Friday, May 14, 2010

பயணக்கட்டுரை

காற்றாடிகளுடன் உறவாடிய நாட்கள்
====================================




பெருநகர வாழ்க்கை என் மண்ணையும் மனிதர்களையும் பார்க்கும்
ஏக்கத்தை என் போன்றவர்களுக்கு நிரந்தர வியாதி ஆக்கியிருக்கிறது.
வியாதி முற்றிவிட்டால் கோடைவெயில் என்று கூட பார்க்காமல்
ஓடிப்போய் எம் மண்ணில் கால்வைத்து திருவிழாவுக்கு வந்தக்
குழந்தை போல எல்லாவற்றையும் வாங்கி அப்படியே முழுங்கி..
புஞ்செயிலும் நஞ்செயிலும் கை அசைக்கும் காற்றாடிகளுடன்
சேர்ந்து நாமும் கை அசைத்து நட்சத்திரங்களை எண்ணி அடுக்கி
மாங்காய், பப்பாளி, புளி சாப்பிட்டு இளநீரையும் மோரையும்
பருகி வேப்பம் பூ மணத்தை அனுபவிக்கும் சுகம் இன்றைக்கும்
இருக்கத்தான் செய்கிறது. அந்த சுகமான அனுபவங்களின் ஊடாக
வள்ளியூருக்கு அருகிலிருக்கும் பாம்பன்குளத்தில் சில நாட்கள்...
உண்டதும் கண்டதும் உணர்ந்ததும்..

வள்ளியூரில் நுங்கு சர்பத்
--------------------------
.நண்பர் எழுத்தாளர் நாஞ்சில்நாடனின் தினப்பாடு கவிதையை யுகமாயினியில்
வாசித்தது முதல் எங்க ஊரு நுங்கு சாப்பிடும் ஆசை நாளுக்கு நாள்
அதிகமானது. நினைத்தவுடனேயே நுங்கு அப்படியே வாய்க்குள்
'லபக்டபக்' என்று வழுக்கி வழுக்கி அப்படியே தொண்டைக்குள்
இறங்கும்போது ஒரு சுகம் வருமே...ம்ம்ம்ம் ஆஅ.. அனுபவித்தால்
மட்டுமே அந்தச் சுவையைப் புரிந்து கொள்ள முடியும்!

சந்தர்ப்பம் கிடைத்தவுடன் அப்படியே சென்னைக்கு அக்கா மகன் திருமணத்திற்கு
போனவள் வள்ளியூருக்கு ஒரு ஓட்டம் ஓடி வள்ளியூர் கடையில் நுங்கு சர்பத்
வாங்கி கரண்டியால் எடுத்து உறிஞ்சி உறிஞ்சி குடித்துக் கொண்டே
யுகமாயினி சித்தனுக்கு ஒரு போன்போட்டு நுங்குசர்பத் குடித்துக் கொண்டிருப்பதைச்
சொன்னபிறகுதான் ஒரு சின்ன சந்தோஷம்!


அனாதையாகிப்போன சாமி:
-----------------------------



எங்க ஊருக்கு கால்நடைகளுடன் வந்து குடியேறிய மூதாதையர் குடியேறிய
இடத்தில் கும்பிட ஒரு தெய்வம் வேண்டுமென்று மலையாளத்து சாமியார்களிடம்
கேட்டார்களாம். அவர்களும் மண்கலயத்தில் சாமியைப் பிடித்து அடைத்து
கொடுக்க அதைக் கொண்டுவந்து தோட்டத்தில் வைத்து கும்பிட்டு வந்தார்களாம்.
சேவல் கோழி பலி கொடுத்து கும்பிடுவது வாடிக்கை. காலப்போக்கில் அவர்கள்
சாமியைக் கொண்டு வைத்த இடத்தில் என் கணவரின் மூதாதையர் வீடுகட்டி
குடியேறினார்கள். வழக்கம்போல சாமிக்கு சேவல் அறுத்து பூஜை செய்வது
தொடர்ந்தது. பின்னர் சாமியைக் கும்பிட்ட அந்தக் குடும்பத்தார் அனைவரும்
கிறிஸ்தவர்களாக மதம் மாறிவிட்டார்கள். சாமியை யாரும் கவனிக்கவில்லை.
சாமி அனாதையாகிவிட்டாரே என்று கவலைப்பட்ட என் மாமியாரும் பக்கத்துவீட்டு
இப்படி நம்ம இரண்டு வீட்டு திண்ணைகளுக்கும் நடுவிலிருக்கு சாமியை
அம்போ என்று விட்டுவிடலாமா.. கொண்டுவந்தவர்கள் சாமியைக் கைவிட்டுவிட்டாலும்
நாம கைவிட்டுவிட்டால் நல்லாயிருக்கா என்று சாமி மீது பரிதாபப்பட்டு
இனிமேல் அவரைக் கவனித்துக் கொள்வது நம் பொறுப்பு என்று ஓர் எழுதாத
தீர்மானத்தை போட்டுக்கொண்டார்களாம். அதன்படி... இன்றுவரை
பசு மாடு ஈனினால், கன்னுக்குட்டிக்கு வயிற்றுவலி வந்து ரத்தம்ரத்தமா சாணிப்
போட்டால் மேயப்போன மாடு காணாமல் போய்விட்டால்... இப்படியாக கால்நடைச்
சம்பந்தப்பட்ட சகல கோரிக்கைகளையும் சாமியிடம் வைத்து கும்பிட்டுக்கொண்டு
இருக்கிறார்கள். என்ன இப்போது நாங்கள் சேவல் பலி கொடுப்பதில்லை!
சர்க்கரைப்பொங்கல் டேஸ்ட்டுக்கு சாமியை மாற்றிவிட்டோம்.


கருப்பட்டி புண்ணாக்கு
------------------------
இந்த எங்கள் சாமிக்கு பூஜை செய்ய இந்த முறை சாமான்கள் வாங்க நானே
முன்வந்தேன். எப்படியோ நுங்குசர்பத் சாப்பிட வள்ளியூருக்கு ஆட்டோவில்
போகிறோம் வாங்கிவந்துவிடலாம் என்று எண்ணி ஒத்துக்கொண்டேன்.
தேங்காய் மூன்று, இரண்டு இளநி, இரண்டு சீப் வாழைப்பழம், பத்தி, சந்தணம், குங்குமம், திருநீறு, சாம்பிராணி, மூனு மாலை, கொஞ்சம் விடுபூ, வாழைஇலை,
வளக்கெரிக்க எண்ணெய் , திரி இத்தியாதிகளுடன்
பயாச சாமான்கள் இத்துடன் சாமிக்கு வைத்துக்கும்பிட கருப்பட்டி புண்ணாக்கு.
இதில் லிஸ்ட் எழுதும்போதே கருப்பட்டி புண்ணாக்கு என்பது எனக்குப் புதிதாக
இருந்தது. சாமிக்கு வச்சி கும்பிடற கருப்பட்டி புண்ணாக்கு என்று சொல்லுமா
எந்தக் கடையிலுல் குடுப்பாங்க... என்று சொல்லி அனுப்பினார்கள்.
வள்ளியூரில் கடை கடையா கருப்பட்டி புண்ணாக்கு கேட்டு அலைந்தேன்.
திடீரென பெய்த கோடை மழையில் வள்ளியூர் ரோட்டில் தண்ணீர் ஓடியது.
ஒர் ஆட்டோவை வைத்துக்கொண்டு ஒவ்வொரு கடை கடையாக கருப்பட்டி
புண்ணாக்கு கேட்டால்...

"ஏம்மா.. கருப்பட்டி புண்ணாக்கா.. அப்படி நாங்க கேள்விபட்டதே இல்லியே.
எள்ளுப் புண்ணாக்குத்தான் இருக்கு. வாங்கிட்டுப்போங்க.."
இல்ல.. இல்லா எனக்கு நல்லா தெரியும். அத்தை கருப்பட்டி புண்ணாக்குனுதான்
சொன்னாங்க..னு உறுதியாக நான்.
ஆட்டோ டிரைவரும் 'கருப்பட்டி புண்ணாக்கு கேள்விப்படலியே, அக்கானு"
சொல்ல வேறுவழியின்றி எள்ளுப்புண்ணாக்கு வாங்கிக்கொண்டு போனேன்.
வள்ளியூரில் பெய்த மழை பாம்பன்குளத்தில் பெய்யவில்லை.
ஏன் தெரியுமோ..? நாங்க எங்க திண்ணையிலிருக்கும் சாமிக்கு பூஜை
செய்யப்போறதாலனு அத்தை சொன்னார்கள். ம்ம்ம் அவர்கள் சொன்னால்
சரியாகத்தான் இருக்கும்.

ஒருவழியாக பூஜை முடிந்தப் பின் தெரிந்தது... கருப்பட்டி புண்ணாக்கு கதை.
கருப்பட்டியும் புண்ணாக்குமாம். கருப்பட்டி + புண்ணாக்கு.
அவர்கள் சொன்னவுடன் என் முகத்தில் அசடு வழிந்ததை அப்படியே சாமிமீது
பயபக்தியுடன் இருப்பதாகக் காட்டிக்கொண்டு சர்க்கரைப் பொங்கலை
ஒரு வெட்டு வெட்டுவதில் குறியாக இருந்தேன்.
ஊருக்குப் போனால் "ந்நோ டு டயட் கண்ரோல்"


எங்க ஊரு விளம்பரங்கள்:
---------------------------

விளம்பரங்களில் பிதுங்கி கசிந்து சிந்தி சிதறி சந்தி சிரிக்கிறது
எம் தமிழகச் சாலைகள்.
பெருநகரங்கள் மட்டுமல்ல, குக்கிராமங்களிலும் பிஸ்லரி பாட்டிலும்
இலவசமாக எம் தமிழனத்தலைவர் வழங்கிய தொலைக்காட்சியில்
மாமன் மச்சான் நண்பன் திருமண வாழ்த்துகள் தனித்தனி செய்திகளாக
வண்ண வண்ண புகைப்படங்களுடன் ஓடி என்னை ஆச்சரியப்படுத்தியது.
மட்டுமல்ல..
இவர்களுடன் சேர்ந்து அவரவர்களின் சினிமா கதாநாயகர்கள்,
விஜய், தல, சிம்பு, ஏன் வடிவேலு வரை... வந்து இவர்களுடன் சேர்ந்து வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
வழக்கம்போல கொடைவிழா அழைப்பிதழ்களுடன் பூப்புநன்னீராட்டு
விழா அழைப்புதழ்களும் பெரிய போஸ்டர்களாக அச்சிடப்பட்டு நீக்கமற
நிறைந்திருந்தது எங்கள் கிராமத்து சுவர்கள்.

சென்னை பெருநகரத்தில் தொல். திருமாவின் சுவரொட்டிகள், விளம்பரங்கள்
கொஞ்சம் அதிகமாகவே கண்ணில் பட்டது என்றால் தமிழனத்தலைவருடன்
தளபதியும் சேர்ந்திருக்கும் போஸ்டர்கள் ..இது புதிதாக எழுதப்படாத சட்டமாக
வந்திருக்குமோ.. மாவட்ட வட்ட நகர பெருநகர பஞ்சாயத்து சகலத்திலும்
சக்கரவர்த்தியுடன் சேர்ந்திருக்கும் இளவரசர் .. தெற்கே போகப்போக...
சக்கரவர்த்தியுடன் சேர்ந்து எங்க மதுரை இளவரசு படமும் போஸ்டராக
இருந்தது. இதுவே தமிழ்நாட்டின் வடக்கு தெற்கு மாநிலங்களுக்கான மிகப்பெரிய
வேறுபாடாக சரித்திர பேராசிரியர்கள் என்னுடைய இந்தப் பயணக்கட்டுரையிலிருந்து
முடிவுக்கு வரலாம்.

தோழர் முதுபெரும் எழுத்தாளர் தி.க.சி அவர்களைச் சந்திக்க வள்ளியூரிலிருந்து
நெல்லை. வயக்காடெல்லாம் வீட்டுமனைகளாகி அடுக்குமாடிகளாகி..
ரொம்பவே மாறித்தான் இருக்கிறது எங்க ஊரு.
ஆனால் திகசி மாறவே இல்லை. தள்ளாத வயதிலும் மாத்திரைப் போட்டுக்கொண்டு
சமுதாய மாற்றங்கள் குறித்தும் செம்மொழி மாநாடு குறித்தும் மாவோயிஸ்டுகள் குறித்தும் நிறையவே பேசுகிறார். அவரிடம் தமிழகத்தின் விளம்பரங்கள்
குறித்து பேசிய போது திகசி க்குத் துணையாக இருக்கும் தோழர் வள்ளி
புதிதாக இன்னொரு செய்தியையும் பகிர்ந்து கொண்டார்.
மதுரையில் இழவு வீட்டு நிகழ்ச்சிக்கு மூன்றுமணி நேரத்துக்கு மேல் ஓடுகிற
திரைப்பட சோகப்பாடல்களின் குறுந்தகடு கடைகள் இருக்கிறதாம்.
குறுந்தகடை வாங்கி இழவு வீட்டில் சோக ராகத்தை ஒலிக்க வைத்துவிடுவார்களாம்.
ஒப்பாரிப் பாடல்களும் குறுந்தகடாக கிடைக்கிறதாம்.

அடுத்தமுறை நான் ஊருக்குப் போகும்போது மாமன்மகள் வயசுக்கு வந்ததை
போஸ்டர் போட்டு கொண்டாடும் மக்கள், அவள் முழுகாமல் இருப்பதையும்
போஸ்டர் போட்டு அறிவித்தாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை!



பேருந்தில் ஊனமுற்றவர்கள் என்று எழுதப்பட்டிருந்த எல்லா பெயர்ப்பலகைகளும்
எடுக்கப்பட்டு " மாற்றுத்திறனாளிகள்" என்று மாற்றப்பட்டிருந்தது.
மிகவும் குறுகிய காலத்தில் இந்த நல்லதும் செய்யப்பட்டிருக்கிறது என்பதற்காக
பாராட்ட வேண்டும் அரசை.
அத்துடன் பேருந்தில் பயணம் செய்யும் போது திருவள்ளுவரின் திருக்குறளுடன்
சேர்ந்து இன்னொருவரின் பொன்மொழிகளும் வாசிக்க கிடைக்கின்றன.

நான் வாசித்த பொன்மொழி:
-------------------------------

" நான், நீ என்று சொன்னால் ஒட்டாத நாக்கு நாம் என்று சொல்லிப்பாருங்கள்.
ஒட்டும் - கலைஞர்"

இப்படி புதிதாக முளைத்திருக்கும் பொன்மொழிகளை அரசு பேருந்துகளில் வாசித்த
அனுபவத்தை மட்டும் ரகசியமாக சொல்லுகிறேன். நீங்களும் எல்லோரும்
வாசித்திருப்பீர்கள். என்னை விட பாக்கியசாலிகள் நீங்கள். இப்படி புதிய பொன்மொழிகளை நிறைய அரசு சார்பாகவே வாசிக்கும் அனுபவம் என்னைவிட
உங்களுக்கு அதிகம் கிடைக்கிறது. இதெல்லாம் சரியா தவறா என்று யோசிக்க
உங்களுக்கு நேரம் இருந்திருக்காது. பிறகென்ன... இலவசமாக தொலைக்காட்சி
மட்டுமா.. கேஸ் அடுப்பும் கொடுக்கப்போகிறார்களாம் எங்கள் ஊரில்.
எல்லா வீடுகளிலும் தொலைக்காட்சிகள் இருப்பதால் இப்போதெல்லாம் யாரும்
திண்ணையில் உட்கார்ந்து பழங்கதைகள் பேசுவதில்லை!

பக்கத்து வீடுகளுக்குப் போனால் எல்லாரும் ரொம்ப ப்ஸியாக இருக்கிறார்கள்
மெகாத்தொடர்கள் பார்த்துக்கொண்டு. நாம்தான் அவர்களுக்குத் தொந்தரவாக
வந்துவிட்டோமோ என்று சொரணை வந்து நாமே எழுந்துவந்துவிட வேண்டியதுதான்.
ஒருதாய் ரொம்பவும் வருத்தப்பட்டுக் கொண்டார் அவருடைய மகனுக்கு அறுவைச்சிகிச்சை நடக்க இருப்பதைச் சொல்லி. என்னவென்று விசாரித்தப்போது
மகனுக்கு வியாதிவந்துவிட்டதையோ அறுவைச்சிகிச்சையையோ நினைத்து
வருத்தப்பட்டதைவிட கலைஞரின் காப்பீட்டு திட்டத்தில் இந்த வியாதி, இந்த
அறுவைச்சிகிச்சை இடம் பெறவில்லையே என்றுதான் ரொம்பவும் வருத்தப்பட்டுக்கொண்டார். அவரே சொன்னார்..
"கவலையை மறக்க டி.வி. இருக்கு,
எவகிட்டேயும் போயி பாடு பழக்கம் பேசனும்னு இல்ல"

வாழ்க அரசு.. வளர்க... அவர்களின் இலவசத் திட்டங்கள்.
----------

விலைமதிப்பில்லாத
வாழ்க்கை
மிதக்கிறது.
இலவசங்களில்

யாருக்கும் நீந்திக்
கரையேறுவது பற்றி
அக்கறையில்லை.
மிதப்பதே சுகம்
உதவி 24X7 டாஸ்மார்க்

எதிர்நீச்சலென்று
எவன் பேசினாலும்
எதிரி.
அடி தடி வெட்டு
எரி எரி
உயிருடன் எரி.
எவனிருக்கான்
ஏன் என்று கேட்க.




மும்பை.
12/05/2010









..

Wednesday, April 21, 2010

குறுஞ்செய்திகள்



குறுஞ்செய்திகளின்
எல்லைத் தாண்டிய
தீவிரவாதம்
எங்கள் பிரதேசத்தில்
செத்துப் போன மனிதவாடை.

தனிமையின் இருளை
விரட்டிய வானம்பாடிகள்
காணாமல் போய்விட்டன.
காதலைக் கொண்டாடிய
சிட்டுக்குருவிகள்
எட்டிப் பார்ப்பதில்லை
எம் சன்னல்களை.
கூட்டம் கூட்டமாய்
கொல்லைப்புறத்தில்
எப்போதும் கூடும்
காக்கைகள்
விருந்துவரவில்லை என்பதால்
வேறு எங்காவது
போயிருக்க கூடும்.

ஆண்டுக்கு ஒருமுறை
பிறந்தநாள்
திருமணநாள்
பொங்கல் தினம்
பெண்கள் தினம்
வாழ்த்துகளாக
ஒலித்துக்கொண்டிருந்த
அமுதராகங்கள்
ஊமையாகிவிட்டன..

எல்லோருக்கும்
எல்லா வாழ்த்துகளையும்
நகலெடுக்கும் வரிசையில்
நிரம்பி வழிகிறது
குறுஞ்செய்திக் கூடம்


எனக்கே எனக்கான
எந்தச் செய்தியும்
குறுஞ்செய்தி அலைவரிசையில்
இல்லை என்றாலும்
வாசித்துக் கொண்டுதானிருக்கிறேன்
நீங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளை.

Saturday, March 27, 2010

ஆதவன் தீட்சண்யா - 20


ஆதவன் தீட்சண்யாவைப் பற்றிய அறிமுகவுரை ஆற்றும்படி
என்னைப் பணித்தார்கள் எழுத்தாளர் மன்ற நிர்வாகிகள்.
இந்த அனுபவம் ரொம்பவும் விந்தையானது.
விநோதங்கள் நிறைந்த எங்கள் மும்பை வாழ்க்கையில்
இதெல்லாம் ரொம்பவும் சர்வ சாதாரணமான ஆச்சரியங்கள்தான்.

தவமாய் தவமிருந்து தமிழ்த்தாய் பெற்றேடுத்த தவப்புதல்வன் என்றெல்லாம்
ஆ.தீ பற்றி சொல்லிக்கொள்ள எதுமில்லை என்பதால் அவருடைய பிறப்பு,
வளர்ப்பு அத்தியாயங்களை வாசிக்காமல் விட்டுவிடலாம்.

இத்தனைக் கதைகள், கவிதைகள் கட்டுரைகள் என்றெல்லாம் கணக்கெடுப்பு
நடத்தி பட்டியல் போட்டு தொங்க விடுவதால் மட்டுமே இலக்கிய உலகில்
இடம் பிடித்துவிடலாம் என்றால் அதற்கு தமிழ்நாட்டில் ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.
அந்தக் கூட்டத்தில் இவர் நிச்சயமாக இல்லை.

ஆதவன் சொன்னதை ஆதவனின் பொன்மொழிகள் என்று தொகுத்து
உங்களிடம் வாசித்துவிடலாம் என்றால் இதுவரை தொகுக்கப்பட்ட
வாசிக்கப்பட்ட பொன்மொழிகளை வைத்துக்கொண்டு ஒரு பிஸ்கோத்தும்
வாங்க முடியவில்லை என்பதால் ஆ.தி. 20 என்ற தலைப்பில் அவரைப்
பற்றிய சிறப்பு அம்சங்களைத் தொகுத்து அவருடைய மொழியிலேயே
உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.
(அது என்ன ஆதி 20 என்று யாராவது மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்ள
வேண்டாம். இன்றைக்கு மார்ச் 20 என்பதால் ஒரு நினைவுக்காக, அம்புட்டுதான்)

இனி,


*என் எழுத்துகளின் இலக்கு,
நிச்சயமாக எந்த பீடத்தையும் அலங்கரிப்பதற்காகவோ ஏதாவது விருது வாங்குவதற்காகவோ அல்ல. என் மக்களின் துன்ப துயரங்களைச் சொல்லி
என்மக்களிடமே ஒப்பாரி வைப்பதும் என் நோக்கமல்ல. எழுதப்படிக்கத்
தெரிந்தவர்களில் பெரும்பாலோர் தலித்தல்லாதவர்கள் என்கிற நிலையில்
அவர்களது வாசிப்புக்கு செல்கிற எனது ஆக்கங்கள், அவர்களது மனசாட்சியோடு
ஒரு உரையாடலைத் தொடங்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
கொஞ்சம் அகங்காரம் போல தெரிந்தாலும் நான் மனிதன், நீ யார் என்று
ஒவ்வொரு ஒடுக்குமுறையாளரையும் என் படைப்பின் வழியே கேட்க விரும்புகிறேன்.

*
இலக்கியத்தின் மீது புனிதக்கலவையை பூசி மெழுகுகிற கொத்தனார்கள் சிலபேர்
என்னிடம் "ஆண்ட்டி லிட்டரேச்சர் டோன்" இருப்பதாக குற்றம் சாட்டுவதுண்டு.
என்னையும் என் மக்களையும் பொருட்படுத்தாமல் எழுதப்பட்ட எழுதப்படுகிற
குப்பைகளை அவர்கள் இலக்கியம் என்று கொண்டாடுவார்களேயானால் அந்த
இலக்கியத்திற்கு எதிராக நான் செயல்படுகிறவந்தான்.

*
கம்பராமாயணத்தை மொழி ஆளுமைக்காகவும் கம்பனின் கற்பனைக்காகவும்
இலக்கியம் என்ற ளவில் ரசிக்கலாம். அதைவிட்டு கற்பனைக் கதையை
உண்மை என்று நம்பி ராமன் எப்பேர்பட்டவன் தெரியுமா? என்று பேசுபவர்களோடு
நான் உடன்படவில்லை.

*
ஜீவா இலக்கியங்களை நிராகரிக்கும் போக்கு ஏற்பட்டபோது அதைத் தூக்கிப்
பிடித்தார். அதற்காக ராமனைக் கொண்டாடவோ அவனை வழிபடவோ செய்யவில்லை.

*
ராமன் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று வாதாடப் புகுந்தவர்கள் ராவணனை திராவிடன்
என்றும் ஆரியத்தை எதிர்த்த உண்மையான மாவீரன் என்றும் கொண்டாடத் துவங்கிய
அபத்தமும் இங்கு நிகழ்ந்தது. ராமன் கற்பனை என்றால் ராவணனும் கற்பனைதான்
என்கிற குறைந்தபட்சப் புரிதலையும் கைவிட்டிருந்தனர்.

*
வர்க்க நீக்கம் ( declassification) செய்து கொள்வது போலவே சாதிநீக்கம் (decastification) என்பதன் அவசியத்தை இடதுசாரிகள் புரிஞ்சிருக்காங்க. கன்னட பார்ப்பனரான சீனிவாசராவி போய்தானே தஞ்சாவூரிலே மக்க்ளைத் திரட்டறாரு. அவரு சாதிய கைவிட்டுவிட்டுதானே போறாரு.

*
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட தலைவர்கள், இயக்கங்கள் எல்லாமே
ஒடுக்கப்பட்டவர்களிடம் மட்டும்தான் பேசின. ஆனால் ஒடுக்கிறவர்களிடமே
தாக்குதல் நடத்தியவர் பெரியார் ஒருவர்தான். ஒடுக்குகிறவனைப் பார்த்து
நீ அவனை ஒடுக்குகிறாய் என்று சொல்லும் தைரியம் பெரியாருக்கு மட்டும்தான்
இருந்தது.

*
அன்றைக்கு உண்ணாவிரதம் என்று தன்னைத்தானே வருத்திக் கொண்டு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டபோது பிரிட்டிஷ்காரர்களே பயந்தார்கள்.
இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. ஒரு லட்சம் விவசாயிகள்
பட்டினியால் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு மனமிரங்காத அரசும்
அதிகாரிகளும் ஒருவேளை பட்டினிப் போராட்டதைப் பார்த்தா மனமிரங்கப்
போகிறார்கள்? இன்றைக்கு இருக்கிற ஆட்சியாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்குகிற
போராட்ட வடிவங்களை நாம் கண்டெடுக்க வேண்டும்.

*
சமூக அக்கறையுள்ள படைப்பாளி இந்த சமூகத்தோடு உரையாடுவதற்காக எழுதுகிறான். அதைப் படித்துவிட்டு தன்னைக் கொண்டாட வேண்டும் என்று
எதிர்ப்பார்ப்பது அபத்தமான காரியம்.

*
கலைஞனைக் கொண்டாடாத சமூகம் உருப்படாது என்று சொன்னால்
உழவனையோ தொழிலாளியையோ கொண்டாடாத சமூகம் மட்டும் உருப்பட்டுவிடுமா?

*
ஒரு புத்தகம் 1200 பிரதிகள் அச்சிடப்பட்டால் அதைப் பற்றி 1200 பேர் பேசலாம்.
ஆனால் தமிழ்ச்சமூகம் 7கோடி மக்களைக் கொண்டது. இந்த இலக்கியம் குறித்து
தெரியாமலேயே பெரும்பகுதி சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களோடு
எப்படி பொருந்துவது என்றுதான் யோசிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு
நான் மேதாவி, அறிவுஜீவி என்று தனியாக உட்கார்ந்துவிட்டால் எந்த மாற்றமும்
நடக்காது.

*
நீ எங்கள் பக்கம் இல்லை என்றால் பின்லேடன் பக்கம் தான் என்கிற ஜார்ஜ்
புஷ்சைப் போல இங்கும் சிலர் கேலிக்கூத்தான ஒரு வகைப் பிரிப்பை செய்து
கொண்டுள்ளனர். ஒருவர் பெரியாரிஸ்டாகவோ அம்பேத்காரிஸ்டாகவோ மார்க்சிஸ்டாகவோ தான் இருக்கமுடியுமே தவிர மூவரது சிந்தனைகளையும்
உள்வாங்கிச் செயல்படுகிறவராக இருக்கவே முடியாது என்கிறார்கள்.
அம்பேத்காரையும் பெரியாரையும் மார்க்சையும் எதிரெதிராக களமிறக்கும்
இந்த வித்தைக்காரர்கள் மைதானம் முழுக்க நிரம்பி இருக்கிறார்கள்.
ஆட்டத்தை இனிமேல்தான் நாம் கவனமாக தொடர வேண்டியிருக்கிறது.

*
மார்க்சியம், அம்பேத்கரியம், பெரியாரியம் .. இந்த மூன்றின் பொதுப்பண்புகளை
உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் நம் புரிதலே யன்றி மூன்றும்
ஒன்றுதான் என்பதல்ல. அவற்றுக்குள் இருக்கும் வேறுபாடுகள் பகைமுரண்கள்
அல்ல.

*

பெரியாரியம் மார்க்சியம் அம்பேத்கரியம் இணைந்து செயல்படும் தளம்
வெறும் கனவாய் முடிந்துவிடுமோ என்கிற என் போன்ற திராவிடர் இயக்காரர்களின்
உணர்வுகளுக்கு நம்பிக்கை ஊட்டுவதாய் உள்ளது ஆதவனின் கருத்துகள்
என்கிறார் நீலகண்டன்.

*
அழியாக் கவிதை நோக்கி ஆதவனின் பேனா அசைகிறது : என்கிறார்
ச.தமிழ்ச்செல்வன்.

*
தமிழ் இலக்கியத்தின் ஆகச்சிறந்த 10 சிறுகதைகளைத் தொகுத்தால்
அதில் ஆதவன் தீட்சண்யாவின் சிறுகதை இடம்பெறும் என்கிறார்
எழுத்தாளர் பிரபஞ்சன்.

* அடியில் கையொப்பமிட்டு ஆ.தீ.வாகிய நான் பூரண சித்த சுவாதீனத்துடன்
எழுதிய கவிதைகள் என்று அவர் உறுதிமொழி தந்திருக்கும் கவிதைகளிலிருந்து
3 கவிதைகள்.


மூன்று கவிதைகள் உங்களுக்காக..

கவிதையின் தலைப்பு: ஆமென்.

மரமாக வளர்ந்தது
தண்டனைக்குரிய குற்றமில்லை
ஈராயிரமாண்டுகளின்
துருவேறிய ஆணிகளைப் பிடுங்கி
விடுவியுங்கள்
சிலுவைகளை.

*

கவிதையின் தலைப்பு: வரம்.

ஆத்தா மகமாயி
உம் புண்ணியத்துல பையனாப் பொறந்துட்டா]
கெடா வெட்டி பொங்க வைக்கிறேன்.

ஏண்டா கும்புடறதுக்கு பொம்பளசாமி
கொழந்த மட்டும் ஆம்பளயா
எனக்கு உங்கெடாவும் வேணாம்
ஒரு மயிரும் வேணாம்.

*

கவிதை தலைப்பு: கவனமாய் கடக்கவும்.

துர்சொப்பனங்களில் நெரிப்பில்
படுக்கையில் மூச்சா போய்விடும் குழந்தைகளும்
அதிர்ந்து பேசும் சுபாவமற்ற இருதய பலஹீனர்களும்
இக்கவிதையைப் படிக்க வேண்டாமென
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்சென்று படிக்க நேரிட்டால்
வளைந்து ஒடுங்கி விறைத்திருக்கும் எழுத்துருக்கள்
விபத்தில் சிதைந்தவர்களைப் போல அச்சமூட்டக்கூடும்.
எழுத்திலிருந்து துண்டித்து மேலே தெரியும்
மெய்யெழுத்துப் புள்ளி
தலைவேறு முண்டம்வேறாய் தரிக்கப்பட்ட
மேலவளவு முருகேசனை நினைவுபடுத்தும்.

ஒவ்வொரு வரியும்
கேட்பாரற்று மார்ச்சுவரியில் கிடத்தப்பட்டிருக்கும்
பிரேதங்களைப் போல தெரியும்.

என்கவுண்டரில் தெறித்த ரத்தத்துளி போல்
சிதறிக்கிடக்கும் முற்றுப்புள்ளிகள்
நடுக்கற்களை நினைவூட்டும் நிறுத்தற்குறிகள்

ஒரே ஊரின்
வெவ்வேறு சாதி சுடுகாடுகளைப் போலிருக்கும்
அடுத்தடுத்த பக்கங்களில்
வெட்டுப்பட்டு மொக்கையான
கன்னங்கரிய எழுத்துகளாலாகி
நீங்கள் யாவரும் வெறுக்கத்தக்கவொரு
கவிதை இருக்கிறது.

----

ஆதவன் தீட்சண்யாவின் கவனமாய் கடக்கவும் என்ற எச்சரிக்கை வரிகளை
நினைவூட்டி உங்களை அச்சப்படுத்துவது என் நோக்கமல்ல.
ஆதவன் தீட்சண்யா அற்புதமான காதல் கவிதைகளையும் எழுதியிருக்கிறார்
என்பதை என் செய்தியாக பதிவு செய்து விடை பெறுகிறேன்.

Monday, March 1, 2010

எதிர்வினைகளும் என் தரவுகளும்

கீற்று ஆசிரியர் எனக்கு அனுப்பிய ரவி ஸ்ரீநிவாசன் அவர்களின் கடிதம்:

From: Editor, keetru.com (editor@keetru.com)
Sent: 26 February 2010 22:42PM
To: puthiyamaadhavi@hotmail.com
FYI

---------- Forwarded message ----------
From: ravi srinivas
Date: Fri, Feb 26, 2010 at 6:38 PM
Subject: Khans vs Gandhis - article in Keetru
To: Editor


Dear Editors
The article by Puthiya Madhavi has some information on Feroze Gandhi. How authentic is that information. What is the proof for இந்திரா மணந்து கொண்ட ஃப்ரோஸ்கான் எப்படி, ஏன் ஃப்ரோஸ்காந்தி ஆனார்? யார் காரணம்? இந்திராவின் கணவர் பெயர் feroze khan. இவர் நவாப் கானின் மகன். நவாப்கான் பார்ஸி பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இசுலாமிய தந்தைக்கும் பார்ஸி தாய்க்கும் பிறந்தவர் ஃப்ரோஸ்கான்
She writes
சத்தியம் தவிர வேறு எதையுமே பேசாத எழுதாத நம் மகாத்மாவின் சத்திய சோதனையில் இந்தப் பெயர் மாற்றக் கதை மட்டும் மிஸ்ஸிங்.!!
If you go through his autobiography you will find that it covers only some part of his life. Major events in his life and in the freedom struggle were not covered as they happened later. The second part of his autobiography was published in 1929. Feroze Gandhi married Indira Nehru in 1942. The website of Indian Parliament states
http://164.100.47.132/LssNew/biodata_1_12/713.htm

Second Lok Sabha
Members Bioprofile


GANDHI, SHRI FEROZE, Cong., (Uttar Pradesh—Rae Bareli—1957): S. of Shri Jehangir Gandhi; B. Bombay, September 12, 1912; ed at London School of Economics, London; m. Shrimati Indira Nehru, March 26, 1942; 2 S.; Managing Director, Associated Journals Ltd.: Publisher 'The National Herald" and "The Navjivan"; Member, Provisional Parliament, 1950—52, and First Lok Sabha, 1952—57.

Hobby: Printing.

Permanent Address: C/o "The National Herald" Lucknow.

[Voting results at the Election:

Electorate: 8,06,589

Shri Feroze Gandhi .. 1,62,595

Shri Nand Kishore .. 1,33,342

Shri Raghavendra Datt .. 94,109]
So what is the evidence for the allegations and accusations she has made.Is she willing to cite from authentic sources to substantiate her claims particularly about the parents of Feroze Gandhi . She even accuses Mahatma Gandhi. Is she willing to provide evidence for her remarks against him.

She can either prove her claims and if she cant she has to tender an unqualified apology for making such allegations and deragotory remarks and withdraw her entire article. If any congress functionary or politician decides to file a case against you and her for publishing a defamtory article you will be in deep trobule, unless you or she is able to prove the claims made in her article to the satisfaction of the court. Feroze Gandhi was no ordinary person. He was dead long ago but the article was not just on him as the author had accused the Father of Nation also.

As a publisher you have to be aware of laws relating to defmation, cyberspace and freedom of expression. Ignorance is no excuse. Please understand this. Dont allow contributors to Keetru to misuse Keetru for spreading lies and making defamatory statements. Please understand your liabilities under the law and running a website for publishing articles and providing digital versions of magazines does not grant you any blanket exemption from the laws of the land.

You check whether her whether she has evidence for what she has stated in the article.Gossip and hear says are not credible evidences before law. If a case is filed for defamation, she cannot state that her article is based on info. found in some sites and get away with that because she has made defamatory statements.
thanks for your attention
ravi srinivas




--
என்றும் அன்புடன்,
கீற்று நந்தன்



என் தரவுகள்:



கீற்று ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம்.
திரு ரவி ஸ்ரீநிவாஸ் அவர்களின் கடித்தத்தை எனக்கு அனுப்பி இருப்பதற்கு நன்றி. அவருடைய அறச்சீற்றம்
பெருமைக்குரியது தான். எனினும் உண்மைகளை எவரும் புதைத்துவிட முடியாது.கட்டுரைகள் எழுதும் போது அதற்கான ஆதாரங்கள் இல்லாமல் நான் எழுதுவதில்லை. ஆதாரங்களை வேண்டுமென்றே தான்
தவிர்த்தேன். தேவையில்லாமல் சிலரின் அந்தரங்க வாழ்க்கையை விமர்சிக்கும் இன்னொரு
பக்கத்திற்கு செல்வதைத் தவிர்க்கும் நோக்கம் மட்டும்தான்.
என் கட்டுரையின் நோக்கம், கான் காந்தியாக்கப்பட்டது ஏன் என்பதும் அதை காந்தி எவ்விடத்திலும்
பதிவு செய்யாமல் மவுனம் காத்ததும் தான்.

என் கட்டுரைக்கான ஆதாரங்கள்:

1) http://www.sikhsundesh.net/nehru_dynasty.htm
Nehru Dynasty என்ற புத்தகத்தைப் பற்றி Harmohan Singh walia
எழுதியிருக்கும் குறிப்புகள்

2)Indira Gandhi's new biographer Katherine Frank - Indira: The Life of Indira Nehru Gandhi;



3) http://www.outlookindia.com/article.aspx?211174
& India today apr02, 2001 regarding kartherine frank book



4) The love saga of Gandhi family by Sharon Supriya
இவர் Nehru Dynasty ல் எழுதப்பட்டிருக்கும் கான் காந்தியான விசயத்தை
ஏற்றுக்கொள்கிறார்.

5)Marriage to Feroze Khan Gandhi
http://en.wikipedia.org/wiki/Indira_Gandhi#Marriage_to_Feroze_Khan_Gandhi
File:The marriage ceremony of Feroze Khan Gandhi and Indira Gandhi, 26 March 1942 at Anand Bhawan, Allahabad.jpg

When Indira and Feroze Khan Gandhi (then only Feroze Khan) returned to India, they were in love and had decided to get married, despite doctors' advice.[5] Indira liked Feroze's openness, sense of humor and self-confidence. Nehru did not like the idea of his daughter marrying and sought Mahatma Gandhi's help to dissuade their love relationship. Mahatma Gandhi as a solution adopted Feroze Khan and gave him his name hence the name Feroze Khan Gandhi or Feroze Gandhi. Indira was adamant and the marriage took place in March 1942 according to Hindu rituals.[6]



6) From: http://www.expressindia.com/news/ie/daily/19980210/04150074.html
Dynasty keeps away from Feroze Gandhi's neglected tombstoneIndia
BY Coomi Kapoor
இந்தியன் எக்ஸ்பிரஸ் 1998, பிப், 10 ஃப்ரோஸ்காந்தியின் கல்லறை குறித்து பேசுகிறது.
பார்சிகள் கல்லறை கட்டுவது இல்லை.


7) http://www.youtube.com/watch?v=m8szEazLkTw

ஜெயா டி.வி (தமிழ்) இந்திரா- ஃப்ரோஸ்கான் காந்தி திருமணத்தைப் பற்றி
சொல்லும் you tube ஒலி, ஒளி காட்சிகள்.

8) எல்லாவற்றுக்கும் மேலாக இந்திராவின் இளைய மருமகள் மேனகாகாந்தி
இந்திரா மீது தொடுத்த வழக்கு. ஆதாரம் newyork times, may 2, 1984
"Around the world, Mrs Gandhi not HIndu by maneka gandhi.
அந்த வழக்கில் இந்திராவுக்காக வாதாடிய வக்கீல் காட்டிய ஆதாரம்
இந்திரா அவர்கள் இந்து முறைப்படியும் வைதீக திருமணம் செய்து கொண்ட
புகைப்படங்கள்.

மேற்கண்ட ஆதாரங்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்று
சம்மந்தப்பட்ட புத்தக ஆசிரியர்கள், மேனகா காந்தி , ஜெயா டி.வி , விக்கிபிடியா
ஆகியோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் என் கட்டுரையை நீக்குவது பற்றி எனக்கு எவ்வித
ஆட்சேபனையும் இல்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரவி ஸ்ரீநிவாஸ்க்கும் கீற்றுக்கும் என் நன்றியும் வணக்கங்களும்.

அன்புடன்,


புதியமாதவி,
மும்பை.

Tuesday, February 23, 2010

KHANS vs GANDHIS




MY NAME IS KHAN திரைப்படம் உள்ளூர் அரசியல் தாதாகிரி தனங்களால்
மிகுந்த பரபரப்புகளுக்கு நடுவில் திரையிடப்பட்டது மும்பையில்.
அதனாலேயே நிறைய ஸ்டார் அந்தஸ்த்தை திரைவிமர்சன ஊடகத்தில்
மிகவும் எளிதாகவும் பெற்றது. My name is khan, iam not a terrorist
இதுதான் கதையின் மையம். வழக்கம் போல கரண் ஜோகரின் காட்சி
அமைப்புகள் வெளிநாட்டு கதை தளம் ,. கதாநாயகன் பெஞ்சில்
உட்கார்ந்திருக்கும் காட்சி , இத்தியாதி நிறைய சொல்லிக்கொண்டே
போகலாம்.

பம்பாய் , ரோஜா, நாயகன் என்று இந்தியாவின் வெவ்வேறு இடங்களை
கதைத்தளமாக்கி இந்திய முகத்துக்கு ஏற்ற மாதிரி நடிகைகளைத் தேர்வு
செய்து இந்தியாவின் பெருநகரங்களில் வசூலை அள்ளும் வித்தையில்
மணிரத்னம் எப்படி கெட்டிக்காரரோ அது போலவே பாலிவுட்டில்
வெளிநாட்டு இந்தியர்களை முன்வைத்து அதற்கு ஏற்றது மாதிரி கதைக்கரு,
கதை நிகழ்வுகள், கதை நிகழ்விடங்களை அமைத்து இந்திய பாலிவுட்
சினிமாவை உலக அரங்கில் ஜெர்மன், சீனா, ஜப்பான், அமெரிக்கா, நார்வே,
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மற்றும் அரபு நாடுகளுக்கு எடுத்துச் சென்று
டாலர்களிலும் யூரோக்களிலும் குளிர்காயும்
வித்தையை நடத்திக் கொண்டிருப்பவர் கரன் ஜோகர். போலந்து, ஜெர்மனி, ரஷ்யாவில் எந்த பாலிவுட் படங்களுக்கும் கிடைக்காத சிவப்பு கம்பள வரவேற்பு இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கிறது என்பதும் உண்மை.


அதற்கான மிகச்சிறந்த கதைக்கருவாக கிடைத்திருப்பது அமெரிக்காவில்
11/9 க்கு முன்பும் அந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னும் .
கதைக்கரு, தளம் இவற்றில் கரண் கள ஆய்வுகள் எதுவும் செய்யவில்லை என்று
குறைபட்டுக் கொள்கிறார் நியுயார்கிலிருந்து திரைவிமர்சனம் எழுதும் அஸீம் சாப்ரா. (Aseem Chhabra). இந்த விமர்சனங்கள் எப்படி இருந்தாலும்
MY Name is khan, iam not a terrorist என்று சொல்வதற்கு , மற்ற KHAN நடிகர்களிடம் இல்லாத துணிச்சல் ஷாருகானிடம் இருக்கிறது. அதற்காக அவரைப் பாராட்டுவதில் தவறில்லை.


கதையில் அவருக்கிருக்கும் உளவியல் சிக்கலும் அதன் காரணமான
உடல் அமைப்பு, எண்ணம், செயல்பாடுகளில் காட்டும் வித்தியாசம்
கதைக்கு வலு சேர்க்கிறதா என்பதை கரண் ஜோகரிடம் தான் கேட்க வேண்டும்.
கதை நாயகன் இப்படிப்பட்டவனாக காட்டப்பட்டால் தான்
MY Name is khan, iam not a terrorist என்று அவன் அமெரிக்க ஜனாதிபதியிடம்
சொல்ல நினைப்பதை மக்கள் சரி என்று ஏற்றுக்கொள்வார்கள் என்று
கற்பனை செய்து ஒரு மிகப்பெரிய விசயத்தைச் சொல்வதற்கு ஒரு நொண்டிக்
குதிரையில் பயணித்திருக்கும் கோமாளித்தனத்தைக் கண்டு காமெடி
காட்சி இல்லாத குறையை இப்படி நிவர்த்தி செய்து கொண்டார்களோ என்று
சமாதானம் சொல்லிக்கொண்டாலும் .. சரி விட்டு தள்ளுங்கள்.

இனி விசயத்திற்கு வருவோம். நடிகர் ஷாருகானுக்கு அமெரிக்கா போயிருந்தப் போது அவருடைய KHAN என்ற பெயர் அடையாளம் காரணமாக தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். பல மணிநேரம் காத்திருக்க வைத்தார்கள். மம்முட்டிக்கும் இதே நிலமை ஏற்பட்டது. ஏன் இந்தியாவின் நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கே இந்த அனுபவம் ஏற்பட்டதை எல்லோரும் அறிவோம்.

மத அடையாளத்தை தீவிரவாதியின் அடையாளமாகக் காட்டியதில் வல்லரசுகள்
மட்டுமல்ல, உலகளாவிய அனைத்து ஊடகங்களுக்கும் முக்கிய பங்கு
இருக்கத்தான் செய்கிறது.

அதனால் தான் MY Name is khan, iam not a terrorist என்று சொல்வதில்
இருக்கும் புரிதல், MY name is Rahul, iam not a terrorist என்று சொல்வதில்
கிடைப்பதில்லை.


அமெரிக்காவின் இச்செயல் என்னவோ 11/9 க்குப் பிறகு ஏற்பட்ட மாற்றம் என்றோ உளவியல் சிக்கல் என்றோ கரண்ஜோகர் காட்டியிருப்பது முழுவதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மையல்ல. ஏனேனில், ஈரானிய திரைப்படம் - வட்டம் (2000) படத்தின் இயக்குநர் (Jafer Panahi) ஜாஃபர் பனாஹி டிரான்ஸிட் விசா வைத்திருக்கவில்லை என்ற காரணத்திற்காக நியுயார்க்
விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டு கைகளிலும் கால்களிலும் விலங்கிடப்பட்டு ஹாங்காங்குக்கே திருப்பி அனுப்ப பட்டார்.
ஹாங்காங்கில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு அங்கிருந்து புவனோஸ் அய்ரஸில் நடக்கும் திரைப்பட விழாவுக்கு செல்லும் வழியில் 15.4.2001ல் இது நடந்தது. அப்போது அமெரிக்காவில் அவரது வட்டம் திரைப்படம் திரையிடப் பட்டிருந்தது. அப்படத்திற்காக அவருக்கு "கருத்துச் சுதந்திரத்திற்கான" பரிசு வழங்கப்பட்டது. அப்பரிசை திருப்பி அனுப்பி தனக்குப் பட்டம் வழங்கிய திரைப்பட சங்கத்திற்கு அவர் எழுதிய கடிதத்தில் அவர் கைது செய்யப்பட்டு கேவலமாக நடத்தப்பட்டதைப் பதிவு செய்திருக்கிறார்.

KHAN என்ற பெயர் அடையாளம் அமெரிக்கர்களுக்கு
மட்டுமல்ல நம் மகாத்மாக்களுக்கும் அலர்ஜியாகத்தான் இருந்திருக்கிறது.


இல்லை என்றால் இந்திய ஜனநாயகத்தின் அரச பரம்பரைக்கு காந்தி என்ற
அடையாளம் ஏன் வலிந்து கொடுக்கப்பட்டது?
Khans எல்லோரும் காந்தி என்று மாற்றம் பெற்றது ஏன்?
இந்திராகாந்தி கான். ராஜீவ்கான், சோனியாகான், ராகுல்கான்..
இப்படியாக ஒரிஜினலாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
இந்திராகாந்தியின் பெயரில் இருக்கும் காந்தி யார்?
இப்படி நிறைய கேள்விகள் அண்மைக்கால வரலாற்றிலிருந்து
மிகவும் சாதுரியமாக கள்ள மவுனத்தின் மூலம் மறைக்கப்பட்டு
மறக்கப்பட்டு விட்டது.









இந்திரா மணந்து கொண்ட ஃப்ரோஸ்கான் எப்படி, ஏன் ஃப்ரோஸ்காந்தி
ஆனார்? யார் காரணம்?
இந்திராவின் கணவர் பெயர் feroze khan. இவர் நவாப் கானின் மகன். நவாப்கான்
பார்ஸி பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இசுலாமிய தந்தைக்கும்
பார்ஸி தாய்க்கும் பிறந்தவர் ஃப்ரோஸ்கான். ப்ரோஸ்கானின் தாய் இசுலாமிய
மார்க்கத்திற்கு மாறி நவாப்கானைத் நிக்காக் செய்து கொண்டார்.
ஃப்ரோஸ்கானின் தாய் வழி குடும்ப பெயர் காந்தி என்று சிலர் சொல்கிறார்கள்.
அவருடைய தாய் பார்ஸி என்பதும் பார்சிகளில் காந்தி என்ற குடும்பபெயர்
இருப்பதும் மறுப்பதற்கில்லை. இலண்டனில் மசூதியில் இந்திராவும்
ஃப்ரோஸ்கானும் நிக்காக் செய்து கொண்டதை இலண்டன் பத்திரிகைகள் செய்தியாக்கின.

அதன் பின் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கண்டவர்
மகாத்மா என்று போற்றப்படும் கரம்சந்த் மோகன் தாஸ் காந்தி அவர்கள்.
காந்தி தன்னுடைய குடும்ப பெயரை ஃப்ரோஸ்கானுக்கு கொடுத்தார்
என்று சொல்பவர்களும் உண்டு. அப்படி எல்லாம் யாரும் நினைத்தால்
சம்பந்தமில்லாமல் யாருடைய குடும்ப பெயரையும் யாருக்கும் கொடுக்க முடியுமா என்ன? இதெல்லாம் மகாத்மாவுக்குத் தான் வெளிச்சம்.

சத்தியம் தவிர வேறு எதையுமே பேசாத எழுதாத நம் மகாத்மாவின்
சத்திய சோதனையில் இந்த பெயர் மாற்ற கதை மட்டும் மிஸ்ஸிங்.!!

இந்திரா , ஃப்ரோஸ்கான் திருமணத்தை எதிர்த்த நேருவுக்கு காந்தி
வழங்கிய இந்த அதி அற்புதமான மந்திரவிளக்கு khan களை காந்தியாக்கியது தான்..
இலண்டனில் ஃப்ரோஸ்கான் என்ற பெயர் ஃப்ரோஸ்காந்தி என்று ஒரு
அஃபிடவிட் (affidavit) மூலம் மாற்றம் பெற்றது. இதில் ரொம்பவும்
புத்திசாலித்தனமாக இது பெயர் மாற்றம் மட்டும்தான், மத மாற்றம் அல்ல
என்பதும் குறிக்கப்பட்டது. அதன் பின் இந்தியா திரும்பியவுடன் இந்திராவுக்கும்
கானாக இருந்த காந்தியாக மாற்றப்பட்ட ஃப்ரோஸ்காந்திக்கும் இந்திய இந்து
வைதீக முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

ஃப்ரோஸ்காந்தி இறந்தப் பின் இசுலாமிய முறைப்படி புதைக்கப்படவோ இல்லை
பார்சிகள் முறைப்படி வல்லூறுகளுக்கு இரையாக மரணக்கிணற்றில் வீசப்படவோ இல்லை. இந்து முறைப்படி சிதைக்கு எரியூட்டினார்கள்.
சாம்பலை எடுத்து வந்து அலகாபாத்தில் கல்லறை கட்டப்பட்டது.
ஃப்ரோஸ்காந்தியின் கல்லறையை காந்தி அரச பரம்பரையில் வந்த யாரும் கண்டு கொள்ளவில்லை. ஏனேனில் உண்மையில் அது காந்தியின் கல்லறை அல்ல கானின் கல்லறை என்ற மண்ணுக்குள் புதைக்கப்பட்ட உண்மைதான்.

தாய்வழி குடும்ப பெயரைப் பயன்படுத்துவது தவறு என்று சொல்லவரவில்லை..
இந்திய அரசியலில் இந்தப் பெயர் மாற்றம் எவ்வளவு சாதுரியமாக,
திட்டமிடப்பட்டு எதிர்கால அரசியல் அதிகாரப்பகிர்வுக்கு துணை செய்யும்
வகையில் ஆளும் வர்க்கத்தால் சாதிக்க முடிந்தது என்பதை நினைத்துப்
பார்க்க வைத்தது ஏதொ ஒரு வகையில் இந்தப் படம் .

MY Name is khan, iam not a terrorist என்று சொல்வதற்குப் பதிலாக
MY Name is Gandhi, iam not a terrorist என்று சொல்லிப்பாருங்களேன்.
கேட்பவர்கள் நமக்கு எதோ ஆகிவிட்டது என்கிற மாதிரி பார்ப்பார்கள்.
நமக்கே கூட சத்தமாக அதைச் சொன்னால் ஏதொ கருத்துப்பிழை
உள்ள சொல் தொடரைச் சொன்னது போலிருக்கும்!!

பால் பச்சையாக இருக்க முடியுமா?
ரோசா செடியில் மல்லிகைப் பூக்குமா?
காந்தி தீவிரவாதியாக இருக்க முடியுமா?
என்று நம் மூளையே நம் கட்டுப்பாட்டை மீறி நம்மிடம் பேச ஆரம்பிக்கும்!

காந்தி, எங்கள் தேசப்பிதாவே.. உங்களின் எளிமைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
உங்கள் அரசியல் ஞானம் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது!
அதிலும் குறிப்பாக தன்னுடைய அடையாளப் பெயரான காந்தி என்ற
குடும்ப பெயரையே ஃப்ரோஸ்கானுக்கு வழங்கிய உங்கள் அரசியல் அறிவு
யாருக்கு வரும்? ஜவஹர்லால் நேரு குடும்பம் இதற்காக உங்களுக்கு
நன்றி சொல்கிறார்களோ என்னவோ... இந்திய மக்கள் நாங்கள் நன்றி
சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம்!.

ஷாருக்கானுக்கு ஒரு குட்டி அட்வைஸ். ரொம்பவும் மெனக்கெட வேண்டாம்.
MY Name is khan, iam not a terrorist என்றெல்லாம் சொல்லிக்கொண்டு திரிய
வேண்டாம். ஒரு அஃபிடவிட் வாங்கி உங்கள் khan பெயரை காந்தி என்று
மாற்றிக் கொள்ளுங்கள். ஷாருக்காந்தி ..... சொல்வதற்கு இனிமையாகத்தான்
இருக்கிறது.

Wednesday, February 10, 2010

பெண்வழிபாடு

*வளர்ச்சி கூடவும் தளர்ச்சி நீங்கவும் துர்க்கை வழிபாட்டை மேற்கொள்ளவும். துர்க்கையை வழிபட்டால் துயரங்கள் நீங்கும்* அவளுக்கு வயது 13 அவள் பேதை. * வளர்ந்த ஆண் மூட்டைப் பூச்சி பாலுறவு கொள்ள முயலும் போதுதான் பெண் மூட்டைப் பூச்சிக்கு பெண் குறி இல்லை என்பதை அறியும். ஆனாலும் அது மனம் தளராமல் தன் ஆண் குறி மூலம் பெண் மூட்டைப் பூச்சியின் உடலில் துளையிட்டு ஒரு பெண்ணுறுப்பை உருவாக்கி அதன் மூலம் பாலுறவுக் கொள்ளும். * பேதையின் மலரும் மொட்டுகள் காற்றில் அசைந்தாடியது. டாப் ஸ்லிப் அதற்குள் அணியும் டைட் ப்ரா அவள் இன்னும் அணிய ஆரம்பிக்கவில்லை. அதனோலேயே எப்போதும் புத்தகக்கட்டை பையிலிருந்து எடுத்து மார்பில் சேர்த்து அணைத்துக் கொண்டு நடப்பது அவளுக்கு வழக்கமாகிவிட்டது. எப்பொதும் கணக்கில் தப்பு செய்தால் 'ணங்'குனு தலையில் கொட்டும் டியூசன் சார் இப்போது அப்படிக் கொட்டுவதில்லை. பக்கத்தில் வந்து முதுகுப் பக்கமாக தட்டுவதும் அப்படியே கைகள் முன்பக்கம் நகர்த்துவதும் யாரும் பார்க்காத போது அப்படியே விரல்களால் கிள்ளிவிடுவதுமாக.. கத்தவும் முடியவில்லை . யாரிடமும் சொல்லவும் முடியவில்லை. டியூசனுக்குப் போகமாட்டேன்னு அழுது அடம்பிடித்து எல்லா ரகளையும் செய்து பார்த்துவிட்டாள். " நீ வாங்கற மார்க்குக்கு டியூசன் வேண்டாம்னு வேற சொல்றியா?" வீட்டில் ஆள் ஆளுக்கு திட்டியது தான் மிச்சம். 'அந்த சார் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. அதுதான் போகமாட்டேனு சொல்றா" 'இவ சேட்டை எல்லாம் அவருக்கிட்ட நடக்காதில்லே.. அதுதான்.." 'ஏண்டா.. அவதான் ஒரே ப்டிவாதமா போகமாட்டேன்கிறாளே பொம்பளைக் குட்டி படிப்புக்கோசரம் ஏண்டா இப்படி அலட்டிக்கிறே...' 'சும்மா இரும்மா.. இவ படிச்சா தான் இவளுக்கு லைஃப். என்ன பண்றது மூத்தவா அவுங்க அம்மா மாதிரி சிவப்பா பிறந்திருக்கா பிரச்சனை இல்லை.. இவ என்ன மாதிரி கருப்பால்லே இருக்கா. எதோ ஒரு எஞ்ஜினியரிங் அது இதுனு படிச்சி நல்ல சம்பளம் வாங்கினா அவ படிப்பையும் சம்பளத்தையும் பார்த்து நல்ல இடமா அமையும்னு நான கணக்குப் போடறேன்.. இவ என்னடானா என் கணக்கை தப்பாக்கிடுவா போலிருக்கே.. மகன் சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறது என்று பெரிசு மவுனமாக முந்தானையை எடுத்து தொங்கிக்கொண்டிருக்கும் மார்பகங்களை போர்த்து இழுத்துச் சொருகிக்கொண்டது. அப்பா மட்டுமில்லை சித்திமார் மாமா என்று சொந்த பந்தங்கள் எல்லோரும் அவள் அவளுடைய அப்பா மாதிரி கருப்பா பிறந்ததுக்காக ரொம்பவும் தான் வருத்தப்பட்டுக்கொண்டார்கள். அவளுக்கு அப்படி எல்லாம் வருத்தமே வருவதில்லை. தன்னைக் கண்ணாடியில் பார்த்து அடிக்கடி ரசித்துக் கொள்வாள். அதுவும் குளித்துவிட்டு வந்தவுடன் டவலைச் சுத்திக்கொண்டு இடுப்பு சுளித்துக் கொள்கிற மாதிரி தனக்குத் தெரிந்த ஒவ்வொரு நடிகையின் குளிக்கிற காட்சிகளையும் நடித்து நடித்து தன்னைத் தானே ரசித்துக் கொண்டிருப்பாள். எப்படியோ ஒருவழியாக டியுசன் முடிந்தது. என்னவானாலும் சரி இனிமேல் இந்த மாதிரி டியுசன் பிரச்சனையில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்று தீர்மானித்துவிட்டாள். +2வில் எல்லோரும் டீச்சர் xy யிடம் தனிக்கோச்சிங் அதாவது பிரைவேட் டியூசன் எடுத்துக் கொண்டார்கள். சும்மா சொல்லக்கூடாது டீச்சரின் கோச்சிங் மாணவர்கள் தான் இதுவரை கணக்கில் 100/100 எடுத்துக்கொண்டிருந்தார்கள் என்ற ரிகார்டு வேறு இருந்தது. அதிலும் லேடி டீச்சர் என்பதால் நிறைய பெண் குழந்தைகளை பெற்றொர்கள் பயமில்லாமல் போட்டார்கள். மற்றவர்கள் கோச்சிங் பீஃஸை விட 5000 ரூபாய் அதிகம் என்றாலும் லேடி டீச்சர் என்பதால் பெற்றோர்கள் விரும்பி பணத்தைப் பற்றி அதிகம் பொருட்படுத்தாமல் போட்டிப்போட்டுக் கொண்டு வந்து சேர்த்தார்கள். 10 மாணவர்களுக்கு மேல் சேர்ப்பதில்லை என்பதால் ரொம்பவும் டிமாண்ட் இருந்தது. அவளுக்கு இடம் கிடைத்தது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். *அவளுக்கு வயது 15. அவள் பெதும்பை * * கடல் குதிரை ஒரு வகையான மீன் இனமாகும். இவ்வினத்தில் ஆண் குதிரைதான் கருவை சுமந்து குழந்தை பெறுகிறது. இன விருத்திக்குத் தயாரானவுடன் பெண் ஆணுடைய வயிற்றுப் பையில் கருமுட்டையை இடுகிறது. ஆண் கருமுட்டை மீது விந்து பொழிந்து அதை வளர்க்கிறது. பின்பு குட்டிகளை ஈன்று கடலில் விடுகிறது. * பெதும்பைக்கு டீச்சர் நன்றாகவே கணக்கு சொல்லிக்கொடுத்தாள். ரொம்பவும் கண்டிப்பாகவும் இருந்தாள். எப்போதும் சிடு சிடு வென இருப்பதாக அவளுக்கு தோன்றியது. கொஞ்சம் இந்த டீச்சர் சிரித்தால் நல்லா இருக்குமோனு நினைத்தாள். அதை எப்படியும் டியூசன் முடிவதற்குள் டீச்சரிடம் சொல்லிவிட வேண்டும் என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டாள். இதற்குள் வீட்டில் அவள் அக்காவுக்கு திருமணம் நடந்து முடிந்தது. அக்கா நல்ல கலர். இருந்தாலும் அவள் அழகாக இருக்கிறாள் என்பதாலேயே யாரும் சீர் செனத்தி இல்லாமல் அக்காவைத் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இல்லை. அக்காவுக்கு நகைச் செய்யும் போதும் சரி வெள்ளிப் பாத்திரங்கள் வாங்கும் போதும் சரி இவளுக்கே இப்ப்டினா இந்தா நிக்காளே இவளுக்கு என்ன பாடு படப்போறேனோ என்று அப்பா பெதும்பையைப் பார்த்து அடிக்கடி சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார். வழக்கம் போல அதை எல்லாம் கேட்டும் கேட்காதது மாதிரி அக்காவின் திருமணத்தில் தான் என்ன மாதிரி உடை அணிந்து கொள்ள வேண்டும், அதை உடுத்துக்கொண்டு எப்படி அங்கேயும் இங்கேயும் நடக்க வேண்டும் என்று ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பெதும்பை. அக்காவைப் போலவே மாப்பிள்ளையும் நல்ல கலரா உசரமா இந்த டி,வி விளம்பரத்தில் வர்றவன் மாதிரி எப்போதும் சிரித்துக் கொண்டிருந்தான். அவன் சிரிப்பு பெதும்பைக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அக்கா திருமணத்தால் டியுசனுக்கு ஒருவாரம் போகமுடியவில்லை. டீச்சர் அதற்குள் ஒரு சேப்டர் நடத்தி அடுத்த சேப்டருக்கு போய்விட்டாள். அவளுக்கு கொஞ்சம் தடுமாற்றமாக இருந்தது. வேனும்னா இரவில் 9 மணிக்குப் பின் வந்து ஒரு மணி நேரம் தனியாக பாடம் கேட்கலாம் என்று டீச்சரே சொன்னவுடன் பெதும்பைக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. எவ்வளவு நல்ல டீச்சர்.. வீட்டில் சொன்னவுடன் யாரும் எதுவும் எதிர்ப்பு சொல்லவில்லை. அதுவும் லேடி டீச்சர் என்பதால் 'லேட் ஆனா நீ வரவேண்டாம், டீச்சர் வீட்டிலேயே தங்கிக்கோ விடிஞ்சப்புறம் வந்தா போதும். தெரு நாய்கள் ராத்திரி 10 மணிக்கப்பறம் சைக்கிள் முன்னாலே ஓடிவந்து குரைச்சி ரகளைப் பண்ணுதுக,.. நேத்து இப்படித்தான் அடுத்த தெரு மயிலு மவன் 10 மணிக்கு பஸ் டாப்பிலிருந்து சைக்கில்ல வந்திருக்கான் தெருநாய் கூத்திலே பையன் சைகிளை அங்கங்கே திருப்பி கீழே விழுந்து முட்டியைப் பேத்துக்கிட்டான். சைக்கிளை எடுத்துக் கொண்டு பெதும்பை சிட்டாக டீச்சர் வீட்டுக்குப் பறந்தாள். டீச்சர் இவள் வருவதற்குள் சாப்பிட்டுவிட்டு இவளுக்காக காத்திருந்தாள். ஒவ்வொன்றாக இவளுக்கு புரிகிற மாதிரி சொல்லிக்கொடுத்துக் கொண்டு வந்தாள். இரவில் டீச்சர் வீட்டில் விடிய விடிய மெல்லிய நைட் லேம்ப் வெளிச்சம் இருந்ததால் அவளுக்குப் பயமாகவே இல்லை, வீட்டில் அக்காவுக்கு திருமணம் ஆனபின் அவளுக்குத் தனியாகப் படுக்க பயமாக இருந்தது. பாட்டியின் பக்கத்தில் போய் படுத்துக் கொள்ளலாம். ஆனால் இவளுக்கு தூங்கும் போது பேஃன் வேணும். பாட்டிக்கு பேஃன் காத்தே ஆகாது. அம்மா பக்கத்தில் போய் படுத்துக் கொண்டால் பாதி நாள் நடுச்சாமத்தில் அம்மா அருகிலிருக்க மாட்டாள். கேட்டால் அப்பாவுக்கு கால்ப்டித்துவிட போயிருந்ததாகச் சொல்வாள். அப்பாவுக்கு கால்பிடித்துவிட்டால்தான் தூக்கம் வரும்.. அதுக்காக இப்படியா.. நடுச்சாமத்தில் அம்மாவைக் கால்பிடித்துவிட சொல்வது!..என்று அப்பாவின் மீது தான் அவளுக்கு கோபம் வரும். அம்மாவைப் பார்த்தால் பாவமாக இருக்கும். டீச்சர் வீட்டில் தூங்கினால் இந்தப் ப்ரச்சனை எதுவுமே இல்லை. நிம்மதியாக தூங்கி எந்த்ரிச்சி டாண்னு அம்மா காபி போடும் போது வீட்டுக்குள் நுழைவது வழக்கமாகிவிட்டது. அன்றைக்கு அவளுக்குச் சீக்கிரமே தூக்கம் வந்துவிட்டது. டீச்சரும் சரி தூங்கலாம் என்று சொல்ல்விட்டாள். தூக்கத்தில்... அவள் கால்களை அகட்டி வைத்து மெத்தென்று .. உடல்.. கதகதப்பாக வெட்ப பெருமூச்சுடன். அவள் உதடுகளைக் கவ்விக்கடித்து.. அவள் தொடைகளைத்தடவி உதடுகளால் முத்தமிட்டு அவள் கூந்தலைத்தடவி உடலை இழுத்து அணைத்து காற்றுகூட நடுவில் புகுந்துவிட இடமின்றி இரு பெரும்மலைகளுக்கு நடுவில் இருக்கும் இரண்டு சிறிய குன்றுகளாய் பெதும்பையின் மார்புகளைத் தடவி நீருற்றின் குளிர்ச்சியாய் ஈரமாக்கி.. இதுகனவா நனவா.. என்ன நடக்கிறது? சட்டென்று போர்வையை விலக்கிக்கொண்டு வெளியில் வந்துவிட முடியாதபடி ஆகாயமே காவல் காத்த நிலவில்லாத வானத்தில் ... கதகதப்பான அணைப்புக்குள் பெதும்பை தூங்கிப் போனாள். * அவளுக்கு வயது 19. அவள் மங்கை. * பாலுறவில் ஈடுபடும் கழுதையைத் தடுத்தால், அதற்கு வெறி வந்துவிடும். வெறி பிடிதத ஆண் கழுதை கடித்து உயிரிழந்தவர்கள் ஏராளம். * எஞ்சினியரிங் சீட் கிடைத்து விட்டது. சென்னையில் அண்ணா கல்லூரியில். விடுதி வாழ்க்கை. எப்போதாவது லீவில் அக்கா வீட்டுக்குப் போகலாம். ஆரம்பத்தில் அடிக்கடி போனாள். ஆனால் என்னவொ அவளுடைய அக்கா அவளுக்குத் தெரிந்த அக்கா மாதிரியே இல்லை. டோட்டலா அக்கா மாறிப் போயிருந்தாள். எல்லாம் அத்தானுக்குப் பிடித்த மாதிரி தான். சாப்பாட்டிலிருந்து கட்டிக்கொள்ளும் புடவை கலர் வரை.. எப்படி ஒரு மனுஷியால் இவ்வளவு தூரம் தன்னை மாற்றிக்கொள்ள முடியும் என்று அவளுக்கு அதிசயமாக இருந்தது.. அத்தான் வீட்டில் வாங்கி வைத்திருக்கும் ஒவ்வொரு பொருளும் ரொம்பவும் விலை உயர்ந்தாகவும் ரொம்பவும் அழகானதாகவும் இருந்தது. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செலக்ட் செய்து அது அது இடத்தில் வைத்திருந்தார்கள். எதையாவது அவள் தொட்டுப் பார்த்தால் கூட அக்கா சத்தம் போடுவாள். 'கையை வச்சிக்கிட்டு சும்மா இரேண்டி.. அத்தான் சத்தம் போடுவாரு.. ரொம்ப காஸ்ட்லி ஐட்டம்.. 'என்பாள். வீடுனா அப்படி இப்படி பொருட்கள் அங்கேயும் இங்கேயுமா கிடக்கனும். அதுதானே மனிதர்கள்.. உயிருள்ள மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான அடையாளம். அதை விட்டுட்டு இப்படியா மியுசியம் மாதிரி பைஃவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி.. ஒரு செட்டப்பில் .. அவளுக்கு என்னவொ அக்கா வீட்டைப் பார்க்கும் போதெல்லாம் பெரிய பெரிய ஹோட்டல் ரிசப்ஷன் ஹால் தான் நினைவுக்கு வரும். சொல்வதில்லை. * ஆண் சிங்கம் 55 மணி நேரத்தில் வெவ்வேறு பெண் சிங்கங்களுடன் 157 முறை பாலுறவு கொள்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதிகமுறை பாலுறவில் ஈடுபடும் விலங்கு ஷாஜிர்ட் என்ற பாலைவன எலியாகும். இரண்டு மணி நேரத்தில் 244 முறை பாலுறவில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. * அக்கா உண்டாகி இருக்கிறாள் என்று அம்மா பட்சணமெல்லாம் செய்து கொண்டு பார்க்க வந்திருந்தாள். அம்மாவும் அக்காவும் டாக்டரிடம் போயிருந்தார்கள். அத்தான் ஆபிஸிலிருந்து சீக்கரமே வந்துவிட்டார். வழக்கம்போல அத்தானும் அவளும் ஹாலில் உட்கார்ந்து டி.வி, பார்த்துக் கொண்டிருந்தார்கள். அத்தான் ரொம்பவும் நெருக்கமாக அவள் தொடையைத் தொட்டுக்கொண்டு சோபாவில் உட்கார்ந்திருந்தார். சட்டென்று அவள் எதிர்பார்க்காமல் அவள் மடியில் தலைவைத்து படுத்துக் கொண்டார். 'என்ன இது.. ப்பிளிஸ் எந்த்ரிங்க திஸ் இஸ் நாட் கரெக்ட்..ப்பிளீஸ்ஸ்ஸ்ஸ்' அவள் குரல் உடைந்தது. அழகையை அடக்கிக் கொண்டாள். அவள் சொல்வதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் அத்தானின் கைகள் அவள் துப்பட்டாவை விலக்கி அவள் கழுத்துப் பகுதியை தடவி கீழிறங்கியது. அவளுக்கு ஆத்திரம் வந்தது. அவனைத் தள்ளிக்கொண்டு எழுந்தாள். 'ரஸ்கல்.. நீ நடந்துக்கிட்டதை என் அக்கா கிட்டேயும் அம்மா கிட்டேயும் சொல்றேன் பாரு.. ' ஆத்திரத்துடன் சேர்ந்து அழகையும் வந்தது. அவன் அவள் அருகில் வந்தான். 'ஏய் இந்தப்பாரு..., உன் அக்கா அழகுக்கு முன்னோலே நீ தூசி.. யாரும் உங்க அக்காவை விட்டுவிட்டு நான் உங்கிட்டே வந்தேன்னு நீ சொன்னாகூட நம்ப மாட்டாங்கடீ.. சும்மா கிடந்து அலட்டாதே.. எம் மேலே உனக்குத்தான் கண்ணு.. நீ தான் உன் அக்கா இல்லாத நேரம் பார்த்து எம்மேலே விழுந்தேன்னு நான் சொன்னா அதைத்தாண்டீ நம்புவாங்க.. போடி போ.. சொல்லு.. சொல்லுடி..' அவன் சொல்ல சொல்ல அவன் மீது அருவெருப்பு வந்தது. அதன் பின் அவள் தன் அக்கா வீட்டுக்குப் போவதை தவிர்த்தாள். அப்படியே போனாலும் அக்கா இருக்கும்போது போய்ட்டு உடனடியாக வந்துவிடுவாள். அம்மாவிடம் மட்டும் அத்தான் நடந்துக் கொண்டதை ஊருக்குப் போயிருக்கும் போது சொன்னாள். 'எங்கிட்டே சொன்னமாதிரி இதை வெளியில் யாருக்கிட்டேயும் சொல்லிடாதேடி. அக்கா வாழ்க்கையே வீணாக்கிடுவானுக. பொண்ணா பொறந்திட்டா இப்படி ஆயிரம் வரும் போகும்.. மனசுக்குள்ளேயே போட்டுக்கனும் புரியுதாம்மா..' சொல்லிவிட்டு அம்மாவும் சேர்ந்து அழுதாள். அம்மாவின் அழுகையில் அவள் இதுவரை யாரிடமும் சொல்லாத சொல்ல முடியாத எல்லாமும் கலந்திருந்தது. அவளுக்கு கேம்பஸ் இண்டர்வியூவில் வேலைக் கிடைத்துவிட்டது. வேலைக்குப் போவதில் அவளுக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. பெங்களூர், மும்பை, ஹைதராபாத், டில்லி என்று எங்கே கிடைத்தாலும் போயிடலாம் சென்னை மட்டும் வேண்டாம் .. சொந்தக்காரங்க இல்லாத இடத்தில் சுதந்திரமாக தனியாக இருக்க வேண்டும் .. அந்த நினைப்பே அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.. ஆனால் வேலைக்குப் போவதற்குள் நல்ல இடத்திலிருந்து அவளுக்கு வரன் வந்துவிட்டது. நல்ல வாட்டச் சாட்டமான பையன். எம்.டெக் படிச்சிருக்கான். ஒரே பையன். எந்தப் பிக்கல் பிடுங்கலும் கிடையாது. சீர் எதுவும் டிமாண்ட் பண்ணலை. போடரதைப் போடுங்கனு சொல்லிட்டாங்க. வீட்டில் எல்லோரும் இவளுக்கு வந்திட்ட அதிர்ஷ்டத்தைப் பற்றித்தான் வாய்க்கு வாய் பேசிக்கொண்டார்கள். அம்மா தான் எல்லார் வாயும் ஒன்னுபோலிருக்காது என்று இவளுக்கு கண்ணேறு கழித்தாள். அவளுக்கு நினைவு தெரிந்ததலிருந்து அவளுக்கு கண்ணேறு கழித்ததாக நினைவில்லை. அதுவும் அவளுக்கில்லை. அவளுக்கு கிடைக்குப்போகும் கணவனால் கிடைத்திருக்கும் போனஸாகவே இருந்தது. * ராணித் தேனீக்கு உடலுறவு என்பது வாழ்வில் ஒரு முறைதான். ஒரு முறை பாலுறவு கொண்டவுடன் அந்த ராணித் தேனீ வாழ்நாள் முழுவதும் முட்டைகளை இடுகிறது. ஓர் ஆண் தேனீ மட்டும் வீர சாகசங்கள் புரிந்து மற்ற ஆண் தேனீக்களை வென்று ராணித் தேனீயுடன் பாலுறவு கொள்ளும். பாலுறவு முடிந்தவுடன் ஆண் குறி உடைந்து பெண்ணுறுப்பிலேயே தங்கிவிடுவதால் இரத்த இழப்பு ஏற்பட்டு இறந்து விடும். இதனால் ராணித் தேனீ வாழ்நாள் முழுவதும் முட்டைகளை இட்டுக் கொண்டே இருக்கும். * அவளுக்கு வயது 27. அவள் அரிவை. எல்லா பெண்களுக்கும் மனசுக்குள் இருக்கும் ஆவல் அவளுக்கும். ஏன் தன்னை மனைவியாக தன் கணவன் ஏற்றுக்கொண்டான் என்பதை அறிந்து கொள்ள துடிப்பது. அந்த நேரத்தில் அவள் கணவன் சொல்லும் காரணங்கள் பெரும்பாலும் பொய்யாக இருக்கும். அது நிஜமல்ல என்றாலும் அவன் சொல்லும் பொய்யை உண்மை என்று அந்தக் கணத்தில் நினைப்பதில் ஒரு தனிசுகம். இந்த விசயத்தில் எல்லா பெண்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். அவளும் கேட்டாள். ஆனால் அவன் பொய் சொல்லவில்லை. உண்மையை எந்த ஆடைகளும் அணிந்து போர்த்தாமல் நிர்வாணமாக சொன்னான். நான் பார்த்ததில் நீ தான் ரொம்பவும் சாதரணமா இருந்தே. ரொம்ப சிம்பிளா இருந்தே. படிச்சிருக்கே.. இதெல்லாம் காரணங்கள் என்றாலும் இது எல்லாவற்றையும் விட நிதர்சனமான காரணம்.. சாதாரணமான லுக் இருக்கிற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிற ஆம்பிளை பயப்பட வேண்டாம்.. நிம்மதியா இருக்கலாம்.. னு சொல்லிட்டு அவளைத் தன்பக்கம் இழுத்தான். அவன் இழுத்தவுடன் தன்னிடம் அவனை இழுத்து அணைக்கும் அவள் கைகள் ஒடிந்து போனது. அவள் கைகள் தனியாக கால்கள் தனியாக முண்டம் தனியாக முலைகள் தனியாக அங்கங்கே சிதறிக்கிடக்கும் படுக்கையில் சுருக்குப்பையைக் கிழித்து நுழையும் கத்தியின் காயத்தில் ஒவ்வொரு நாளிரவும் கழிந்தது. அவனுடைய இரு குழந்தைகளையும் பெற்று வளர்த்தாகிவிட்டது. அவளுக்கு நேரம் போவதற்காக டிடிபி வேலை செய்தாள். வீட்டில் இருந்து கொண்டே செய்வதால் கணவன் ஒன்றும் சொல்லவில்லை, ஆனால் அவனுடைய கணினியையோ லேப்டாப்பையோ பயன்படுத்தக் கூடாது. என்ன காரணம் கொண்டும் அவனுக்கு விடுமுறை நாட்களில் அவள் அந்த வேலைகளைச் செய்யக் கூடாது. தொழில்துறை கணினித் துறை சம்பந்தப்பட்ட புத்தகங்களை டிடிபி செய்வதில் அவளுக்கு நல்ல பெயர் கிடைத்தது. எல்லா புத்தகங்களிலும் எழுதியவர்கள் தன்னுரையில் அவளுக்கு நன்றி சொன்னார்கள். பக்கத்திற்கு 50 முதல் 100 வரை கூட அவளுக்கு வருவாய் வந்தது. இந்தப் பணம் அவளுடையது. அவள் விரும்பியபடி அதைச் செலவு செய்யலாம். அப்படி நினைத்து தான் அவ்வை முதியோர் இல்லத்திற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்திருந்தாள். அந்த ரசீதை அப்படியே ஹாலில் இருந்தது, அதைப் பார்த்துவிட்ட அவள் கணவன் அதை விரும்பவில்லை என்பது அவன் கடுகடுப்பான முகத்தைப் பார்த்தே அவளுக்குத் தெரிந்தது. இதைப் பற்றி பேசினால் தானே வம்பு.. அமைதியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள். * சில முதலையினங்கள் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகின்றன. பாம்பு மற்றும் பூனை வகைகள் துணையைத் துன்புறுத்தி இன்பமடைகின்றன. தவளைகள் கூட்டுக் கலவியில் ஈடுபடுகின்றன. * அவளுக்கு வயது 29 அவள் தெரிவை. வீட்டுக்கு வேலையை எடுத்துக் கொண்டு வரும் நண்பர் vx டம் பொறுக்க முடியாமல் சொல்லி அழுதிருக்கிறாள். அவர் தான் அவளுக்கு ஆறுதலாக இருந்திருக்கிறார். எப்போதாவது அந்த நண்பருடன் வெளியில் போய்வருவாள். நிறைய புத்தகம் படிப்பவர். நல்ல பதிப்பாசிரியர். அவருக்கு நிறைய எழுத்தாளர்களை பேராசிரியர்களைத் தெரிந்திருந்தது. அடிக்கடி அவளிடம் சொல்லுவார். 'நீயும் உன்கதையை எழுதேன்' என்று. Men are taught to apologize for their weaknesses, women for their strengths.(Lois Wyse) என்று அவர் சொல்லியதைப் பல நாட்கள் நினைத்து பார்த்திருக்கிறாள். எவ்வளவு சரியான வார்த்தைகள். Men define intelligence, men define usefulness, men tell us what is beautiful, men even tell us what is womanly. என்று ~Sally Kempton சொன்னதைச் சொல்லி ஆக்ஸ்போர்ட் அகராதி முதல் ஹாலிவுட் படங்கள் வரை பெண் எப்படி சித்தரிக்க்பட்டிருக்கிறாள், அவளுக்கான இடம் என்ன, இதை எல்லாம் சொல்வதும் எழுதுவதும் தீர்மானிப்பதும் யார் என்றெல்லாம் நிறைய பேசிக்கொண்டு வந்தார். அவர் பேச பேச அவளுக்கு அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது. அடிக்கடி நண்பரின் நினைப்பு வந்தது. இதைச் சொன்னால் நண்பர் அதற்கு என்ன பதில் சொல்வார் என்பதை நினைப்பதும் தான் நினைத்தது சரிதானா என்று அவரிடம் அதைக் கேட்டு அவர் சொல்வதை வைத்து டிக் அடித்துக் கொள்வதும்.. எல்லா நேரங்களிலும் அவர் நினைவு தன்னை ஆக்கிரமித்திருந்ததை அவள் உணர்ந்து கொண்டாள். அப்படித்தான் ஒரு நாளிரவு.. கணவன் அருகில் வரவும் அவளுக்கு அப்போதும் அவர் சொன்ன வரிகள் நினைவுக்கு வந்து சிரிப்பு வந்துவிட்டது. "பாலுறவில் ஈடுபடும் கழுதையைத் தடுத்தால், அதற்கு வெறி வந்துவிடும். வெறி பிடிதத ஆண் கழுதை கடித்து உயிரிழந்தவர்கள் ஏராளம்." மங்கிய வெளிச்சத்தில் அவளைச் சுற்றி அவர் பேசிய சொற்களின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக அவளைத் தீண்டியது. அந்த அணைப்பில் அந்தக் கைகளில் அந்த முகத்தில் அந்தப் பெருமூச்சில் அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றாய் வந்து உட்கார்ந்து கொண்டன. அவள் கண்களை மூடிக் கொண்டாள். திறந்து நிசத்தைப் பார்க்க அவளுக்கு விருப்பமில்லை. அவளுக்கு இந்த நினைப்பு பிடித்திருந்தது. சுகமான அனுபவமாக இருந்தது. எனோ எந்தக் குற்ற உணர்வுமில்லை. மனசுக்கு நிறைவாக இருந்தது. தான் ரசிக்கும் ஒருவரிடம் தான் விரும்பும் ஒருவரிடம் தன்னை ரசிக்கும் ஒருவரிடம் தன்னை விரும்பும் ஒருவரிடம் தன் உடலை மட்டும் விலக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னது யார்? அன்று புதிதாகப் பிறந்தது போலிருந்தது. மீண்டும் தன்னைக் கண்ணாடியில் பார்த்து ரசித்துக் கொண்டாள். *அவளுக்கு வயது 45 அவள் பேரிளம்பெண். * தேள் மற்றும் சிலந்தி இனங்களில் ஆணும் பெண்ணும் மிகுந்த நேரம் காதல் விளையாட்டுகளில் ஈடுபடும். பாலுறவில் ஈடுபட்டு விந்து வெளிப்பட்டவுடன் கர்ப்பம் தரித்த பெண் தேளும், சிலந்தியும் செய்யும் முதல் வேலை, தன்னுடன் காதலில் ஈடுபட்ட ஆணைக் கொன்று சாப்பிடுவதுதான். * குழுந்தைகள் வளர்ந்து விட்டார்கள். அவளுக்கு அவள் நண்பர் மூலம் நிறைய நிறைய ஆர்டர் கிடைத்தது. நண்பருடன் இருக்கும் நாட்களும் பொழுதும் அதிகமாக இருந்தது. இரு குடும்பங்களும் அடிக்கடி ஒருவர் வீட்டுக்கு ஒருவர் வரப் போக இருந்தார்கள். அன்று நண்பருடன் அவள் டாக்ஸியில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள். என்னவோ தெரியவில்லை. அவர் அவளுக்கு மிகவும் நெருக்கமாக அமர்ந்திருந்த மாதிரி இருந்தது. சரி அதனால் என்ன.. கண்ணை மூடிக் கொண்டு அவரைக் கட்டி அணைத்துவிட்டு இப்போ எதற்கு இப்படிப் பாசாங்கு செய்ய வேண்டும் என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். அவர் சாதாரணமாக அவள் தொடையில் கை வைத்துக் கொண்டார். காற்றில் பறந்த அவள் தலைமுடியை அவர் பின்பக்கமாக ஒதுக்கினார், அவர் கைகள் அவள் கழுத்தைத் தடவியது. கழுத்துப் பகுதியில் தான் உணர்வு நரம்புகளின் முடிச்சுகள் இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அவள் உடல் சிலிர்த்துக் கொண்டது. அவள் கண்களை மூடிக் கொண்டாள். அவர் தன் கைகளை பின்பக்கமாக நீட்டி அவள் தோள்களை அணைத்துக் கொண்டார். அவளுக்கு இப்பொது அழுகை வரும்போலிருந்தது. அப்படியே அவர் மார்பில் முகம் புதைத்து அழ வேண்டும் போலிருந்தது. தனக்கு என்னவாகிவிட்டது? தொண்டை வறண்டு போனது. அவள் இருப்பிடம் வந்துவிட்டது. டாக்ஸிக்காரன் மீட்டருக்கு அதிகமாகக் கேட்டுக்கொண்டிருந்தான். சரிதான் போயிட்டுப் போறான்.. "ஆஜ் தோ பூரா வசூல் கியா" என்று சொல்லிக்கொண்டே அவர் அவள் பின்னால் வந்தார். அவளுக்கு நடைத் தள்ளாடியது. எட்டாவது மாடி. லிப்டுக்குள் நுழைந்தவுடன் இரும்புக்கதவு பூட்டிக் கொண்டது. அவர் சொன்ன வார்த்தைகள் அவளைச் சுற்றி சுற்றி வந்தன. அன்று வீட்டில் யாருமில்லை. அவருடன் தனியாக கழிக்கப்போகும் இந்த நாளுக்காக அவள் வெட்கமின்றி காத்திருந்தது உண்மை. அவள் மீதே அவளுக்கு வெறுப்பு வந்தது. கதவைத் திறந்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள். அவரும் வழக்கம் போல ஹாலில் வந்து உட்கார்ந்தார். இருவருக்கும் சேர்த்து சூடாக டீ போட்டாள். கிச்சனில் நுழைந்தவரிடம் என்ன அப்படி புதிதாகப் பார்க்கிறீர்கள்? என்று கேட்டு வைத்தாள். வாருங்களேன் காற்றாட திறந்த பால்கனியில் உட்கார்ந்து டீ சாப்பிடலாம் என்று அழைத்தாள். அவரும் முகத்தைக் கழுவிவிட்டு அவளுடன் சேர்ந்து திறந்துவெளி பால்கனியில் உட்கார்ந்தார். யு வடிவத்தில் உட்காருவதற்கு ஏற்ற மாதிரி கட்டிவிடப்பட்டிருக்கும் பால்கனி சுவர்.. இழுத்து பூட்டிக் கொள்ள வசதியாக இரும்பு கம்பிகள். செடிகள். இரும்புக் கம்பிகளை விலக்கி வைத்து வசதியாக இருவரும் பால்கனி சுவரில் உட்கார்ந்து கொண்டார்கள். அவள் மெதுவாக அவர் கைகளைப் பிடித்துக் கொண்டாள். அவள் பிடி இறுகியது. மறுநாள்.. இது தற்கொலை அல்ல, கொலை முயற்சியுமல்ல.. கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து.. பால்கனியிலிருந்து தவறி விழுந்துவிட்டார்கள் என்று அவர்கள் இருவரின் முடிவைப் பற்றி பத்திரிகைகளும் டிவிக்காரார்களும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். * பிரத்தியங்கரா தேவியை வழிபட்டால் பிரச்சனைகளிலிருந்து விடுபடும் வாய்ப்பு கிடைக்கும்.* --------------------------------------------------------------------- .... நன்றி: விலங்குகளின் பாலுறவு குறித்து மருத்துவர் டி.காமராஜ் குறிப்புகள் & வயது அடிப்படையில் பெண்களை ஏழு வகைப் படுத்தும் பெருங்கதை யுகமாயினி பிப்.2010 இதழில் வெளிவந்திருக்கும் கதை

Wednesday, February 3, 2010

முள்வேலி





காதல் புனிதம்
கற்பு தெய்வீகம்
தாய்மை பெண்மை என
கூர்மழுங்காத ஆயுதங்களால்
கைப்பற்றப்பட்ட
விளைநிலத்தில்
புதைந்து கிடக்கிறது
காலத்தின் கண்ணிவெடி.
வெடித்தால்
விளைநிலம் தரிசாகலாம்
பயமுறுத்துகிறது
வெள்ளை உடையில் வரும்
தேவைதைகள் கூட்டம்.
தேவதைகள் அறிந்ததில்லை
முள்வேலிகளின் பசியை.

Saturday, January 30, 2010

என் பசி




என் பசி
----------------> மராத்திய மொழிக்கவிதை


ஒத்துக்கொள்கிறேன்
நான் உன் அடிமை என்பதை.

உணர்ந்து கொண்டேன்
இழந்துப்போன
என் உரிமைகளை.

நானே வலிய வந்து
ஏற்றுக்கொண்டு விட்டேன்
-என் சுதந்திரம்
பறிக்கப்பட்டதை-

என்னைக் கட்டிப்போட்டிருக்கும்
சங்கிலியின் மறுமுனை
உன் வசம்.
நீ ஆட்டுகிறாய்
என்னை ஆட்டுவிக்கிறாய்
காட்சிப்படுத்துகிறாய்.
என்னைக்
காட்சிப்பொருளாக்கும்
கண்காட்சிகளை
என் சம்மதத்துடனேயே
அரங்கேற்றுகிறாய்.

என்னை விடுவிக்க
என் மீது கொண்ட
அபரிதமான உன் காதலால்கூட
என் கட்டுகளை அவிழ்க்கும்
நாட்களைப் பற்றி
பேசாதே.

உன் வாசலுக்கு வெளியே
என்னைக் கட்டிப்போடும்
காலச்சங்கிலிகள்
சிறைவைக்கும் சிறைக்கூடுகள்
காத்திருக்கும்
சிவந்த சவுக்கள்


கெட்டுப்போன
எச்சில் பருக்கையை
என் தட்டில் பரிமாற
காத்திருக்கும்
ராட்சதக்கைகள்

என்ன செய்யட்டும்
இருந்துவிட்டுப் போகிறேன்
உனக்கு
உனக்கு மட்டுமேயான
அடிமையாக.

களைத்துப் போய்விட்டேன்.
கண்டவர்கள்
கால்களை எல்லாம்
நக்கி நக்கி
வறண்டு போய்விட்டது
என் நாக்குகள்.
அதில் பிறக்கும்
என் வார்த்தைகள்
வலிமை குன்றிவிட்டன
எழுந்து நிற்க முடியாமல்
சரிந்து விழுகின்றன.
பற்களுடன் உரசியப்பின்னும்
என் நாக்குகளுக்கு
கிடைக்கவில்லை
வார்த்தைகளின்
ஒலிச்சுவடு.

என் உதடுகளைப்
பற்றிக்கொள்ள துடிக்கும்
வார்த்தைகள்
எல்லா இடங்களிலும்
பலகீனமாய் எதிரொலிக்கின்றன.

எதுவும் மிச்சமில்லை
என்வசம் இப்போது.
கண்களில்
தென்படும் கடைசி
எதிர்பார்ப்பைத்தவிர:

உன் தட்டில்
எஞ்சி இருக்கும்
கடைசிப் பருக்கையை
தருவாயா
என் பசித்தீர்க்க?

---- (மராத்திய பெண்கவிஞர் கவிதா மகாஜன் (Kavita Mahajan)
கவிதை நூல் "தத்புருஷ் " ல் எழுதியிருக்கும் பசி என்ற கவிதையின்
தமிழாக்கம்.)

Monday, January 18, 2010

மராத்தி எழுத்தாளர் அர்ஜூன் டாங்ளேயுடன் நேர்காணல்




கலகக்குரலாக கவிதை எழுதுவது மட்டுமே எந்தப் பிரச்சனையையும் தீர்த்துவிடாது
-----------------------------------------------------------------------------
(நன்றி: புதுவிசை - டிச 2009)

மகாராஷ்டிரா மாநிலத்தின் அரசியலிலும் இலக்கியத்திலும் குறிப்பிடத்தக்க ஆளுமை அர்ஜூன் டாங்ளே 1945 ல் மும்பையில் பிறந்தவர். மும்பை பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டதாரி. நாடு தழுவிய அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கிய தலித் சிறுத்தைகள் ( தலித் பேந்தர் ) அமைப்பின் நிறுவனத்தலைவர்களில் ஒருவர். தற்போது பாரதீய குடியரசுக் கட்சியின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர். இவரது நூல்கள்:

Chhavani Halte Ahe- போர்க்குற்றத்தின் பயணம் -கவிதைகள் ( 1978 ல் மாநில அரசின் விருதினைப் பெற்றது )

Hi Bandhavarchi Manse - ஏ... உறவுகளே... - சிறுகதைகள்

Dalit Sahitya, Ek Abhyas- தலித் சமூகத்திற்கு ஒரு பாடம் , விமர்சனம்

Dalit vidroha- - தலித்துகளின் எதிரி, இலக்கியம் மற்றும் அரசியல்சார் கட்டுரைத் தொகுப்பு

அர்ஜூன் டாங்ளே, தனது ஆக்கங்களை வெளியிட்டுக் கொள்வதை விடவும், தலித் இலக்கியத்தை உலகளாவிய வாசிப்புக்குகொண்டு செல்ல வேண்டும் என்பதில்தான் கூடுதல் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதனாலேயே அவர், மராத்திய தலித்ஆக்கங்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து தொகுப்புகளாக பதிப்பித்து வருகிறார். டாங்ளே மொழிபெயர்த்து தொகுப்பாசிரியராயிருந்து வெளியிட்ட நூல்கள்:

A Corpse In The Well : (translations From Modern Marathi Dalit Autobiographies) 1992

No Entry For The New Sun: Translations From Modern Marathi Dalit Poetry

Homeless In My Land: Translations From Modern Marathi Dalit Short Stories

Poisoned Bread: Translations From Modern Marathi Dalit Literature

மும்பையில் வசிக்கும் தோழர் புதியமாதவி அவர்கள், புதுவிசைக்காக திரு அர்ஜுன் டாங்ளே அவர்களைச் சந்தித்து உரையாடியதிலிருந்து இந்நேர்காணல் தொகுக்கப்பட்டுள்ளது.

1.

உங்கள் எழுத்துகள் எங்கள் தமிழுலகத்துக்கு ஏற்கனவே அறிமுகமானவை. குறிப்பாக தலித் இலக்கிய வட்டாரத்தில்உங்களை அறியாதவர்கள் இருக்கவே முடியாது. நாங்கள் அறியாத உங்கள் இளமைக் காலம் பற்றி அறியவிரும்புகிறோம்.

அர்ஜூன் டாங்ளே: நம்ம தாராவி அருகிலிருக்கும் மாதுங்கா லேபர் கேம்ப் பகுதியில்தான் நாங்கள் குடியிருந்தோம். என் அப்பாகாட்டன் மில்லில் வேலை செய்தார். 15.6.1945 ல் நான் பிறந்தேன். நாங்கள் 6 பேர் அண்ணன் தம்பிகள். தாராவி சால்களில் எனக்குநண்பர்கள் உண்டு. மும்பை துறை முகத்தில் வேலை செய்துகொண்டே நான் மர்ஸி தயாநந்த் கல்லூரியில் முதுகலை படித்தேன்.காலையில் கல்லூரி. 11 மணிக்கு மேல் வேலை. இதற்கிடையில் கவிதை, கதை என்று எழுத ஆரம்பித்தேன். என் தாய்வழி மாமாசங்கர் நாராயண் பவார் பொதுவுடமை இயக்கத்தில் இருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் தான் மும்பையில் பாபாசாகிப் அம்பேத்கரின்போராட்டங்களும் இயக்கமும் செயல்பட்டுக் கொண்டிருந்தன. இந்த இரண்டு இயக்கங்களின் தாக்கங்களுடன் தான் என்இளமைக்காலம்.

ஆனால் பொதுவுடமை இயக்கமும் அம்பேத்கரிய இயக்கமும் ஒன்றுக்கொன்று எதிரெதிரானதாகத்தானேநிறுத்தப்படுகிறது? இரண்டுக்குமிடையே உள்ளது பகைமுரணா ? நட்பு முரணா?

இரு இயக்கங்களும் ஒன்றுக்கொன்று எதிரணியில் நிற்ப தாகச் சொல்லப்படும் கருத்துகளுடன் எனக்கு உடன் பாடில்லை. 1936ல்பாபாசாகிப் அம்பேத்கர் உழைப்பாளர் விடுதலை இயக்கத்தை (Independence labour party) ஆரம் பித்தபோது அந்த இயக்கத்தின்அடையாளமாக இருந்தது சிவப்புக்கொடிதான். மட்டுமல்ல,1938 வாக்கில் நிலமற்ற கூலிவிவசாயப் பெருமக்களை ஒன்றிணைத்துஅவர் நடத்திய பேரணியிலும், கருப்புச்சட்டத்தை (Black act) எதிர்த்து நடந்த போராட்டங்களிலும் பெரும்பான்மையான கம்யூனிஸ்ட்தோழர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். தொழிற்சாலைகளை, அங்காடிகளை அதன் உரிமையாளர்கள் எவ்விதமான முன்னறிவிப்போ காரணமோ இன்றி இழுத்து மூடுவதை அங்கீகரித்த சட்டம்தான் கருப்புச்சட்டம். அதை எதிர்த்து நடந்த போராட்டங்களில்டாங்கே, விவேஷ்கர், ஜம்னாதாஸ் போன்ற தோழர்களும் பிரிட்டிஷ் பிரட்லியும் கலந்துகொண்ட வரலாற்றை அறிந்தவர் எவரும்இரண்டு இயக்கங்களும் எதிரணியில் நிற்பதாகக் கருதுவதில்லை.

இந்தியச் சமூகச்சூழலில் சாதிப்படிநிலை ஒழியாமல் சமத்து வம் சாத்தியமில்லை என்ற கருத்தை உள்வாங்கிக்கொள்ளகம்யூனிஸ்டுகள் சற்று காலம் எடுத்துக்கொண்டார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் பல்வேறு இக்கட்டானகாலக்கட்டங்களில் இரு இயக்கங்களும் இணைந்தே செயல்பட்டிருக்கின்றன. 1957ல் மும்பை மாநகரை மொழிவழிமாகாணப்பிரிவின் அடிப்படையில் மராத்திய மாநிலத்துடன் இணைக்க நடந்த போராட்டங்களில் "ஒன்றுபட்ட மராட்டியம்" (united maharashtra) அமைப் பில் குடியரசுக் கட்சியும் அங்கம் வகித்திருந்தது. 17 சட்ட சபை உறுப்பினர்களும் 7 நாடாளுமன்றஉறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள். பிரகாஷ் அம்பேத்கருடன் இணைந்து நாங்கள் ஆரம்பித்த 'பகுஜன் தலித் சமித்சமிக்தி' நிலவுரிமைக்காக நிறைய போராட்டங்களை நடத்தியது. 2009ல் இங்கு நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் 3வது அணியின்பெயர் RLDF - Republican left democratic front. அம்பேத்கரிசம் Vs கம்யூனிசம் என்று அடிக்கடி நடக்கும் வாதங்கள் இரண்டுகருத்துருவாக்கங்களை எதிரணியில் நிறுத்தாமல் இணைகோட்டில் நிறுத்தும் வாதங்களாகவே கருதுகிறேன். சொற்பமான சிலர்வரலாறு அறியாமல் இரண்டையும் எதிரணிகளாக கருதி வாதிடுவதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

சி.பி.எம் தோழர்கள் இன்று அம்பேத்கரின் கருத்துகளை அதிகமாக அறிந்துகொள்ள விரும்புவதை நானறிவேன். அவர்கள் நடத்தும்இயக்கம் சார்ந்த இதழ்களில்கூட அம்பேத்கரின் புகைப்படம் அட்டைப்படமாக வர ஆரம்பித்துவிட்டது. பத்திரிகையாளர் மதுஷேட்டேபோன்றவர்கள் லெனின் எழு திய அரசும் புரட்சியும் புத்தகத்தையும் அம்பேத்கர் எழுதிய anihalation of caste புத்தகத்தையும் இவ்விருஇயக்கத்தாரும் கட் டாயம் வாசிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். இரு இயக்கங்கள் சார்ந்த போராட்டக் களப்பணி இன்றுநீர்த்துப் போயிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உங்கள் தந்தையார் காட்டன் மில்லில் வேலை பார்த்ததை நீங்கள் சொன்னதும் இன்னொரு செய்தியும் நினைவுக்கு வருகிறது. இந்த மில் தொழில்வளர்ச்சி மும்பையில் ஏற்பட்டதால் மராத்திய தலித்துகளின் வாழ்க்கையில் மிகப்பெரியமாற்றம் ஏற்பட்டது என்று சொல்லலாமா?

உண்மைதான். கிராமங்களில் நிலமற்றவர்கள் நாங்கள். பண்ணையார்களுக்கு அடிமைகள். எங்கள் உழைப்புக்கு கூலி கேட்கும்உரிமை எங்களுக்கு கிடையாது. ஆனால் இந்த தொழில் வளர்ச்சி இந்த பண்ணை அடிமைகளுக்கு தொழிலா ளர் என்ற புதியமுகத்தைக் கொடுத்தது. எங்கள் உழைப்புக் கான ஊதியம் கிடைத்தது. உரிமைகளைக் கேட்பது தவறல்ல என்ற அடிப்படை உணர்வைரொம்பவும் சாதாரண எழுதப் படிக்கத் தெரியாத அனைவரும் புரிந்துகொண்டோம். எங்கள் தலைமுறையின் கல்விக்கு இந்தத்தொழில் வளர்ச்சி உதவி யது. மட்டுமல்ல. 60களில் நாராயண் சுர்வேயின் கவிதைகள்- தொழிலாளர் பிரச்னைகளை முன்வைத்துவெளிவந்தன. பாபுராவ் பாகுல் சிறுகதைத் தொகுப்பு - 'நான் என் சாதியை மறைத்தபோது' - 'jevha mi jaat chorli hoti' வெளிவந்தது. அந்தப்பத்து சிறுகதைகளையும் பத்துதடவை - மின்சாரம் தாக்கியது - ten electric shocks -என்று சொன்னார்கள்.

இந்த மில்களில் அப்போது நிலவிய தீண்டாமைக் கொடுமைகள் குறித்து தொழிற்சங்கங்களின் அணுகுமுறை என்னவாக இருந்தது?

அன்றைக்கு காட்டன்மில்களில் சாதியப்பாகுபாடு இருக்கத் தான் செய்தது. மில் தொழிலாளர்களின் யூனியன்களிலும் தீண்டாமைகடைப்பிடிக்கப்பட்டது என்பதை மறுப்பதற் கில்லை. அன்றைக்கு யூனியன் ஆபிஸ்களில் கயிறு/ரிப்பன் அல்லது நூல்களால்கோர்க்கப்பட்டிருக்கும் கோப்புகள் அல்லது காகிதங்களை பல்நுனியால் கடித்து அவிழ்ப்பார்கள். அப்படி பல்லால் கடிக்கும் குறிப்பிட்டஅந்த வேலைக்கு தலித்துகளை யூனியன் ஆபிஸ்களில் நியமிப்பதில்லை. தலித் எச்சில் பட்ட காகிதத்தைத் தொடுவது யூனியன்தலைவர்களைத் தீட்டுப்படுத்திவிடும் என்பதுதானே காரணமாக இருக்கக் கூடும்! இன்றும்கூட களப்பணியாளர்களிடம் சாதியம்காப்பாற்றப் பட்டுக் கொண்டுதானிருக்கிறது. மேதாபட்கரின் போராட் டங்களில் பங்கேற்றபோது கண்கூடாகக் கண்டேன்.களப்பணியிலும் சாலைப்போராட்டங்களிலும் கலந்து நின்றவர்கள் சாப்பிடும்போது தனித்தனியாகப் பிரிந்து நின்றார்கள். தமிழ்நாட்டில்கூட இரட்டைக்குவளை முறை இன்றும் கிராமங் களில் இருப்பதாக வாசித்திருக்கிறேன். அதுபோலத்தான் இதுவும்.மேதாபட்கரிடம் இதுபற்றி கேட்டபோது 'this is not my problem' என்று சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன்.

போராட்டக்களத்திலேயே சாதியம் இருக்கிறது தீண்டாமை நிலவுகிறது என்றால் மற்ற இடங்களைப் பற்றி சொல்வதற்கு என்னஇருக்கிறது? தலித்துகளுக்காக குரல் கொடுக்கிறார் கள் என்பதைவிட தலித்துகளுக்கு உதவி செய்வதை தொண்டுமனப்பான்மையுடன் - ஒரு charity அமைப்பு போல -நடந்து கொள்வதாகவே கருதுகிறேன். காங்கிரசாகட் டும் காந்தியாகட்டும்இன்றைய மேதாபட்கராகட்டும் இந்த விசயத்தில் ஒரேமாதிரியான மனப்பான்மையுடன்தான் இருந்தார்கள்/இருக்கிறார்கள்.

கல்வி நகரமயம் தொழில்மயம் போன்றவற்றால் சாதி ஒழிந்துவிடும் என்று சில அறிவுஜீவிகள் சொல்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அன்றுபோல கண்டால் தீட்டு, தொட்டால் தீட்டு என்பதெல்லாம் மும்பை போன்ற மாநகர வாழ்க்கையில் ஜனநெரிசலில்மிதிபட்டுவிட்டது. இதை மட்டும் ஒரு மாற்றமாக கருத லாமே தவிர சாதியம் செத்துவிட்டது என்று சொல்வதற் கில்லை. லோக்கல்டிரெயினில் அருகருகே உட்கார்ந்து இன்று எல்லோரும் பயணம் செய்தாலும் பயணம் செய்கிற ஒவ்வொருவரின் அடிமனசிலும் சாதிவாழ்ந்து கொண்டு தானிருக்கிறது. கிராமத்தில் பண்ணையாருக்கு அடிமையாக வாழ்ந்த தலித், நகரவாழ்வில் குடிசைப்பகுதியில்வாழ்ந்தா லும் தினமும் சாலையோரத்தில் குப்பைகளை/ தாள்களை/ ப்ளாஸ்டிக்குகளைப் பொறுக்கிக்கொண்டு ஜீவனம் செய்தா லும்அவன் இங்கே எந்தப் பண்ணையாருக்கும் அடிமை யில்லை! மேலும் தனியார் நிறுவனங்களில் மட்டுமே வேலைவாய்ப்புகள்இருப்பதால் தலித்துகள் மற்றவர்களுடன் சேர்ந்து தன்னைத் தகவமைத்துக்கொண்டு வேலை வாய்ப்புகளை வசப்படுத்திக்கொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே ரிசர்வேஷன் காரணமாக இவன் இந்த வேலைக்கு வர முடிந்தது என்று சொல்லும்காரணங்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.

அடிமட்ட நிலை யில் தலித்துகளுக்கு இதனால் ஏற்பட்டிருக்கும் பாதகங்கள் அதிகம் என்பது உண்மைதான் எனினும் மும்பைபோன்ற மாநகர வாழ்க்கையில் சாதியம் தன் முகத்தையும் வேஷத்தையும் மாற்றிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.அதனால்தான் கிராமத்தை நோக்கிப் பயணம் செய்ய காந்தி போன்றவர்கள் சொன்னபோது பாபாசாகிப் கிராமத்தை விட்டு நகரத்தைநோக்கிய வாழ்க்கைப் பயணத்தை முன்னிறுத்தினார். இப்படியாக வெளிப்படையாக சாதியம் மும்பை மாதிரி மாநகரத்தில்தெரிவதில்லை என்பதாலேயே சாதியம் இல்லை, தீண்டாமை இல்லை என்று சொல்வதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாக அமையும். இங்கே இன்றும் திருமணவீட்டிலும் இழவுவீட்டிலும் சாதி அதற் கான முகம் மாறாமல் அப்படியேவாழ்ந்துகொண்டிருப் பதை நாமறிவோம். நம்முடைய குடியிருப்புகளில் கூட தலித்துகளில் பலர் தன் தலித்திய அடையாளத்தைமறைத்துக்கொண்டு ஏன் வாழ்கிறார்கள்? நகர வாழ்க்கையில் சாதி இல்லை என்றால் அப்படி மறைத்துக்கொண்டு வாழ வேண்டியஅவசியம் என்ன?

காட்கோபரில் (மும்பை புறநகர் பகுதி ) அம்பேத்கரின் சிலை அவமதிக்கப்பட்டதும் அப்போது நடந்தப் போராட்டங் களையும்நினைத்துப் பாருங்கள். மேதாபட்கரின் பேரணி களில் களப்போராட்டத் தளத்தில் நிலவும் சாதியம் குறித்து சொன்னதையும்யோசித்துப் பாருங்கள். எனவே சாதியம் செத்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. இதைவிடுத்து இன்றைக்கு கிராமப்புறங்களில்சாதிச் சண்டைகள் தீவிரமாகி இருக்கின்றன. தலித்துகளுக்கு ஏற்பட்டிருக்கும் விழிப்பு ணர்வு ஆதிக்கச்சாதியினரைஎரிச்சலூட்டுகிறது. பீகார், உத்திர பிரதேச மாநிலங்களில் மிகஅதிகமாக சாதிக் கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள் அவரது நோக்கங்களைப் பழுதற உள்வாங்கி செயல்படுகின்றனவா?

பார்லிமெண்டெரி டெமாக்ரசியில் அமைப்புரீதியாக அம்பேத்கரின் கருத்துகளை முன்னிறுத்தி அனைத்திந்திய அளவில் செயல்படும்ஓரமைப்பு தலித்துகளுக்கு இல்லை என்பதாலும் இருக்கிற தலித்திய அமைப்புகள் மாநில அளவில் மட்டுமே இருப்பதாலும்பெரும்பாலும் தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகளுடன் சேர்ந்தே அரசியல் தளத்தில் நிற்பதாலும் அம்பேத்கரின்கருத்துருவாக்கங்களை இந்த இயக்கங்கள் முழுமையாக உள்வாங்கிக்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை நீங்கள் வைப்பதாகஎண்ணுகிறேன். ஆனால் அம்பேத்கரின் கருத்துகள் இந்தியா முழுவதும் பரவி இருப்பதும் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும்அவருடைய நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு அந்தந்த மாநி லங்களில் விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதையும் அமைப்பு கள்போராட்டங்கள் இயக்கங்களுக்கும் அப்பாற்பட்டு நடந்த ஒரு மிகப்பெரிய புரட்சியாகவே நினைக்கிறேன்.

50, 60 வருடங்களுக்கு முன் 1924 வாக்கில் காலில் செருப்பு போட அனுமதி மறுக்கப்பட்டவன் காலடியில் விரைந்து ஓடும் காரின்ஆக்ஸிலேட்டர் வந்துவிட்டதை மிகப்பெரிய மாற்றமாகவே நினைக்கிறேன். இந்த மாற்றங்களுக்கு அடித்தளமாக இருந்ததுஅம்பேத்கரின் ஜடியாலஜிதான். அமைப்புரீதியாக அம்பேத்கரின் இயக்கங்களுக்கு மட்டு மல்ல, கம்யூனிச இயக்கங்கள் எந்தளவுக்குமார்க்சியத்தை உள்வாங்கிக்கொண்டு செயல்படுகின்றன? காந்தியத்தை ஏற்றுக்கொண்ட காங்கிரசு எங்கே இருக்கிறது?

அம்பேத்கரின் சிந்தனை செயலூக்கத்துடன் நின்று செயலாற்றிய காலம் என்று எதை மதிப்பீடு செய்கிறீர்கள்?

1957 முதல் 1965 வரை அரசியல் களத்தில் செயலூக்கத்துடன் இருந்தக் காலம். நிலமற்றவர்களுக்கு வாழ்வாதாரமாக நிலம் வேண்டிநடந்தப் போராட்டத்தில் சற்றொப்ப 3,87,000 பேர் சிறை சென்றார்கள். அரசு அம்பேத்கரிஸ்டுகளின் போராட் டங்களைக் கண்டுஅச்சப்பட்டது. அக்காலத்தில்தான் உ.பி. யில் ரிபப்ளிகன் பார்ட்டியைச் சார்ந்த 3 பேர் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 1972முதல் 1975வரை மராட்டி யத்தில் தலித் பேந்தர்களின் காலம். அப்போது தலித் அல்லாத ஒத்த சிந்தனையாளர்களும் எங்களுடன்சேர்ந்து பணியாற் றினார்கள். கலை இலக்கியத் தளத்தில் அம்பேத்கரின் சிந்தனை செயலூக்கத்துடன் எப்போதும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இந்தியா முழுமையும் இந்த அலை கலை இலக்கியத் தளத்தில் தொடர்வதைத்தான் மிகவும் பெருமையும்மகிழ்ச்சியும் தரும் விசயமாக கருதுகிறேன்.

இந்தியக்குடியரசுக் கட்சி இருக்கும்போது 9.7.1972ல் நீங்கள் தனியாக தலித் சிறுத்தைகள் அமைப்பை ஏற்படுத்த என்ன காரணம்?

அமெரிக்காவின் கறுப்பின விடுதலையும் கறுப்பு இலக்கிய மும் என்போன்ற இளைஞர்களுக்கு அதுபோன்ற ஓர் அமைப்பைஉருவாக்கி நிறைய சாதிக்கவேண்டும் என்ற வெறியை ஏற்படுத்தி இருந்த காலக்கட்டம். கலகக்குரலாக கவிதை எழுதுவது மட்டும்இந்தச் சமூகத்தின் எந்தப் பிரச்னையையும் தீர்த்துவிடாது என்பதையும் உணர்ந்தோம். அப்போதுதான் நான்,என்னுடன் நாம்தேவ்தசல், ஜே.வி பவார் சேர்ந்து தலித் சிறுத்தைகள் அமைப்பை ஆரம்பித்தோம். குடியரசுக் கட்சியின் ஒரு மந்தமான செயல்பாடு எங்கள்வேகத்திற்கு அன்று ஈடுகொடுக்க முடியவில்லை. அதுவும் ஒரு காரணம்.

அவ்வளவு வேகத்துடன் ஆரம்பிக்கப்பட்ட தலித் சிறுத்தைகள் அமைப்பு ஆரம்பித்த வேகத்திலேயே 1978ல் முடிந்துபோனது ஏன்? உங்கள் அமைப்பில் அப்படி என்ன பிரச்சனை ஏற்பட்டது? அதைத் தவிர்த்திருக்க லாம் என்று நீங்கள்எப்போதாவது நினைத்தது உண்டா?

ரொம்ப பெரிதாக எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. சின்ன கருத்தியல் முரண்பாடுகள்தான் காரணம். மூன்று விதமான குரல்கள்ஒலித்தன. ஒன்று மார்க்சியவாதிகள். எல் லாமே அதற்குள் அடக்கம் என்று நினைப்பவர்கள். அடுத்து தீவிர - கலப்படம் விரும்பாததூய அம்பேத்கரிஸ்ட். நமக்கு அம்பேத்கர் மட்டும் போதும் என்றார்கள், மூன்றாவது புத்திஸ்ட். பதவி, அதிகாரம் இருக்கும்இடத்தில்தான் விட்டுக் கொடுத்தலும் சமரசமும் தேவைப்படுகிறது. எங்கள் அமைப்புகளில் அப்படி எதுவுமில்லை. எனவே சமரசத்திற்கு யாரும் தயாரில்லை. இதேநிலை கம்யூனிச, சோசலிஷ, நக்சல் அமைப்புகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. அடுத்தவர் களைஉதாரணம் சொல்வதன் மூலம் நான் எங்களை நியாயப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை. இப்போது நினைப்பது உண்டுதான்..நீங்கள் கேட்பது மாதிரி "தவிர்த்திருக்கலாமோ" என்று. எப்படியோ அது கடந்த காலம். இப்போதும்கூட தலித் பிரச்சனைகளில்நாங்கள் ஒன்றுபட்டு செயல்படுகி றோம். அடிக்கடி என்னைச் சந்திக்கும் பலர் தலித் சிறுத்தை கள் அமைப்பின் அவசியத்தை இன்றும்என்னிடம் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்..

உங்கள் வேகத்துக்கு இந்தியக் குடியரசுக் கட்சி ஈடுகொடுக்காது என்று சொன்ன நீங்கள் இன்று அதில்தானே இருக்கிறீர்கள்!

ஆமாம். மராத்திய மாநிலத்தில் வளர்ந்து வரும் சிவசேனா, விஷ்வ இந்து பரிஷத், மராத்திய நவ நிர்மான் சேனா, பி.ஜேபி என்று மதம்சார்ந்த அரசியல் சூழலில் ஒரு செக்குலார் அமைப்புக்கான தேவை இன்று அதிகம். அந்த வகையில் நாங்கள் இந்திய குடியரசுக்கட்சியில் சேர்ந்து எங்கள் செயல் பாடுகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.

குடியரசுக் கட்சியின் ஒருபிரிவு சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதை எவ்வாறு விளங்கிக் கொள்வது?

RPI இணைந்து நிற்கவில்லை. Rashtriya republican party சிவசேனாவுடன் சேர்ந்து நின்றது. இவர்கள் எப்போதுமே சிவசேனாவுக்கு ஜால்ராஅடிப்பவர்கள்தான். இது ஒரு பல கீனமான அமைப்பு. ஒரு சில இடங்களில் RPIலிருந்து தனிப் பட்ட காரணங்களுக்காகப் பிரிந்த சிலர்சிவசேனையுடன் இணைந்திருக்கலாம்.

இந்த நாட்டில் 1/5 ஆக இருக்கின்ற தலித்துகள் இயற்கை வளங்களில், பொதுச்சொத்தில், பொருளாதர வணிகச்செயல்பாடுகளில் கலை இலக்கிய பண்பாட்டு நடவடிக்கைகளில் உரிய பங்கை அடைவதற்குப் போராடாமல் பிறரோடுசேர்ந்து சில்லறை அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக தலைகளைக் காட்டி பங்கு வாங்கிக் கொள்வதாக தலித்இயக்கங்கள் வலுகுன்றிப் போயிருப்பதை எப்படி விளங்கிக்கொள்வது?

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆட்சிதான் கைமாறியது. மக்களாட்சி, அரசியல் சட்ட உரிமை என்றெல்லாம் வந்த பிறகும்ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற எது தடையாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தலித்மக்களில் படித்த நடுத்தர வர்க்கத் தினர் போராட்டங்களைக் கைவிட்டு அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்ள அடிப்படைக்கொள்கைகளை மறந்து விட்டு அரசியல் கட்சிகளுடன் பேரம் பேசி விலை போய்க் கொண்டிருக்கிறார்கள். அனைத்திந்திய தலித்தியஅரசியலமைப்பு/ அல்லது மாநில தலித் இயக்கங்களை ஒட்டுமொத்த இந்திய அளவில் ஒன்றணைக்கும் ஓரமைப்பின் தேவையைஉணர வேண்டும். அப்படி ஓர் அரசியல் சக்தியாக மாற்றம் பெற்றால் மட்டுமே நீங்கள் சொல்வதுபோல நமக்கான உரிய பங்கைநாமடைவது சாத்தியப்படக்கூடும். அதுவரை அவர் கள் தூக்கி எறியும் எலும்புத்துண்டுகளுக்காக காத்திருக்கும்தெருநாய்களாகத்தான் நாமிருப்போம். இந்தப் பூர்ஷ்வா அரசு தன் குடிமக்களை வாழவைப்பதும் இல்லை. சாகவிடு வதும் இல்லை,இரண்டுக்கும் நடுவில் தத்தளிக்கும் வாழ்க்கை. இந்த அரசு வீடு இல்லாதவனுக்கு தண்ணீர்க் குழாயும் மின்சாரமும் வழங்கும்திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருக்கிறது. இம்மாதிரியான சூழலில் அம்பேத்கரின் கருத்துகளை முன்னெடுத்துச் செல்லும் அகிலஇந்திய அமைப்பின் தேவையை நாம் உணரவேண்டும்.

இப்போதைய சூழலில் ஒரு தலித் இயக்கம் அகில இந்திய மட்டத்தில் துவக்கப்படுவதாக இருந்தால் அல்லது இருக்கிறஇயக்கம் தன்னைச் சரிப்படுத்திக் கொள்வதென்றால் அதன் செயல்திட்டத்தில் இடம்பெற வேண்டிய தலையாய அம்சங்கள்என்று எவற்றைச் சுட்டிக்காட்டுவீர்கள்?

அந்தந்த மாநிலத்தின் தலித் இயக்கங்களின் தலைவர்கள் ஒன்றுகூடி அனைத்திந்திய அமைப்புக்கான தேவைபற்றி பேசவேண்டியகாலக்கட்டமிது. அப்படி ஓரமைப்பு நிறுவப் பட்டால் மட்டுமே அரசியல் தளத்தில் அதிகாரப் பகிர்வும் உரிமைகளைப் பெறுவதும்சாத்தியப்படும். அந்த அமைப் பில் ஒத்தக்கருத்துள்ள தலித்தல்லாதவர்களையும் ஒன்றி ணைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.பாபா சாகிப்கூட சாதியடிப்படையில் மட்டுமே ஒன்றிணைக்கப்பட்டிருக்கும் இயக்கங்களை முழுமனதுடன் வரவேற்கவில்லை.

தலித் அல்லாதவர்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று சொல்லும் நீங்கள் பகுஜன் மாயாவதிசர்வஜன் மாயாவதி ஆனதை விமர்சனம் செய்கிறீர்களே, ஏன்?

பகுஜன் சர்வஜன் ஆனதால் பகுஜனுக்கும் சரி சர்வஜனுக்கும் சரி.. என்ன கிடைத்தது? அதனால்தான் சொல்கிறேன் மீண் டும்சொல்கிறேன் ஒத்தக்கருத்துள்ள தலித் அல்லாதவர்களையும் இணைத்துக் கொண்டு என்று. "ஒத்தக் கருத்துள்ள' (like minded ) என்ற சொல்லை அடிக்கோடிட்டு வாசிக்கவும். தலித்தல்லாதவர்களை இணைத்துக்கொள்ளும் போது ஒத்தக்கருத்துள்ளவர்களாக இருக்கவேண்டியது அடிப்படை விசயம். இல்லை என்றால் நம் தேர்தல் கூட்டணிக்கும் இதற்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும்!

தலித் மக்கள் சக்தி வலுவான அதிகாரமாக இந்திய அரசியலில் வளர்ச்சி அடையாமைக்கு என்ன காரணம்?

தலித் நேஷனல் பார்ட்டி கிடையாது. எல்லோரும் ஏற்றுக் கொண்ட தலித் தலைமை அம்பேத்கருக்குப் பின் நம்மிடம் இல்லை.பாபாசாகிப் அவர்களுக்கு தேசியஅளவில் தலித் அமைப்பு ஒன்று வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. டாக் டர் லோகியா, ஆச்சார்யஅதர்லே, சமாஜ்வாடி எஸ்.என். ஜோஷி ஆகியோருக்கு பாபாசாகிப் கடிதம் எழுதினார். ஆக்கப்பூர்வமாக அதைச் செய்வதற்குள் அவர் இறந்து விட்டார். தலித் அமைப்புகளின் மாநிலத்தலைவர்கள் உள்ளூரைத் தாண்டி வரத்தயாராகவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள்கூட மாநிலவாரியாக தங்கள் கூட்டணிகளை மாற்றிக் கொண்டாலும் மத்தியஅளவில் ஒன்றாக நிற்கின்றன. குறைந்தபட்சஅடிப்படைக் கொள்கைகளின் அடிப்படை யில் அனைத்து மாநில தலித் அமைப்புகளையும் ஒருங் கிணைக்கும் ஓர் அமைப்புஇன்றைய தேவை. அப்படிப்பட்ட ஓர் அமைப்பு ஏற்படாதவரை தலித் சக்திகளை அரசியல் தலைவர்கள் தங்கள் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்வார்கள்.

தலித்துகளுக்குள் நிலவும் சாதிப்படிநிலைகள், உட்சாதிப்பூசல்கள், இட ஒதுக்கீடுக்குள் உள்ஒதுக்கீடு- பற்றி எல்லாம்என்ன நினைக்கிறீர்கள்?

சாதிப்படிநிலைகள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது. தலித்துகளில் இரண்டுவகை. ஒரு சாரார் இந்து தலித்துகள்.ஜெகஜீவன்ராம் போன்றவர்கள் இதில் அடங்குவர். ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் அம்பேத் கரை இந்து தலித்துகள்ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை! மகர்கள்தான் ரிசர்வேசனை அனுபவித்து முன்னேறி இருக்கி றார்கள். மாத், மதங் என்றுஇங்கேயும் உட்சாதி இட ஒதுக்கீடு குரல்கள் கேட்கின்றன. உள் ஒதுக்கீடுகளில் உள்ள சில நியாயங்களை இந்துத்துவவாதிகள் திசைதிருப்பி ஆதாயம் தேடிக்கொள்வதை அனைத்து தலித் உட்சாதிப்பிரிவினரும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு சேமநல அரசாக இந்திய அரசு முழுமை பெறுவதற்குள் உலகமயமாதலில் கால்வைத்துவிட்டது. இன்று அரசானதுசட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் ஓர் ஏஜென்சியாக மாறிவிட்டது. எனவே ஒடுக்கப்பட்டோர் நலனில் தனித்த அக்கறைசெலுத்த வேண்டும் என்பது பேச்சளவிலும் கூட கைவிடப்பட்டு வருகிறது. இட ஒதுக்கீடு நடைமுறையில்முடக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே தொழில் வணிகம் போன்றவற்றில் தலித்துகளுக்கு வாய்ப்பு குறைவு. மிகுந்தசவால்களுடன் கூடிய இந்த நிகழ்காலத்தை தலித்துகள் எவ்வாறு கடப்பது?

இந்திய அரசு உலகமயமாதலில் நுழைந்தது சரியா தவறா என்று பேசுவது இனி அர்த்தமில்லாதது. வெகுதூரம் வந்தாகி விட்டது.உலகமயமாதலில் இருந்து இனி நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வெளிவருவது சாத்தியமில்லை. அமெரிக்காவிலிருந்துஅறிவியலையும் அணு ஆயுதத்தையும் ஹை டெக்னாலஜியையும் இறக்குமதி செய்திருக்கும் நாம் அமெரிக்க அரசின் சில மனித உரிமைக் கொள்கைகளையும் தனியார் நிறுவனங்களிலும் கறுப்பர்களுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் முன்னுரிமையையும் சேர்த்தே இறக்குமதி செய்திருந்தால் நல்லது.

ஆனால் உலகமயமாதல் என்றால் அமெரிக்காவுக்கு அடிமையாதல் என்பதல்ல. அந்தப் புரிதல் நமக்கு வேண்டும். உலக மயமாதல்என்றால் நம் இயற்கை வளங்களை அடுத்தவன் கொள்ளை அடிக்க விட்டுவிட்டு நிற்பதல்ல. மக்கள் சக்தியை ஒன்றுதிரட்டினால்நம்மால் சில அழிவுகளிலிருந்து காத்துக் கொள்ள முடியும். மராட்டியத்தில் விடியோகோனின் சிறப்பு பொருளாதார மண்டலத்தைமக்கள் சாலையில் இறங்கி தடுத்து நிறுத்திவிட்டார்கள். இவை எல்லாம் நம்பிக்கை தரும் செய்திகள். எனினும் இன்றைக்குதலித்துகளிடம் போராட்டக்குணம் நீர்த்துப்போய்விட்டதோ என்ற அச்சம் எனக்குண்டு. எங்கள் போராட்டங்களைக் கண்டு அரசும்ஆட்சியாளர்களும் அச்சப்பட்ட காலம் ஒன்றுண்டு. அன்றைக்கெல்லாம் ஒரு பிரச்சனை என்றால் சாலையில் இறங்கி நின்றுபோராடிய பொதுமக்கள் இன்றில்லை. தலித் துகளின் வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் நடுத்தர வர்க்கம், உயர் நடுத்தர வர்க்கம்சார்ந்தவர்கள் இன்றைக்கு குடிசை வாழ் தலித்துகளுக்காக போராட சாலையில் இறங்கத் தயாராக இல்லை. போராட்டகுணம்குறைந்துவிட்டது. இன்றைய சூழலில் மக்கள் சக்தியை ஒன்றுதிரட்டுவதன் மூலமே நம்மை நோக்கியிருக்கும் சவால்களைஎதிர்கொள்ள முடி யும். ஆனால் அதுவே காணாமல் போய்க் கொண்டிருக்கி றதோ என்ற அச்சம் கவலைத்தருகிறது.

தலித் பெண்களின் தனித்துவமான பிரச்சனைகள் என்று எவற்றை அடையாளப்படுத்துவீர்கள்? தலித் இயக்கங்கள்அவற்றைக் கவனத்தில் கொண்டுள்ளனவா?

போராட்டகளத்தில் நிற்கும் ஒவ்வொரு தலித் ஆண்மகனின் வீட்டிலிருக்கும் பெண்களும் அதே போராட்டகளத்தில் நிற்கும் தலித்அல்லாத ஆண்மகனின் வீட்டிலிருக்கும் பெண் களும் அடிப்படையில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையை நாங்கள்கவனத்தில் கொண்டிருக்கிறோம். தலித் போராடினால் அவனை அடக்க அவன் வீட்டுப் பெண்டுபிள்ளைகளை வன்கொடுமைசெய்கிறார்கள். அன்றுமுதல் இன்றுவரை தொடரும் கதை இது. தலித் அல்லாத ஆண்மகனின் வீட்டுப் பெண்களுக்கு அடிப்படை யில்இந்தப் பிரச்சனை அதிகமாக இருப்பதில்லை. பெண்ணி யம் பேசும்போதும் தலித் பெண்களின் பிரச்சனைகளை தனித்துவப்படுத்திஇன்று தலித் பெண்கள் முன்வந்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இயக்கங்கள் இவற்றை என்றைக்குமே புறக்கணித்ததில்லை.

ஆனால் தலித்திய இயக்கங்களில் பெயர் சொல்லும்படியாக பெண்கள் இல்லையே? ஏன்? நீங்கள் ஆரம்பித்திருந்த தலித்பேந்தர் அமைப்பிலும் பெண்கள் நிர்வாகத்தில் இருந்ததாகத் தெரியவில்லையே

பெண்கள் நிர்வாகத்தில் முன்வரவில்லை. தலைமைப் பொறுப்பேற்க முன்வரவில்லை. தலித் பேந்தரிலும் தலை மைக்கு வரவில்லைஎன்பதையெல்லாம் ஏற்றுக்கொள்கி றேன். ஆனால் சாலையில் இறங்கிப் போராட்டமா, பேரணியா.. பெரும்பான்மையான பெண்கள்அக்காலக் கட்டங்களில் கலந்துகொண்டார்கள். இன்று நிலைமை ஓரளவு மாறி வருகிறது. தலைமைக்கு வரவும் நிர்வாகபொறுப்புகளை ஏற்கவும் பெண்கள் தயாராகிவிட்டார்கள்.

இங்கு சிலைகளை வைத்து நடக்கும் அரசியல் அறிந்ததுதான். இது வரை அரசாங்கங்களும் கட்சிகளும் வைத்துள்ளபெரும்பாலான சிலை கள் தலித்தல்லாதவர்களுடையதே. ஊடகங்களில் வெளியாகும் அரசுத் துறை விளம்பரங்களில்ஆளுயரத்திற்கு நின்று புன்னகைப்பதும் இவர்களே. விபத்தில் மறைந்த ராஜசேகர ரெட்டிக்கு 12,000 சிலை களை ஆந்திராமுழுக்க வைக்கப்போவதாக காங்கிரஸ் அறிவித்துள் ளது. அரசாங்கமோ, கட்சிகளோ அவை செலவழிக்கிற தொகைபொது மக்களுடையதுதான். ஆனால் இதையெல்லாம் விரயமென்று பேசாத பொதுநல விரும்பிகள், நீதிமன்றங்கள்எல்லாம் மாயாவதியின் சிலை வைப்பு முயற்சிக்கு இப்படி கொந்தளிப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ரொம்ப சிம்பிள். அவர் ரெட்டி, இவர் மாயாவதி. மாயாவதி ரெட்டியாக இருந்திருந்தால் இந்தக்கேள்வியே வந்திருக்காது. இந்த இடத்தில் இன்னொரு செய்தியையும் சொல்லியாக வேண்டும். உ.பி.யில் தலித்துகளுக்கும் பிற சிறுபான்மை மக்களுக்கும் செய்யவேண்டிய உருப்படியான காரியங்கள் நிறைய இருக்கிறது. மாயாவதி தன் அதிகாரத்தையும் ஆற்றலையும் காட்டவும் நிலைநிறுத்தவும் களங்கள் பல உ.பி.யில் இருக்கின்றன. எனவே இந்த சிலை விவகாரத்தில் எல்லாம் தன் நேரத்தையும்ஆற்றலையும் வீணடிக்கக் கூடாது. தொலைநோக்குப்பார்வையுடன் கூடிய எதிர்காலத் திட்டங்களில் அவர் கவனம் செலுத்தவேண்டும்.

மாயாவதியின் அரசியல் வெற்றி தலித் சமூகத்தின் வெற்றியா?

இல்லை. மாயாவதியின் அரசியல் வெற்றிகளை நாமும் ஊடகங்களுடன் சேர்ந்து பாராட்டலாம். ஆனால் ஊடகங்கள் சொல்வதுபோலஅவர் தலித்துகளின் அடையாளம் அல்ல. இந்த வெற்றியை அடைய அவர் கொடுத்திருக்கும் விலை என்ன ? அவரை ஆதரிக்கும் புனே டி.எஸ். குல்கர்னி ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். மாயாவதி தேர்தலில் நிறுத்திய நாசிக் 'மகந்த' ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். இந்தமாதிரி விலையைக் கொடுத்து மாயாவதி தலித் சமுதாயத்திற்கு என்ன செய்து விடப்போகிறார்? அண்மையில் தாதர் சிவாஜி பார்க்கூட்டத் திற்கு வந்தவர் அங்கிருக்கும் அம்பேத்கரின் சைதன்ய பூமிக்குக்கூட போகவில்லை! she lost her dalith idealogy.

சைதன்யபூமி கிட்டத்தட்ட ஒரு வழிபாட்டுத்தலம் போலதானே இருக்கிறது? செருப்பு போட்டுக்கொண்டு போகக்கூடாது, மெழுகுவர்த்தி ஏற்றி வழிபடுவது, பூ வாங்கி அர்ச்சனை செய்வது இத்யாதி காட்சிகளைப் பார்க்கிறோமே..அம்பேத்கரை நாம் கடவுள் ஆக்கிவிட்டோமோ?

சைதன்யபூமிக்கு வருகிறவர்களுக்கும் திருப்பதிக்கு போய் வருகிறவர்களுக்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.எதையும் வேண்டிக் கேட்டு, கேட்டது கிடைத்து விட்டால் அதற்குக் கைமாறாக எதையாவது செய்து தன்னை யும் தன் கடவுளையும்ஏமாற்றிக்கொள்ளும் கூட்டமல்ல சைதன்யபூமிக்கு வருபவர்கள். அன்பை, மரியாதையை தங்களுக்குத் தெரிந்தவகையில்வெளிக்காட்டும் மக்கள். தங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஒரு தலைவனுக்கு தங்கள் நன்றியை மட்டும் காட்டவரும் மக்கள். மும்பையில் பிறந்து வளரும் நம் வீட்டு பிள்ளைகள் சாதியம் தெரியாதவர்களாக ஏன் சாதியற்றவர்களாக இருக்கிறார்கள். சாதியற்றவர்கள் என்று சொல்வதில் பெருமைதான் எனினும் சாதிப்படிநிலை மாறாத இச்சமூக அமைப்பில் அவர்களுக்கானஇடம்..

இன்று நம்மைப் போன்ற பலர் குடும்பத்தில் இப்பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அமெரிக்கன் சிலிக்கன் வேலியில்டாலராக சம்பாதிக் கும் அவாள் வீட்டுக்குழந்தைகள் தங்கள் மேனிலையைக் காப்பாற்றிக் கொள்ள டாலர் டாலராக விஷவ இந்துபரிஷத் மாதிரி அமைப்புகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். நம் தலித்துகளிடம்தான் நவ தலித் பிராமணர்கள் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். நம் குடியிருப்பில் எத்தனை தலித்து கள் இருக்கிறார்கள் தெரியுமா உங்களுக்கு? உங்களையும்என்னையும்போல அவர்கள் தம்மை தலித் என்று சொல்லிக் கொள்வதில்லை. தங்கள் அறிவு, பணம், பதவி இந்த சமூகத் தின்ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கு பயன்பட வேண்டும் என்ற சமூக விழுமியத்தை நாம் நம் குடும்பங் களின் தனிமனிதவிழுமியமாகக் கடைபிடிக்க வேண்டும்.

II

இந்து மதத்தின் பிடியிலிருந்து தம்மக்களை விடுவிப்பது என்ற அம்பேத்கரின் அடிப்படை நிலைப்பாட்டை பல தலித்இயக்கங்கள் கைவிட்டு விட்டது எதனால்? இந்துமதம் அவற்றையும் உட்செரித்துக் கொண்டதா?

மிகவும் விரிவாக பேசப்பட வேண்டிய விசயம் இது. பாபா சாகிப் one man one vote என்று அரசியல் சட்டத்தின் மூலம் சமஉரிமைகொடுத்த பிறகுதான் பவுத்தம் தழுவினார். அப்படியானால் அரசியல் சட்டம் மட்டுமே சமூகத்தில் சம உரிமையை தம் மக்களுக்குகொடுக்க முடியாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார். மராட்டியத்தில் தலித்துகள் மகர், சம்பார், மாத் என்று மூன்று பெரும்பிரிவுக்குள் அடங்குவர். இதில் மகர் பிரிவினர் முதலில் அம்பேத்கரின் கருத்துகளை ஏற்றுக்கொண்டு சமூகத்தளத்தில் சமஉரிமைப்போராட்டக் களத்தில் முன் நின்றார்கள். அதனால்தான் காங்கிரசு இயக்கம் கூட மகர் அல்லாத ஜெகஜீவன்ராம் அவர்களை அம்பேத்கருக்கு எதிராக நிறுத்துவதற்காகவே வளரவிட்டது. இந்தப் பிரிவுகளில் ஒருசாரார் அம்பேத்கரை ஏற்றுக்கொள்வதில் தயக்கம்காட்டினார்கள். இன்றும் அவர்களைப் பயன் படுத்திக் கொண்டுதான் சிவசேனை, பாரதிய ஜனதா போன்ற இந்துத்துவ அமைப்புகள் "இந்து தலித்துகள்" என்ற முத்திரையுடன் நம் மக்களைப் பிளவுபடுத்தி இருக்கிறார்கள். அம்பேத்கர்கூட அரசியல் களத்தில்அவருடன் எவ்விதத்திலும் ஒப்புமைப்படுத்த தகுதியில்லாத வேட்பாளருடன் போட்டியிட்டு மும்பையில் தோல்விஅடைந்திருக்கிறார். இதை ஏன் சொல்கிறேன் என்றால் தலித் அரசியல் இயக்கங்களையும் பவுத்தத்தையும் இணைத்து பார்க்கும்யதார்த்தத்தில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை யோசித்துப் பாருங்கள்.

ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன். நானே சட்டசபை தேர்தலில் நிற்பதாக வைத்துக் கொள்வோம்.என் தொகுதியில் இருக்கும்அனைத்து வாக்காளர்களையும் சந்திக்கும்போது அதில் சிலர் கணபதி கோவிலுக்கு அழைத்து அர்ச்சனை செய்யலாம். சிலர் மசூதிக்குஅழைக்கலாம். அவர்களுடன் சேர்ந்து நோன்பு கஞ்சி குடிக்கலாம்... இதை எல்லாம் எவ்விதமான தடைகளுமின்றி இந்துமதவேட்பாளரால் செய்ய முடிகிறது. இதையே நான் செய்தால் அது கேள்விக் குறி ஆவது தவறு. இன்னொரு முக்கிய விசயத்தையும்கவனிக்கத் தவறிவிட் டோம். நீங்கள் (புதியமாதவி) படித்தவர், தொலைக்காட்சி பார்க்கவும் நேரமில்லாமல் வாசிப்பு, கருத்தரங்கு,இலக்கியம் என்று உங்கள் நேரத்தைக் கழிக்க முடிகிறது. ஆனால் பெரும்பான்மையான மக்கள் கதி? அவர்களுக்கான வடிகால்?எனக்குத் தெரிந்து பவுத்தம் தழுவிய நன்கு படித்த குடும்பங்கள்கூட வெளியில் பவுத்தம் சார்ந்தும் குடும்பத்தின் பழக்கவழக்கங்கள்,சடங்கு சம்பிரதாயங்களில் ஒரு இந்துவாகவும் இருக்கிறார்கள். கண்பதி உற்சவங்கள், தசரா கொண்டாட்டத்தின் ஆடல் பாடல்கள்,தயிர்ப்பானை உடைக்கும் கோவிந்தா கோவிந்தா விளையாட்டு... இப்படி யான கொண்டாட்டங்களை தன்னுள் வைத்திருப்பதால்சாதாரண மனிதனுக்கு ,கொண்டாட்டங்களுடன் கூடிய வாழ்க்கையை அனுபவிக்க ஏங்கிக்கொண்டிருக்கும் வெகு மக்களுக்கு இந்துமதத்தில் இம்மாதிரியான வடிகால்கள் இருக்கின்றன.

பவுத்தத்தில் புத்தபூர்ணிமா, அம்பேத்கர் ஜெயந்தி தவிர்த்து கொண்டாட எதுவுமில்லை. ஒவ்வொரு மனிதனும் வாழ்க் கையைகொண்டாட்டங்களுடன் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கவே விரும்புகிறான். அந்த உளவியலை மிகவும் சரியாகப் புரிந்து கொண்டதால்மட்டுமே இந்துமதம் இத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி இன்றும் மக்களைக் கவர்ந்து கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.

பவுத்தம் ஒரு மதம் அல்ல, அது ஒரு வாழ்வியல் முறை, அறி வியல் சார்ந்த பகுத்தறிவு சார்ந்த ஒரு வாழ்க்கை முறை. பவுத் தத்தில்புத்தபகவானிடம் நீங்கள் வரமெல்லாம் கேட்கும் வாய்ப்புகளே இல்லை! தனிமனிதன் கடவுளை நம்புவதும் கும்பிடுவதும் பேரம்பேசுவதும் எனக்கு நீ இதைக் கொடு நான் உனக்கு இந்தப் பூஜை செய்கிறேன் என்றெல்லாம் கேட் பதும் பவுத்தத்தில் சாத்தியமேஇல்லை. தனிமனிதனை, அவ னது சிந்தனைகளையும் மீறிய சில உளவியல் தாக்கங்கள் ஆட்சி செய்துக் கொண்டிருக்கின்றன. இந்தஇடத்தில்தான் வெகுஜனமும் அவர்களின் உளவியலும் பவுத்தம் போன்ற அறிவியல் சார்ந்த பகுத்தறிவு வாழ்வியலுக்கே சவாலாகஅமைந்துவிடுகிறது. இதில் பார்த்தீர்கள் என்றால் இன்னொரு வேடிக்கை. என்னவோ விவரம் தெரியாத நம்வீட்டு பெண்களோமுதியவர்களோ மட்டும் இப்படி இருக்கிறார் கள் என்று சொல்வதற்கில்லை. அறிவியலில் கரைகண்ட இன்றைய நம் இளையதலைமுறையும் பவுத்தத்தைப் புரிந்து கொண்டும் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்று ஒத்துக்கொண்டும் தசராகொண்டாட்டத்தில் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள்.. அம்மாதிரியான கொண்டாட்டங்கள் அவர்களுக்கும் பெரிதும் தேவைப்படுகிறது..

ஒருகாலத்தில் தலித்துகள் கும்பிட்ட சிறுதெய்வங்கள் காணாமல் போய்விட்டன. அவர்களைப் போலவே இருந்த அவர் களின்கோரமுக தெய்வங்களை அவர்கள் மறந்து பலகாலம் ஆகிவிட்டது. அலங்காரங்களுடன் கூடிய பெருந்தெய்வ வழிபாட்டுக்குவந்துவிட்டார்கள். உங்களுக்குத் தெரியுமா.. பத்துப்பதினைந்து வருடத்திற்கு முன் மும்பையில் சித்தி விநாயகர் கோவில் குறித்துயாருக்கும் தெரியாது. இன்று பாருங்கள் அந்தக் கோவிலுக்கு வந்திருக்கிற மவுசை! ( நான்: ஆமாம்.. அசோக்சவான்கூடமுதலமைச்சரானவுடன் சித்தி விநாயகர் கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்திருக்கிறாரே.. பார்த்தீர்களா..?)

ஒரு மதமும் அது சார்ந்த கருத்துருவாக்கமும் பொதுமக்களிடம் பரவ அரசு எந்திரங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன. சக்கரவர்த்திஅசோகர் பவுத்தம் தழுவிய பின் இந்திய மண்ணில் பெரும்பகுதி அவர் அரசாட்சியில் இருந்ததால் பவுத்தம் வேகமாகப் பரவியது.என்னதான் செக்குலர் பேசினாலும் இந்திய அரசும், ஊடகங்களும் இந்துத்துவா சார்ந்தே இயங்கிக்கொண்டிருக்கின்றன.இம்மாதிரியான புறம் சார்ந்த காரணிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பலசமயங்களில் இதனால் தான் நான்அடிக்கடி சொல்வதுண்டு, இயக்க அரசியலையும் தனிமனித மத நம்பிக்கைகளையும் சேர்த்து குழப்பிக்கொள்ளக் கூடாது. மதம்அகம்சார்ந்தும் அரசியல் புறம்சார்ந்தும் சமூகத்தை இயக்கிக் கொண்டிருக்கின்றன. ஒன்றை இன்னொன்று ஆட்சி செய்யவோ அடக்கிஆளவோ முயற்சிக்கும் போது கலவரங்கள் நடக்கின்றன.

எனில் அம்பேத்கரின் பவுத்த மதமாற்றம் தோல்வி அடைந்துவிட்டதா?

இல்லை. அது அன்றைய தேவை. இன்று பவுத்தம் அடுத்தக் கட்ட நகர்வுக்கு/ மாற்றத்திற்கு உள்ளாக வேண்டிய தேவைவந்திருக்கிறது.

பவுத்தம் தழுவிய தலித்துகளை இன்றும் neo buddist என்று தனித்து தான் அடையாளப்படுத்துகிறார்கள். எனவேமதமாற்றம் தீர்வாக இருக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட சூழலில் தலித்துகள் எல்லா மத அடையாளங்களையும்துறக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளதா?

எல்லா மத அடையாளங்களையும் துறப்பது என்ற தீர்வு என்றைக்குமே வெகுஜனத்திற்கான தீர்வாக இருக்கவே முடியாது. எனவேதான் தலித்துகள் அனைவரையும் நாத்திகராக் காமல் பாபாசாகிப் அறிவியலும் பகுத்தறிவும் சார்ந்த வாழ் வியல்தத்துவங்களைப் போதித்த பவுத்தம் தழுவினார்.

நீங்கள் பவுத்தம் ஏற்றபின் உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் கண்டீர்கள்? உங்களை நியோ புத்திஸ்ட் என்றுதானேஅழைக்கிறார்கள்?

50 வருடங்களில் மிகப்பெரிய மாற்றங்களை, நம்பிக் கையை,சுயமரியாதையை, உத்வேகத்தை ஆற்றலை எங்களுக்கு பவுத்தன் என்ற அடையாளம் கொடுத்திருக்கிறது. உலக வரலாற்றில் இந்த மாதிரி ஒன்றை உங்களால் சொல்ல முடியாது. அதனாலேயேஎல்லா கொடுமைகளும் முடிவு பெற்றுவிட்டது என்று நாங்கள் நினைத்து எங்களை ஏமாற்றிக்கொள்ளவில்லை. பவுத்தம் ஏற்றகயர்லாஞ்சி பய்யாலால் கதை உங்களுக்குத் தெரியும். ஆனால் அதற்காக அவர்களுக்காகப் போராடும் உத்வேகத்தை அறிவாற்றலைஎங்களுக்கு பவுத்தம் கொடுத்திருக்கிறது.

சாதியொழிப்பு சாத்தியம்தானா? அல்லது அதை ஒரு தொலைதூர லட்சியமாக வைத்துக்கொண்டு சாத ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பதில் தலித்துகளின் ஆற்றல் கழியுமா?

புத்தர் காலத்திற்கு முன்பே சாதி அமைப்பும் தீண்டாமையும் சமூகத்தில் வந்துவிட்டது. 2500 ஆண்டுகால ஒரு சமூக அமைப்பைமாற்றுவதும் மக்கள் அடிமனதில் ஊறிப்போன சாதிய வேர்களை அறுப்பதும் அவ்வளவு எளிதான காரிய மல்ல. இது ஒரு தொடர்போராட்டம்தான். சரி, நீங்கள் கேட் பது போல இப்படியான தொடர் போராட்டங்களில் நம் ஆற்றல் கழியுமா என்றால் இல்லை. இந்தப்போராட்டங்கள் தான் நம் மக்களைத் தூக்கிப்பிடித்து தாங்கி நிற்கும் தூண்கள். இவை சரிந்துவிட்டால் ஏறிய உயரத்தைவிட வேகமாகஅதல பாதாளத்தில் மீண்டும் நாம் தள்ளப்படுவோம். மொரிஷியஸ் தீவுக்குப் போனவர்கள் இன்று தங்கள் மூதாதையரின் சாதிஅடையாளத்தைத் தேடி அலைவதாக வாசித்திருக்கிறேன். இந்துமதம் இருக்கும்வரை இந்தியாவில் சாதியும் இருக்கும்.

III

தலித் இலக்கியம் புழக்கத்திலிருந்த மையநீரோட்டத்தில் இணைந்து விட்டதா? அல்லது தனித்துவத்தோடு வளர்நிலையை எட்டியிருக்கிறதா?

தலித் இலக்கியம் மைய நீரோட்டத்தில் இணைந்துவிட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் தலித் இலக்கியம்இலக்கியத்தின் ஒருவகை. மராட்டிய இலக்கியத்தை எடுத்துக்கொண்டால் அதில் தலித் இலக்கியம் என்பது மராட்டிய இலக்கியத்தின்ஒருவகை. மற்ற இலக்கியங்களில் ஏற்பட்டிருக்கும் இசம், உத்தி மாற்றங்கள் தலித் இலக்கியத்தி லும் மாற்றத்தை ஏற்படுத்திஇருக்கின்றன.

தலித் இலக்கியம் வடிவத்திலும் பேசுபொருளிலும் அடைந்துள்ள மாற்றங்கள் என்று எவற்றை அவதானிக்கிறீர்கள்?

மராத்தி இலக்கியத்தை உலகத்தரம் வாய்ந்த இலக்கியமாக் கியதில் தலித் படைப்பாளர்களின் பங்கு மகத்தானது. ஆரம்பகாலங்களில் எடு துப்பாக்கியை, வெடிக்கட்டும் தோட்டா, குண்டுமழை, ரத்தம், காயம் என்று எழுதிக் கொண்டிருந் தோம். இன்றுஅப்படி எழுதுவதில்லை. இலக்கியத்தின் அனைத்து உத்திகளையும் தலித் இலக்கியம் தனக்குள் வாங்கி செரித்து நிற்கிறது. மத்தியவர்க்கம், உயர்தர மத்திய வர்க் கம்,கூட்டுக்குடும்பச் சிதைவு, உலகமயம் என்று பல்வேறு தடங்களில் கிளை பரப்பி நிற்கிறது. பெண்கவிஞர்களின் பங்களிப்பு பெருமை சேர்த்துள்ளது. சத்யா பவார், ஊர்மிளா பவார் எழுத்துகளை எல்லாம் குறிப்பிட்டு சொல்லலாம்.இன்னொரு பெரிய மாற்றம் அன்று எழுதியவர்கள் இயக்கம் சார்ந்த களப்பணியாளர்கள். இன்று அப்படியில்லை.

தலித் இலக்கியத்தை பௌத்த இலக்கியமாக நீங்கள் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை?

தலித் இயக்கம் தலித் இலக்கியம் என்பது ஓர் உணர்வு, சமூக மாற்றத்தை விரும்பும் ஓரியக்கம். இதற்குள் பௌத்த இலக்கியமும்இடம் பெறலாமே தவிர தலித் இலக்கியத்தை பௌத்த இலக்கியமாக அடையாளப்படுத்தமுடியாது.

தலித் படைப்புகள் ஒரே சாயலில் -ஸ்டீரியோ டைப்- ஆக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு பொதுவாக வைக்கப்படுகிறதே?

ஆரம்பகாலங்களில் இப்படி எல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். இன்றைக்கு மகர்களின் படைப்புகளை வாசித்துவிட்டு மராத்தாக்களும்தங்கள் யதார்த்த வாழ்க்கையை எழுதத் துணிந்தார்கள் என்பது தான் உண்மை. புதிய சொல்லாக்கங் களை, பழைய சொற்களுக்குப்புதுப்புது அர்த்தங்களை எங்கள் படைப்புகள் தான் மராத்திய மொழிக்கு கொடுத்திருக் கிறது. இன்றைக்கு மராத்திய அரசு தலித்இலக்கிய சொல் லாடல்களுக்கு தனி அகராதியே கொண்டுவரப்போகிறது என்றால்.. அந்தளவுக்கு இந்த மொழியை நாங்கள் வசப்படுத்தியிருக்கிறோம்!

நாராயண் சுர்வேயின் கவிதைகள் ஃபக்தா சிறுபத்திரிகையில் வெளி வந்தன. சிறுபத்திரிகைகளின் பங்களிப்பையும்மராத்திய இலக்கியத்தில் ரொம்பவும் முக்கியமானதாகச் சொல்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?

உண்மைதான் சிறுபத்திரிகைகளின் பங்களிப்பு அதிகம். நான்கு நண்பர்கள் சேர்ந்தால் உடனே ஒரு சிறுபத்திரிகை ஆரம்பிப்பது, சிலகாலம் வரும் பிறகு நின்று போவது எல்லாம் நடந்தது. கோபங்கொண்ட இளம் தலைமுறையினரால் ஆரம்பிக்கப்பட்டசிறுபத்திரிகைகள் நாளடைவில் தனி நபர் ஆதிக்கத்துக்குட்பட்டன. அதனால் அந்த இயக்கம் தோற்றுப்போனது என்று வைத்துக்கொண் டாலும் சதீஸ் கலேஸ்கர், துளசிபரப் , ராஜா தலே என்று பல எழுத்தாளர்களை அடையாளம் காட்டியதில் அதன் பங்குமகத்தானது.

மூன்றுவகையான தலித் எழுத்தாளர்களை இன்று காணலாம். ஒன்று: கல்லூரி பேராசிரியர்கள். இரண்டாவது வொயிட் காலர் ஆபீஸ்மக்கள். மூன்றாவது தொழிலாளர்கள். சில சமயங்களில் எனக்கு அச்சம் ஏற்படுவதுண்டு. தலித் இலக்கியம் ரொம்பவும் (academic level)அகடெமிக் இலக்கியமாகிக் கொண்டிருக்கிறதோ என்று. தலித் இலக்கியம் தலித் இயக்கம் சார்ந்தே இருக்க வேண்டும் என்பதுதான்என் போன்றவர்களின் விருப்பம்.

தொடக்கத்திலிருந்த படைப்பு உத்வேகம் இப்போதும் உங்களிடமிருக்கிறதா? தங்களின் சமீபத்திய படைப்பு முயற்சிகள் எவை?

நான் 1967 களிலேயே இயக்கம் சார்ந்து செயல்படவும் எழுதவும் ஆரம்பித்துவிட்டேன். 67களில் ரிபப்ளிகன் ஐக்கிய பார்ட்டியுடன்சேர்ந்து பணியாற்றி இருக்கிறேன். என்ன அன்றுபோல உத்வேகத்துடன் ஓடிய ஓட்டம் இன்று களப் பணியில் சற்றுகுறைந்திருக்கலாமே தவிர எழுத்துப் பணி எப்போதும் போல தொடர்கிறது. அண்மையில் என் கட்டுரைகளின் தொகுப்பு நூல் (neh abivithi - blue underline) வெளிவந்துள்ளது.

நாடு தழுவிய அளவில் தலித் எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கான செயலூக்கம் கொண்ட ஒரு கூட்டமைப்பின் தேவையை உணர்கிறீர்களா? அதற்கான முன் முயற்சிகளைத் தங்களைப் போன்றவர்கள் ஈடுபடுவது தானே வலு சேர்ப்பதாக இருக்கும்?

பலமுறை இதைப்பற்றி நாம் பேசி இருக்கிறோம். ஒருமுறை தமிழகத்தில் பிரிந்துகிடக்கும் தலித்திய இயக்கங்களை ஒன்றிணைக்கநான் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் கூட நாம் பேசியிருக்கிறோம். நான் பேசுவது மட்டுமல்ல .. உங்களைப் போன்றவர்களும் முன்வர வேண்டும்.

மராத்தியில் தன்வரலாற்று இலக்கியவகை ரொம்பவும் பிரசித்தமானது. உங்களுடைய சுயசரிதையை எப்போது எதிர்பார்க்கலாம்?

(சிரித்துக்கொண்டே..) என் சுயசரிதம் என்பது நானும் என் குடும்பமும் என் எழுத்துகளும் மட்டுமல்ல. என் வாழ்க்கை ஓர் இயக்கம் சார்ந்தது. எங்கள் இயக்கம் குறித்தும் , என் தோழர்கள் குறித்தும் நிறைய உண்மைகளை எழுத வேண்டியிருக்கும். அப்படி எழுதாமல் இருந்தால் அது சுய சரிதையாக இருக்கவும் முடியாது. என்ன.. அதனால்.. புனைவுகளின் ஊடாகப் பயணித்து ஒரு நாவல் எழுதலாம்என்ற எண்ணமிருக்கிறது.

***