Monday, July 26, 2010

தமிழ்ச்செல்வனின் திண்ணை கட்டுரை தொடர்பாக

அண்மையில் தோழர் தமிழ்ச்செல்வன் திண்ணையில் எழுதியிருந்த கீழ்க்கண்ட கட்டுரைத் தொடரை வாசித்தப் போது சில செய்திகளை ஆரம்பத்திலேயே தெளிவு படுத்திக் கொள்வது நல்லது என்று நினைத்தேன்.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=21007042&format=html

கோவையில் நடந்து முடிந்த செம்மொழி திமுக திருவிழாவில் பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு “கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது” வழங்கப்பட்டதையும் திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள் கூட, காலாவதியாகிப் போன ஆரிய-திராவிட கோட்பாடுகளை இன்னும் ஆதரித்து வருபவர் தான் என்ற விமர்சனத்தை வைத்திருப்பதும் இன்றைய சூழலில் ஆரிய திராவிட இனவரலாற்றை ஆய்வு மனப்பான்மையுடன் அணுகும் அனைவருக்கும் இணை கோடாக இருக்கும் இன்னொரு பாதையை அறிமுகப்படுத்தும் முன்னுரையாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் போகிற போக்கில் தமிழ்ச்செல்வன் அவர்கள் சில கருத்துகளை உதிர்த்து செல்கிறார்.

***விமர்சனத்திற்குரிய அக்கருத்துகள்:

கிறுத்துவ மதத்தைப் பரப்பவேண்டும் என்கிற ஒரே குறிக்கோளோடு தமிழகத்திற்கு வந்திறங்கிய பாதிரிமார்களுள் ஒருவரான ராபர்டு கால்டுவெல் தான் “திராவிடம்” என்கிற வார்த்தையைத் தமிழில் அறிமுகப் படுத்தியவர் என்கிற உண்மையை நாம் மறக்கக் கூடாது. சங்க கால இலக்கியங்களிலும் அதனைத் தொடர்ந்து இடைக் கால இலக்கியங்களிலும் நூல்களிலும் கூட ’திராவிடம்’ என்கிற வார்த்தைப் பிரயோகம் இல்லை. மண்ணின் மைந்தர்களிடையே பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் தான் கிறுத்துவ பாதிரியான கால்டுவெல் அவ்வார்த்தையை பிரயோகித்துள்ளார் என்பதும் உண்மை. ஒரு பக்கம் அரசியல் நிறுவனமான ஆங்கிலேய அரசு, மண்ணின் மைந்தர்களைப் பிரித்து ஆள்வதற்காக, ஆரிய-திராவிட கோட்பாடுகளைப் பயன் படுத்தியது என்றால், மறுபக்கம் மத நிறுவனங்கள் நம் பூர்வீக மொழியைக் கைபற்றி, கலாசாரத்தை அழித்து, நம் தேசத்தை கிறுத்துவமயமாக்க அதே கோட்பாடுகளைப் பயன்படுத்தின.*** என்கிறார்.

>ராபர்டு கால்டுவெல் தான் “திராவிடம்” என்கிற வார்த்தையைத் தமிழில் அறிமுகப் படுத்தியவர் என்கிற உண்மையை நாம் மறக்கக் கூடாது. என்கிறார் தமிழ்ச்செல்வன்.

அவர் மறந்திருக்கும் சில செய்திகளை நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது. 1856ல் தான் கால்டுவெல் நூலின் முதல் பதிப்பு வெளிவந்திருக்கிறது. ஆனால் 8 ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் எழுதியிருக்கும் "சவுந்தர்யலாகிரி" நூலின் 75வது பாடல் திருஞானசம்பந்தரை 'திராவிடசிசு' என்று அழைக்கிறது. இன்றைக்கு ஆரிய திராவிட இன வரலாற்று ஆய்விலும் திராவிடர் தமிழர், திராவிட தேசம், தமிழ் தேசம் என்ற பார்வையிலும் மிகவும் ஆணித்தரமான ஓர் அடையாளமாகி இனவரலாற்றை மறுவாசிப்பு செய்து கொண்டிருக்கிறது.



கல்ஹனரால் 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "ராஜதரங்கினி" என்ற காஷ்மீர் வரலாற்றைப் பேசும் நூலும்

கர்னாடக ஆஸ்ச்ச தைலங்கா திராவிட மஹாராஷ்ட்ரகஹோ l

குர்ஜராஷ்சேத்தி பஞ்சைவ திராவிட விந்தியதக்ஷஜீனே ll

என்று தென்னிந்திய மக்களைக் குறிக்க திராவிட என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறது.

புராணங்களில் பாகவத புராணம் (9 அல்லது 10 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் ) 'திராவிட தேசத்து ஈஸ்வரனும்' என்று பதிவு செய்திருக்கிறது.

எனவே திராவிடம் என்ற இங்கு ஏற்கனவே இருந்த ஒரு கருத்தியலைத்தான் கால்டுவெல் தன் ஆய்வில் எடுத்துக் கொண்டாரே தவிர அவர் உருவாக்கிய வார்த்தையோ கருத்துருவாக்கமோ அல்ல.

இனி, கால்டுவெல் ஆய்வுகளை மதமாற்ற கருவியுடன் இணைப்பதும் , பொத்தம் பொதுவில் குற்றம் சாட்டுவது வரலாற்றின் சில பக்கங்களை இருட்டடிப்பு செய்யவே உதவும். கால்டுவெல் மதமாற்றம் செய்யவில்லை என்று வாதிடுவது என் நோக்கமல்ல. அதற்காக தான் அவர் வந்தார். ஆனால் அவராலும் அவருடைய மதமாற்ற ஆயுதத்தாலும் ஏற்கனவே தடித்துப் போய்க்கிடந்த இந்த தமிழ்ச்சமூகத்தின் சாதிய ஆதிக்கத்தை இம்மி அளவு கூட அசைக்க முடியவில்லை. அதில் அவருக்கு மிகப்பெரிய தோல்விதான். பறையர்கள் ஆதிதிராவிடர்கள், ஆதித்தமிழர்கள் என்று தன்னுடைய ஆய்வு நூலில் அவர் பின்னூட்டாக இணைத்திருப்பதை அப்படியே கிழித்துவிட்டு மறுபதிப்புகள் வெளியிட்ட தமிழ் அறிவுஜீவிகளுக்கும் பல்கலை கழகங்களுக்கும் அவருடைய சமூகப்பார்வை ஒவ்வாமையை இன்றைக்கும் ஏற்படுத்தி இருக்கிறது. நான் வலியுறுத்த வரும் செய்தி இன்றுவரை இந்தச் சாதித்தமிழ் ஏற்றுக்கொள்ளாத ஒரு கருத்தை தன் ஆய்வில் முன்வைத்த கால்டுவெல் கூட பறையர்களை மதமாற்றம் செய்யவில்லை. அதாவது தன்னுடைய மதமாற்ற கோட்பாட்டுக்கும் எல்லைத்தாண்டாத பாதுகாப்பான ஒரு சாதிய அமைப்பை அவர் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டி இருந்தது. அவர் மதமாற்றியதெல்லாம் நாடார் சாதி மக்களைத்தான். அவர் மட்டும் இந்தச் சாதிய எல்லைக் கோட்டைத் தாண்டி இருப்பாரேயானால் அவரால் எதையும் சாதித்திருக்க முடியாது. இந்தச் சாதிய சமூகம் அவரைப் புறந்தள்ளி இருக்கும். என்னவோ கால்டுவெல் , பாதிரிமார்கள் வருவதற்கு முன்பு இந்த மண்ணின் மைந்தர்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தது போலவும் அவர்கள் வந்துதான் நம்முடைய கலாச்சாரத்தை அழித்தது போலவும் தமிழ்ச்செல்வன் வருத்தப்படுவது புரியவில்லை!

அவர் மண்ணின் மைந்தர்கள் என்றும் நம்முடைய கலாச்சாரம் என்றும் பேசுவது யாரை, யாருடைய கலாச்சாரத்தைப் பற்றி என்பதும் யோசிக்க வைக்கிறது.

ஆங்கில அரசுக்கு ஆரியம் திராவிடம் அதிகம் தேவைப்படவில்லை. ஏனேனில் ஆரியம் திராவிடம் என்ற இரட்டைப்பிரிவு இந்திய சமூகத்தை வலிமைப்படுத்திவிடும் என்பதையும் அவர்கள் அறிவார்கள். அதைவிட ஏற்கனவே இந்திய சமூகத்தில் நிலவிய ஆயிரக்கணக்கான சாதியப்படிநிலைப் பிரிவை அவர்கள் அப்படியே சேதப்படுத்தமால் இருந்தால் போதும் என்று நினைத்தார்கள். அதில்தான் அவர்களுக்கு ஆதாயம் இருந்தது.

கிறித்தவ மதமாற்றத்திற்கு இங்கிருந்த சாதியமும் அதைக்காப்பாற்றிய இந்து மதமும் காரணமே தவிர இந்தியாவைப் பொறுத்தவரை அவர்கள் புதுக்காரணங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. மராத்திய மாநிலத்தில் (அன்றைய பம்பாய் மகாணத்தில்) ஆங்கில ஆட்சி செய்த ஒரு மாற்றம் தான் மகர்களின் எழுச்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நடந்தது இதுதான்:

1857ல் நடந்த சிப்பாய் கலகத்தின் காரண காரியங்களை ஆராய்வதற்கு 1858ல் ஏற்படுத்தப்பட்ட பீள் கமிஷன் சில பரிந்துரைகளை முன்வைத்தது. அதன்படி ஏற்கனவே இந்தியாவில் இருந்த சமூகப்படிநிலை கட்டுமானத்தை அப்படியே ஏற்றுக்கொள்வது என்று முடிவுக்கு வந்தது. அதாவது சாதிய வர்ணபாகுபாட்டை அப்படியே ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப தங்கள் சட்டதிட்டங்களை மாற்றிக்கொள்வது என்பதுதான் அது. (We cannot practically ignore it (the caste system) so long as the natives socially maintain it). இக்கமிஷனின் பரிந்துரையை ஏற்று 1890ல் ஆங்கிலேயர் தங்கள் படைகளைச் சீரமைத்தனர். அப்போது இராணுவ தளபதியாக இருந்த லார்ட் கிட்சனர் (Lord Kitchner, commander in chief of the indian army discontinued the mahar recruitment on the plea that the mahars did not belong to the martial races of india) படைவீரர்கள் சேர்ப்புக்கான விதிகளை இந்திய சமுதாய அடித்தளக் கோட்பாடுகளுக்கு ஏற்ப மாற்றம் செய்தார்.

எனவே என்னவோ ஆங்கிலேயர்களும் பாதிரிமார்களும் வந்துதான் நம் மண்ணின் மைந்தர்களைப் பிரித்தார்கள் என்றெல்லாம் சொல்வது உண்மைகளை இருட்டடிப்பு செய்யவே உதவும். நெய்தல்நில மக்கள் பரதவர்கள் மதமாற்றத்திற்கும் கொங்கன் கடற்கரை நெய்தல் நில மக்கள் மதமாறியதற்குமான அரசியல் காரணங்கள் பல. மதமாற்றத்திற்கான காரணங்கள் சமூகத்திற்கு சமூகம், இடத்திற்கு இடம் மாறுபட்டிருப்பதைக் காணலாம்.

கால்டுவெல் செய்ததெல்லாம் திராவிடம் என்ற சொல்லை தமிழர்களுடன் இணைத்தது தான். அது சரியோ தவறோ விமர்சனத்திற்கு உரியதுதான் ஆனால் அவருடைய நூலில் அவர் செய்திருக்கும் ஆய்வுகளையோ அந்த ஆய்வுகளின் மூலம் அவர் எடுத்திருக்கும் முடிவுகளையோ மறுப்பதற்கு இடமில்லை. தமிழ்த்தேசியப் பார்வையை முன்வைக்கும் முனைவர் த.செயராமன்., திராவிடம், திராவிடர், திராவிட தேசம்.. ஆகிய சொற்கள் வரலாற்று ரீதியாக பார்ப்பனர்களோடு தொடர்புடைய சொற்கள், இச்சொற்களோடு பார்ப்பனர்களுக்கு முதல் உரிமையும் முற்றுரிமையும் இருக்கிறது ' என்கிறார்

தமிழ்ச்செல்வன் பொத்தம் பொதுவாக கருத்துகளை எழுதிச்செல்வதை விட வரலாற்றுச் சான்றுகளுடனும் மாற்றுக்கருத்துகளையும் அறிந்து அதை ஆய்வுக்கு உட்படுத்தி மறுவாசிப்பு செய்வதும் இன்றைய தேவை மட்டுமல்ல, அவரிடமிருந்து என்போன்றவர்கள் எதிர்ப்பார்ப்பதும் ....

----------

2 comments:

  1. உண்மைகளைத் திரித்து எழுதி மத வெறுப்பைத் வளர்க்க தமிழ்செல்வனின் இத்தகைய கட்டுரைகள் உதவும். தவறை சுட்டினால் தகவல் பிழை என்று சொல்லித் தப்பிப்பது இந்தக் கட்டுரைகளை திறந்த மனதுடன் படிப்பவரை அவமதிக்கும் செயலே.

    ReplyDelete
  2. mikka NanRi.
    but, why "anonymous..?'

    ReplyDelete