்து

உன்னிடமே 

கொடுத்துவிட முடியாமல்

என்னை நானே 

புதைத்துக்கொள்கிறேன்...

இருதலின்

 துயரத்தை எரித்து எரித்து

சாம்பலாக்கி 

கரைத்துவிட முடியாமல் 

காலநதி மணல்மேடாய்...

~ ஃ கவிதைகள் (பக் : 36 ) ~

🍁🍁

கவிதைக்குள் பேய் இருக்கிறது

கவிதையை வாசிப்பதற்கு

நீங்கள் 

கோடாங்கியாக மாறவேண்டும் ...

திருநீறு 

பூசுவதும் பூசாமல் இருப்பதும்

உங்கள் பகுத்தறிவு உரிமை ...

கவிதைப் பேய் அதையெல்லாம் 

கண்டு கொள்வதில்லை...

கவிதையைத் தொடுவதற்கு

ஒரு நவீன சேவல்கோழியைப் பிடித்து

தலையைத் திருகி 

படையலிட வேண்டும்

அது முக்கியம்...

~ ஃகவிதைகள் (பக் : 56 ) ~

🍁🍁

கருவறையில் 

அர்த்த ஜாம பூஜையில்

உன் மொழி மந்திரமாகட்டும் ...

யெளவனம் மறந்தவள்

பேயுரு களைந்து உனக்காக 

உயிர்த்தெழக்கூடும் ...

அப்போது 

அவளை வாசித்துப்பார்...

~ ஃ கவிதைகள் ( பக் : 70 ) ~

🍁🍁

சுட்ட மண்ணில் இன்னும் 

சூடு ஆறாமலிருக்கும்

பொம்மையின் சிதைந்த மார்பில்

எழுதப்பட்டிருக்கிறது அவன் விதி...

கொட்டும் மழையில் எரியும் தீயை

இனி எவர் அணைக்க முடியும்???


ஹே சென்னிமல்லிகார்ஜுனா

காலக்குகை விரியும்போது

சிதையும் சிவலிங்கம் ...

~ ஃ கவிதைகள் (பக் : 75 ) ~

🍁🍁

உன் தியாக வரலாற்றில்

யார் யாருக்கோ வாழ்க்கை

எனக்கு ?

அதில் ஒதுங்கிக் கொள்ளவும்

நிழலில்லை...

வந்து போனவர்கள் 

இடையில் வந்தவர்கள் 

இவர்களுக்கு 

நடுவில் என்னை தேடாதே...

உன் சந்தன சோப்புக்கரைசலில் 

கரைந்து 

போகிறவள் அல்ல நான்...

~ ஃ கவிதைகள் (பக் : 89 )

🍁🍁

ஹே சென்னிமல்லிகார்ஜுனா

வெற்றுக் காகிதத்தை விட்டுச் செல்கிறேன்

என்னை அழித்து அழித்து

எழுதிய வெற்றுக் காகிதத்தை

விட்டு செல்கிறேன்

உன் பேர் சொல்லமுடியாத

நம் பிள்ளைகளுக்காக...

~ ஃ கவிதைகள் (பக் 100 )

🔳🔳🔳🔳🔳🔳🔳🔳🔳

இப்படியான தற்கால வாழ்பரப்பின் மீது 

நின்றுகொண்டு தனது நெடும் 

புராதனக்கொடி மரபின் கூட்டு நனவிலியை 

புறவயப்படுத்துகிற ஃ கவிதைகள் ஒவ்வொரு 

முறை வாசிக்கப்படும் போதும் புதிதாக நிகழ்கிறது, 

கவிதை தன்னை நிகழ்த்திக் கொள்கிறது..

சமகால அரசியல் மற்றும் சமூக வாழ்வின் 

அமைப்பாக்கத்தின் உள்ளமைவுகளின் 

தன்மைகளையும் தனது உட்கலனாக்குகின்ற;

 வாழ்க்கையின் முரண்களை முன் வைத்தே

புதியமாதவியின் கவிதை உலகம் நகர்கிறது...

படைப்பின் நோக்கம் புரியும்போது படைப்பாளியும்

புரிந்துகொள்ளப்படுகிறார் என்பதே வரலாறு...

🔳

பல நூற்றாண்டுகளின் குரல்வளையிலிருந்து 

பெறப்பட்ட கவித்துவ குரலை புதிய மாதவி  

தனது குரலாக மீட்டெடுக்கிறார்... வாழ்க்கை 

பேரிழப்பின் ஆற்றாமையிலிருந்தும் 

தன்னிலை இழப்பிலிருந்தும் விடுவித்துக் 

கொள்ளும் விதமாக எழுதப்பட்டுள்ளவை 

இவரது  ஃ கவிதைகள்...

🔳🔳

பெண்ணை இயற்கையின் பகுதியாக மட்டுமல்ல இயற்கையாகவும் ; சமூகத்தின் அங்கமாக அல்ல

சமூகமாகவும்; ஆணின் சார்பாக அல்ல ஆணை நிர்ணயிப்பவளாகவும்;  மாற்றும் மானுட மனதின்

சொற்பெருக்கே இவரது கவிதைகளின் ஆதாரம்.

பெண்ணியம் ,பெரியாரியம்  அம்பேத்கரியம்

மார்க்சியம் இவைகளின் சாரங்களை 

எடுத்துக் கோர்த்து நவீன தமிழின் 

இலக்கிய வெளியில்கொண்டு சேர்க்கிறது 

ஃ கவிதைகள் தொகுப்பு...

🔳🔳

நவீன கவிதை என்பது, .’உயர்ந்து எழுந்து 

வரும் நம் சொந்த எண்ணங்கள்தானோ? 

என்று வாசகர் எண்ணும்படி, வாசிப்பவரை 

ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நினைவுகூறலாக 

இருக்க வேண்டும்’ என்கிறார் ஜான் கீட்ஸ், 

தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில்...

🍁🍁

எழுத்தாளரின் வேலை என்பது முற்றிலும் 

தெரியாத ஒன்றை சொல்வது அல்ல

“ஆமாம் நீங்கள் சொல்வது புரிகிறது” என்று 

வாசகனை அகம் திறந்து சொல்ல வைப்பது. 

ஏற்கனவே தெரிந்த ஆனால் வாசகன்

சொல்லத்துணிந்திராத ஒன்றைச் சொல்வது” 

என்கிறார் ராபர்ட் ப்ராஸ்ட். ... 

இவ்விரு கவிஞர்களின் கூற்றுகளுக்கும் 

இயைந்த புதியஏற்பாடு ஒன்றின் துவக்கம்

புதியமாதவியின்  ஃ கவிதைகள்...

🍁🍁

ஏற்கனவே புழக்கத்திலிருந்த கவியுருவின் 

போதாமையை நிரப்பும் தேவையின் 

பொருட்டு தோன்றி, வளர்ந்ததே நவீனக்கவிதை. 

ஆகவேதான் நாடகீயமான தருணங்களின் 

களஞ்சியமாக விளங்கும் மையக்கருவோ, 

நீண்டு விரிந்து துயரமான முடிவை 

நோக்கிச்செல்லும் கதையோ நவீனக்கவிதைக்கு கருப்பொருளாவதில்லை.  

🍁🍁

சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல 

முடியாமல் போனவை ; சொல்லப்பட்ட 

எதையும் விட பிரகாசமாகிக்கொண்டே இருக்கிறது...

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் 

பரவலாக அறியப்பட்ட,  அழகியலை மீறிச்செல்லும் 

நோக்கத்தில் தோன்றிய பாணியின் வீச்சே 

நவீனக்கவிதைகளின் வடிவியலை தீர்மானிக்கும் விசை. ஆகவேதான் அன்றாட வாழ்வின் எளிய, சாதாரணமான, சிறப்புகள் ஏதுமற்ற விஷயங்களும்கூட நவீனக்கவிதையின் 

திறப்புகளாகி பாடுபொருளாகி விடுகின்றன. 

🍁🍁

அன்றாட எளிய விஷயங்களை அவதானித்து 

அதன் அண்மையில் சென்று காட்சிப்படுத்துவதும், 

அதன் வழி கேள்விகளை எழுப்பிக்கொண்டு தத்துவவிசாரத்துக்குள் புகுந்து செல்வதுமான 

சுயவிசாரணையே புதியமாதவியின் சிருஷ்டிகள்...

🍁🍁

தற்கால வாழ்வின் பரப்பில் நாம் அறியாத வண்ணமாக

 நம் மீது வேரோடியுள்ள அதிகாரத்துவ அரசியலில் கடுங்கரங்களில் சிக்குண்டு தவிக்கிறோம் ...

அன்றாடங்களில் காணக் கிடைக்கும் மனிதமற்று போனவர்களின் கையறு நிலையை 

அகவயப்படுத்தும் அரசியல் பிரதிகளின் தேவை இலக்கியத்திற்கு மிக முக்கியமானது ...

அத்தகைய கவிதைகளை எழுதுவதும் மிக மிக அவசியமானது .அதற்கான மொழி தேர்வும் மற்றும்

கவித்துவமும் மற்ற கவிதைகளின் போக்கிலிருந்து 

முற்றிலும் மாறுபட்டது...ஆகையால் அத்தகைய 

வகைமையில் ஏன் நிகழ்கிறது என்பதை விட 

எப்படி நிகழ்கிறது என்பதை ஆராயும் 

புதியமாதவியின்ஃ கவிதைகளை வாசகர்கள் 

அணுகும் போது

 அதற்குரிய தளத்தில்தான் அணுக வேண்டும்...

🍁🍁

செவ்விலக்கியம் பெரும்பாலும் கவிதைகளை 

முன்வைத்தே மதிப்பிடப்படுகிறது , காரணம் 

செவ்விலக்கியம் என்பதற்கு ஒரு பழமை தேவை.

இலக்கிய வகைகளில் பழமைச் செறிவுள்ள

வரலாறு கவிதைக்கு மட்டும்தான் உள்ளது...

செவ்வியல் வாய்ப்பாட்டையும் மரபின் கட்டற்ற

தன்மையையும் உள்ளடக்கிய நவீன மொழியின்

விஸ்தரிப்பு புதிய மாதவி படைப்புகள் ...

🔳🔳

யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்து எதற்கு?

புதியமாதவியின் அனைத்துக் கவிதைகளிலும்

இந்த சுயபிம்பத்தின் இருப்பை நாம் காணலாம்..

மொழியில் உயிர்ச்சக்தியாக இயங்கும் கவித்துவ 

வேகம் காலத்தைக் கிழிக்கும் நியதி நெருப்பு 

இவரது கவிதைகள் சமகால தமிழின் மிகச்சிறந்த

மொழிச்சாத்தியங்களை நிகழ்த்தியவை 

என்று கூறலாம்... தேர்ந்த வாசகன் அதை 

எப்போதும்

ஒத்துக்கொள்வான் மறுதலிக்க முடியாது ...

🔳🔳

ஒவ்வொரு எழுத்தாளரும் அரசியல் 

எழுத்தாளர்தான்...

இதில் உள்ள ஒரே கேள்வி

அது யாருக்கான அரசியல்??

~ என்று கூகிவா தியாங்கோ 

முன்வைத்த விசாரணை அறிக்கையின் 

சிறைத்தகர்ப்பு கேள்விகள் ,எதிர்வினைகள் , 

கனல் பிடித்தெரியும்  நுண்ணரசியலின்

நியூட்டனின் மூன்றாம் விதி உரையாடல்கள்தான்

புதிய மாதவியின்  ஃ கவிதைகள் 

🔳🔳

தனித்திருப்பதற்கான தைரியமே வீரம்

-~ என்றார் வர்த்தமான மகாவீரர்.

தனித்து நிற்கிறது ஃ கவிதைகள்  தொகுப்பு 

தனித்திருப்பதில் எல்லாம் அடங்கி இருக்கிறது

வாழ்த்துகள் தோழர் புதியமாதவி ...

தோழமையுடன் ...

~ தஞ்சை தவசி

     27 ~ 1 ~ 2025

     சென்னை . 16

🔳🔳

நூலைப் பெற :

நூல்  ~ ஃ கவிதைகள்

நூலாசிரியர் ~ புதிய மாதவி

அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்

விலை : Rs .120 

தொடர்புக்கு: 94446 40986

🔳🔳

பேரன்பும் மிக்க நன்றியும் தவசி.

💥🙏🙏

Tuesday, January 21, 2025

கலைஞரும் மும்பையும்



டிச.1983. தாதாவாக இருந்த வரதாபாய் பம்பாய்த் தமிழர் பேரவை நிறுவி மும்பை அரசியல்வாதிகளுக்கு ஓர் அச்சுறுத்தலாக மாறிக் கொண்டிருந்த தருணம்.

அதுவே அவருக்கு முடிவுரை எழுதியது என்பது வேறொரு கதை.


இங்கே இந்த அழைப்பிதழில் அவர் இருக்கிறார். (மு. வரதராசனார்/ முனுசாமி வரதராசனார் )ஆனால் நிகழ்வில் அவரில்லை!!!அவர் சம்மத்துடன்தான் அவர் பெயரைச் சேர்த்திருக்க முடியும். ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது ஒரு சுவராஸ்யமான திருப்புமுனை.

கலைஞரிடம் வரதாபாய் நெருங்குவதா..?

விடலாமா!

என்று அன்றைய தமிழக முதல்வர் எம்ஜிஆர் நினைக்கிறார். ஏன் அப்படி நினைச்சார்னு யாருக்குத் தெரியும்?!🙃

எம்ஜிஆர் அதே நாளில் வரதாபாய்க்கு சிறப்பு செய்ய மாபெரும் நிகழ்வு சேலத்தில் ஏற்பாடு செய்கிறார்.அமைச்சர் ராஜாராம் மூலம் வரதாபாயுடன் பேசுகிறார்கள். எனவே கலைஞரின் நிகழ்வில் வரதாபாய் வரவில்லை.

வரதாபாய் சார்பாக தமிழர் பேரவை செயலாளர் பரமசிவம் அவர்கள் கலைஞருக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்கிறார்..கலைஞர் அதைப் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு தன் உரையில் குறிப்பிடுகிறார்.

" வரவேண்டிய வரதராசன் வராத ராசன் ஆகிவிட்டார்."

மும்பையில் இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் இன்றும் இதைச் சொல்லிச் சொல்லி ரசிக்கிறார்கள்.



நன்றி மும்பை ஜேசுராஜ்.

#கலைஞர்_மும்பை

#கலைஞர்_மும்பைதமிழர்

Monday, January 20, 2025

ஃ கவிதைகள் விமர்சனம் 2




உரிமைக்குரல்


அறச்சீற்றம் என்பது கவிஞர்களுக்கு பிரிக்கமுடியாத உரிமை.அந்த நியாயத்தின்

சுதந்திரக்காற்றை சுவாசிக்கும்  ஒருத்தி

மற்றவர்களுக்காய் குரல் கொடுக்கிறாள்.

சொற்களால் சலங்கைகட்டி சன்னதம் செய்கிறாள்.அன்புக்கும் துரோகத்துக்குமிடையே அலைபாயும் பெண்மையின்  காயத்தை,வலியை,தன்சொற்களால் ஒளியேற்றி சென்னிமல்லிகார்ஜூனின் இருளை சுட்டிகாட்டுகிறாள்.


"ஹே சென்னிமல்லிகார்ஜூனா

காலக்குகை விரியும் போது

சிதையும் சிவலிங்கம்"என்கிறார் 


நவராத்திரியின் ஒன்பது இரவுகளிலும் சிவனை உலுக்கும் சக்தியின் மொழியில்

இந்த சமூகத்தின் அவலத்தை புதியமாதவி அவர்கள் தன் சொற்சாட்டையால் வெளுக்கிறார்.


எந்தக் கறையுமின்றி இந்த இரவைக்

காமட்டிபுரம்

கடந்துவிட வேண்டும்...


இந்த ஓரிரவிலேனும்

வெள்ளைத்தாமரையில்

என்னுடல் பூத்திருக்கட்டும்...


 என்னும் வேளையில் ஒட்டுமொத்த பெண்களுக்கும்

குரல் கொடுக்கிறார்.எத்தனையோ நிர்பயாக்கள் கண் முன்னே வந்துசெல்கிறார்கள்.


பெண்கடவுளே வந்தாலும் திக்...திக் மனநிலையில் தான்   செல்லவேண்டிய கொடூரச் சூழலை புடம் போட்டு காட்டுகிறார்.


துலுக்க நாச்சியார்

காதலிப்பது ஊரறிந்த ரகசியம்

பாவம் நீ... என்கிற போது

எள்ளல் தொணியில் அழகரை  கேள்விக்கேட்பதோடு,துலுக்கநாச்சியார் வீரம் கொண்டவள் என்பதையும் சொல்லிச்செல்கிறார்


செல்லியம்மன்

இசக்கி அம்மன்

அக்கம்மா தேவி

தவ்வை

பச்சையம்மன்

எல்லம்மா

கொற்றவை

காரைக்கால் அம்மை

துலக்க நாச்சியார்

சீதை


பெண்கள்,பெண் சிறுதெய்வங்கள் அவர்களின் உடல்கள்,உணர்வுகளின் வழி

நின்று நியாயத்தை,அவர்களுக்கான உரிமையைக் கேட்டு நிற்கிறார். அதே நேரத்தில்


சக்தியுகம் செத்துவிடவில்லை

அமிர்தமே நஞ்சாக 

கசக்கிறது. உன் எச்சில்பருக்கை...

தகத்தக தகத்தன தகவென

ஆடும் காற்றில் எரியும்

நான் நீ காலம் என்பதை தீர்க்கமாய் கூறுகிறார்.


பெண்மையைவாசிக்கத்தெரியாத ஆண்மை அரசியலை தொன்மம் வழியே

நம் முன் வைக்கிறார்.


யௌவனம் மறந்தவள்

பேயுரு களைந்து

உனக்காக

உயிர்த்தெழக்கூடும்

அப்போது அவளை

வாசித்துப்பார்... என்கிறார்.


பெண்களுக்கான வலியை,காயத்தை அவர் சொற்களின் வழியே கடத்துவது,அனைவரும் விழிப்புணர்வை பெறவேண்டும் என்ற உயரிய எண்ணம் 

திண்ணமாய் விளங்குகிறது.

பசியில் அலையும் சொற்களும்,பாறையின் மௌனமும் கவிதை மொழியாய் மாறும்போது ரகசியக்கதவு திறக்கிறது.

அதுவே ஃ.அதுதான் எல்லோருக்குமான உரிமைக்குரல்.

அற்புதம் புதிய மாதவி அம்மா .


செ.புனிதஜோதி

(முகநூல் பதிவு 20/01/25,)

நன்றி புனித ஜோதி

#ஃகவிதைகள்_புதியமாதவி

#Puthiyamaadhavi_ஃPoems

திமுகவும் புத்தகவாசிப்பும்

 



திமுக உபிக்கள் புத்தகம் வாசிப்பதில்லை.

அது கலைஞருடன்

முடிந்துப் போனதாகவே நினைக்கிறேன்.

காரணம் சோ. தர்மன் அய்யா அவர்கள் எழுதிய சாகித்திய அகாதெமி விருது பெற்ற சூல் நாவலில் தந்தை பெரியாரை நாயக்கர் என்றும் நாயக்கர் கட்சி என்றும் விமர்சனம் படுத்தி இருப்பார். 

எந்த ஒரு தலைவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல.

பெரியாருக்கு குழந்தை இல்லை என்ற அவர் தனிப்பட்ட வாழ்க்கையை

கதை மாந்தர்களின் உரையாடல் வழி நக்கல் அடித்திருப்பார்.

பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இக்கதையில் காலவழுவாக சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரசு ஆண்டதை மறந்து அதை 1967க்குப் பிறகான கதைக்களம் ஆக்கி இருப்பார்.

சூல் வாசித்தவர்கள் யாருக்கும்

இது புரியவில்லையா?

அல்லது சூல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதும்

தர்மன் அய்யாவுக்கு திராவிட மாடல் கனவு இல்லம் வழங்கி கெளரவித்ததும் கூட

இதற்காக தானா!!!

யாருக்குத் தெரியும்.


ஆ ஓ என்றால் எழுத்தாளர் ஜெயமோகனை வரிந்துக் கட்டிக்கொண்டு விமர்சிக்கும் அறிவுஜீவிகள் எல்லாம் இதை மட்டும் ஏன் கண்டு கொள்ளவில்லை!???

மில்லியன் டாலர் கேள்வி இது.


பெரியார் அண்ணா கலைஞர் யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அவர்களின் கருத்துகளுடன் முரண்பட லாம். ஆனால் ஒரு நாலாந்தரமான அருவெறுப்பு தரும் வகையில் மஞ்சள் பத்திரிகை தரத்தில் புனைவுகளில் ஊடாக..

எழுதி ...அதையும் இவர்கள் எல்லாம் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று நினைத்து அதையும் சாதித்துக் காட்டி...

இதெல்லாம் எப்படி சாத்தியப்படுகிறது???


காரணம் திமுக உபிக்கள் புத்தகம் வாசிப்பதில்லை!

அவ்வளவுதான்!


#திமுக_புத்தகவாசிப்பு


#DMK_dravidamodel


#DMK_Lit

Thursday, January 16, 2025

ஃ கவிதைகள் விமர்சனம் 1



ஃ கவிதைகள

முதல் விமர்சனம்.

நன்றி எஸ்தர் ராணி🙏💐

     "பறவைகளின் மொழியை

மரங்களின் மொழியைக் கூட

கேட்டதுண்டு

பாறைகளின் மொழி?"


     இக்கவிதைத் தொகுப்பை இங்கிருந்து தான் தொடங்க வேண்டும். இல்லாவிடில் நீங்கள் தொலைந்து விடுவது திண்ணம்.

     பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாய் இறுகிப் போயிருக்கும் வரலாறை, புராணங்களை, புனைவுகளை, கற்பிதங்களை மையமாக்கி அதை உடைக்கத் துணிந்திருக்கிறது இத்தொகுப்பு.

     அப்போதும் பசி அடங்கவில்லையா

என் கருப்பைக் கிழித்து

கனவுகள் எடுத்து ருசி

பாறையில் கசியும் ரத்தம்

பருகியது போக மீதியைத் தொட்டு 

உன் மேனி எங்கும் பூசிக் கொள்

    இப்படியாக பயணித்து இங்கு வந்து நிற்கிறது.

  யூ

     அக்கமாதேவியின் குரலுக்கும், காரைக்கால் அம்மையின் குரலுக்கும் என்ன வேறுபாடு? காரைக்கால் அம்மை தன்னை ஒறுத்துக் கொண்டார். அக்கமாதேவியோ தன்னை அப்படியே சென்னிமல்லிகார்ஜூனாவுடன் பிணைத்துக் கொண்டாள். அக்கமாதேவியின் குரல் எதிர்ப்பின் குரல். புராணங்கள், கற்பிதங்களை எள்ளி நகையாடிய குரல். 

    புதிய மாதவியின் அகக்கேள்விகள் கவிதைகளாகி நிற்பது இந்த இடைவெளிகளில்தான். மீப்பெரு இடைவெளிகளை சிறுசொற்கள் நம் முன்னே காட்டி விடுகின்றன.

  காரைக்கால் வீதிகள் தலைகுனிந்த இரவு

....

பேயுரு களைந்த திருவந்தாதி 

தலைகீழாய் நடக்கிறாள்

படைப்புக்கும் பிரம்மத்திற்கு நடுவில் 

வெந்து தணியுமோ காடு?!

      துலுக்கநாச்சிக்கும், துர்க்கைக்கும், சீதைக்கும், கர்ணபுத்ரிக்கும், காந்தாரியின் மக்களுக்கும் விடுதலையைத் தர விரும்புகின்றன கவிதைகள். கிடைத்தால் மகிழ்ச்சி தானே.

    போகிற போக்கில் பூம்பூம் மாடுகள் என்று தமிழ்க் கவிஞர்களுக்கு குத்து விட்டிருக்கிறார். உண்மையாகவே  நேற்று ஒரு சம்பவம். வீதியில் ஒரு அம்மா தன் குடும்பத்தோடு மாட்டிற்கு பூஜை செய்து கொண்டிருந்தார். நான் கூட பூம்பூம் மாடென்று நினைத்தேன். அது பசு. மாட்டுக்காரர் அழைத்து வந்து இருந்தார். அந்த அம்மா பசுவின் மேல் பொன்னாடை போர்த்தி கன்றுக்கு என்று மற்றொரு பொன்னாடையைக் கொடுத்தார். இனி நான் இதை மறப்பதெப்படி. 

  "முட்டுகின்ற மாடுகளைவிட

பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தும் 

மாடுகள்...

'கால்' நடைகளின் அவமானம் 

ச்சே.."

     இதில் நான் சேர்த்தி இல்லை என்று நம்புகிறேன். 

   கவிதை என்னவாக இருக்க வேண்டும் என்றும் சொல்லி விட்டார்.

   "இருளின் நிர்வாணத்தில் கவிதை 

தன்னை அழகூட்டிக் கொள்கிறது

கவிதை இருளின் ஆன்மா

...

கவிதையை எப்போதும் பகலில் வாசிக்காதீர்கள்

கவிதை இரவின் மொழி."

     நவராத்திரி முதல் நாள் ஆரம்பித்த கவிதைத் தொகுப்பை இறுதியாக இப்படி முடித்திருக்கிறார்.

 "சிவப்பு வெள்ளையின்

மூத்திரம் குடி

போடா போ..

நான் கருப்பி

கறுப்பு என் நிறம் மட்டுமல்ல!"

     எனக்கு ஏதோ கொஞ்சம் புரிகிறது. யுத்தப் பேரிகை ஆயத்த அழைப்பு. புரியவும், ரசிக்கவும் அது இடம் கொடுப்பதில்லை. 

    அஃகேணம் கவிதைகள் என் இரவுகளின் துணைகளில் ஒன்றாகி விட்டது. வாழ்த்தும், அன்பும்...


   - எஸ்தர் ராணி


ஃ கவிதைகள்

புதியமாதவி

அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் 

Wednesday, January 8, 2025

Real DHARAVI bank



 " தாதாக்களை உங்கள் புனைவுகள் அறிந்ததை விட எங்கள் நிஜ வாழ்வில்

அதிகம் அறிந்தவர்கள் நாங்கள்"


வன்முறையின் உச்சம்.

வன்முறை காட்சிகளில்

மனப்பிறழ்வு கொண்ட அதீத  கொடூர வன்முறைகள்.

இத்தொடரில் இடம்பெறும்

ஓவ்வொரு இடமும்

மூலை முடுக்குகளும்

காலடித்தடங்களும் நான் அறிந்தவை.

சினிமா உலகம் தாதாக்கள் என்று காட்டுபவர்கள் பலரும் தாராவியில் தான் பிறந்து வளர்கிறார்கள் என்ற உங்கள் சான்றிதழ் எங்களுக்கு நகைச்சுவை!

இந்த தாதாக்களை உங்கள் புனைவுகள் அறிந்ததை விட அதிகமாக நாங்களும் அறிவோம்.

அவர்களும் மனிதர்கள் தான்.

மண்ணும் மனிதர்களும் நிஜமாக காட்சிப்படுத்தப்படும் போது

அதில் இடம்பெறும் காட்சிகளும் உண்மைக்கு நெருக்கமானவையாக மாறிவிடும் ஆபத்தான பொதுஜன உளவியல்

அது ஏற்படுத்தும் பின் விளைவுகள்...!

இதை எப்படி இந்திய தணிக்கை குழு ஏற்றுக் கொண்டது?

அல்லது...

இவர்களுக்கு விதிவிலக்காக!


தாராவி பேங்க் எது தெரியுமா..

நீ காட்டுகின்ற பொய்யும் புரட்டும் அல்ல.


தாராவியின் பொருட்கள் உலகெங்கும் ஏற்றுமதி ஆகின்றன. ஓராண்டு பணப்புழக்கம் ( Turn over) USD 500 மில்லியன் முதல் 650 மில்லியன் வரை.

15000 ஒற்றை அறை தொழிற் கூடங்கள்!

மும்பையின் ஒட்டுமொத்த கழிவுகளையும் மறுசுழற்சி ஆக்கி இருமி இருமி

வாழாமலேயே செத்து தொலைக்கும் எம் மக்கள்..

இதெல்லாம் தான் டா

தாராவி பேங்க்.

DHARAVI Bank.


நீ உன் அதீத கற்பனையில் காட்சி படுத்தும் எழுதக் கூசும்...

வன்முறைகள்..

தாராவி தாதாக்களும் அறியாதவை.

எங்கள் மீது காலமெல்லாம்

நீங்கள் சுமத்தும் இரத்தக்கறைகளைப்

பொறுத்திருந்தோம்.

இனி,

பொறுப்பதில்லை!

யூ ஆர் க்ராசிங் த லிமிட்.


இப்படிக்கு

தாராவியின் புதல்வி.


#தாராவி_ அசலும்புனைவும்

#DharaviBank

#realDharaviBank