Tuesday, April 1, 2025

தாராவியில் தலித் வரலாறு

 🔥தாராவியில் தலித் வரலாறு இப்படியாகத்தான் ஆரம்பமானது"🔥




"என்னிடம் பம்பாய் தலைவர்கள் ஜின்னா அவர்களும் அம்பேத்கர் அவர்களும் பேச விரும்புவதாகவும் வந்தால் நமது இயக்கத்தை பற்றி மற்ற மாகாணங்களில் உள்ளவர்களும் அறிந்து கொள்ள முடியும் என்றும் தந்தி கொடுத்தார்கள் அதன்படி நானும் மற்றும் ஐந்து தோழர்களும் புறப்பட்டோம்"

தந்தை பெரியார் ,12/01/1940. தன் பம்பாய் பயணம் குறித்து பேசியது.


07/01/1940 மாலை 6:00 மணிக்கு தாராவி காலே கில்லா மைதானத்தில் சுயேச்சை தொழிலாளர் கட்சித் தலைவர் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. 

அக்கூட்டத்திற்கு தலைமை ஏற்றவர் பாபாசாகிப் அம்பேத்கர். அம்பேத்கர் பேச்சை சி என் அண்ணாதுரை என்ற இளைஞர் தமிழில் மொழி பெயர்த்தார். கூட்டத்திற்கு வந்திருந்த பிற மொழி தலைவர்களுக்காக தந்தை பெரியாரின் பேச்சை அண்ணா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.


அம்பேத்கர் ஒரு தேநீர் விருந்தும் ஒரு சாப்பாடு இருந்தும் நடத்தினார். அதற்கு பம்பாயில் உள்ள முக்கியமான தலைவர்களும் பத்திரிக்கைக்காரர்களும் வந்திருந்தார்கள். அதில் கலந்து கொண்டார். அவர்களிடம் மூன்று மணி நேரம் அரசியல் விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.அவர்கள் பல புதிய விஷயங்களைப் பற்றி என்னிடம் பேசினார்கள்"

என்று இச்சந்தப்பின் முக்கியத்துவத்தை பெரியார் பதிவு செய்கிறார்.

08/01/1940ல் இந்திய அரசியலில் ஒரு முக்கியமான சந்திப்பு நடைபெற்றது ! 


தாராவியில் தலித் மாதம் தலித் வரலாறு இப்படியாகத்தான் ஆரம்பித்தது.

அதன் தொடர்ச்சியாகவே நாங்களும் எங்கள் எழுத்துகளும் .


(புகைப்படத்தில் இடமிருந்து வலமாக, சண்டே அப்சர்வர் ஆசிரியர் பி பாலசுப்பிரமணியம் | ,ஜஸ்டிஸ் ஆசிரியர் டி ஏ வி நாதன், ஜின்னா, வழக்கறிஞர் கே எம் பாலசுப்பிரமணியம், பெரியார் & அம்பேத்கர்)


#DalitHistoryMonth

#தலித்வரலாற்றுமாதம்

#DharaviDalitHistory

Monday, March 31, 2025

புதிய ஆரம்பங்கள்


அவள் கண்களில் இனம் புரியாத மருட்சி. எப்போதும் அவள் என்னையும் என் முகத்தையும் நேரில் பார்த்து பேசுவதே இல்லை.அது அவள் என்னிடம் வேலை செய்பவள் என்ற ஒரு காரணத்தினால் மட்டும் அல்ல என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இந்தப் பெண்கள் நல்ல கட்டுமஸ்தான உடல்வாகுடன் திடகாத்திரமாக இருப்பார்கள் என்பது நான் படித்தப் பாடம். அப்படி எந்த விதமான திடகாத்திரமும் இவளிடம் இல்லை. நான் கேட்பதற்கு மட்டுமே பதில் சொல்லுவாள். அதுவும் ஒன்றிரண்டு வார்த்தைகளில் இருக்கும் அவளுடைய பதில். இந்த மாவட்டத்திற்கு பணி மாற்றம் கிடைத்தவுடன் இந்திய வரைபடத்தை எடுத்து வைத்துக்கொண்டு எங்கே இருக்கிறது இந்த இடம் ? என்று தேடிப்பார்த்தேன். பஞ்சாபிலிருந்து பிரிந்து தனிமாநிலமாகிவிட்ட அரியானாவில் இருந்தது இந்த மாவட்டம்.மேவாட் மாவட்டம்.( Mewat district). எந்த விதமான தொழில் அபிவிருத்திகளும் இல்லை. விவசாயம் மட்டுந்தான். பெரும்பாலும் எல்லா ஆண்களும் வாகன ஓட்டுநர்களாக இருந்தார்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தது இரண்டு ஏக்கர் நிலமாவது இருந்தது. இரண்டு ஏக்கர் நிலத்திற்கும் குறைவாக இருப்பவனுக்கு யாரும் தன் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க மாட்டார்களாம். அவள் தான் ஒரு நாள் இந்தச் செய்தியைப் பேச்சுவாக்கில் சொன்னாள். இரண்டு மாதங்கள் ஆனது அவள் சகஜமாக என்னுடம் இரண்டொரு வார்த்தைகள் பேசுவதற்கு.

அவளுடைய கதையை அவள் சொன்னாள். அவள் பெயர் ரத்னா. அவள் சொந்த ஊர் அசாமில் இருந்தது. அடிக்கடி லாரி ஓட்டிக்கொண்டு வரும் அவள் கணவன் நெடுஞ்சாலையில் இருக்கும் இவர்களுடைய தேநீர்க்கடையில்தான் லாரியை நிறுத்துவான். நேநீருடன் சேர்ந்து சுடச்சுட சப்பாத்தியும் கிடைக்கும். அவனை முதன் முதலாக அவள் பார்த்தபோது அவளுக்கு பத்துவயது கூட ஆகவில்லை. அவன் எப்போதும் அதிகாலையில் அல்லது இரவில்தான் வருவான். வந்தால் லாரியை நிறுத்திவிட்டு அவர்கள் தேநீர்க்கடையில் வெளியில் போட்டிருக்கும் கட்டிலில் படுத்துக்கொள்வான். ரத்னாவின் அம்மா அவனை விழுந்து விழுந்து கவனிப்பாள். எல்லாம் சுடச்சுட அவனுக்கு கிடைக்கும். எப்போது வந்தாலும் அவன் அவளுடைய அம்மாவுக்கு ஏதாவது வாங்கி வருவது வழக்கமாக இருந்தது. அவன் வந்துவிட்டால் இவளுக்கும் ஏக குஷியாக இருக்கும். ஏதாவது திண்பதற்கு கிடைக்கும் என்பதால். இரவில் மட்டும் அவளுக்குப் பயமாக இருக்கும். அவளைத் தனியாக தூங்க வைத்துவிட்டு கதவை வெளிப்பக்கமாக தாளிட்டு விட்டு அவளுடைய அம்மா பாயிருப்பாள். தம்பி, தங்கைகள் எல்லோரும் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு படுத்திருப்பார்கள். ஒருநாள் அப்படித்தான் இரண்டு வயது கூட நிரம்பாத அவளுடைய தம்பி நடுராத்திரியில் விழித்து அழுதுகொண்டிருந்தான். அம்மாவைத் தேடி. அவள்தான் மூத்தப் பெண். அவளுக்கு தூக்கம் வரவில்லை. அவனை எவ்வளவோ சமாதானப்படுத்திப் பார்த்தாள். அவள் சமாதானப் படுத்துவதைக் கண்டு கோபத்தில் அவனுடைய சத்தம் இன்னும் அதிகமானது. அவள் எழுந்துபோய்க் கதவைத் தட்டினாள். அந்தச் சாலையில் அவர்கள் வீடு மட்டும்தான். மற்ற குடியிருப்புகள் எல்லாம் மலையடிவாரத்தில் இருந்தன. அவள் தம்பியின் சத்தமும் அவள் கதவை இடித்தச் சத்தமும் சேர்ந்து காற்றைக் கிழித்துக் கொண்டு கதவின் இடுக்குகள் வழியாக பேரிரைச்சலுடன் அந்த நடுஇரவை அலற வைத்தது.

கதவு திறக்கவே இல்லை. அழுது அழுது அந்தச் சத்தத்தில் தொண்டைக் கட்டிக்கொண்டது அந்தச் சின்னப் பையனுக்கு. அவள் மடியில் அவன் பெருவிரலைச் சூப்பிக்கொண்டு படுத்திருந்தான். அவள் விரித்திருந்த கிழிந்தப் போர்வை நனைந்தது. அவள் அவனுடைய ட்டிராயரைக் கழட்டி விட்டு அவனைச் சற்றுத்தள்ளிப் படுக்க வைத்தாள். அவளுடைய பைஜாமாவும் நனைந்து போனது. அதிகாலையில் எப்படியோ தூக்கம் வந்து தொலைத்தது, அவளுடைய அம்மா வந்து இவள் தலைமயிரைப் பிடித்து இழுக்கும்வரைத் தூக்கம் கலையவில்லை.

..நல்லா திங்கறியே.. சொரணை இல்லை உனக்கு..இந்த வயதில் இப்படி படுக்கையை நனைச்சிருக்கியே நாயே’ என்று கத்தினாள். அம்மாவின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை. ‘படுக்கையை நான் ஈரமாக்கவில்லை.. பெரிசா கத்த வந்திட்டியே..கதவை வெளிப்பக்கமா பூட்டிட்டு நீ எங்கே போய் தொலைஞ்சே’ என்று கத்த வேண்டும் போலிருந்தது. அம்மா வெறிப்பிடிச்சவள் போல் தம்பி தங்கைகள் எல்லோரையும் அடித்துக் கொண்டிருந்தாள். அவளிடம் இப்போது என்ன சொன்னாலும் பிரயோசனமில்லை.

வெளியில் வந்தவுடன் கடைக்கு வேண்டிய பாத்திரங்களை எடுத்து வேகமாக கழுவி வைத்தாள். தண்ணீர்ப் பிடித்து நிரப்பினாள். அதுவரை அந்த லாரிக்காரன் வெளியில் கிடந்தக் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் அம்மாவின் துப்பட்டா காற்றில் அசைந்து கொண்டிருந்தது. அந்த துப்பட்டாவைப் பார்க்க பார்க்க அவளுக்கு லாரிக்காரன் மீது கோபம் வந்தது. அப்பா கொடுத்த சாய்க் கப்பை எடுத்துக்கொண்டு அவனிடன் போனாள். அவன் கண்விழித்திருந்தான். இவள் கைகளில் இருந்து சாய்க் கப்பை வாங்கியவன் இவள் கன்னத்தில் தட்டினான். பட்டென்று அவன் கைகளைத் தட்டி விட்டாள். தூரத்திலிருந்த அம்மா அவர்கள்இருவரையும் பார்த்தாள். இப்போது அம்மாவின் பார்வையை எதிர்த்து நின்று அவள் பார்த்தபோது அம்மா அவள் பார்வையைத் தாங்காமல் வீட்டுக்குள் போய்விட்டாள். இப்படித்தான் இந்த லாரிக்காரனின் உறவு இவர்கள் குடும்பத்துடன் ஆரம்பித்தது. அடுத்து 6 மாதம் கழித்து வந்தவன் ரூபாய் 2700 கொடுத்துவிட்டு இவளை அவனுடன் அழைத்துவந்துவிட்டான். தம்பி தங்கைகளை விட்டுவிட்டு அவளுடைய அப்பாவை விட்டுவிட்டு அந்த மலையடிவாரத்து காற்றை விட்டுவிட்டு அவனுடன் தனியாகக் கிளம்பிவர முடியாது என்று அவள் அழுதப்போது அவளுடைய அம்மாவும் சேர்ந்து அழுதுக்கொண்டிருந்தாள். லாரிக்காரன் அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறான், அவனுக்கு சொந்தமாக நிலமிருக்கிறது, சாப்பாட்டுக்கு இந்த மலையடிவாரத்தில் லாரிக்காரனிடமும் காட்டு இலாக்கா காரர்களிடமும் மாறி மாறி படுக்க வேண்டிய அவஸ்தை இருக்காது என்று அவளுடைய அம்மா சொன்னபோது அவளால் மறுத்துப் பேச முடியவில்லை.

அம்மா சொன்னபடியே அவனுக்கு 3 ஏக்கர் நிலமிருந்தது. வீட்டில் எல்லோரும் அந்த நிலத்தில்தான் உழைத்தார்கள். அவனுடன் பிறந்தவர்கள் மூன்றுபேர். இவன் தான் மூத்தவன். அவனுடைய அப்பா வயது 60 தாண்டிவிட்டது. இருந்தாலும் நல்ல வாட்டச்சாட்டமாக இருந்தார். இவளுக்கு சாப்பாட்டுக்கு எந்தக் குறையுமில்லை.

வயிறு நிறைய மூன்று நேரமும் சாப்பிடும்போதெல்லாம் வீட்டு ஞாபகம் வரும்.

வீட்டு நினைவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அவள் குறைத்துக்கொண்டாள்.

வீட்டை நினைத்தவுடன் அம்மாவின் நினைவு வரும் அம்மாவை நினைத்தால் இப்போது தன் கணவனாக இருக்கும் இவன் பக்கத்தில் அம்மாவின் துப்பட்டா காற்றில் அசைவது தெரியும். சில சமயங்களில் அவனுடைய வார்த்தைகள் அவளை அப்படியே பொசுக்கும். உச்சக்கட்ட ஆலிங்கனத்தில் அவள் தன்னை மறக்கும்போது ‘உன்னோட அம்மாவும் இப்படித்தான்’ என்று உதிரும் அவன் உளறல்கள்.. ..ஒரு மலைப்பாம்பு தன்னை இறுக்கிப்பிடித்து மூச்சு மூட்ட வைப்பது போலிருக்கும். பலம் கொண்ட மட்டும் அவனைப் பிடித்து கீழே தள்ளிவிட்டு எழுந்திருக்க முயலும் ஒவ்வொரு முறையும் அவன் பிடி இறுகும்.கண்களை மூடி கால்களை விரித்து சருகளாய் அவள் இலை அவனுடைய வெட்ப மூச்சில் தீப்பிடித்து எரியும். அவள் கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து கொண்டிருந்தாள்.

ஒருநாள் அவனுடைய தம்பி அவனுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தான். அவர்களின் அப்பா வந்து சமாதானப்படுத்தினார். தம்பிகள் மூவரும் அப்பா சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசியது

அவள் காதிலும் விழத்தான் செய்தது. இந்த ஊரில் வீட்டுக்கு வீடு இந்தக் கதைதான் என்பது அவளுக்கும் தெரிந்தே இருந்தது. ஆனால் ஏதாவது மாற்றம் நம் வீட்டிலாவது நடக்காதா என்ற நப்பாசை இருக்கத்தான் செய்தது.

‘நீ இதற்கு ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இருக்கிற 3 ஏக்கர் நிலத்தை நாங்கள் நாலுபேர் பங்கிட்டுக்கொண்டால் என்ன தேறும்? 3 ஏக்கர் நிலத்திற்கு குறைவா இருந்தா எந்தப் பெண் எங்களைத் திருமணம் செய்து கொள்வாள்? ..யோசிச்சுப் பார். எங்கள் அண்ணன் தம்பிக்கே இதிலே ஒன்னும் சங்கடமில்லைன்னா உனக்கென்ன வந்தது.. நானா இருந்தா என்னா என் தம்பிமாரா இருந்தா என்ன சொல்லு. திரெளபதி இருக்கலையா ஐந்து பேருக்கூட..’ அவன் சொல்லிக்கொண்டே இருந்தான். அவள் அழுதுக்கொண்டிருந்தாள். மறுநாள் அவன் லாரியை எடுத்துக்கொண்டு லோடு ஏற்றிக்கொண்டு பீகார் போய்விட்டான். அவள் வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் அன்றிரவை எண்ணிப் பயந்து கொண்டிருந்தாள். அவனுடைய தம்பி இருட்டில் அவளை நெருங்கி அணைத்தப்போது உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதொன்றும் அவளுக்கு நினைவில் இல்லை. அவள் அருகில் அந்த ஊர்ப் பெண்களின் கூட்டம்.

‘என்ன ரத்னா பயந்திட்டியா.. மூத்தவனை விட சின்னவந்தான் ரொம்ப நல்லவன்.அதிர்ந்து பேச மாட்டான். இந்தப் பாரு ,, நீ கத்தி மயக்கப்போட்டு விழுந்ததிலிருந்து ஒன்னும் சாப்பிடாமா உன் பக்கத்திலெயே

உட்காந்திருக்கான். மேவாட்டுக்கு வந்துட்டு இதுக்கு மாட்டேன்னா எப்படி வாழமுடியும் சொல்லு..’ பக்கத்து வீட்டு அஞ்சு சொல்லிக்கொண்டிருந்தாள். அவர்கள் வீட்டில் அவள் கணவனுடன் பிறந்தவர்கள் 5 பேர். அவள் கணவன் தான் இவளைத் திருமணம் செய்து கொண்டு பீகார் மாநிலத்திலிருந்து அழைத்து வந்தான். அண்ணன், தம்பிகள் எல்லோருக்கும் சேர்த்து எட்டு பிள்ளைகளைப் பெற்றிருந்தாள்.

மெதுமெதுவாக சின்னவனின் அமைதியும் அன்பானக் கவனிப்பும் அவளைச் சமாதானப்படுத்தியது. லாரிக்காரனிடமிருந்த முரட்டுத்தனம் இவனிடமில்லை. எல்லா வற்றையும் விட இவளுக்கு மனநிம்மதி கொடுத்தது.. இவன் எந்த நேரத்திலும்..

‘உன்னோட அம்மாவும் இப்படித்தான்’ என்று சொல்வதில்லை. சின்னவனின் குழந்தை அவள் வயிற்றில் வளர்ந்தது. வீட்டில் எல்லோருக்கும் சந்தோஷமாகவே இருந்தது. லாரிக்காரன் வெளிப்படையாக சந்தோஷப்படுவது போல காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் அவன் குமைந்து கொண்டிருப்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அதைப் பார்க்க பார்க்க அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. மலைப்பாம்பைப் பிடித்து அதன் தலையில் ஏறி நாட்டியம் ஆடுவது போல சந்தோஷம். அவன் வீட்டுப்பக்கம் வருவதையே தவிர்ப்பதும் அவளுக்குப் புரிந்தது. அவள் அதற்காகவெல்லாம் கவலைப் பட்டுக்கொள்ளவில்லை. அவன் வீட்டிலிருக்கும்போது வேண்டும் என்றே சின்னவனை அழைத்து அவனருகில் உட்கார்ந்து கொண்டாள். அந்தக் குழந்தைப் பிறந்தப்பின் அடுத்தவன் முறை வந்தது.

அவள் எதிர்பார்த்தது தான் என்றாலும் வரும்போது அந்த வலியை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பக்கத்தில் குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது.

இவனிடம் லாரிக்காரனின் முரட்டுத்தனமில்லை. சின்னவனின் மென்மையுமில்லை.

ஓர் அவசரம்.. அவசரம் .. அவசரம்.. பத்துநாள் பட்டினிக் கிடந்தவன் கஞ்சியை ஒரே வாயில் ஊற்றி மேலும் கீழுமாகக் கொட்டிக்கொண்டு நிற்கும் அவசரம் இவனிடம்.

இவள் முகத்தை அவன் நேர்க்கொண்டு பார்ப்பதே இல்லை. இவளும் அவன் முகத்தைப் பார்ப்பதில்லை. நான்காவது முறை வந்தப்போது இவள் உடல் கிழிந்து கிடந்தது. தைக்க முடியாதக் கிழிசலாய் எந்த உடம்பையும் போத்திக்கொள்ள லாயக்கு இல்லாமல் தொங்கியது. ஆத்திரத்தில் அவன் இவள் கிழிசல்களைப் பிடித்து இழுத்து சிதைத்தான். ‘அந்த இருட்டில் அவள் கதறல்…. அவளுடைய தலைமுடிக் கலைந்து முன்னால் விழுந்து ஆடியது. அவள் கண்களில் வெறித்தனம்…டேய்.. நான் உன் அம்மாடா.. உங்க அப்பனை எங்கே கூப்பிடு.. உன் அண்ணன்மாரைக் கூப்பிடு.. அவள் உடல்வேகமாக முன்னும் பின்னும் ஆடியது. எங்கிருந்து அவள் குரலுக்கு இத்தனை கொடூர சத்தம் வந்தது என்பது தெரியவில்லை. மறுநாள் பூசாரி வந்து மந்திரித்தார். அவள் அமைதியாக கட்டிலில் படுத்திருந்தாள். பக்கத்தில் அவளுடைய மாமனார் விசிறியால் அவளுக்கு காற்று வீசிக்கொண்டிருந்தார்.

நல்ல வாட்டச்சாட்டமான 60 வயதுக்கிழம். அந்த வீட்டிலேயே அதிகமாக உடல் உழைப்பு செய்பவர்.அந்தக் கிழத்தின் பார்வையைச் சந்திக்க விருப்பமில்லாமல் அவள் கண்களை மூடிக்கொண்டாள். லாரிக்காரன் வந்து அவள் உடலைத் தொட்டுப்பார்த்தான். குளிர்ந்திருந்தது அவள் உடல். அவன் கவலையுடன் அங்கிருந்து நகர்ந்தான். சின்னவனும் அடுத்தவனும் வந்து எட்டிப்பார்த்தார்கள். அவள் பக்கத்தில் அவர்களுடைய அப்பா இருப்பதைக் கண்டவுடன் பக்கத்தில் வராமல் வெளியில் போய்விட்டார்கள். கிழம் அவள் பக்கத்திலேயே இருந்தது. அவளை விட்டு அங்கிருந்து நகர்வது மாதிரியே தெரியவில்லை. அவளுக்கு வந்திருப்பது கிழவனின் மனைவியின் ஆவி அல்லவா. மறுநாள் அவளைப் போலீஸ் கைது செய்தது.

‘மாமனாரை இரவில் அரிவாளில் வெட்டிக்கொலை செய்த மனநிலை சரியில்லாத மருமகள்’ என்று பத்திரிகைகள் மேவாட் மாவட்டத்தில் நடந்தக்கொலையைப் பற்றி எழுதின. முதல் முறையாக அந்த ஊருக்கு போலீஸ் வந்தது. பத்திரிகைகாரர்கள் வந்தார்கள். ‘அண்ணன் தம்பிகளுடன் வாழ்க்கை நடத்தும் நவயுக திரெளபதிகள்..

மாமனாரின் ஆசைக்கும் மறுப்பு சொல்லாமல் எரியும் குடும்பவிளக்குகள்..

ஊடகங்களுக்கு பெருந்தீனியாகப்போனது மேவாட் மாவட்டத்தின் கதைகள்.’

அன்று என்னைப் பார்க்க வந்திருந்த சேவா சங்கத்தின் காரியதரிசியுடன் பேசிக்கொண்டிருந்தேன். ரத்னாவின் கதை என்னை மிகவும் பாதித்தது.

‘என்ன மேடம்.. எத்தனை வருடமா இந்தக் கதை நடக்கிறது இங்கே’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். “போலீஸ், சட்டம், நீதி இதெல்லாம் இருந்துமா..?’

அந்தக் காரியதரிசி பெண் என்னைப் பார்த்து சிரித்தாள். எழுத்துமூலமாகவோ, சொல் மூலமாகவோ ஒரு புகாரும் இதுவரைக் கிடையாது. நானும் எவ்வளவோ முயற்சி செய்துவிட்டேன் மேடம். இந்த ரத்னா கூட மனநிலைச் சரியில்லாமல் கொலை செய்ததாகத்தான் ஒத்துக்கொண்டிருக்கிறாளே தவிர உண்மைக் காரணம்

எதையும் சொல்வதில்லை. சரி.. நாளை இவர்கள் ஊரில் நடக்க இருக்கும் எங்கள் திரெளபதி நாடகம் பார்க்க வாருங்கள் என்றழைத்தாள். ஊருக்கு ஏற்ற நாடகம்தான் என்று எண்ணிக் கொண்டே வருவதாக சம்மதம் தெரிவித்தேன்.

அந்த நாடகத்திற்கு பெண்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. ஊரின் முக்கியஸ்தர்களுக்கு மட்டும் நாற்காலிகள். மற்ற ஆண்களுன் பெண்களும் தரையில் உட்கார்ந்திருந்தார்கள். குழந்தைகளில் ஒன்றிரண்டு பெண் குழந்ததைகள் மட்டும்தான் இருந்தார்கள். அந்த தலைகீழ் விகிதத்தைப் பார்க்கும்போது அந்த ஊரின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை என்னால் கற்பனைச் செய்து கொள்ளவே பயமாக இருந்தது.

‘ திரெளபதியின் துகிலை உரியும்போது அங்கே கூட்டத்தில் மயான அமைதி..

பக்கத்தில் இருந்த மரத்தின் கிளையிலிருந்து சேலைகளை ஒருவர் முடிச்சுப் போட்டுக்கட்டி துச்சாதனன் இழுக்க இழுக்க அனுப்பிக்கொண்டிருந்தார். அதைப் பார்க்க சிரிப்பாக இருந்தது. ஆனால் அங்கிருந்த மக்கள் யாரும்

மரக்கிளையிலிருந்து வந்து கொண்டிருக்கும் சேலைகளைப் பார்க்காமல். .’க்ருஷ்ணா..க்ருஷ்ணா’ என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள். அடுத்தக் கட்டம்.. திரெளபதி சபதம் செய்துகொண்டிருந்தாள். ஆண்தான் பெண் வேடமிட்டிருந்தார். சபதம் செய்யும்போது திரெளபதியின் குரலில் ஆணின் சத்தம் தொனித்தது. அதுவரைப் பெண்குரலில் பேசிக்கொண்டிருந்தவர் வீரவசனம் பேசும்போது தன்னை மறந்து ஆண்குரலில் வீரத்துடன் அங்குமிங்கும் நடந்து கொண்டு சபதம் செய்யும் காட்சி எனக்கு வேடிக்கையாக

இருந்தது. பெண்களின் கூட்டத்திலிருந்து கேவி கேவி அவர்கள் அழும் குரல்கள் வந்தன. அந்தக் காட்சிக்கு அழாத ஒரே பெண் நான் மட்டும்தான் என்பது அதன் பின் நினைவுக்கு வந்தது.

மறுநாள் அந்தக் காரியதரிசி வந்திருந்தாள். நான் அவர்களின் நாடகத்தைப் பார்த்ததில் அவளுக்கு ரொம்பவே சந்தோஷம்.

நாடகம் எப்படி இருந்தது மேடம்’

அவள் கேள்விக்கு நான் நேரடி பதில் சொல்லாமல் ‘எத்தனை வருஷங்கள் இந்த நாடகம் நடத்துகிறீர்கள்?’ என்று கேட்டேன்.

’35 வருஷமா மேடம்’

‘ம்ம்ம் இந்த நாடகத்திலே இந்த ஊரு திரெளபதிகளுக்கு என்ன மெசஜ் கொடுக்கறீங்க?’ ‘என்ன மேடம் இப்படி கேட்டுட்டீங்க.. திரெளபதி வந்த ஒவ்வொரு காட்சியிலும் இந்த ஊரு பெண்கள் எப்படி அழுதார்கள்னு நீங்க நேரிலேயே பாத்தீங்களே..’

‘அப்போ 35 வருஷமா இந்த திரெளபதிகளை அழ வச்சதுதான் உங்க நாடகத்தின்

வெற்றின்னு சொல்ல வர்றிங்களா’

‘ அழ வச்சது மூலமா இந்த நாடகம் அவுங்களுக்கு ரொம்ப பெரிய உதவியைச் செய்திருக்கு மேடம்’

‘வாட் டூ யு மீன்’

‘யெஸ் மேடம். அழறப்போ மனசிலிருக்கும் பாரம் குறையுமில்லியா’

எனக்கு அவளுடைய பதிலைக் கேட்டு சிரிப்பு வந்தது.

‘அழறது மனப்பாரத்தைக் குறைக்கும்தான். ஒத்துக்கறேன். ஆனா அதுவே பிரச்சனைக்குத் தீர்வாகி விட முடியுமா’

‘எங்களால் என்ன செய்ய முடியும் சொல்லுங்க மேடம்..’

‘அட என்ன இப்படி சொல்லிட்டீங்க.. நீங்கள் எல்லாம் நினைச்சா நிறைய விஷயங்களை இந்த மக்களுக்குச் சொல்ல முடியும்.. இதே திரெளபதி கதையை பழைய பாண்டவர் சபதத்திலிருந்து மாத்துங்க. பாண்டவர்களே துகிலுரியும் இந்த திரெளபதிகளுக்கு பாண்டவர்களின் சபதம் சரிப்படுமா யோசியுங்க. புதுசா .. முடியும் உங்களால்.. இவுங்களுக்கு ஏத்த மாதிரி.. பாஞ்சாலி சபதத்தை மாத்துங்க..’

அந்தப் பெண் அமைதியாக நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

அதன் பின் நானும் வேலையில் பிஸியாக இருந்துவிட்டேன்.

அடுத்து ஆறுமாதங்கள் கழித்து பக்கத்து ஊரில் ‘நவயுகத் திரெளபதி’ நாடகம் போட்டார்கள். சேவாசங்கத்திலிருந்து நான் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்புக்கு மேல் அழைப்பு. நல்ல குளிர். சால்வையை இழுத்துப்போர்த்திக் கொண்டு நானே காரை ஓட்டிக்கொண்டு போனேன். வழக்கம்போல பெண்களின் கூட்டம். வழக்கம் போல காட்சிகள். கடைசிக் காட்சி திரெளபதி சபதம்…

‘எங்கே அந்த வில் விஜயன்..? என்னைத் தன் மனைவியென வென்றெடுத்து வந்தவன் வென்று வந்தப் பரிசு பெண் என்று சொல்லாமல் பொருள் என்று சொன்னானே!

ரத்தமும் சதையும் துடிப்பும் கொண்ட பெண் என்ன ஜடப்பொருளா? பொருள் என்பதால் அல்லவா அண்ணன் -தம்பிகள் அனைவருக்கும் உரியதென அன்னைகுந்தி அறியாமல் சொல்லிவிட்டாள். அறியாமல் சொல்லியதையே அறமாக்கி அண்ணன் தம்பிகள் பெண்டாள அனுமதித்த அந்தப் பாவி அர்ச்சுணன் எங்கே .. கொண்டு வாருங்கள் அவனை..காட்ட வேண்டும் அவனிடம் பெண்ணின் வீரம் என்ன என்பதை.’

‘அண்ணன், தம்பிகள். பெரியப்பா, ஆசான் எல்லா உறவுகளையும் தருமத்தின் முன்னால் வென்றெடுக்க போர்க்களத்தில் கீதை உபதேசித்த கண்ணன் எங்கே? கொண்டுவாருங்கள் அவனை. எங்கே போனது அவன் கீதையின் உபதேசம்..

என்னை ஐவருடன் படுக்க ஆணையிட்ட போது எங்கே போனது கண்ணனின் உபதேசம்..? கீதையை உபதேசித்த அவன் நாக்கைப் பிடித்து இழுத்து அறுக்கும்வரை என் குரல் அடங்காது.. கொண்டு வாருங்கள் அவனை…’

நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். பெண்கள் கூட்டத்தில் அமைதி.. அவர்கள் கண்ணீரைத்துடைத்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். கொஞ்ச நேரத்தில் அங்கே கல்லெறி,, நாடகத்தில் தொங்கிய தீரைச்சிலைகளில் தீ பற்றிக்கொண்டது. கலவரம் வெடித்தது.

மறுநாள் அங்கே 144 தடை யுத்தரவு அமுலுக்கு வந்தது.

சிலர் நாடகத்திற்கு ஆதாரவாகவும் பலர் எதிர்ப்பாகவும் மாறியதால் ஏற்பட்ட கலவரம்.

நாடகத்தைப் புதிதாகப் போடச்சொன்னது நான் தான் என்ற செய்தியை பெருமையுடம் அந்த சேவா சங்கத்தின் காரியதரிசி சொல்லப் போக அதுவே எனக்கு வினையாக வந்த வாய்த்தது.

மறுநாள் என் மேலதிகாரியிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது.

‘ உங்களுக்கு என்று புதிதாக ஒரு மாவட்டத்தைத் தான் இனிமேல் உருவாக்கனும்.

வாட் இஸ் திஸ் .. எங்கே போனாலும் ஒரு கலவரம்..அதில் கட்டாயம் நீங்க சம்மந்தப்பட்டிருக்கிறிர்கள்! பஞ்சமி நில மீட்புனு போவீங்க.. இருளர்களின் போராட்டம்னு கூட்டத்திற்கு தலைமைத்தாங்க போவீங்க.

ஆதிவாசிகளின் நில உரிமைப் போராட்டம்னு ஒரு சங்கத்தை ஆரம்பிச்சு விட்டுட்டு வந்திருவீங்க..! உங்களை எங்கே போஸ்டிங் பண்ணினாலும் அங்கே புதுசா நீங்க என்ன தலைவலியை எங்களுக்கு கொண்டு வரப்போறிங்களோனு பயமா இருக்கு..நீங்க அரசாங்க வேலை செய்யப் போறிங்களா இல்ல பொதுநலச்சேவை செய்யப் போறீங்களா..?’

‘இரண்டையும் நான் ஒன்னாத்தான் சார் நினைக்கேன்’

அவர் தலையப் பிடித்துகொண்டு நாற்காலியில் உட்கார்ந்தார்.

‘சாரி .. உங்களுக்குனு எந்த டிபார்ட்மெண்டையும் கொடுக்கற மாதிரி இல்லே.

எந்த மாவட்டத்திலும் போஸ்டிங் இல்லை.. டிபார்ட்மெண்ட் இல்லாத மாவட்டம் இல்லாத எந்த வேலையும் செய்யாத அரசாங்க அதிகாரியாக இருங்க..’

” நன்றி சார்..’ என்று நான் சொன்னவுடன் அவர் என்னை நிமிர்ந்துப் பார்த்தார்.

இப்போது நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் சிரித்தோம். அவருக்கும் தெரியும்

அவரால் முடியாதப் பல காரியங்களை நான் ஆரம்பித்து வைத்துவிட்டேன் என்பது.

அதில் அவருக்கும் பெருமைதான். ஆனால் அவருடைய நாற்காலி அதை ஏற்றுக்கொள்ள இடம் கொடுக்கவில்லை. நாற்காலிக்கு அருகில் அவரும் நாற்காலியை விட்டு ரொம்ப விலகி நானும் நின்று கொண்டிருந்தோம்.

– மார்ச் 2006

பிகு:

கதைக்கரு: இன்றும் வட இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் மன்சாம் மால்வா பகுதிகளில், அரியானா மாநிலத்தில் மேவாட் மாவட்டத்தில் இந்த நவயுக திரெளபதிகளின் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பஞ்சாப் மொழியின் மிகச் சிறந்த எழுத்தாளரான ஞானபீட விருதுபெற்ற பேராசிரியர் குர்தியல் சிங் (Gurdial Singh) தன்னுடைய புதினங்களில் நாடகங்களில் பெண்ணுக்கு இழைக்கப்படும் இக்கொடுமைகளைப் பற்றி நிறையவே எழுதியிருக்கிறார். அண்மையில் உத்திரபிரதேசத்தில் நடந்த இம்ரானாவின் செய்திக்குப் பிறகு இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இந்த அவலங்கள் நடப்பது தெரியவந்துள்ளது. திரெளபதி நாடகத்தைப் பார்த்து அந்தப் பெண்கள் கண்ணீர் விடும் செய்தியை ஓர் ஆய்வறிக்கை பதிவு செய்துள்ளது. இந்த உண்மைச் செய்திகளே இக்கதையின் கரு. நன்றி. –



Saturday, March 29, 2025

கருவாச்சி தான் நம் அசல்

இவள் பொய்க்காரி அல்ல.

இவள்தான் நம் மண்ணின் நிஜக்காரி.

இவள்தான் அசல்.

மற்றதெல்லாம் நாம் புத்திக்கெட்டுப்போயி ஏமாந்து

இதுதான் அழகுனு பொய்யான அழகியலில் விழுந்து நம் அசல்களைத் தொலைத்தக் கதை.

கறுப்புதான் எனக்குப் பிடிச்சக்கலரு..னு ஒரு சினிமாப்பாடலில்

'நம்மூரு சூப்பர் ஸ்டாரு

ரஜினிகாந்தும் கருப்புதான்

கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு" 

என்ற வரிகள் பிரபலமானது.

அதேபாடலில் வரும் இன்னொரு வரி

"கண்ணு முழி கருப்புதான்

கற்பு சொல்லி தந்த அந்த

கண்ணகியும் கருப்புதான்"

என்ற வரி உச்சரிக்கப்படவே இல்லை?!!!!! ஏன்?

நம் பொதுஜன சமூக உளவியல் இது.

தோலின் நிறம் என்பது அந்த நாட்டின் தட்பவெட்பம் சார்ந்தது. எல்லோருக்கும் தெரியும் இது.ஆனால் பெண் மட்டும் இவர்களுக்கு கறுப்பாக இருக்கவே கூடாது!!

 கருப்புதான் எனக்குப் பிடிச்சக் கலரு பாடல் ஒரு பெண் , ஆண் குறித்துப் பாடுவதாக வரும் பாடல்.

அதாவது ஆணின் கருப்பு நிறம் அழகு, கம்பீரம், வீரத்தின் அடையாளம், இத்தியாதி இத்தியாதி..!

இப்பாடல் வெளிவந்தப்போது 2009 ல் 'இந்தியக் கருவாடும் வெள்ளை பன்னிகளும்' என்றொரு கட்டுரை எழுதினேன்.

ஆனால் 'பொய்க்காரி '

அந்தோணிதாசன் பாடல்

' கருவாச்சி கருவாச்சி

கண்ணால எனப்பாரு

ஒருவாட்டி'

பாடல் முழுக்கவும் நம் மண்ணின் மணம் கமழும் கருவாச்சி...

கருவாச்சி வாழ்க.

ட்கருவாச்சி பாடல் ஹிட் ஆகணும்..

பட்டித்தொட்டி எங்கும் ஒலிக்கணும்.

ஆண்களின் கைபேசியில் 'Caller tune ' ஆகணும்.

அழகியல் / பெண்ணின் நிறம் குறித்த பொய்யான கட்டமைப்புகள் மாறணும்.

கருவாச்சிதான்  அசல்.

பாடல் எழுதி இசை அமைத்திருக்கும் அந்தோணிதாசுக்கு வாழ்த்துகள்.

பாடல் கேட்க:

https://youtu.be/0o71rF7gUSg


#பொய்க்காரி

#கருவாச்சிபாடல்

#அந்தோணிதாசன்

#Poikkaari

#Anthonydaasan

Sunday, March 9, 2025

சங்க காலத்தில் சிம்பொனி



 சங்க காலத்தில் ஒரு சிம்பொனி...

அதன் பெயர்

' பல்லியம்'.

சிம்பொனி என்றால் என்னை மாதிரி ஆட்களுக்கு புரியற மாதிரி 

" சிம்ஃபொனி என்பது மேற்கத்திய க்ளாசிக்கல் இசை மரபில், பல்வேறு இசைக் கருவிகள் ஒன்றாக இசைக்கப்படும் ஓர் ஒத்திசைத் தொகுப்பு எனலாம்."

ஓகே.

இதே மாதிரி  பல இசைக்கருவிகள் சேர்ந்து இசையைக் தொழிலாக கொண்ட இயவர்கள் கூட அறிந்திராத பல இசைக்கருவிகளின் இசை ஒலிக்கின்ற மிகப் பழமையான ஊர் என்று புறநானூறு சொல்கிறது.


"இயவரும் அறியாப் பல்லியம் கறங்க

அன்னோ பெரும் பேதுற்றன்று இவ்வருங்கடி மூதூர்..."

புறம் 336.


பல்+இயம்= பல்லியம்

இயம் என்பது கருவிகளைக் குறிக்கும் சொல். பல கருவிகள் இணைந்து ஒலிக்கும் இசை 

" பல்லியம்"

ஆதாரம்: சங்க இலக்கியத்தில் இசை.-    இரா. கலைவாணி.

Tuesday, February 25, 2025

மாற்றுத் தொன்மங்களை அர்த்தமாக்குபவர் புதியமாதவி


"புதிய மாதவி தனது கவிதைகளில் இந்தியத் தொன்மங்களுக்குப் பதிலாகத் தமிழ் இலக்கிய மரபிலிருந்து அதற்கேயுரிய தொன்மங்களையும் நிகழ்வுகளையும் தேடிக்கண்டுபிடித்துப் பயன்படுத்துவதன் மூலம், மற்றவர்களின் கவிதைகளிலிருந்து தனது கவிதையை -கவிதை பாணியை வேறுபடுத்திக் காட்டுகிறார். "

பேரா. அ. ராமசாமி

இந்தக் கவிதையை (கீழ்கண்ட கவிதையை) மாணாக்கர்களிடம் வாசிக்கக் கொடுத்தபோது அவர்கள் புரியவில்லை என்று சொன்னார்கள். புரியவில்லை என்றால் எது புரியவில்லை என்று கேள்வியை எழுப்பினேன். அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. “ கவிதை, நவீனக் கவிதை புரியவில்லை” எனச் சொல்லும் பலரிடமும் ‘எது புரியவில்லை ‘ என்ற கேள்விக்குப் பதில் இருப்பதில்லை. மரபான முறையில் செய்யுளை அர்த்தப்படுத்துவதற்காகத் தேடிக் கண்ட்டையும் அருஞ்சொல் எதுவும் இக்கவிதையில்  இல்லை. அப்படி இருந்தால் அதன் பொருளைச் சொல்வதன் மூலம் கவிதையை அர்த்தப்படுத்தலாம். அப்படிப் பொருள் சொல்வது அல்லது அர்த்தப்படுத்துவதுதான் கவிதையின் புரிதலா? என்ற அடுத்த கேள்வி எழும்


"ஆடுபாம்பே

அந்த நாகப்பாம்பு அடிக்கடி என் தோட்டத்திற்கு வருகிறது

பிச்சிப்பூவின் வாசனைக்கு வருகிறது என்கிறான்

தோட்டக்காரன்


பாம்பாட்டியை அழைத்து மகுடி வாசித்து

பெட்டிக்குள் அடைத்துவிடத் திட்டமிட்டேன்.

அவனுக்குப் புரியவில்லை இப்போதெல்லாம்

பாம்புகள் மகுடி இசைக்கு மயங்குவதில்லை என்பது

நேற்று அதே பாம்பு என் கழுத்தில் மாலையாகி

என்னை அலங்கரித்தது

அந்த மயக்கம் தெளிவதற்குள் என் அரைஞாண் கயிற்றில்

சுற்றிக்கொண்டு ஆட்டம் போட்டது.

விடிவதற்குள் பாம்பை அடக்கிவிட வேண்டும்.

வெறிகொண்டு எழுகின்றேன்.

கண்விழித்துப் பார்க்கும்போது பாம்பு காணவில்லை

என் உடலில் இருந்து சிதறிய

நீலநிற ஒளியில் அந்த அறை எங்கும்

ஆகாயத்தின் துண்டுகள் சிதறிக் கிடந்தன."


இது புதிய மாதவியின் ஒரு கவிதை. எழுத்து வெளியிட்ட மௌனத்தின் பிளிறல் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.


கவிதைச் செயலை அறிதல் அல்லது புரிதல் என்பதைத் தொடங்க அதன் தலைப்பு தொடங்கி நகர்ந்துகொண்டே இருக்கும் செயலின் வினையைப் பின்பற்றவேண்டும். இதனைக் கவிதையை ரசித்தல் என்றுகூடச் சொல்லலாம். புதிய மாதவி இந்தக் கவிதையில், கவிதையின் தலைப்பு தொடங்கி ஒவ்வொரு வரியிலும் “பாம்பு” நகர்ந்துகொண்டே இருக்கிறது என்பதாகக் கவிதைச் செயலை உருவாக்குகிறார். பாம்பு, பிச்சிப்பூவின் வாசனை, பாம்பாட்டி, மகுடி இசை, கழுத்தில் வாசம், இடுப்பில்  அரைஞாண்கயிறு எனப் பல நிலைகளில், பல உருவங்களில் பாம்பு நகர்கின்றது. அப்படி உருமாறும்போது, பாம்பு வெறும் பாம்பாக இல்லாமல், இன்னொரு அரூபமாக - கருத்தாக- அக்கருத்தின் விளைவாக அல்லது செயலாக மாறிக் கவிதைச் செயலை முழுமையாக்க நினைக்கிறது. அக்கவிதைச் செயல் உடலின் நிறத்தை நீலவண்ண ஆகாயமாகவும், அதில் ஜொலிக்கும் நட்சத்திரக்கூட்ட்த்தின் சேர்க்கையையும் காட்சிப்படுத்துகிறது. இப்படியான காட்சிப்படுத்தலை நினைத்துக்கொள்ளும் ஒரு பாத்திரம் அக்கவிதைக்குள் வாழ்கிறது அல்லது இயங்குகிறது எனப் புரிகின்றபோது கவிதை ரசனைக்குரிய ஒன்றாகவும், அக்கவிதைக்குள் இயங்கும் மனிதத் தன்னிலை ஒருவிதச் சிறப்பான மனநிலைகொண்ட தன்னிலையாகவும் ஆகிவிடுகிறது.


இந்தத் தன்னிலை கவி புதிய மாதவியா? என்ற கேள்வியைக் கேட்டு, ‘ஆம்’ என்று விடையை உருவாக்கிக்கொண்டால் கவிதையின் வாசிப்புத்தளத்தை ஒருநபருக்குள் சுருக்கிவிடும் வேலையைச் செய்தவராக நாம் ஆகிவிடுவோம். எந்தவொரு பொருளும் உருவாக்கியவருக்கு மட்டுமே உடைமையானது என்ற நிலையிலிருந்து உருவாகும் மனநிலை அது. அதற்குமாறாக, அந்தக் கவிதைச் செயலும், அதனைச் செய்பவரும் நானாகவும், என்னைப்போன்ற இன்னொருவராகவும், ஒருவருக்குப் பதிலாகப் பலராகவும் ஆகமுடியும் என நம்பினால் அந்தக் கவிதை, பலரின் கவிதையாக மாறிவிடும்.


நவீனத்துவக் கவி ஒருவரால் எழுதப்படும் ஒரு நவீனக் கவிதையை அவரின் கவிதையாக இல்லாமல், பலரின் கவிதையாக ஆக்குவதற்கு முதல்படியாகச் செய்யவேண்டியது  அக்கவிதைக்குள் இயங்கும் குறியீட்டுச் சொற்கள் தரும் அர்த்தத்தை அதன் நேரடிப்பொருளில் மட்டும் யோசிக்காமல், அவரவர் அறிவுத் தளத்திற்கேற்ப நகர்த்தவேண்டும் என்பதே. அப்படி நகர்த்திவாசிக்கும்போதுதான் கவிதையின் பரிமாணங்கள் விரிவடையும். கவிதைக்குள் இருக்கும் குறியீட்டுச் சொற்களுக்குக் கவி உருவாக்கிய சூழல் அர்த்தம் ஒன்று இருக்கும். அதைக் கண்டுபிடித்துக் கொள்வதும், அதிலிருந்து வாசிப்பவர் உருவாக்கும் சூழல் அர்த்தத்திற்கு நகர்த்துவதும் கவிதைச் செயலில் விரிந்த பரிமாணம். இப்படியொரு விரிந்த பரிமாணம் கவிதை வாசிப்பில் இருப்பதால்தான், கவிதை வாசிப்பும் கவிதை எழுதுவதற்கிணையான செயலாக ஆகிறது என்கிறோம்.


குறியீடுகளை அதிகம் பயன்படுத்தும் இலக்கியவடிவம் கவிதை. எல்லாக் குறியீடுகளும் எல்லாருக்கும் நேரடியாகச் சூழல் அர்த்தங்களைத் தந்து விடுவதில்லை. ஒரு சொல்லின் குறியீட்டு அர்த்தம் என்பது எந்தத்துறை சார்ந்த பயன்பாடு என்பது தெரியாத நிலையில் அந்தச் சொல்லைக் கடத்தல் இயலாமல் போய்விடும். ”விரிவாகச் சொல்லக்கூடாது; விளக்கிச் சொல்லக்கூடாது; ஒற்றைச் சொல்லின்வழியாக வாசிப்பவர்களின் மனதை வேறொரு வெளிக்கும் காலத்திற்கும் அழைத்துச் செல்லும் தன்மைகொண்டது கவிதை” போன்ற நெருக்கடிக்குள் தவிக்கும் கவி, அதனைச் செறிவாக்கவே நினைக்கிறார். செறிவாக்கும் மனநிலையில் தான் ஒரு கவிதையில் மையமாக ஒரு சொல்லை உருவாக்குகிறார். ஆனால் அதே ஒரு சொல் கவிதைகளை வாசிக்கும்போது பலருக்கும் தடைகள் என்ற  நினைப்பையும் உண்டாக்கும். அந்தத் தடையைத் தாண்டிவிட்டால் கவிதையைப் போல வாசிப்பு அனுபவம் தரும் இன்னொரு இலக்கியவடிவம் இல்லையென்றே சொல்லலாம்.


மரபுக்கவிதைகளும்கூட குறியீடுகளைப் பயன்படுத்தவே செய்தன. உவமை, உள்ளுறை, உருவகம் போன்ற அணிகளாக அறியப்பட்டவையே நவீன கவிதையில் குறியீடுகளாகவும் படிமங்களாகவும் ஆகிவிடுகின்றன. அத்தோடு அவை உருவாகும் களன்களும் விரிவாகியிருக்கின்றன. வினை, பயன், மெய், உரு என்ற நான்கின் அடிப்படையாக உவமை உருவாகும் என வரையறைகள் இருப்பதால் மரபுக்கவிதை வாசகர்களுக்குப் புரிதலில் பெரிய அளவு சிக்கல் ஏற்படுவதில்லை. அத்தோடு அவை அறியப்பட்ட வரலாறு, தெரிந்த தொன்மம், படித்த நிலவியல், வாழ்ந்தபண்பாட்டுத்தளங்கள் என அறிந்த நிரந்தரங்களிலிருந்தே பெரும்பாலும் உருவாக்கப்படுகின்றன. ஆனால் நவீனக் கவிதைகள் உருவாக்கும் குறியீடுகள் அறியப்பட்டவைகளாக மட்டும் இருப்பதில்லை. சமகால அரசியல், வரலாறு, நிலவியல், பண்பாட்டுக் கூறுகளை மட்டுமல்லாமல் அவற்றால் ஏற்படும் முரண்பாடுகளையும் எழுப்பும் கேள்விகளையும் குறியீடுகளாக்குகிறார்கள் கவிகள், அந்தக் குறியீடுகளைக் குறிப்பான பின்னணியில் நிறுத்துவதற்காக அவர்களின் மனவெளிக்குள் உருவாகும் காட்சிக்கூறுகளைப் படிமங்களாக மாற்றுகிறார்கள். அப்படிமங்கள் விரிவான தளத்திற்கு வரும்போது வெவ்வேறு அர்த்தங்களைத் தருவனவாக மாறிவிடும் வாய்ப்புகள் இருப்பதால், கவிதையின் புரிதல் மேலும் சிக்கலாக மாறிவிடுகிறது. இவையெல்லாம் கவிதைகளின் பொதுவான புரிதல் சிக்கல்கள். இவையில்லாமல் சில கவிகளின் பாணிகாரணமாகச் சிறப்பான தடைகளும் சிக்கல்களும் உருவாவதும் உண்டு.


நவீனத் தமிழ்க் கவிதைகளில் இடம்பெறும் குறியீடுகளிலும் படிமங்களிலும் பெரும் மாற்றத்தைத் தொடங்கிவைத்த இலக்கியப்போக்குகளாகத் தலித்தியமும் பெண்ணியமும் இருக்கின்றன.  இவற்றின் வரவால், அதுவரை அதிகமாகப் பயன்பட்டுவந்த இந்தியத்தனம்/ இந்து சமயத்தன்மைகொண்ட  புராணப்பாத்திரங்களும் தொன்ம நிகழ்வுகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டு வட்டாரத்தலைவர்களும் குறிப்பான வெளிகளின் நிகழ்வுகளும் படிமங்களாக மாறின. புதிய மாதவி தனது கவிதைகளில் இந்தியத் தொன்மங்களுக்குப் பதிலாகத் தமிழ் இலக்கிய மரபிலிருந்து அதற்கேயுரிய தொன்மங்களையும் நிகழ்வுகளையும் தேடிக்கண்டுபிடித்துப் பயன்படுத்துவதன் மூலம், மற்றவர்களின் கவிதைகளிலிருந்து தனது கவிதையை -கவிதை பாணியை வேறுபடுத்திக் காட்டுகிறார். அப்படிப்பட்ட கவிதைகள் பலவற்றை அவரது மௌனத்தின் பிளிறல் தொகுப்பில் வாசிக்க முடிகிறது. சிவதாண்டவம், ??? சிவனின் வெற்றி, ஓம் நமச்சிவாய, பராசக்தி சிவகாமி ஆனாள், புனிதவதி தொலத்த மாங்கனி, மூவுடையா, நான்முகன், திருமகளாய் நானும், விறலியின் சபதம், நெய்தல் தலைவி, பாம்பாட்டி இந்தத் தலைப்பில் இருக்கும் கவிதைகள் எல்லாம் அத்தகையன. இன்னொரு கவிதையை உங்களுக்கு வாசிக்கத்தருகிறேன். அதன் தலைப்பு : காக்கைகள்


விழித்திருக்கும்போதும் தூக்கத்திலும்

என்னைத் துரத்துகின்றன

காக்கைகள்

தனியாகவோ கூட்டமாகவோ.


விழித்திருக்கும்போது

சிறகுகளை விரித்து

என்னைச் சிறைப்பிடிக்க வருகின்றன

தூக்கத்திலோ என் கபாலத்தைப் பிளந்து

நினைவுகளின்

ஒவ்வொரு ரகசிய அறைக்குள்ளும்

பூட்டுகளை உடைத்துக் கொண்டு

புகுந்துவிடுகின்றன.

அணுஅணுவாய்க் கொத்திக் குதறி

சிடுக்குகளை மேலும் சிடுக்குகளாக்கி

நரம்பு மண்டலத்தை நாசப்படுத்தி விடுகின்றன

என் செயல்பாடுகளை என் கட்டுப்பாடுகளை

இழந்துவிடும் அச்சத்தில்

கனவுகளை விலக்கி வைக்க நினைத்து

தோற்றுப் போகிறேன்.

என் தோல்வியைத்

தன் வெற்றிக்கு அடையாளமாக்கி

விழா எடுக்கின்றன காக்கைகள்


என் முப்பாட்டி காக்கைப் பாடினிக்கு

விருந்தினர் வருகையை

அறிவித்த காக்கைகள்

இப்போதெல்லாம் மாறிவிட்டன

மனிதர்களைப் போல

===================

இந்தக் கவிதையை வாசிக்க தமிழ்ச்செவ்வியல் கவிதைத் தொகுப்பிலிருக்கும் காக்கைபாடினி நச்செள்ளையின் 12 கவிதைகளையும் வாசித்திருந்தால் நல்லது. சேரமன்னன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பாடிய பதிற்றுப்பத்தில் 10 கவிதைகளில் நிலவியல் சார்ந்த தகவல்கள், அவனின் பெருமைகள், வீரம், இல்லறவாழ்வில் பின்பற்ற அறம் போன்றன வெளிப்படுகின்றன.  இன்னொரு புறப்பாட்டில் தான் ஈன்ற மகன் முதுகில் புண்பட்டு உன் மகன் இறந்துபட்டான் என்று கேள்விப்பட்டுப் போர்க்களம் சென்று தேடச் சென்ற ஒரு தாயைக் காட்டுகிறார். அச்செய்தி உண்மையாயின் அவனுக்குப் பாலூட்டிய ‘ முலையறுத்திடுவேன்’ என்பது அவளது சபதம். ஆனால் மகனோ, உடல் முழுக்கச் சிதைந்து கிடந்தான். அதைக்கண்டு “ ஈன்றஞான்றினும் பெரிது உவந்தன்றே” என வியப்பவளாக இருக்கிறாள். இதையும் கூட நீங்கள் வாசிக்காமல் விட்டுவிடலாம். ஆனால் நச்செள்ளையின்

குறுந்தொகைப்பாடலை (210),

திண்தேர் நள்ளி கானத்து அண்டர்

பல்ஆ பயந்த நெய்யின் தொண்டி

முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு

எழுகலத்து ஏந்தினும் சிறிது - என்தோழி

பெருந்தோள் நெகிழ்ந்த செல்லற்கு

விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே


என்ற ஆறுவரிகளின் கவிதைச் செயலை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். தலைவனின் வரவைச் சொல்லும் காக்கைக்குப் பலியாக - தனது மகிழ்ச்சியின் வெளிப்பாடாகச் சிறப்பான உணவை விருந்தாகத் தர நினைக்கிறாள் அந்தக் கவிதையின் செயல்படு பாத்திரமாக இருக்கும் தோழி. நச்செள்ளையால் கொண்டாடப்பட்ட காக்கைகள் கூட நிகழ்காலத்தில் பெண்களுக்கு ஆதரவாக இல்லை; எதிர்நிலையிலேயே இருக்கின்றன என்பது புதிய மாதவி உருவாக்கும் குறியீட்டின் எதிர்நிலை. தலைவனைப் பிரிந்திருக்கும்போது ஆறுதலாக இருந்த காக்கைகள் இப்போது இல்லை. அந்தக் காக்கைகள் மனதில் தோன்றும் அலைகளாகவும் நினைவுகளாகவும் மாறிவிட்டன. தனித்திருக்கும் ஒரு பெண்ணிற்குத் துன்பங்களையே வலிகளையே தருகின்றன. இரவு பகல் எனக் காலம் பார்க்காமல், என்னுடலுக்குள் புகுந்து ரணப்படுத்துகின்றன; கொத்தித்துளைத்து எனது தோல்வியில் அவை கூத்தாடுகின்றன என்கிறாள் தனிமையில் இருக்கும் ஒருபெண்.

நச்செள்ளையால் உருவாக்கப்பட்ட பெண் தனித்திருத்தலில் காக்கையின் கரைதலில் ஆறுதலோடு இருக்கிறாள். புதிய மாதவி உருவாக்கும் பெண் தனித்திருத்தலில் வலியோடும் தவிப்போடும் இருக்கிறாள். இந்த மாற்று மனநிலையை அறிய ’முப்பாட்டி காக்கைப்பாடினி’ என்ற சொல்லைக் குறியீடாகவும் , தொன்மப் படிம்மாகவும் மாற்றிப் புரிந்துகொள்ளவேண்டும். புரிந்துகொள்ளுதல் என்பது வேறொன்றுமில்லை அதனை ரசிப்பதுதான். ரசிக்கத்தக்க கவிதைகள் பலவற்றைக் கொண்ட தொகுப்பாக இருக்கிறது புதிய மாதவியின் மௌனத்தின் பிளிறல்.


மௌனத்தின் பிளிறல்.

எழுத்து வெளியீடு.




(நன்றி அ ராமசாமி எழுத்துகள்)



#புதியமாதவி_நூல்கள் 

#puthiyamaadhavibooks 

#புதியமாதவி_கவிதைகள் 

#மெளனத்தின்பிளிறல்

#puthiyamaadhavipoems

Saturday, February 15, 2025

அஃகேனம் நவகவிதை

 சகோதரி கவிஞர் புதியமாதவி அவர்களுக்கு

எனது அன்பும் பாராட்டுகளும்… 

என்று ஆரம்பிக்கும் இக்கடிதம் 6 பக்கங்களில் 9.2.25 ல்எழுதப்பட்டிருக்கிறது.

ஓம் சக்தி இதழின் ஆசிரியராக பணியாற்றிய அய்யா கவிஞர் 

பெ. சிதம்பரநாதன் அவர்கள் இக்கடிதத்தை எழுதி முடிக்கும்போது நேரம் இரவு 3.10. ..

கவிதை என்ன செய்யும்?

கவிதை இதை எல்லாம் செய்யும்.. ! 

நன்றி அய்யா.

அவர் எழுதி இருப்பதை அப்படியே பகிர்கிறேன்.

******

அஃகேனம் –  நவகவிதை

------------------------------------------------- பெ. சிதம்பரநாதன்


பாரதி சொல்லுவான், “சொல் புதிது, சோதிமிக்க நவகவிதை” என்று. 

உங்கள் கவிதைகள்  நவகவிதைகள். சவ கவிதைகள் எழுதுவோர் பலருண்டு. அதில் படைப்பாளனும் செத்துக்கிடப்பான், வாசகனும்தான். இச்சூழல் இன்று தமிழகத்தில் மலியத் தொடங்கிவிட்ட நிலையில், உங்கள் நவ கவிதைகள் உங்களை “இன்று புதிதாய் பிறக்கச் செய்துள்ளதுடன், வாசகனை  இக்கவிதைகளை அனுபவிக்காமல் மரணித்திருந்தால், உயிருக்கான உன்னதமாக சுகத்தைப் பெறாமல் போயிருப்போமோ என எண்ணுமாறு செய்துள்ளது.


நவராத்திரகளின் ஒன்பது இரவுகளும் புதிய கோணத்தில். உருவம்தான் பழையது. உள்ளடக்கமோ ரசாயணக் கலவையாக சிலிர்க்க வைக்கிறது.

சொற்கள் - … சொட்டுச் சொட்டாய் பட்டுத்துணியை வெட்டி வெட்டிச் சட்டை செய்தது போல.

எங்கள் ஓம்சக்திப் பத்திரிகை தீபாவளி மலரில் நீங்கள் எழுதிய கவிதைகளை வாசித்ததுண்டு. அதே வெப்பம், அதே நுட்பம், அதே தட்பம்

இந்தக் கவிதைகளிலும் நிரம்பி வழிகிறது.

“இந்த ஓரிரவிலேனும்

வெள்ளைத் தாமரையில்

என்னுடல் பூத்திருக்கட்டும்.

ஹே சென்னிமல்லிகார்ஜூனா…”

இன்றைய சூழலில் பாலியல் கொடுமைகளுக்கு பலியாகும்  சின்னஞ்சிறுசுகள்

வக்கிரமனிதர்களின் சூறையாடல்கள், இந்த ஓரிரவிலேனும் என்ற உங்கள் கோரிக்கையைக் கேட்டு மூர்க்கர்கள் ஸ்தம்பித்து நிற்பார்களா?

ஐந்தாம் கவிதையில் “ இமயத்தில் இருக்கும் இறுமாப்பா” எத்தனை பெரிய கம்பீரம் நிறைந்த சொல்லாடல். வானமே வளைந்து வந்து பாராட்ட வேண்டும். 

தீபத்தில் இரவு எரிகிறது என்ற உங்கள் சிந்தனை இரவைப் புதிதாகப் பிரசவித்துள்ளது. அது என்ன “வேத்த்தின் காமம்” யோசிக்க வைக்கிறது. யோசித்து யோசித்து இரவுகள்தான் எரிகின்றன. பகல் தட்டுப்படவில்லை.

“நெருப்பின் கண்ணீர் துடைக்காதே – சுட்டுவிடும் “ இப்படித் தலைகீழாயச் சிந்தித்து நிற்கிறது ஏழாவது  இரவு.  ‘ மாரம்பு ‘ இதுவரை யாரும் கையாளப்படாத கற்பனை. “ படைப்புக்கும் பிரம்மத்திற்கும் நடுவில்” என்ன ஊசாலாடுகிறது? என்னமோ தெரிகிறது. என்னவென்றுதான் தெரியவில்லை. இப்படித் தெரியாமல் தெரிவதுதான் பிரம்மமோ? பிரம்மத்தைப் பற்றி பிரமாண்டமாகப் பேசக் கூடாதுதான். நீங்கள் பேசிவிட்டீர்கள்!.

“ஒன்பதாவது திசையில்

சீதை எழுதும்

ஸ்ரீராவண ஜெயம்”

என்ன புதுமையிது. சீதை ராம்ஜெயம்ம் செய்யாமல் ராவண ஜெயம் செய்கிறாளே….என்னமோ சொல்கிறீர்கள்..என்னமாய்ச் செல்லியிருக்கிறீர்கள். காலம் இதன் உட்பொருளைக் கண்டுபிடிக்கும். அதற்கான வாசகன் வருவான்.

உன்னை வென்ற அமுத சுரபி என் மடியில்.. கர்ணபுத்ரிதான் யாரோ ?!

“காற்று மூச்சுத்திணறலுடன் சிரமப்படுகிறது”

“ இருளைக் களவாடிய பகல்” 

நினைத்து  நினைத்து அனுபவிக்க கிடைத்த வரிகள். இவை வீட்டுத் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளாக இருக்கக்கூடாது. ஊட்டியில் தாவரப் பூங்காவில் மலர்க் கண்காட்சியில் இடம் பெறுமானால், இவை ஊருணியாகப் பயன்படும்.

பொய்களின் தேசத்தில் – கொள்ளையடிக்கப்பட்ட மணல் மேடுகள், புதர் மண்டிக்கிடக்கும் அவளுடைய கனவு தேசம்.

மீனாட்சியில் தோளிருந்த பச்சைக்கிளியைக் காணவில்லை. பறந்துவிட்டதா ? யாராவது அபகரித்துக் கொண்டார்களா? அப்படியானல் அவளுடைய வைரமூக்குத்தி ? ஏன் அவளே என்ன ஆனாள்?  இப்படியாக சிந்திக்க வைக்கிறது இந்த வரிகள். வரிக்கு வரி சிரமத்திற்குள் சிக்கிக் கொள்கிறேன். 

முகத்தில் கீறும் நகங்களை

முத்தங்களால் தடவும் நீ

இது காதல் கவிதை எல்ல.. தேசத்தின் நிலையை வெளிச்சம்போட்டுக் காட்டுகிற கவிதை. தெரு நாய்கள் சண்டை போடுகின்றன. எங்குப் பார்த்தாலும் இந்தச் சண்டைகள்தான். “இரவு மிருகம் இளைப்பாறுகிறது” மறுபடியும் எனது முதுகில் ஒரு பிரம்படி. சுளீர் என்று படுகிறது. அடித்தது 

இக்கவிதை தான்.

“இரவும் பகலும் அறியாத யுகம்” பூமியைப் பிரசவிக்கவில்லை, இருளின் போர்வை ஆதி நிலத்தில் – நெருப்பு மலர்கள் – யார் பறிப்பது? ஏதோ பனை உச்சிக்குப் போய் நின்று நீங்கள் வாசகனைப் பார்க்கிறீர்கள். அவனோ தரையில் கிடக்கிறான். அவனையும் உங்கள் முதுகில் சுமந்து உச்சிப்படுத்த முடியுமா? 

காலத்தின் விஷத்துளிகளை

அருந்துகிறேன்.

மரணித்துக் கொண்டே வாழும்

ஜீவ நதி..

பிறவிக்கடலின் ஆதிநிலம்..

பிறவிக்கடல் எப்படி ஆதி நிலமாகியது ? மாற்றிச் சிந்தித்திருக்கிறீர்கள்? ‘பிறவிக் கடல்’ வள்ளுவன் சொல்வான். அதுதான் நமது ஆதி நிலமா?

வள்ளுவனுக்கு புது வண்ணம் தீட்டியிருக்கிறீர்கள். வள்ளுவன் மேலும் வனப்பாகிறான். 

‘முற்றுப் புள்ளிவரை” வாசித்த சுகத்தை எழுத எழுத, என் மனம் சுகப்படுகிறது.

ஒரு கேள்வி , கவிதைக்கான யுகம் காலாவதியாகிவிட்டதாகவே கருதப்படுகிறது. உரைநடையே உச்சத்தில் உலா வருகிறது. கவிதைகளை இப்போது பலரும் வாசிப்பதாகவும் தெரியவில்லை. அதனால் உரைநடையில் ஊடுபயிராகவே கவிதையும் வலம் வருகிறது. இத்தருணத்தில் உங்கள் கவிதைகள், கவிதை யுகம் முடிந்து போகவில்லை, ஒருவேளை ஓளவையைப் போல சுட்ட பழம் கேட்டு நிற்கும் காட்சியை, உங்கள் கவிதை மூலம் கண்டு களிபேருவகை அடைந்தேன்.

வாழ்க. 

தங்களன்புள்ள

பெ. சிதம்பரநாதன்.

09/2/25 இரவு 3.10



Tuesday, February 11, 2025

மக்ஃபி ..இருவேறு காலத்தின் குறியீடு

 


மக்ஃபி புதியமாதவி Puthiyamaadhavi Sankaran  எழுதிய புதுமையான நாவல்.

85 பக்கங்கள் மட்டும்தான்.

ஆனால் மூன்று வகை வாசிப்பு அனுபவங்கள்.

ஒரே நாவலில் சரித்திர அரசியல் புனைவு, சமூக அரசியல் புனைவு.

இரண்டு வெவ்வேறு காலங்களை இணைக்கும் மெல்லிய சரடாக மக்ஃபி.

வலிய சங்கிலிகளாக மதமும் அரசியலும்.

இவ்வளவு குறைவான பக்கங்களில்

எப்படி இது சாத்தியமானது.

மொழியின் கூர்மையும் மொழிதலின் 

நுட்பமும் இதை சாதித்துள்ளன.

எழுது முறைமையில் ஒரு Nano technology.


முதல் பாகத்தில் ஔரங்கசீப் என்ற

எதிர் நாயகன். பாசத்திற்குரிய மகள் சைபுன்னிஷா.

இருவரின் இணக்கமான புள்ளிகளும்

முரண்படும் கமாக்களும்.


இரண்டாவது பாகத்தில் பிரகாஷ் போஸ்லேவும் அவனது ஜனன நட்சத்திர

கட்டங்களை நிர்ணயிக்கும் அபியும்.


அங்கே இஸ்லாமிய சைபு இந்து சிவாஜி.

இங்கு இந்து பிரகாஷ் இஸ்லாமிய அபி.


அங்கே காதல்.

இங்கு பாசம் அல்லது பயம் ( ஜோதிட நம்பிக்கை) 


அங்கே தந்தையின் சிறை.

இங்கே தந்தை ஹாஸ்டலுக்கு அனுப்புகிறார்.


அங்கும் அரசியல் அச்சம்.

இங்கும் அஃதே.


அதனால்தான் புதியமாதவி இரண்டாம்

பாகத்தின் கதவில் இப்படி பொறித்து

வைத்துள்ளார்.

" சரித்திரங்கள் கல்வெட்டுகளாக மட்டுமே இருப்பதில்லை.சமகால அரசியலில் தொடர்கின்றன."


யூஜின் ஓ நீல் சொல்கிறார்.


" நிகழ்காலம் அல்லது எதிர்காலம் என்று 

எதுவுமில்லை.கடந்த காலமே மீண்டும் மீண்டும் கடந்து செல்கிறது எப்போதும்".


கொஞ்சமாக மெய்யியல் வாசனை அடிக்கும் மேற்சொன்ன இந்த கூற்றை இந்த நாவல் நிருபித்திருக்கிறது.


மக்ஃபி அல்லவா? 

மக்ஃபி என்பதும் மெய்யியல்தானே! 


சிவாஜியை சிலையாகவோ ஓவியமாகவோ படமாகவோ எங்கு பார்த்தாலும் எனக்கு அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் தான் நினைவுக்கு வருகிறது என்று நாவலில் ஒரு இடத்தில் வருகிறது.


அண்ணாவின் நாடகத்தில் மராட்டிய வீதியில் காட்சி ஆரம்பமாகி பின்பு காட்சிகள் அரண்மனைக்கு நகரும்.


மக்ஃபியில் இஸ்லாமிய அந்தபுரத்தில் அரண்மனையில் தொடங்குறது முதல் பாகம்.

இரண்டாவது பாகத்தில் மக்கள் குடியிருப்பு.

                

நாவல் நமது பாடத்திட்டங்களில் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்ட பல உண்மைகளைப் பேசுகிறது.


" இனி, மொகலாய சாம்ராஜ்யத்தில் உடன்கட்டை சட்டப்படி குற்றம்" என்று அறிவித்தார். அதனால் ஆத்திரப்பட்ட மதவாதிகள் பாதுஷா ஒரு மத வெறியன் என்று பரப்புரை செய்த அரசியல்...."


" பாவா அரியணை ஏறி இருக்காவிட்டால் நீயும் உன் கவிதையும் கொண்டாடுகிற இன்னொரு தாஜ்மஹால் கட்டப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த தேசம் பசியிலும் பட்டினி சாவிலும் அழிந்து போயிருக்கும்."


"அவருக்கு எல்லாமே இஸ்லாமாக இருக்க வேண்டும் என்ற பேராசை".


ஆனால் சிவாஜி இந்துவாக இருந்தாலும் அத்தகைய பேராசையுடன் 

இல்லை என்ற வரலாற்று உண்மையை 

நாவல் உணர்த்தி விடுகிறது.

ஆனால் பிரகாஷ் போஸ்லே போன்ற

அரசியல்வாதிகள் சிவாஜியை இன்னொரு இந்து ஔரங்கசீப் ஆக 

மாற்றுகிறார்கள்.


அண்ணாவின் நாடகத்தை குறிப்பிடுவதால் பிரதி அதில் இல்லாத ஸ்மார்த்த ராமதாசரை , காகபட்டரை

நினைவு படுத்திவிடுகிறது.


தன் வீட்டு வாசலில் தினமும் புதிய மாலை சூடிக் கொள்ளும் சிவாஜியின் 

படத்தை வைத்திருக்கும் பிரகாஷ்போஸ்லே சிவாஜியின்

பெயரும் சிவாஜி போஸ்லே என்ற 

உண்மையை அறிந்து இருப்பான்.

ஆனால் சிவாஜி மகுடம் சூடத் தடையாக

இருந்தது அவன் பெயரின் பின்னொட்டு

ஆன ' போஸ்லே' என்பதுதான் என்ற 

வரலாற்றை அறிந்திருப்பானா? 


இதை அவனுக்கும் நமக்கும் சொல்வதாக இந்த நாவலைப் பார்க்க

முடியும்.

 


பி.கு: சிவாஜிக்கு N O C கொடுக்க 

அன்றைக்கு காகபட்டரை காசியின்

கங்கை கரையிலிருந்து அழைத்து 

வந்தார்கள்.

காசியில் நின்று ஜெயித்தவருக்கு

N O C கொடுக்க அடுத்த வாரம்

அயோத்திக்கு யாரை அழைத்து வருவார்கள்? 

இப்படிக் கேட்டால் ? 

அவர்கள் இந்த நாவலில் உள்ள ஒரு மக்ஃபி கவிதையைச் சொல்லலாம்.


" அவருக்கு பொருத்தமானவர்கள்

யாருமே இல்லை .

அது கடவுளே ஆயினும்."

- எழிலரசு.

நன்றி தோழர் Ezhil Arasu.



Saturday, February 8, 2025

வலசை காலத்தின் கல்வெட்டு

தமிழ் வாசகர்கள் மட்டுமல்ல, உலக வாசகர்கள் வாசிக்க வேண்டிய நாவல்  'சிறகொடிந்த வலசை'

- சம்பத் ஜி



 💥💥💥

                  வலசை

             ----------------------


  புதைந்து கிடக்கும் கோடானுகோடி

 எலும்புக்கூடுகள் மீது அமைதியாக

 உறங்கியெழும் நாம் யார்?

என்ற அறிவுமதி அவர்களின் கனத்த கேள்வியினூடே புதியமாதவி அவர்களின் ‘சிறகொடுந்த வலசை’  என்ற இந்த நூலை அணுகலாம் என்றே நினைக்கிறேன். நூல் விமர்சனம் என்பதே இலக்கியத்தையும் சமூகத்தையும் வாசகர்களோடு இணைத்து ஒருசேர புரிந்து முன்னெடுக்கும் கூட்டு முயற்சிதானே.

 இடர்களால் நிரம்பியதே மனித வாழ்வு. நகுலன் அவர்கள் ஓரிடத்திலே சொல்லியிருப்பார். ‘அலைகளைச் சொல்லி பிரயோஜனமில்லை கடல் இருக்கிறவரை’ என்று . அவரே மற்றுமொரு இடத்தில் சொல்லியிருப்பார். ‘இருப்பதற்கென்று வருகிறோம் இல்லாமல் போகிறோம்’ என்று வாழ்வு நிலையாமை அடிப்படையாக கொண்டதென்றாலும்கூட அந்த நிலையாமை தனக்கான எல்லையின் நிறைவோடு பறந்து கடந்து விடுவதில்தான் யாவரின் விருப்பமாக இருக்க முடியும். வலசையை துவங்கும் போதே சிறகுகள் முறிக்கப்பட்டால் அந்தக்  கொடுந்துயர் தீராதுதானே! இப்படியாக பறத்தலுக்காக காத்திருந்து வயது பேதமற்ற எத்தனையோ உயிர்களை கொத்து கொத்தாக கவ்விச் சென்றது கொரோனா . உலகம் தழுவிய கொரோனா தொற்றில் பலியான உயிர்களின் தரப்பிலிருந்து ஒற்றை சாட்சியாக எழும் கூக்குரல்தான் இந்நாவல்.

 இயற்கையின் பேரிடர்களாலோ மதக்கலவரங்களாலோ , இன்னபிற இயற்கைச் சீற்றங்களாலோ அழிபடுதல் என்பது மனித வாழ்வின் பேரவலம். மனித குலம் திட்டமிட்டு வைத்திருக்கும் அட்டவணையை திடுமென கலைத்துப் போடுவதால் மனிதகுலம் திட்டமிட்டு வைத்திருக்கும் அட்டவணையை திடுமென கலைத்துப் போடும் வாழ்வு பெருந்துயர் நிரம்பியது.  நிலத்தின் வரலாறு எங்கும் இது போன்ற ஏராளமான ரத்த சாட்சிகள் உலவிக்கொண்டேதான் இருக்கின்றன.   இது விதிவசமா, இயற்கையின் சமன்பாட்டுக் கோட்பாடா  என்று அறிய முடியவில்லை.  கிரேக்க துன்பங்கள் தொடங்கி,  இந்திய புராணங்கள் வரை ஒரு தகுந்த இடைவெளியில் ஏதேனும் ஒரு வகையில் இந்த அழித்தொழிப்பு நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.  இதை முற்றிய கலியின் அடையாளம் என்று வேதாந்தம் கூறுகிறது.  எதேச்சதிகாரத்தின்  திட்டமிடல் என்று சித்தாந்தம் கூறுகிறது.


  மனித குலத்தின் அறம் சார்ந்த அடுத்த நகர்வை நிர்மாணிக்க எப்போதுமே ஒரு பெரும் பாய்ச்சல் தேவையாகிறது.  அது ஒரு சிறு கலகத்தில் துவங்கி  யுத்தத்தில் முடிவடைகிறது.  ஜான்ரீடு அவர்கள்  எழுதிய உலகைக்  குலுக்கிய ‘பத்து நாட்கள் ‘ என்ற நூல் ரஷ்யாவின் அக்டோபர் புரட்சியைக் கூறும் முக்கிய நூல். வரலாற்றில் புதிய சகாப்தத்திற்கு வழிகோலிய முக்கிய நூலாகவே இதைப் பார்க்க முடிகிறது.  இதே அக்டோபர் புரட்சியின் காலகட்டத்தில் மக்சீம்கார்க்கி அவர்களின் ‘தாய்’ என்ற புனைவு நாவல் மிகக் காத்திரமாக  தொழிலாளர் போராட்டத்தையும்,  புரட்சியையும் கூறும் முக்கிய நூல்.  லெனின் அவர்கள் இந்நூல்  குறித்து கூறும்போது ‘பொதுவுடமை போராட்டத்தில் பாதி வேலையை இந்த நூல் ஒன்றே எளிதாக செய்த முடித்து விட்டது ‘ என்று கூறி பிரமித்து இருக்கிறார்.  வரலாற்றுப் புனைவு அவ்வளவு வல்லமை நிரம்பியது.  வயலிலே எத்தனை நெல் மகசூல் இருந்தாலும்,  விதை  நெல்லையே விவசாயி தேடிப் பாதுகாப்பது போலவே பல் சுவையில் எத்தனை புனைவுகள் வெளியானாலும் கூட இம்மாதிரியான வரலாற்றுப் புனைவுகளை வாசகர்கள் தேடித்தேடி வாசித்தும் பாதுகாத்தும் வைக்கக் கூடும் என்பதே நிஜம்.  இம்மாதிரியான நூல்கள் காலத்தின் ரத்த சாட்சியாக எப்போதுமே நம் முன் நிற்கிறது.  லியோ டால்ஸ்டாய் அவர்களின் ‘போரும் அமைதியும்’ , பிரான்சிஸ் காஃப்காவின் ‘கொள்ளை நோய்’,  சி.சு. செல்லப்பாவின் ‘சுதந்திரதாகம் ‘ , ப. சிங்காரத்தின்  ‘புயலிலே ஒரு தோணி,’ ந. சிதம்பர சுப்பிரமணியன் அவர்களின் ‘மண்ணில் தெரியுது வானம்’, கி. ராஜ நாராயணன் அவர்களின் ‘கோபல்லபுரத்து மக்கள்’ என்று பல  புதினங்களைச் சொல்லமுடியும். கி.ராவின் நாவல் ஆந்திராவில் இருந்து இன வெறியர்களால் விரட்டப்பட்ட நாயக்கர்கள் தமிழ்நாட்டு காடுகளில் குடியேறி காடுகளை எரித்து கரிசல் நிலமாக்கி வாழ்விடமாக மாற்றிக் கொண்ட கரிசல் வரலாற்றை பேசுகிறது.  தவிரவும் தமிழ் ஈழப் போர்கள்  குறித்த ஏராளமான நூல்களும் முக்கியமானவை.  1947 ஆகஸ்ட் 15 தேச விடுதலையை கொண்டாடும் நாள் மட்டுமல்ல.  இந்திய பாகிஸ்தான் பிரிவினையில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும்,  பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கும் மதவாதிகளால் விரட்டப்பட்ட ஏராளமான அப்பாவி மக்கள் பலியாகி சொந்த மண்ணில் இருந்தே அகதிகளாக புலம் பெயர்ந்த ஒரு கருப்பு தினமும் கூட. நள்ளிரவில் சுதந்திரம் என்ற நூல் இதை மிக காத்திரமாக பேசுகிறது.  இவைகள் எல்லாமே போர்களையும் புலம்பெயர் மனிதர்களையும் பேசுகிறது.  அந்த வரிசையில்தான் புதிய மாதவி அவர்களின் சிறகொடிந்த வலசை நாவல் ஓர் அறச்சீற்றத்தோடு கூடிய முக்கியமான நாவலாக என் அளவில் அணுக முடிகிறது.

 1945 இரண்டாம் உலகப் போரில் இடையிலேயே ஹிட்லர் இறந்த பின் ஜெர்மன் அதிகாரிகள் வேறு வழியின்றி சரண் அடைந்து விடுகின்றனர். இந்நிலையில் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வருகிறது. ஆனால் ஜப்பான் அதை ஏற்றுக் கொள்ளாமல் அமெரிக்காவின் விமானம் தாங்கிய கப்பல் ஒன்றின் மீது குண்டு வீசுகிறது.  இந்த குண்டு வீச்சில் 343 பேர் இறந்து போகின்றனர் . இந்த நிலையில் யுத்தத்தை நிறுத்த ஜப்பானை ஒடுக்குவதுதான் ஒரே வழி என்று நினைத்த அமெரிக்கா ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மீது ‘லிட்டில் பாய்’ என்ற மிக சக்தி வாய்ந்த  அணுகுண்டு வீச்சு நிகழ்த்துகிறது ஆயிரம் சூரியன்கள் ஒன்றாக வெடித்தது போன்ற அச்சம்பவம் சுமார் ஒன்றரை லட்சம் பேரை பலி கொண்டது.  ஒரு புல் பூண்டை கூட விட்டு வைக்கவில்லை.  அப்போதும் ஜப்பான் சரணடையாததால் அடுத்தக் கட்டமாக நாகசாகியில் ஒரு குண்டை வீசி சுமார் 40 ஆயிரம் பேரைக் கொன்றது.  இதை எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் தனது ‘ஹிரோஷிமாவில் மணி ஒலிக்கிறது’ என்ற கட்டுரையில் மிக ஆதங்கத்தோடு பதிவு செய்திருப்பார்.  உலகையே உலுக்கி எடுத்த சம்பவத்திற்கு காரணம் என்ன? அதிகாரத்தின் நாவுகள் உலகெங்கும் ருசித்துப் பார்த்து விட வேண்டும் என்ற ஆதிக்க வெறியில்லாமல் வேறு என்ன?  குண்டுகளைப் புசிக்கிற சமூகம் நெருப்பைதானே உமிழும் என்று இந்த அதிகார வர்க்கங்களுக்கு புரியாமலே இருப்பதுதான் காரணம்.

 ஜெயமோகன் அவர்களின் ‘வெள்ளையானை’  என்ற நாவல் இந்தியாவின் மிகப்பெரிய பஞ்சமான ராஜதானி பஞ்சம் என்றும் டெக்கான் பஞ்சம் என்றும் கூறப்பட்ட 1870 இல் நடைபெற்ற பஞ்சத்தைப் பற்றிப் பேசுகிறது . பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் உலகம் முழுவதையும் ஒரு போதைக்கு உள்ளாக்கி வெகு எளிதாக அடிமையாக்கி கொள்கிற வித்தையை லாவகமாக கையாண்டு கொண்டிருந்தது.  சீனாவில் இவர்களைப் பற்றி ஒரு பழமொழி உண்டு. ‘  அவர்கள் கப்பலில் இருந்து இறங்கி எங்களிடம் ஒரு தடித்த புத்தகத்தை கொடுத்து கண்மூடி ஜெபம் செய்யச் சொன்னார்கள்.  நாங்களும் கண்மூடி ஜெபம் செய்தோம்.  கண் திறந்து பார்க்கையில் புத்தகம் எங்களிடமிருந்தது. தேசம் அவர்கள் கையில் இருந்தது’ என்று. இப்படித்தான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவிற்குள் நுழைந்து ஒரு நூற்றாண்டுக்குள் இந்தக் கொடூர பஞ்சம் ஏற்பட்டது..  இந்த பஞ்சத்தினால் அன்றைய இந்திய மக்கள் தொகையில் நாளில் ஒரு பங்கு செத்து அழிந்தார்கள்  என்று வரலாற்று கணக்கெடுப்பு சொல்கிறது. பஞ்சத்திற்கு முன்பு வரை இந்திய கிழக்கிந்திய கம்பெனி ஆதிக்கத்தின் கீழ் இயங்கிக் கொண்டிருந்தது.  இந்த பஞ்ச காலமே கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரம் முற்றாக கலைக்கப்பட்டு விக்டோரியா அரசி தன் அதிகாரத்தின் கீழ் நாட்டை தானே எடுத்துக் கொள்கிறார்.  நன்றாக இழிவுபடுத்த தெரிந்தவனே அதிகாரியாக தகுதி உடையவர் என்பதே. பிரிட்டனின் அன்றைய கருத்தியலாக இருந்தது.  இந்தியனை பூச்சியினும் கேலியாக இழிவுப்படுத்துவதையே தனது அடிப்படை கோட்பாடாகக் கொண்டிருந்தனர்.  இந்த ராஜதானி பஞ்சம் தலைவிரித்து ஆடியது.  இந்த பஞ்சத்தின் போது எலிகள் உண்ணும் தானியம் கிடைத்திருந்தால் கூட எங்கள் பிள்ளைகளில் பாதி பேர் உயிருடன் இருந்திருப்பார்கள் என்று கதறுகிறார்கள்.  பஞ்சத்தில் சாகும் மக்களின் தானியம் இங்கிருந்து மூட்டை மூட்டையாக அவர்கள் நாட்டுக்கு கப்பலில் சென்று கொண்டிருந்தது அதற்கு பதிலாக அங்கிருந்து உறைந்த தண்ணீரான பனிக்கட்டிகளை உருகாமல் பொத்தி பொத்தி ஒரு கப்பல் நிறைய கொண்டுவரப்பட்டது. இந்தப் பனிக்கட்டியை ஆங்கிலேயர் தம் சொகுசு வாழ்விற்கும் தனது மதுவில் கலந்து குடிக்கும் ஆடம்பர தேவைக்கும் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.  எட்டு கப்பல் தானியத்திற்கு ஒரு பனிக்கட்டி கப்பல் சமம்.  இப்படியாக  இந்தியர்களின் எரிந்து கொண்டிருக்கும் பிணங்களின் மீதான இவர்களின் மது சல்லாபம் கொடூரமாக நிகழ்ந்தது.  அப்போது இருந்த ஏய்டன்  என்ற கவர்னர் இந்த பஞ்சத்தை பார்வையிட சென்றபோது தனது சாரட்டின் கூண்டுகளில் தலை இடித்துக் கொள்கிறது.  அப்போது ஏய்டன்  மேடு பள்ளங்களை சரி செய்து ஓட்டு என்று சீற்றத்துடன் ஆணையிடுகிறான்.  அப்போது அந்த சாரட்டு ஓட்டி “சார் வழியெங்கும் மனித உடல்களே மலிந்து கிடக்கிறது.  மனித உடல்களின் மீதுதான் வண்டி சென்று கொண்டிருக்கிறது” என்று கூறுகிறான் .  அதிர்ச்சி அடைந்த ஏய்டன் தன் சாரட்டு கதவைத் திறந்து வெளியே பார்க்கிறான்.  ஒரு கணத்துக்கு பின் அமிலத்துளி விழுந்த புழு போல அந்தக் காட்சியை பார்த்து துடித்து விழுகிறான்.  பெரிய ஆலமரத்தின் அடியில் பிணங்கள் அள்ளிக் கொட்டியவை போல  இருக்கின்றன.  பாதிக்குமேல்  குழந்தைகள்.  நாலைந்து  நாய்கள் பிணங்களைக் கிழித்து குடலை  கவ்வி இழுத்து வெளியே எடுத்து தின்று கொண்டிருந்தன.  அவற்றின் உறுமல்களும் கடித்து சப்புக் கொட்டி இழுக்கும் முனகல்களும் உரக்கக் கேட்டன.  மரக்கிளையில் காகங்களும் பிற பறவைகளும் பெரிய சந்தை போல இரைச்சல் இட்டன.  காகங்கள் துணிந்து கீழே இறங்க நாய்கள் உறுமியபடி  அவற்றை துரத்தின என்ற கோரக்காட்சியை பதிவு செய்கிறார்.  இப்படியான மூர்க்கமான பஞ்சத்தை  இந்தியா சந்தித்திருக்கிறது.  பொதுவாக இயற்கையின் பேரிடர் கால் பாகம் என்றிருந்தால் முக்கால் பாகத்தை அதிகாரம் கையில் எடுத்து அழித்தொழித்திருக்கிறது.  இந்த கொடூரமான பஞ்சத்தைப் பற்றி விரிவாகவும் இதயங்களில் ரத்தம் வடியும் அளவுக்கு அலசி இருக்கிறது ஜெயமோகன் அவர்களின் வெள்ளையானை நாவல்.  இது இங்கு குறிப்பிட காரணம் பேரிடர்களையும் பஞ்சங்களையும் ஆவணப்படுத்துதல் என்பதே மனித குலத்திற்கு வாழ்தலின்  பொறுப்பு உணர்த்தும் கவனப்படுத்துகிற பணியாகும். இந்த நிகழ்வுகளை ஆவணப்படுத்த தவறுவது என்பது வாரன் ஹேஸ்டிங் என்பவர் சொன்னது போல  ‘தன் வால் தீப்பற்றி எரியும் போது  அதை அறியாமல் தூங்கும் மலைப்பாம்பை ‘ போன்றதாகும்.  யுத்தங்களையும் பேரிடர்களையும்  புலம்பெயர்தலையும் படைப்புகளாக பதிவு செய்யப்படும் போதுதான் தான் வாழும் காலத்தின் மனித மாண்புகளை உணர முடியும்.  தன் இருத்தல் எத்தனை சுகவாழ்வுக்கான ஆசீர்வாதம் என்பதை அறிந்து வீண் புலம்பல்களில் இருந்து சக மனிதனை ஆற்றுப்படுத்தும் இந்த நிலைப்பாட்டில் எழுத்தாளர் புதியமாதவி அவர்கள் தொடர்ந்து வரலாற்றில் உலவும் ஒரு துயர நிகழ்வை பதிவு செய்திருப்பது என்பது அவரின் தீராத சமூக அக்கறையை காட்டுகிறது. 

 போர்களில் விழுப்புண் பட்டு இறந்தோரின் வீர மரணம் குறித்து படித்திருக்கிறோம்.  தேச எல்லையில் ரத்த காயங்களுடன் நாள் கணக்கில் பட்டினி கிடந்து துடித்து சாய்கிற ராணுவ வீரர்களை அறிந்திருக்கிறோம்.  பஞ்சகால பட்டினியின் கொடுமை தாளாது கண் எதிரிலேயே இந்த வாழ்வை விட மரணமே மேலானது என்று இறந்தோரைக் கூட அறிந்திருக்கிறோம்.  ஆனால் அறிவியலின் உச்சத்தில் மருத்துவத்துறையின் அபரீத வளர்ச்சியில் ஓங்கி கிடக்கும் 21 ஆம் நூற்றாண்டில் உலகையே உலுக்கி எடுத்து விட்டது கொரோனா பெரும் தொற்று.  இது அறிவிக்கப்படாத மனித குலத்தை சூறையாடிய மறைமுகப் போராகவே அச்சமூட்டியது.  ஒரு ஓசையற்ற வேட்டையை நிகழ்த்தியது.  கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் ரத்தம் குடிக்கும் வெளவால்களைப் போலவே  தொடர்ந்து பறந்து தூய்மை என்னும் கரு மேகத்தால் இந்த பூமியை முற்றாக இருட்டில் ஆழ்த்தியது  மனித குலம் மறக்க முடியாத ஒன்றுதானே.  வரலாற்றையே புரட்டிப் போட்ட காலம் இதுவாகத்தான் இருக்க முடியும். மனித குலத்துக்கும் மருத்துவத்திற்கும் ஆகப்பெரும் சவாலோடு சூறைக்காற்றென  சுழன்று அடித்த கோரமான பெருந்தொற்று இதுவாகவே இருக்க முடியும்.  சுவாசங்களையே விலைக்கு வாங்கிய மலிவான காலமானது இது.  கிபி மற்றும் கி.மு என்று காலத்தை பிரித்த வரலாறு மிரண்டு  நின்று கொ.மு மற்றும் கொ.பி  கொரோனாவுக்கு முன்பு மற்றும் கொரோனாவுக்கு பின்பு  என்று காலத்தையே பிளக்கிற ஆயுதமாக  மாற்றிவிட்டது.  உலகம் முழுவதிலும் சிறிதேனும் இதிலிருந்து தப்பாத  குடும்பங்களோ மனிதர்களோ இருப்பது அரிது.  எப்படி மாக்ஸின் கார்க்கி தாய் என்ற நூலில் பாவெல் என்ற பாத்திரத்தில் வாயிலாக  ஒட்டுமொத்த ரஷ்ய புரட்சியை மையப்படுத்தினாரோ அதேபோல சிறகொடிந்த வலசை என்ற இந்த நாவலின் ஊடாக எழுத்தாளர் புதியமாதவி அவர்கள் தனம் என்ற ஒற்றை பாத்திரத்தின் வாயிலாகவே உலகையே புரட்டிய கொரோனா பெருந்தொற்றின் துயர்களை நம் கண்முன் காட்சிகளாக நிறுத்துகிறார்.  இது நாவல் என ஒற்றை தகுதிக்குள் அடக்கி விட முடியாது. இதன் ஊடாக பல்வேறு துயர்களை மனித நேயத்தின் விழுமியங்களை ,நுட்பமான அரசியலை, உடனிருந்து துரோகம் நிகழ்த்தும் உறவுகளின் மூர்க்கதனத்தை,  விளிம்பு நிலை மனிதர்களின் இயலாமையை , குழந்தைகளின் மனஉலகை , பெண்ணியத்தை ,புலம்பெயர் மனிதர்களுக்கு இழைக்கப்படுகிற அநீதி என கிளைத்து கிளைத்து  விரிந்து கொண்டே இருக்கிறது நாவல்.  சுமார் 140 பக்கங்களைக் கொண்ட இந்த நாவல் புரட்டுகிற பக்கம் எங்கும் பெரும் துயர் கசிந்து கொண்டே இருக்கிறது.

 உலகின் ஆகப்பெரும் குடிசைவாழ்  பிராந்தியமான மும்பை தாராவியின் கொரோனா கால பெருந்தொற்றை கோரச்சித்திரமாக காட்டுகிறது இந் நாவல்.  தமிழ்நாட்டில் குக்கிராமம் ஒன்றில் இருந்து  தனம் என்ற பெண் குமார் என்பவரை காதலித்து வீட்டில் இருந்து வெளியேறி மணம் முடித்து  மும்பை தாராவிக்கு சென்று வாழ்கின்றார்.  இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு கொரோனாவில் கணவனை இழக்கிறாள் தனம்.  மீதமுள்ள உயிர்களையாவது காப்பாற்றிக் கொள்ள சொந்த கிராமங்களுக்கே சென்று விட தாராவியிலிருந்து ஒரு தமிழர் குழுவுடன் சேர்ந்து தனது இரண்டு குழந்தைகளுடன் தாராவியை விட்டு  வெளியேறுகிறாள் தனம். கர்நாடக எல்லையில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக அந்தக் குழுவை ஒரு பாழடைந்த மண்டபத்தில் சிறைப்படுத்துகின்றனர்.  அங்கேயே தனம் இறந்து விடுகிறாள்.  குழந்தைகள் இரண்டும் அனாதையாகிறது.  தனத்தின் தோழி மைனி மூலமாக அந்த இரண்டு குழந்தைகளையும் அவர்களின் சொந்த ஊரில் சேர்த்து தனத்தின் தாய் வீட்டில் அடைக்கலமாக விடப்படுகிறார்கள்.  தனத்தின் அண்ணன் தாய் மாமனின் மனைவி வாயிலாக அவர்களுக்கு கொடுமைகள் இழைக்கப்படுகிறது. பின்பு கொரோனா தொற்றால் இறந்தவர்களுக்கான அரசாங்க நிதி ரூபாய் 10 லட்சத்தை குழந்தைகளின் பாதுகாப்புக்காக அரசிடம் இருந்து பெற்றதை தனத்தின் அண்ணனும் அண்ணியும் குழந்தைகளை ஏமாற்றி  குழந்தைகளை அனாதை ஆக்குகின்றனர்.  இதுதான் கதையின் சாரம்சம்.


 இது ஒரு சராசரி நேர்கோட்டு கதை சொல்லும் முறை நாவல்தான். இதில் நவீனத்துவ சொல்லாடலோ பின் நவீனத்துவ அடர்வோ எதுவும் இல்லை.  எளிய சொல்லாடலின் ஊடாகவே கதை நகர்கிறது.  எனினும் ஒரு அங்கதச்சுவை கூடிக் கொண்டே போகிறது.  சாதாரண வரிகளில் அசட்டையாக சில அசாதாரணங்களை கடத்தியப்படியே நகர்கிறார் புதியமாதவி.

 கதையின் ஏராளமான இடங்களில்  கொடுந்துயரின் சித்திரங்கள் காட்சிகளாக விரிந்து கொண்டே இருக்கிறது.  பறந்து விரிந்த தாராவியின் குடிசை பிராந்தியத்தை ஒரு கழுகு பார்வையோடு காட்சிப்படுத்துகிறார்.  கொரோனா காலத்தில் சுடுதண்ணீர் போடுவதற்கு ஸ்டவ் இல்லாமல் ரேஷன் அட்டையைக் கூட வீட்டு ஓனரிடம் ஐந்து மாத வாடகை பாக்கிக்கு கொடுத்துவிட்டு குழந்தைகளோடு தவிக்கிற இடங்களில் வறுமையின் உச்சத்தை காட்சிப்படுத்துகிறார்.  அதோடு மாத்திரமில்லாமல் 'எல்லாமே பூஜ்ஜியம்தான் என்றாலும் சிலர் வாழ்க்கை மட்டும் பெரிய எண்ணுக்கு பின்  வரும்  பூஜ்ஜியமாய் மதிப்பு மிக்கதாய் வாழ்ந்ததில் அடையாளமாய்தானே இருக்க செய்கிறது.  பூஜ்ஜியங்களை எங்கே போடுவது எங்கே எழுதுவது என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்?  காலமா? என்று பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு யார் காரணம் என்பதை ஆற்றாமையோடு பதில் அற்ற கேள்வியாக நம்முன் வைக்கிறார்.  விலகிப் போகிற உறவுகளைப் பற்றி இவர் ஓர் இடத்தில் கூறுகிறார் "  மரங்கள் வேண்டாத இலைகளை இரவு நேரத்தில் உதிர்த்துவிட்டு விடிந்தவுடன் எதுவும் தெரியாத மாதிரி இலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தன.  உதிர்ந்த இலைகளுக்குத் தெரியும் இனி கிளைகளில் ஓட்டுவது சாத்தியம் இல்லை என்று" என  பிரிந்த உறவுகள் குறித்து ஆழ்ந்த விசாரிப்பை நிகழ்த்துகிறார்.


 அதுபோல் இறந்த காதல் கணவனின் நினைவேறிய வலிகளை  ஆற்றாமையோடு நாவலெங்கும் பரவி நிற்கிறது.  இந்த ஏக்கங்களை ஆங்காங்கே பதிவு செய்கிறார். '  தனது பத்துக்கு 15 அடி வீட்டில் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு அடியிலும் தன் கணவன் குமாரின் வாசம் இருந்தது என்கிறார். தனது கணவனின் போட்டோவை அணைத்துக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்து கண்ணாடி சில் ஏறி  ரத்தம் கசிகையில் அந்த ரத்தம் அவனது வாசனையோடு கலந்துவிட்டன என்று கூறி காதலில் பெருமூச்சு விடுகிறாள் தனம்.  இந்த வரிகள் இணை இழந்து ஆற்றாமையோடு வாழும் ஒட்டுமொத்த பெண்களுக்கான பெருமூச்சாகவே படுகிறது.

 சில இடங்களில் கவித்துவமான தத்துவார்த்த வரிகள் மிகச் சரளமாகவே வந்து விழுந்திருக்கிறது.  அவர்கள் சொந்த கிராமத்திற்கு ஒரு லாரியில் அடைந்தபடி செல்லும்போது வலியின் நிறை காட்சிகளை நாவலின் நெடி மாறாது சொல்கிறார். '  போகும் வழி எங்கும் மரணத்தின் பயம் கவிந்து அமைதியில் உறைந்து கிடந்தன ஊர்கள்"  என்றும் "  மரத்தின்  வேர்கள் மட்டும் வழக்கம் போல தியானத்தில்" என்றெல்லாம் கொரோனா கால வெறுமையை மொழியின் ஊடாக அச்சத்தை நம் கண் முன் நிறுத்துகிறார்.  இவையெல்லாம் நாவலின் ஆன்மாவை அந்நியப்படுத்தாத எளிமையான வலிமையான போற்ற வேண்டிய வரிகளாகவே பார்க்க முடிகிறது. 

 விளிம்பு நிலை மனிதர்களுக்கான மதிப்பீடுகளையும் புலம்பெயர்ந்தோரின் அவலத்தையும் வெகு காத்திரமாக பதிவிடுகிறார்.  குழுவாக சொந்த ஊருக்கு லாரியில் செல்லும் இவர்களைப் பிடித்து கர்நாடக எல்லையில் சிறை வைக்கிற போது ஆதரவற்ற அவர்களின் நிலையை இப்படியாக  பதிவிடுகிறார்." பயிரை மேய்ந்த மாடுகளை பவுண்டில்  அடைத்து வைப்பார்கள்.  மாட்டின் சொந்தக்காரர் அபராதம் கட்டி விட்டு ஓட்டிச் செல்வார்கள். மாட்டிற்கு ஒரு தேவை இருக்கிறது.  ஒரு விலையும் இருக்கிறது. மதிப்பும் இருக்கிறது. இவர்களுக்கு அப்படி எதுவுமே இல்லையே?  இவர்களை யார் வந்து கூட்டிப் போவார்கள்.  மாட்டை விட கேவலமானதா மனித உயிர்கள்?"  என்ற வரிகள் மனதை பிசையத்தான் செய்கிறது.

 தாராவிலிருந்து சொந்த ஊருக்கு லாரியில் நெருக்கியடித்தபடி  சென்று கொண்டிருக்கையில்,  லாரியின் குலுங்கலும் நெருக்கலும்  பெரும் உபாதைக்கு தள்ளி விடுகிறது.  சற்று நேரத்தில் உபாதை தாளாமல் பெண்கள் கூச்சலிட லாரியை ஒரு ஆற்றோரமாக ஓரம் கட்டுகிறான்.  எல்லோரும் குதித்தும் பிடித்தும் கீழிறங்குகிறார்கள். தனம் மட்டும் குதிக்கவும் முடியாமல் பிடித்து இறங்கவும் இல்லாமல் தடுமாறுகிறாள்.  ஓர் ஆண்  பலவாறு அவளை இறக்க முயன்று   அவள் இடுப்பை இரு கைகளாலும் இறுகப் பிடித்து இறக்கி விடுகிறான்.  உடம்பு எவ்வளவு சூடு என்று சொல்லியப்படியே இவளை இறக்கிய கைகளை ஒன்றோடு ஒன்று உரசி தீப்பிடிக்க வைத்து அதை கன்னத்தில் வைத்து தேய்த்துக் கொள்கிறான்.  தனத்திற்கு கங்குகள் உடலில் எரிய ஆரம்பித்து விடுகின்றன.  அணு அணுவாக  அவள் தேகம் எரிய ஆரம்பித்தது. எரிவதை எரிக்கணும்  எரிக்கணும்  என்று தனக்குள் சொல்லிக் கொண்டே கடந்து பெண்கள் பக்கமாக ஒதுங்குகிறாள். தன் பத்து வயது பெண் தான் பருவம் அடைந்தது தெரியாமலே வயிற்று வலியால் துடிப்பதைக் கண்டு ரகசியம் காத்தப்படியே லாரிக்கு செல்கிறாள்.  முன்போலவே  அந்த அவன் அவளது இடுப்பை பிடித்து ஏற்றி விட எத்தனிக்கையில்  அதை தவிர்த்து தானாகவே மெல்ல ஏறி கொள்கிறாள்.  இது மிக நுட்பமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு இடமாகவே பார்க்க முடிகிறது.  ஒரு பெண்ணுக்குள் எப்போதுமே தீராத கன்னி ஒருத்தி  இருந்து கொண்டே இருக்கிறாள்.  அதன் பொருட்டு அவளுக்குள் காமம் குறித்த வேட்கை எட்டிப் பார்க்கக்கூடும். ஆனால் தாய்மை என்பது அவளுக்குள் ஆதியில்  முளைவிட்ட சூல்.   லாரியிலிருந்து இறக்குவதற்கு அவனோடு உடன்பட்டவள் திரும்பி வரும்போது பூப்படைந்த மகள் மீதான பொறுப்பில் அதைத் தவிர்த்து விடுகிறாள்.  இவையெல்லாம். நுட்பமான பெண் மனதை காட்டுகிற இடமாகவே பார்க்க முடிகிறது.  அதேபோல் அந்த சிறுமி வயிற்றைப் பிடித்தபடி உபாதையில் நெளியும்போது கூட கூட்டத்தின் நடுவே ரகசியம் காத்து வலியோடு பயணிக்கிற இடத்தில்  அந்தப் பூப்படைந்த சிறுமியின் ரகசிய உபாதையை வாசகர்களிடமே பகிர்ந்து கொடுத்து விடுகிறார் எழுத்தாளர்.  மற்றொரு இடத்தில் தனது மாமன் வீட்டில் வளரிளம்  பெண்ணான தனத்தின் மகள் தேனோ சிறுமியின் போக்கிலேயே தன் மார்புகள் குலுங்க நடப்பதை அவளது மார்புகளைச் சுட்டிக்காட்டி அவளது அத்தை அருவருப்பாக பேசும் போது,  கூனிக்குருகி திடீரென்று  அந்தப் பெண் இரு கைகளாலும் தன் மார்பின் மீது சிலுவை விட்டு அவமானம் குன்ற மறைத்துக் கொள்கிறாள்.  இது பெண்ணுக்குள் திணிக்கப்பட்டிருக்கும் காலாதீத  அச்சத்தை காட்டுகிற இடமாகவே இருக்கிறது.  கவிஞர் குட்டி ரேவதி அவர்கள் மார்புகளைப்  பற்றி  ஓரிடத்திலே  கூறியிருப்பார்"  ஒரு நிறைவேறாத காதலில்  துடைத்தகற்ற முடியாத இரு கண்ணீர் துளிகளாக தேங்கி தளும்புகின்றன முலைகள் "என்கிறார்.

ஆம் பெண்களின் தீராத கண்ணீர் திட்டுகள்தான் அவைகள் என்றே எண்ணத் தோன்றுகிறது.  மேலும் அந்த அனாதை பெண்ணின் மீது அவள் மாமன் மகன் விபரீத சீண்டல்களை நிகழ்த்துகிறான்.   அதை கூறுகிற இடம் ஒரு குறியீட்டுத் தன்மையோடு நாகரிகமான மொழிகளில்,  முகம் சுளிக்க வைக்காத வரிகளை கையாண்டு இருப்பது இவரது எழுத்து மேன்மையைக் காட்டுகிறது.  

இவ்வாறாக இவர் பெண்ணின் பாதுகாவல் குறித்த காத்திரமான பதிவுகளை  நாவல் எங்கும் நிகழ்த்துகிறார். , இவர் பெண்ணியத்தின் மீது தீராத நேசமும் அக்கறையும் கொண்டவர் என்பதை நூலெங்கும் நிரூபித்தப்படியே இருக்கிறார். 


 வரலாற்றில் உலவிக்கொண்டே இருக்கும் முக்கிய பேசு பொருளான கொரோனா பெரும் தொற்றுப் பற்றி மிகக் காத்திரமான நாவலாக பொறுப்புணர்ந்து பதிவு செய்துள்ளார் எழுத்தாளர் புதியமாதவி அவர்கள். தமிழ் வாசகர்கள் மட்டுமல்லாமல் உலக வாசகர்களே வாசிக்க வேண்டிய நாவல் இது.  

  இந்த சிறகொடிந்த வலசை ஒருபோதும் வீழ்ந்து விடாது.  மாறாக ராஜாளியாக உருப்பெற்று எழுத்துலகில் வலம் வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். 


- சம்பத் ஜி




வெளியீடு : அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்

சென்னை.


#புதியமாதவி_நூல்கள்

Saturday, February 1, 2025

மைக்ரோ கடவுள்கள்

 மைக்ரோ கடவுள்கள்

🦋🦋🦋



 கடவுள்களின் விசுவரூபங்களை வியந்து எழுதிய காலங்கள் முடிவுக்கு வருகின்றன. இலக்கியம் தனக்கான வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் அது எழுதப்படும் காலத்தின் துளியிலிருந்துதான் எடுத்துக் கொள்கிறது. கைபேசிகளின் காலமிது. கடவுளும் கைபேசிக்குள் அடக்கமாக அவதாரமெடுக்கிற காலமிது. இலக்கியமும் விதிவிலக்கல்ல.

 அவசரமான வேகமான கைபேசி காலத்தினூடாக பயணிக்கும் போது இலக்கியமும் அதற்கான வடிவத்தை இயல்பாகவே மைக்ரோ வடிவமாக பெறுகிறது என்றுதான் சொல்லவேண்டும்.

 பக்கம் பக்கமாக எழுதுவதை இன்றெல்லாம் யாருக்கும் வாசிக்க நேரமிருப்பதில்லை என்பதுதான் உண்மை ! எனவே குறுங்கதைகள், மைக்ரோ கதைகளுக்கான காலமாக இன்றைய கைபேசி இலக்கியவடிவமாக குறுங்கதைகளின் வரவு கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

 பஞ்சதந்திர கதைகள், ஜாதக கதைகள் , அக்பர் பீர்பால் கதைகள் இவை அக்காலத்திய குறுங்கதைகள். உலகத்தின் மிகச்சிறிய கதை என்று எர்னெஸ்ட் ஹமிங்க்வே எழுதிய ஆறு சொற்கள் கொண்ட சிறுகதையைத்தான் குறிப்படுவார்கள். அக்கதை : FOR SALE : BABY SHOES, NEVER WORN” அவ்வளவுதான்! இந்த ஆறுசொல் மைக்ரோ கதையை அவர் சவாலாக எடுத்துக் கொண்டு எழுதினார் என்றும் சொல்கிறார்கள்.


தமிழ் இலக்கியப் பரப்பில் , “ஒரு ஊர்ல ஒரு நரி, அதோட கதை சரி”  என்பதும் அவர் கதையைப் போலவே மைக்ரோ கதைதான். எழுதியவர்தான் யாரென்று தெரியவில்லை. ! 80களில்  ஈழம் எழுத்தாளர்  ஐ சாந்தன் எழுதிய கடுகுக்கதைகள் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தியவை என்பார். பா. ராகவன்.

அதன் பாதிப்புதான் வார இதழ்களில் வெளிவந்த ஒருபக்க கதைகள் .

ஆனால் இன்று வெளிவரும் மைக்ரோ கதைகள், குறுங்கதைகள் நவீன மைக்ரோ கதைகள். காரணம் வடிவத்தில் மட்டுமே இக்கதைகள் குறுங்கதைகள் என்ற பகுப்பில் இடம்பெற்றாலும் முந்தைய குறுங்கதைகளிலிருன்டு மாறுபட்டவை. 

இன்றைய குறுங்கதைகள்,

கவிதையிடமிருந்து கவித்துவத்தையும் சிறுகதையிடமிருந்து கதை சொல்லலையும் பெற்று உருப்பெற்ற வடிவம். “ என்று குறுங்கதையின் புதிய பாய்ச்சலை அடையாளம் காட்டுகிறார் மலேசிய எழுத்தாளர் கே. பாலமுருகன். எழுத்தாளர் அன்பாதவன் எழுதிய “   நேத்ராவதியின் கடவுள்” குறுங்கதைகளும் நவீனத்துவத்தின் இதே பாய்ச்சலைக் கொண்டு அவருக்கே உரிய மொழி நடையில் தனித்துப் பயணிக்கின்றன.

“செய்திகள் வழியாகவும் பிறரின் நேரடி அனுபவங்கள் வாயிலாகவும் சொல்லக்கேட்ட குறிப்புகளாகவும் கிடைத்தவை இக்கதைகள் “ என்று கதைகளின் முகவரியை தெளிவாக முன்வைக்கிறார் அன்பாதவன்.. * *  * 

• உயிர்த்துளி கதை, (பக் 13) கதையில் சமகால ரயிலில் ஒரு கவித்துவம்  கதையாகிறது.

• நீளமான தாஜ்மஹால் (பக் 73) அன்பு, காதல் என்பது வெள்ளைப்பளிங்குகளால் கட்டப்பட்ட்தல்ல, அலங்காரமோ ஆடம்பரமோ அல்ல. அது வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் டிரெயின். ஆம்.. அது ஒரு  நீளமான  தாஜ்மஹால். என்று கதையின் முடிவு. வானுயர நிற்கும் தாஜ்மஹாலைக் கண்டு போட்டோ எடுத்து காதலின் சின்னம்  தாஜ்மஹால் என்று கொண்டாடி உலக அதிசயமாக பார்க்கும் பார்வையின் நடுவில்  நாம் நம் அன்றாட வாழ்விலும் பயணங்களிலும் காணும் தாஜ்மஹாலை பிரதி எடுக்கிறது இக்கதை. காதலும் நேசமும் பிரமாண்டங்களில் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளும்போது வாழ்தல் இனிதாகிறது.

• 60 (பக் 60) கதை அன்பாதவனின் தனித்துவமான எள்ளல் தொனி கொண்ட எழுத்து. அன்பாதவனின் தனித்துவமே எந்த வடிவமாக இருந்தாலும் அதில் அவர் சமகாலத்தை எள்ளலுடன் நகைச்சுவையுடனும் பார்க்கும் பார்வையாகும். குறுங்கதைகளும் விதிவிலக்காகவில்லை. அதிலும் குறிப்பாக ‘60’ கதை.. இதன் உச்சம் தொட்டிருக்கிறது.

• கவித்துவமே கதையாக குறுங்கதைகள் தன் வடிவ நேர்த்தியை கண்ட டைகின்றன என்பதற்கு ‘எம்பாவாய்’ சிறுகதை (பக் 93). மார்கழி நீராடல், ஆண்டாளின் பாடல் வரிகள் எல்லாமும் சமகாலத்துடன் சேர்ந்து ஒரு கரம்சாய் .. குளிருக்கு இதமாக மாறுகிறது. 

‘வங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் ஈந்த பாலில் செய்வோம்.. கரம்சாய்….”! (பக் 93)


• தைலம் (பக் 69) ஒரு பாலியல் கதையும் உண்டு! அது என்னவோ தெரியவில்லை… இந்த எழுத்தாளர்களுக்கு “அண்ணியைக் கண்டால் பாலியல் பிம்பமாகவே தெரிகிறது , பாவம் அண்ணிமார்கள்!” 

வாழ்வின் எந்த ஒரு துளியிலிருந்தும் படைப்புக்கான மூல விதைகளைக் கண்டறிய முடியும் என்பதில் இக்கதைகள் வெற்றி பெற்றிருக்கின்றன.

வாழ்த்துகள் அன்பாதவன்.💐💥

வெளியீடு : இருவாட்சி பதிப்பகம்.@ 2024.

பக் 128 விலை ரூ. 150