Monday, June 8, 2009

இந்தியக் கருவாடும் வெள்ளைப்பன்னிகளும்

பிரபலங்கள் எழுதும் பத்திகளை விட உங்களையும் என்னையும் போல
சாதாரண பொதுசனம் எழுதும் எழுத்துகளில் இருக்கும் பாசாங்கில்லாத சத்தியத்தின்
குரல் இப்போதெல்லாம் நான் விரும்பி வாசிக்கும் பக்கங்கள்.
அப்படித்தான் 31மே2009 டைம்ஸ் ஆஃப் இந்தியா மும்பை பதிப்பில்
'சிக்கன் ஹலால்' என்ற தலைப்பில் வெளிவந்திருந்த பத்தி.
எழுதியவர் தன் பெயரைக்கூட "இந்தியக்குடிமகன்" - son of india
என்றுதான் அடையாளப்படுத்தி இருந்தார்.
http://epaper.timesofindia.com/Daily/skins/TOINEW/navigator.asp?Daily=TOIM&showST=true&login=default&AW=1244016793984



அவருக்கு ஏற்பட்ட அனுபவம் போல நம்மில் பலருக்கும் ஒவ்வொரு பயணத்திலும்
ஏற்பட்டிருக்கும். ஆனால் வழக்கம் போல கொதித்து அடங்கிவிடும்
பால் போல நாமும். அந்த நேரத்தில் ஆத்திரம் கொண்டு அதன் பின் அதை மறந்து
எப்போதும் போல இதெல்லாம் சகஜம்தான் என்று ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்குள்
அடங்கிப்போகிறோம். அதற்கான காரண காரியங்களை நம்மில் பலர் யோசிப்பதில்லை.
(அதற்கெல்லாம் நமக்கு எங்கே நேரமிருக்கிறது என்கிறீர்களா?)

எல்லோரும் ஒரே கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் வானூர்தியில் வெள்ளைக்காரனுக்கு
மட்டும் தனிக்கவனமும் மரியாதையும் செலுத்தும் இயல்பு என்னவோ அந்த விமானப்பணிப்பெண்ணுக்கு
மட்டுமே இருப்பதாக நினைப்பது தவறு. நம் எல்லோரிடமும் எப்போதாவது அந்த உணர்வு, மனநிலை
இருக்கிறது. ரொம்பவும் இயல்பாகவே நம் எண்ணங்களில் கலந்திருக்கும் ஒரு மதிப்பீடு.
வெள்ளைக்காரன் உசத்தி.. கறுப்பன் தாழ்வு என்ற எண்ணம் தான்.
வெள்ளைக்காரன் இந்தியாவுக்கு சுற்றிப்பார்க்க வரும்போது அனுபவிக்கும் மேட்டுக்குடி
மரியாதையை எந்த ஓர் இந்தியனும் உலகில் வேறு எங்கும் அனுபவிக்கும் வாய்ப்பில்லை.
ஆஸ்திரேலியா, இலண்டன் என்று பல்வேறு நாடுகளில் இந்தியனுக்கு ஏற்படும் நிறவெறிக்
கொடுமைகளை அண்மையில் ஊடகங்கள் வழி அதிகம் தெரிந்து கொண்டிருப்பதும்
அன்றைய சூடான காலை காபி போல சூடானச் செய்தி.. அதற்குமேல் அதற்கான முக்கியத்துவம்
எதுவுமில்லை.

பாலின் வெள்ளை நிறம் தூய்மையின் அடையாளம்.!
பால் போல ஒளீவீசும் நிலவின் அழகு.
என்பதை எல்லாம் உலக மொழிகள் அனைத்திலும் எழுதி வைத்து தலைமுறை தலைமுறையாய்
நம் எண்ணத்தில் விதைத்துவிட்டார்கள்.

இருளடர்ந்த கரிய மேகங்கள் அழகு
ஒளி நுழைய முடியாத அடர்ந்த வனம் அழகு
கரிய பாறையிலும் வளைந்து நிமிர்ந்து செங்குத்தாய் மண்ணின் மடிக்கிழித்து திமிறி நிற்கும்
மலைமுகடுகள் அழகு.. சுருள் கேசமும் தடித்த உதடுகளும் மின்னும் கண்களுமாய்ச் வெள்ளை நிறப் பல்
தெரிய பளிச்சென சிரிக்கும் ஆப்பிரிக்க குழந்தையும் அழகுதான்.

ஆனால் அழகு என்று சொன்னவுடன்
சிவந்த ரோஜாவும்
தூயமை என்றவுடன் வெள்ளை நிறமும் அடையாளமாய்
நம் எண்ணத்தில் கலந்திருப்பது எதனால்?
மாங்கொழுந்து நிறமுடைய கண்ணகியின் கொள்ளுப்பேரன்கள்
மணமகள் விளம்பரத்தில் எப்போதும் அழகானப் பெண் தேடும் வரிகளுக்குள்
ஒளிந்திருக்கிறது வெள்ளை நிறம் உசத்தி என்ற எண்ணத்தின் அடையாளம்.
அம்மாவும் அப்பாவும் அக்காவும் தங்கையும் கருப்பாக இருந்தாலும்
அதற்கான காரணங்கள் புரிந்தாலும்..
'fair good looking girl' தேடி அலைந்து கொண்டிருக்கும் திராவிட மண்ணின் மைந்தர்களை
நினைத்து பெருமைப் பட்டுக்கொள்ள என்ன இருக்கிறது?







கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு ..
என்ற பாடலைக்கூட ஓர் ஆண் பெண்ணைப் பார்த்து பாடுவதாகக் காட்டி இருந்தால்..!!??
ஹிட் ஆகியிருக்காது!!
அதையும் இந்தச் சமுதாயம் உருவாக்கி வைத்திருக்கும் சிவந்த பொன்னிற பெண் பாடியதால்தான்
பாடலும் ஹிட் ஆகியது. மக்களால் ஏற்றுக்கொள்ளவும் முடிந்தது.

இம்மாதிரி கருத்துகளை ஊக்குவிக்கும் விளம்பரங்கள்/விற்பனைப் பொருட்களை
ஒரு 10 வருடங்கள் ஊடகங்கள் விலக்கி வைத்தாலே போதும்.. இந்த மாயையிலிருந்து
ஓரளவு வளரும் தலைமுறையாவது விடுபடும்.

No comments:

Post a Comment