Sunday, December 14, 2025

பாரதியும் சாதியும்



பாரதியார் குறித்து இரண்டு பக்கமும் ஆதாரங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் பாரதியின் எழுத்துகளில் இருந்தே தங்கள் தரப்பு நியாயங்களை வைக்கிறார்கள்.

அப்படியானால் பாரதி யார்?

பாரதிக்குள் இருந்த அந்த அசல் மனிதன் யார்?

இந்தக் கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாது.

பாரதி 

மகாகவி பாரதி

விதிவிலக்கல்ல.

எந்த ஒரு மனிதனும் தான் வாழும் சமூகத்திலிருந்து முழுவதுமாக தன்னை விடுவித்துக் கொண்டு தனித்திருப்பது சாத்தியமில்லை.

ஆனால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பாரதி அதற்காக போராடிக் கொண்டே வாழ்ந்திருக்கிறார்.

எல்லோருக்குள்ளும் ' சாதி' 

வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.

அதிலும் பிறப்பிலேயே மேலடுக்கிலிருக்கும் மனிதனுக்குள் சாதி அவனையும் அறியாமல் 

வினை புரிகிறது.

அது அவர்களின் நனவிலி மனதிலிருந்து வெளிப்படுகிறது.

இப்போதும் கூட அது அவ்வாறகத்தான் செயல்படுகிறது.

உதாரணமாக  தான் ஜாதி பார்ப்பதில்லையாக்கும் என்பதை வெளிப்படுத்துவதாக நினைத்து ' நான் புதியமாதவி வீட்டில் கூட சாப்பிட்டு இருக்கிறேன்' என்று பேச்சுவாக்கில் சொல்லத்தான் செய்கிறார்கள். அவர்கள் எனக்கு நெருக்கமானவர்கள்தான். என் நம்பிக்கைக்குரியவர்கள் தான். அவர்கள் என் வீட்டுக்கு வந்தது உண்மை. உணவு உண்டது உண்மை. ஆனால் அதை அவர்கள் வெளிப்படுத்தும்போது அவர்களின் நனவிலி மனதின் சாதி மேட்டிமை வெளிப்படத்தான் செய்கிறது. ஆனால் அவர்கள் வீட்டு சமையலறை வரை நானும் போயிருக்கிறேன். என் உரையாடலில் அது இடம் பெற்றதே இல்லை. காரணம் எனக்கு அது சாதாரணமான நிகழ்வு. அவர்களுக்கு ?!

பாரதியின் அரசியலில் செல்வாக்கு செலுத்திய திலகர் சாதி சமூகத்தின் முகம். பெண்களுக்கு ஆங்கிலமும் கணக்குப் பாடமும் ஏன் என்று கேசரியில் எழுதியவர். அவர்தான் ஆங்கிலேயர் ஆட்சியில் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு எதிராக தன் போராட்டத்தில் வேத இந்தியாவை முன் நிறுத்துகிறார். ஆர்யதேசம் என்று பேசுகிறார். இவை எல்லாமே பாரதியும் தன் போராட்ட அரசியலின் பண்பாட்டு தளத்தில் அப்படியே கையாண்டிருக்கிறார்.

அது சரியா? என்ற கேள்வியைத் தாண்டி பாரதியிடம் வெளிப்பட்ட திலகரின் தாக்கமாகவே இதைப் பார்க்கிறேன்.

பாரதி புதுவையில் சந்தித்த மனிதனின் கதையை ' தம்பலா'  பாரதி வசந்தன் எழுதி இருக்கிறார். இதெல்லாம் சேர்ந்துதான் பாரதி.

பாரதி என்ற தனிமனிதன் தான் சார்ந்த சாதி சமூகத்தில் வாழ்ந்துக் கொண்டே போராடி இருக்கிறான்.

பாரதி சாதியாக கட்டமைக்கப் பட்டிருக்கும் சமூகத்துடன் மட்டும் போராடவில்லை. தனக்குள் இருக்கும் அந்த சாதி மனிதனுடனும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறான்.

சாதியே மனிதனின் அடையாளமாக

சாதியே சமூகமாக கட்டமைக்கப் பட்டிருக்கும் இந்தியச் சமூகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம்.

யாரும் இங்கே விதிவிலக்கல்ல!🙏