Wednesday, July 16, 2025

தோழர் மலரின் கதை



தோழர் மலரின் கதை.

இது  புனைவல்ல. உண்மை.
சில அதிசயங்களும்
சில நம்பிக்கைகளும்..
🔥🔥🔥🔥

 அவளை மாடு முட்டி காலால் மிதித்தது. அவ்வளவுதான் அவளுக்கு இன்றுவரைத் தெரியும். மற்றதெல்லாம் அவளைப் பற்றி அவள் பெற்றோரும் உடன்பிறப்புகளும் அண்டைவீட்டாரும் பள்ளிக்கூடத்தில் அவளுடன் படித்த
அவள் தோழியரும் சொல்ல அவள் அறிந்தவைகளாக மட்டுமே இருக்கின்றன.

  காஞ்சிபுரம் ஐயன்பேட்டை கிராமத்தில் கோவி. கலியமூர்த்தி, சந்திரா இருவருக்கும் பிறந்த மகள் மலர்விழி. மாடு முட்டுவது மாடு மிதிப்பதெல்லாம் மிகவும் சாதாரணமாகவும் அதனால் ஏற்படும் காயங்களும் வீக்கங்களும் கைவைத்தியத்தில் சரியாகிவிடும் என்பதே மக்கள் நம்பிக்கையாக இருந்தது. எனவே மகள் மலர்விழியை மாடு மிதித்துவிட்டது என்பதை யாருமே பொருட்படுத்தவில்லை. மலர்விழிக்கு வலி இருந்த இடத்தில் தைலமோ கைமருந்தோ தடவி இருப்பார்கள். ஆனால் இரவு தூங்கி எழுந்தப் பின் மலர்விழியின் உடல் வீங்கி ஒரு விகாரமான தோற்றம் ஏற்பட்டது. அத்துடன் காய்ச்சலும் சேர்ந்துக் கொண்டது. அவள் உடலின் வீக்கம்தான் காய்ச்சலைவிட மிகப்பெரிய அச்சுறுத்தலைப் பெற்றொருக்கு கொடுத்திருக்கும். 

அவர்கள் காஞ்சிபுரம் பார்த்தசாரதி மருத்துவமனைக்கு
தங்கள் மகளைக் கொண்டு காட்டுகிறார்கள். உடல் பரிசோதனைக்குப் பிறகு
மருத்துவர் குழந்தையின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால்தான் உடல் வீக்கம் எடுத்திருக்கிறது என்று சொல்லி உடனடியாக அவளுக்கு ஓரு ஊசிப்போட்டாக வேண்டுமென சொல்கிறார். அந்த ஊசியின் விலை 1983 ல்
ரூ 600. மலர்விழி சொல்கிறார் அந்தப் பணம் என் அப்பாவின் ஒரு மாதச் சம்பளத்தைவிட இரண்டு மடங்கு என்று. மகளின் உயிரைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று கலியமூர்த்தி கடன்பட்டு ஊசி வாங்கி சிகிச்சை எடுக்கிறார்கள். மலரின் உடல் வீக்கம் சற்று குறைகிறது என்றாலும் மலர் யாருடனும் எதுவும் பேசவில்லை. அவளுக்கு தன்னைச் சுற்றி யார் என்ன பேசுகிறார்கள், என்ன நடக்கிறது என்று எதுவும் தெரியவில்லை. மருத்துவர்களால் அவள் நிலைக்கு காரணம் இதுதான் என்று தெளிவாக சொல்லவும் முடியவில்லை. இந்த நிலையில் மருத்துவமனையிலிருந்து அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்று மருத்துவர்கள் சொல்லி விடுகிறார்கள். மருத்துவர்கள் கைவிரித்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை.

மலர்விழியின் அம்மாவும் அப்பாவும் வேறு வழியின்றி தங்கள் மகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனையிலிருந்து தங்கள் வீட்டுக்கு வரும் வழியில் மலர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்படுகிறது.

 மலரின் அம்மா சந்திரா வரும் வழியில் தன் குழந்தையுடன் இறங்கி அந்தக் கோவிலுக்குப் போய்விடுகிறார். ஐயன்பேட்டையிலிருக்கும் சந்தோலி அம்மன் கோவிலின் வாசலில் உட்கார்ந்து விடுகிறார். 
“தாயே என் மகளை நீ குணப்படுத்தாமல் நான் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்” சங்கல்பம்…எடுக்கிறார். அவருடைய மன உறுதியை யாராலும் அசைக்க முடியவில்லை. கணவர் கலியமூர்த்தி மருத்துவர்கள் முடியாது என்று சொல்லிவிட்டார்கள், இது தேவையில்லாத வீம்பு, நம் மகளுக்கு இதுதான் தலைவிதி, இதை மாற்றமுடியாது , ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்” என்று எவ்வளவோ எடுத்துச் சொல்கிறார்;. ஆனால் மலரின் அம்மா யார் சொல்வதையும் கேட்பதாக இல்லை. சந்திரா தன் மகளுடன் சற்றொப்ப ஆறு மாதங்கள் அந்தக் கோவிலில் தன் வேண்டுதலுடன் உட்கார்ந்திருக்கிறார். 

 அவருக்கு உணவு, மாற்று உடை என்று வீட்டிலிருந்தும் ஊரிலிருந்தும் கொண்டுவருகிறார்கள். நாள்கள் செல்ல செல்ல அனைவருக்கும் அவள் செயல் முட்டாள்தனமாக தெரிகிறது. ஆனால் அவள் மட்டும் உறுதியாக இருக்கிறாள். தாய் சந்திராவுக்கும்  ஊர்த்தெய்வம் சந்தோலி அம்மனுக்கும் நடுவில் காலம் மெளனமாக இருக்கிறது. கோவிலில் பூஜைக்குப் பின் கொடுக்கப்படும் துளசி தீர்த்தம் (தண்ணீர்) மட்டும்தான் சந்திரா தன் மகளுக்குன் கொடுத்த ஒரு மருந்து எனலாம். 

மலர் அழவில்லை. சிரிக்கவில்லை. ஏன் கோவிலில் இருக்கிறோம் அம்மா என்று கேட்கவும் இல்லை. அவளுக்கு அவளைச் சுற்றி நடந்துக் கொண்டிருக்கும் எதுவுமே தெரியவில்லை. அவள் தன் சூழலுக்கு எந்த ஒரு எதிர்வினையும் ஆற்றவில்லை.

  திடீரென ஒரு நாள் அந்த விடியல் மட்டும் வேறொரு சூரியனை அனுப்பியது. சந்தோலி அம்மன் முதல் முறையாக பேச ஆரம்பித்தாள். ஆம்,
குழந்தை மலர் வாய்திறந்து பேசினாள். “அம்மா, நம்ம வீட்டுக்குப் போகலாம்”
அவ்வளவுதான் அவள் பேசிய வார்த்தைகள்!

 அதுவரை வாய்த்திறந்து எதுவும் பேசாத மகள் பேசிவிட்டாள், இனி எல்லாமும் சரியாகிவிடும் என்று அம்மா சந்திரா நம்பினாள். ஊரும் உறவுகளும் அந்த நாளைக் கொண்டாடின. மகளை வீட்டிற்கு அழைத்துவந்து சடை விழுந்த கூந்தலில் நீருற்றி  நீராட்டினாள். சடை சடையாக பின்னலிட்டு இருந்த கூந்தல் தண்ணீரை ஊற்றியவுடன் அப்படியே கையொடு வந்துவிட்டது. தலைமுடி மட்டுமல்ல, அவள் புருவம், இமை முடிகளும் உதிர்ந்துவிட்டன. ஒரு விகாரமான தோற்றத்தில் குழந்தை மலர்விழி 
மெல்ல மெல்ல மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தாள்.
 சில ஆண்டுகள் தான் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்ததே இல்லை என்கிறார் மலர்விழி. அவர் வீட்டில் மட்டுமல்ல, அண்டை வீடுகளிலும் அக்குழந்தையின் மன நலம் பாதுகாக்கப்பட்ட து. யாரும் அக்குழந்தையின் விகார தோற்றத்தைக் காட்டியோ பேசியோ அக்குழந்தையின் மனசைத் துன்புறுத்தவில்லை. இதெல்லாம் அவர்களுக்கு யாருமே சொல்லிக் கொடுக்காமல் வந்தப் பண்பாடு. நயத்தக்க நாகரிகம்.

மலர்விழியின் அம்மா அவருக்கு தேங்காய்ப் எண்ணெய் மட்டுமே தேய்ப்பாராம். முடி வளர்ந்திரும் பாருங்க.. என்று நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார் சந்திரா. அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை.
 மலரின் வாழ்க்கையில் இத்துயர சம்பவம் நடந்தப்போது அவர் 
ஐயன்பேட்டை அரசு உயர் நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அதன் பின் அரசு மேல் நிலைப் பள்ளி சின்ன காஞ்சிபுரத்தில் ஒன்பது முதல் பதினொரு வரை படித்திருக்கிறார்.
வடக்குத் தெரு, நடுத்தொடு, கந்தபார் தெரு என்று மூன்று தெருக்களும் அவற்றை இணைக்கும் சதுரவடிவில் அமைந்த ஊரும் அவரை ஒதுக்காமல் தங்கள் வீட்டில் ஒரு குழந்தையாக அரவணைத்திருக்கிறது.

 மலர் தன் நினைவுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டபோது அந்த ஐயன்பேட்டை சந்தோலி அம்மனைப் பார்க்கணுமே என்றேன். 
வீட்டுக்கு வாங்க தோழர், எங்க அம்மா சந்திராவைப் பாருங்க..” என்றார்.
அவருக்கு அவர் வாழ்க்கையின் நிகழ்ந்த அதிசயங்களை சந்தோலி அம்மனுடன் முடிச்சுப் போட விருப்பமில்லை. ஒரு தாயின் உறுதி , நம்பிக்கை என்று விளக்கம் தருகிறார். என் அம்மா செய்ததெல்லாம் எனக்கு தினமும் அக்கோவில் துளசி நீரைக் கொடுத்ததுதான் என்று அறிவியல் விளக்கமும் தருகிறார் தோழர் மலர். 

 சந்திரா என்றால் என்ன? சந்தோலி என்றால் என்ன? இருவருமே மலருக்கு அன்னையர்தான். அம்மா என்ற  மாபெரும் சக்தியில் சந்தோலி அம்மனும் கரைந்து கண் திறந்திருப்பாள் தானே. 

 இன்று தோழர் மலர்விழி, தமுஎகச வின் மிக முக்கியமான களப்பணியாளர். 2008ல் அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறன் மேம்பாட்டிற்கான செயல்பாடுகளை “செம்பருத்தி குழந்தைகள் உலகம்” என்ற பெயரில் ஆரம்பித்தார்.  விருதுநகர், திருச்சி, இராமநாதபுரம் , மதுரை, கடலூர், சென்னை என்று பரந்துப்பட்ட அவர் பயணம் மாணவர்களின் பல மேம்பாட்டு திறன்களுக்கு வழிகாட்டியது. அதன் செயல்வடிவமாகவே ‘மழலைச்சொல் ‘ என்ற பதிப்பகம் ஆரம்பித்து குழந்தைகள் பெற்றோர்கள் ஆசிரியர்களைக் கொண்டு குழந்தைகளுக்கான கதைகளை எழுத வைத்தார். 
39 புத்தகங்கள், 16 பக்கங்களுக்குள் வடிவமைக்கப்பட்டு வெளிவந்துள்ளன.
இன்றும் குழந்தைகளின் கால்களாகவும் காதுகளாகவும் பயணித்துக் கொண்டிருக்கிறார் தோழர் மலர்விழி.

(தோழர் மலரும் நானும் வள்ளியூரில் நுங்கு சர்ப்பத்துடன்)

Monday, July 14, 2025

என்னைப் பெத்த அம்மாஆஆஆ

 



‘எப்ப வந்த தாயி.. ? ‘

மாட்டைப் பத்திக்கொண்டுப் போகும் கோனார் மாமா கேட்டார்.

‘வந்துப் பத்து நாளு ஆவுது மாமா.. ‘

‘என்ன இன்னும் அப்படியேதான் கிடக்காளா.. ‘

‘யோவ் கோனாரு ..சாகப்போறவக்கிட்டே ஏன் போட்டிப்போடுதேரு..உள்ளெ வந்து நாடிப் பிடிச்சுப் பார்த்துதான் சொல்லப்பிடாதா.. மூவடையா இன்னும் எத்தனை நாளைக்கு இந்தப் பிள்ளைய இப்படிக் காக்கப் போடப்போறாளோ தெரியலையே.. ‘ சின்னம்மா அழுது கொண்டே அலுத்துக் கொண்டாள்.

கோனாரும் மூவடையாளும் ஒரே கிணத்தில் குளித்தவர்கள்.. ஒரே குளத்தில் அயிரை மீனைப் பிடித்து விளையாண்டவர்கள்..

என்ன ரண்டு பேருக்கும் ஒருவித சண்டை நேசம் உண்டு.அந்தக் காலத்திலிருந்தே அப்படித்தான். இப்பவும் ரண்டு பேருக்கும் அப்படித்தான் சண்டை வந்தது.

ஆண்பிள்ளை இல்லாதவர்களுக்கு அரசு மானியமாக அறுபதோ எழுபதோ மாசமாசம் கொடுக்கின்றது. உனக்கென்ன கொடுத்து வச்சவா.. மாச மாசம் பொண்ணு வேற பணம் அனுப்பறா.. கவர்மெண்ட் பணம் வேறு .. ‘ என்று சொல்ல

ப்டி பிடி என்று பிடித்துக் கொண்டாள் மூவடையா..

மூவடையாளுக்கு யாரும் அவளைக் கொள்ளி வைக்க ஆண்பிள்ளை இல்லாதவள் என்று சொல்லிவிட்டாள் போதும் .. அவ்வளவுதான்.. அன்னிக்கு பூரா ஊர்ச்சனம் தூங்கினப்பிறகும் அவள் குரல் அடங்காது.. சகட்டுமேனிக்கு எல்லாரையும் ஏக வசனத்தில் அறுத்து வாங்குவாள்..மூவடையா வாய்க்குப் பயந்தே பலர் அவளிடன்

அதிகம் பேசமாட்டார்கள்.

ஆனா மூவடையா கடும் உழைப்பாளி. எல்லோருக்கும் கிணத்தில் தண்ணிரில்லை எப்படி விவசாயம் செய்வது என்று கவலையிலிருக்க இவள் மட்டும் பஞ்சாயத்து போர்டில் கொடுத்த இரண்டு ஆட்டை வைத்து வியாபாரம் ஆரம்பித்துவிட்டாள்.

வேறென்ன.. ஆட்டுப்பாலில் நல்ல இஞ்சிக் கலந்த டீ போட்டு காலையில் மலையாளத்து மார்க்கெட்டுக்குப் போகும் லாரி டிரைவர்களுக்கு வண்டி லோட்ஏற்றும் இடத்திற்குப் போய் விற்றுவிட்டு வருவாள்.


அரைமணி நேரம் நடந்துப் போய் இவள் விற்கின்றாள் என்பதைவிட இவள் எப்போதடா நமக்கு இஞ்சி சாயாக் கொண்டுவருவாள் என்று லாரி டிரைவரிலிருந்து ரிக்ஷா டிரைவர் வரை காத்திருப்பார்கள்..

எப்படியும் ஒரு நாளைக்கு பத்து முதல் இருபது வரை லாபம் கிடைக்கும்.

அதுபோதும் அவளுக்கு.. அவள் என்ன ஒத்தக் கட்டை..

இப்போது படுக்கையில் விழுந்து பதினைந்து நாளாகின்றது.

பெரிய டாக்டரு எல்லாம் ‘சரி .. சொல்றவுங்களுக்கு சொல்லிடுங்க.. ரொம்பநாளு தாக்குப்பிடிக்காது என்று சொல்லிவிட்டார்.

மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு..

பணம் செலவு செய்தால் சுகமாக்க கூடிய வியாதி தான்.

அறுவைச் சிகிச்சைக்கே இரண்டு லட்சம் ஆகும். இவர்களால் முடியாது என்பது டாக்டருக்கும் தெரியும். அதுதான் கையை விரிச்சுட்டார்.

அது தெரியாமல் அவர் முடியாதுனு சொன்னதையே அவருக்குடைய சிறப்பாக அந்த ஊர்ச் சனங்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்..

‘ சும்ம சொல்லப்படாது.. அவுங்க அப்பா கோட்டையிடி வைத்தியரு மாதிரியே தான் இவரும்.. நம்மளை ஏமாத்தி பைசாப் பிடுங்க மாட்டாரு.. முடியாட்டா முடியாதுனு கரைக்கட்டா சொல்லிப்புடுவாரு.. இப்படித்தான் போனமாசம் பால்தேவர் அப்பாவுக்கு நாள் குறிச்சுக் கொடுத்துபுட்டாராம்..பிறகென்ன.. பால்தேவரு அக்கா தங்கச்சினு எட்டுபேருல்லே அத்தனை பேருக்கும் சொல்லிவிட்டு எல்லாலுவளும் வந்து பாலு ஊத்தி தான் காரியம் முடிஞ்சிருக்குனாப் பாத்துக்காங்களேன் ‘

கோனாரு கைகாலை கழுவிட்டு தாழ்வாரத்தில் கயித்துக் கட்டிலில் கிழிந்த தலையனை மாதிரி ஒரு சின்ன ஓலைக் கூடையில் வச்சி எடுத்துட்டுப் போற பருத்திப் பஞ்சுமாதிரி கிடக்கின்ற மூவடையா கையை தூக்கி நாடிப் பிடித்து பார்த்தார்..

ஒரு நிமிடம் அமைதி..

எல்லோரும் அவரு முகத்தையே பாத்திட்டிருந்தாங்க..

‘எல்லா நாடியும்தான் அடங்கிபோச்சே.. ஏ மூவடையா.. என்னத்தை நினைச்சிக்கிட்டுஇருக்கே.. ‘

அதுதானே.. அந்தப் பிள்ளையும் பிள்ளை குட்டிகளை விட்டுட்டு போட்டது போட்டபடிக் கிடக்க ஓடி வந்திருக்கு.. அவ மாப்பிளை நல்ல அமந்த குணம்..அதுதான் பேசாமா இருக்கு.. இவ இப்படிக் கிடந்து கடைசியிலே பால் ஊத்த யாருமில்லாமலே காய்ஞ்சிப் போகப் போறாளா..

எப்படியும் ரண்டு நாள்ளே அடிச்சிடும்.. வெள்ளிக்கிழமையிலே அமாவாசை வருது.

இழுத்துட்டுக் கிடக்கிற உசிரை எல்லாம் அடிச்சிட்டுப் போறதுக்குத்தான் இந்த என்வெள்ளிகிழமை அமாவாசைனு சொல்லுவாங்க..ம்ம்ம் பார்ப்போம்..

கூட்டம் கலைந்தது..

‘ஏ மைனி.. கோனாரு என்ன சொன்னாரு.. ? ‘

அவரு என்னத்தை சொல்லறதுக்கிருக்கு.. இப்ப பத்து நாளா இந்தக் குளுகோஸ் தண்ணியை நாக்கிலைத் தொட்டு வைக்கறதில்தான் அவ உசிரு ஆடிக்கிட்டுகிடக்கு. என்னத்தை நினைச்சுக்கிட்டு கிடக்காளோ அவ மவளும் மருமவனும்வந்து காத்துக்கிடக்காவா.. ‘

‘என்ன தம்பி.. நீங்கதான் மூவடையா மருமகனா.. ? ‘

ஆமாய்யா..

இல்லஏ ஒன்னுமில்லே.. மூவடையா எங்கிட்டே ஒரு சீட்டுப் போட்டா பாருங்க..

ரண்டாவது சீட்டு எடுத்திட்டா.. இன்னும் 13 சீட்டு பாக்கி இருக்கு..

மாசமாசம் 250 ரூபா.. பணவிசயம் எதுக்கும் அவ உயிருடனிருக்கும்போதே சொல்லிட்டா நல்லதுனுதான்… ‘

மூவடையா இவர்கள் சொல்கின்ற பணக்கணக்கு , சீட்டு நாட்டு கணக்கை எல்லாம் கேட்டிட்டிருக்க மாதிரி அவர் சொன்னார். அவர்மட்டுமல்ல.. இரண்டு மூன்று பேர் இப்படி அவனிடம் மட்டும் கணக்கு சொல்லியிருக்கின்றார்கள். அவனும் எல்லோரிடமும் சொல்வதுபோல் இவரிடமும் பதில் சொன்னான்.

‘அதனால் என்னய்யா.. நானு மாசமாசம் உங்க பேருக்கு மணியார்டர் பண்ணிடறேன்

மாமியார் ரொம்ப சமாளிப்புள்ளவள் என்ரு அவன் கேள்விப்பட்டிருக்கின்றான்.

அவர்கள் மாச மாசம் அனுப்புகின்ற 100 ரூபாயில் இதை எல்லாம் செய்ய முடியாது.

இதெல்லாம் அவள் எப்படியும் சமாளிச்சிடலாங்கிற துணிச்சலில் செய்திருக்கும் காரியங்கள்.

எதற்குமே எழுத்து கணக்கு கிடையாது..கேட்கவும் முடியாது. நம்பித்தான் ஆகவேண்டும்.

மூவடையாவுக்கு அவர்கள் ஊர் அம்மனின் பெயர் என்று அவர்களின் சின்னம்மா சொல்லியிருக்கின்றாள்.

‘மூன்று யுகம் கொண்டாள் ‘ அவர்கள் ஊர் அம்மனின் திருநாமம்.

அந்த அம்மனின் பெயர்தான் இவளிடம் வந்து மூவடையாளாக மூக்கு வடித்துக்கொண்டு நின்றது.

மூவடையாவுக்கு ரஞ்சிதம் ஒரே பெண்தான். அதுவும் அவள் வெள்ளி செவ்வாய் தவறாது

ஊர் அம்மனுக்கு விரதமிருந்து ரஞ்சிதத்தை உண்டானாள். ரஞ்சிதம் பிறந்தவுடன்

மூன்று யுகம் கொண்டாளுக்கு தனியாக ஆடுவெட்டி கொடை விட்டுக் கொடுத்தாள்.

தனக்கு குழந்தை இல்லை என்பதை விட அம்மனின் பெயர் வைத்த தன்னை யாரும் மலடி என்று சொல்லிவிட்டால் அது அம்மனுக்கே இழுக்கு என்று எண்ணிஅழுதிருக்கின்றாள்.

அம்மா தாயே.. உன் பேரைச் சொல்லி என்னை யாரும் மலடினு சொல்லலாமா ?

நீ அதுக்கு இடம் கொடுக்கலாமா ? ‘ தினமும் அம்மனிடம் இப்படித்தான்பேசிக் கொண்டிருப்பாள்.

அவள் விரதங்களும் நம்பிக்கையும்தான் அவளுக்கு ரஞ்சிதத்தைத் தந்ததாக அவளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.

எந்த நல்லக் காரியத்திற்கும் அம்மனிடம் தான் ஓடுவாள். எல்லா முடிவும் அம்மன் முன்னால் பூ போட்டுப் பார்த்துதான் முடிவுச் செய்வாள்.

ஒரு வெள்ளைப் பூவையும் சிவந்தி, கேந்தி, பூவரசம் என்று எதாவது கலர் பூவையும் சேர்த்து வைத்து விளக்கு ஏற்ற வரும் பூசாரியை எடுக்கச் சொல்லுவாள்.

அவர் வரும் நேரத்தைத் தவற விட்டால் அங்கே வேப்ப மரத்தடியில் விளையாண்டு கொண்டிருக்கும் சின்னப் பிள்ளைகளை பூ எடுத்து தரச் சொல்லுவாள்.

அவள் நினைத்த மாதிரி பூ வந்துவிட்டால்.. அன்று அவள் துட்டுப் பையில் சில்லறைப் புழங்கினால் அடித்தது யோகம் அந்தப் பிள்ளைகளுக்கு,

கடலை மிட்டாய் வாங்கிச் சாப்பிட பைசாக் கொடுப்பாள்.,

ரஞ்சிதத்தை இந்த உறவில்லாத பையனுக்கு கொடுக்க ரொம்பவும் தயங்கினாள்.

எல்லோரும் சொன்னார்கள். சொந்தத்தில் கொடுத்தால் தானே நாளை உன்னை அக்கறையாகக் கவனித்துக் கொள்வான் என்று. அவர்கள் சொல்வதும் சரியாகப்பட்டது.

ஆனால் இந்தப் பையனுக்கு நல்ல வேலை என்று வடக்குத் தெரு வாத்தியாரப்பா சொன்னதும் யோசிக்க வைத்தது.

பூ கட்டிப் போட்டுப் பார்த்தாள். அம்மன் ‘சரி ‘ நு உத்தரவு கொடுத்தவுடன் துணிந்து திருமணம் செய்து கொடுத்தாள்..

அவள் வளர்ப்பில் ரஞ்சிதத்திற்கும் ஊர் அம்மனின் மேல் எப்போதும் தனியானப் பக்தி உண்டு, பரீட்சைக்கு போகும்போது அவள் படிக்காத கேள்வி வரக்கூடாது என்று அம்மனிடம் வேண்டிக்கொள்வாள். வரவில்லை என்றால் ‘அம்மனே.எல்லாம் உன் அருள்.. ‘ என்று மனசில் உருகிப்போவாள்.

எப்போதாவது அவள் படிக்காதது வந்துவிட்டால் அம்மனைப் பற்றி அவளுக்கு வருத்தப் படவே தோன்றியதில்லை.

ரஞ்சிதம் கை காலைக் கழுவிவிட்டு புடவையை சரி செய்து கொண்டாள்.

தலை முடி சரியாக வராமல் சிக்குப் பிடிக்கத் துவங்கிவிட்டது.

அப்படியே எடுத்து ஒரு கொண்டையாக போட்டுக் கொண்டாள்.

நேராக அம்மன் கோவிலுக்குப் போனாள்.

அம்மனிடம் போகவேண்டும் என்றுதான் தோன்றியதே தவிர அதற்கு மேல் அம்மனிடம் என்ன கேட்பது என்று தெரியவில்லை. எல்லாம் அறிந்தவள்தானே

நானும் என் சுயநலமும் என்ன வேண்டி அவள் முன்னால் வந்திருக்கின்றோம் என்பதை அவளுக்குச் சொன்னால் தான் புரியுமா.. என்ன ?

அவள் மெளனமாக கோவில் பண்டாரம் பூசை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அம்மாவுக்கு உடல் நலமில்லாமல் ஆகும்போதெல்லாம் எத்தனைத்தடவைஇதே அம்மனிடம் ஓடிவந்து ‘சாமி என் அம்மாவைக் காப்பாத்து ‘ என்று கண்ணீர் விட்டிருக்கின்றாள்.

திருமணமாகி ஒரு வருடத்திற்குள் இப்படித்தான் அம்மா நெல் காய வைத்துவிட்டு ஏணியிலிருந்து இறங்கும்போது கீழே விழுந்துவிட்டாள். டிரெயின் பிடித்துவந்து மறுநாள் ஊரிலிறங்கி அம்மாவைப் பார்க்கும்வரை எத்தனை வேண்டுதல்கள்..

இதுவரை அவள் அம்மாவுக்காக வேண்டியதிலிருந்து இன்றைய வேண்டுதல் எவ்வளவு வித்தியாசமானது.. அதனால் தான் அவள் வார்த்தைகள் வராமல் ஊமையைப் போல .. மனசில் நினைப்பது சொல்லாகப் பிறக்கும் முன்பே

அவள் மெளனத்தில் கருக்கலைப்பு செய்து கொண்டு .. வாழ்க்கையின்யதார்த்தப் படுக்கையில் மனக் கண்மூடி நின்றாள்.

கோனார் சொன்ன வெள்ளிக்கிழமை அமாவாசை வந்துவிட்டுப் போய்விட்டது.

ரஞ்சிதத்தின் கணவன் பொறுமை இழக்க ஆரம்பித்துவிட்டான்.

‘ரஞ்சிதம்.. மூத்தவனுக்கு இது பத்தாம் கிளாஸ்.. இன்னும் பத்து நாளையிலே பிரி லியம் டெஸ்ட்.. ‘

அவளுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அவள் கணவன் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகவே பட்டது.

கோனாருக்கு நம்பவே முடியவில்லை.

எப்படி தொண்டைக்குழியில் மட்டும் அவள் உயிர் துடித்துக் கொண்டிருக்கின்றது என்று யோசித்துக் கொண்டிருந்தார்.வாத்தியாரப்பா வந்து பார்த்தார்.

‘ஏ மூவடையா.. என்னத்தை நினைச்சுக்கிட்டு இப்படி பிள்ளையைக் காக்கப் போடுதே தாயி..ரஞ்சிதம் இன்னிக்கு சாயந்திரம் அம்மன் கோவில்பண்டாரத்திட்டே போயி திருநீறு வாங்கி நீ கொடுக்கிற குளுகோஸ் தண்ணியிலே கரைச்சுக் கொடு.. ஆங்ங்..அப்படியே மறக்காம நம்ம நாத்தங்காலுக்குப் போயிமண் எடுத்து கிணத்து தண்ணி.. கீழே கொஞ்சமா கிடக்கு.. அதையும் நம்மகோனாரு கிட்டச் சொல்லி எடுத்து தரச்சொல்லு.. கிணத்து தண்ணிலே அவ நாத்தங்காலு மண்ணைப்போட்டு கலக்கி வாயிலே ஊத்து தாயி..

உங்க அம்ம எப்பவும் துட்டுப் பையிலே துட்டு இல்லாம இருக்கவே மாட்டா..

அவ துட்டுப் பையிலே கொஞ்சம் பைசாவைப் போட்டு அவக் கிட்டேசொல்லு தாயி.. ஏம்மா, உன் துட்டுப் பையிலே பைசா இருக்குனு.. ‘

அவர் சொன்ன எல்லாவற்றுக்கும் ரஞ்சிதம் தலை அசைத்தாள்.

அவர் போனவுடம் வாத்தியாரப்பாவின் மனைவி வந்தாள்.

‘ஏ ரஞ்சிதம்.. இங்க பாரு.. இப்படி கயித்துக் கட்டிலிலே மெத்தையிலே

போட்டா அவ இழுத்துக் கிட்டு கிடந்துதான் அவஸ்தைப் படுவா.. ஆமா சொல்லிப்புட்டேன். அவளை எடுத்து நடு வீட்டிலே தரையிலே கிடத்து தாயி.. அவகட்டின வீட்டிலே அவ நல்ல உருண்டு பிரளட்டும்.. ‘

சொன்னது மட்டுமல்ல… யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்காமல் அவளே எல்லாம் செய்ய ஆரம்பித்துவிட்டாள்.

அவள் போகும்போது ரஞ்சிதத்தை தனியாகக் கூப்பிட்டு பேசினாள்.

ரஞ்சிதம் கண்களில் கண்ணீர் வழிந்தது..

‘ஏ ரஞ்சிதம் இப்படி நீ அழுதேனா.. அப்புறம் இருக்க வேண்டியதுதான்..எத்தனை நாளு தாயி இப்படிக் காத்துக் கிடக்கப்போறே.. ? ‘

அன்று முழுவது ரஞ்சிதத்திற்கு தூக்கமே வரவில்லை…

கூரையில் கோழி கூவியச் சத்தம்.. எழுந்து வந்து அப்படியே கயித்துக் கட்டிலில் அம்மாவைத் தூக்கிப் படுக்க வைத்தாள்..நைந்துப்போன பழந்துணி மாதிரி அவள் இவள் கைகளில்..

அவள் தலையில் குளிரக் குளிர நல்லெண்ணெய் வைத்தாள்.அப்படியே கட்டிலை நகற்றி வைத்துக்கொண்டு ராத்திரிப் பிடித்து வைத்திருந்த சிமிண்ட் தொட்டி தண்ணியைக் குடம் குடமாக அவள் தலையில் கொட்டினாள்.

நல்ல அம்மாவின் உடம்பை தண்ணீர்விட்டுக் கழுவினாள்.

அம்மாவின் உடலைப் பார்க்கும்போது தன் உடலைத் தானே பார்ப்பது போல் பிரமை. அவள் கைகள் நடுங்கியது. கால்களைத் தொடைப்பக்கத்தை..மார்பை

நடுங்கியத் தன் கைகளால் துடைத்துவிட்டாள்.. முகத்தை அழுத்தி துடைக்கும்போதுஅம்மா கண்திறந்து இவளைப் பார்த்தது போலிருந்தது.

‘அம்மா…அம்மா ‘ அவள் குரல் உடைந்து அந்த இருட்டில் அவளுக்கே அந்நியமாகக் கேட்டது.

அம்மாவை கட்டிலுடன் நகர்த்திக் கொண்டுவந்து நடுவீட்டில் தரையில் கிழிந்தப்பாயில் கிடத்தியப்போது அம்மா இவளுடைய புடவையின் முந்தானையைப்பிடித்திருப்பது தெரிந்தது, எப்போது என் புடவையின் முந்தானையைப் பிடித்தாள்.. அவள் .. அவள் கைகளை எடுக்க முடியாமல் அப்படியேஉட்கார்ந்திருந்தாள்..

அம்மாவும் அவளுமாய். அவள் சேலையில் முந்தானி விரிப்பில் படுத்திருந்த இடம்..

அவள் சின்னவளாக இருக்கும்போதே இறந்துப்போன அப்பாவைப் பற்றிஅவரின் வீர பிரதாபங்களைப் பற்றி அவள் கதை கதையாகச் சொன்னதற்குச் சாட்சியாக நிற்கும் நடுவீட்டின் சுவர்கள் ..

அவர் வண்டி அடிச்சிட்டு வந்தார்னா ஊருக்குள்ளே நுழையும் போதே எனக்குத்தெரிஞ்சிடும்.. அவரு கையாலே காளை மாடுக ரண்டும் அப்படி ஒரு குதியாட்டம்

போட்டுக்கிட்டு ‘ஜல் ஜல் ‘னு வரும்..

காலையில் குளித்தவுடன் அப்படியே செவ்விள நீரை (தேங்காய்) உடைத்துதண்ணீரைக் கொடுத்தாள். குளுகோஸ் தண்ணீருக்கெல்லாம் கைகளால் தட்டிவிடும் அம்மா மடக் மடக்கென செவ்விளநீரைக் குடிப்பதைப் பார்த்து ஓவென அழவேண்டும் போலிருந்தது. அழுகையை அடக்கிக் கொண்டாள்..

இரண்டு நாட்கள்… இது தொடர்ந்தது…

மூன்றாவது நாள்… மூவடையாளின் மூச்சு அடங்கியது…

‘அம்மாஆஆஆஆ

என்னப் பெத்த அம்மாஆஆஆஆ என்னை விட்டுட்டுப் போயிட்டியே

அம்மாஆஆஆஆ ‘ ரஞ்சிதத்தின் அடிமனசிலிருந்து கதறலுடன் வெளிப்பட்ட அழுகையின் குரல் அம்மன் கோவிலில் இருந்த மூன்று யுகம் கொண்டாள் செவிகளிலும் விழுந்தது..


மீள்பதிவு. ஏப்ரல் 2004 ல் எழுதிய கதை.மின்சாரவண்டிகள் தொகுப்பிலிருந்து.




Saturday, July 12, 2025

வேள்பாரி ரஜனி கலாட்டா

 வேள்பாரி ரஜனி கலாட்டா.😃



வேள்பாரி ஒரு கதையாடல் மட்டுமல்ல.

அதன் இலக்கிய அடையாளம் என்பது கதைகள் தாண்டிய வடிவம்/உருவம்தான்.

இதை ஒரு படைப்பின் கதை கூறு & இழைபொருள் 

Fabula & Narration என்பர்.

கதையை யார் வேண்டுமானாலும் சொல்லிவிடலாம்.

அதற்கு எந்த ஒரு திறமையும் இலக்கிய பிரக்ஞையும் தேவையில்லை!

ஆனால் இலக்கிய வடிவத்தில் இழை பொருள் முக்கியத்துவம் பெறுகிறது.

அந்த இழை பொருள் இலக்கிய வாசிப்பில் ஒரு மாய சக்தி. ஓவ்வொரு பிரதியும் வாசகவெளியில் பல நூறு பிரதிகளாக மாறும் வித்தையை செய்வதும் அதுதான்.


 அதுதான் கதை சொல்லியிலிருந்து ஒரு இலக்கியப் படைப்பை வேறுபடுத்திக் காட்டும் இடம். சினிமா என்ற காட்சி ஊடகம் தோல்வி அடையும் இடம் இந்தப் புள்ளி தான்.


தி.ஜானகிராமனின் மோகமுள் வாசகப் பிரதியை ஊடகப் பிரதியாக்குவதில் தோல்வி அடைந்தது இதனால்தான்.

வேள்பாரி?????


நிச்சயமாக வேள்பாரிக்கும் இந்தச் சிக்கல் ஏற்படும்.

பொதுஜன காட்சி ஊடகம், மக்களை குஷிப் படுத்தும் வியாபார சந்தையை நோக்கமாக கொண்ட திரையுலகம் இதைக் கையாளுவதில் சில மசாலா ஃபார்முலாக்களை வைத்திருக்கிறது.

பொன்னியின் செல்வன் போல பிரபலங்களைக் கொண்டு பிரமாண்டமான காட்சிகளைக் கொடுப்பது.

பார்வையாளனுக்கு தீனிப்போடும் உடை பின்னணி அலங்கார பிரமாண்ட காட்சி அமைப்புகளைக் கொண்டுவருவது.

இரண்டரை மணிநேரம் இந்த பிரமாண்டம்  போதுமென பார்ப்பவரை வாய்பிளிந்து உட்கார வைப்பது..

அந்தப் படம் ஓடிடி க்கு வரும்வரை அதில் நடித்த பிரபலங்களைக் கொண்டு 

24x7 அதைப் பற்றியே எட்டு கோடி தமிழர்களையும் பார்க்க வைக்கும் ஒரு வகையான அராஜகம்...செய்வது!

இதைப் பற்றி எழுதாவிட்டால் சமூக இலக்கிய கலை உலக குற்றமாகிவிடும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு சமூக வலைத்தளங்கள் எங்கும் நீக்கமற நடக்கும் ஆக்கிரமிப்பு...

இதில் இலக்கியம் தொலைந்துப்போகும்!


ஆனாலும் சில நல்ல விஷயங்கள் நடக்கலாம்.

எதிர்காலத்தில் வேள்பாரியின் கதைச் சுருக்கம் புத்தக வடிவம் பெறும். அது ஆங்கிலத்திலும் மொழியாக்கம் பெறும். 

வேள்பாரி கதை மாந்தர்கள் அதாவது சினிமாவில் காட்டப்படும் கதை மாந்தர்களைத் தேடி விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரே சிலர் வேள்பாரியை முழுமையாக வாசிக்கலாம்.


தொடர்ந்து கடந்த கால பெருமிதங்களை மட்டுமே திரையுலகம் இலக்கியத்தில் இருந்து எடுத்துக் கொள்வதால் ஒரு ம_ _ அளவு கூட நம் பண்பாட்டு அரசியலில் அசைவைக் கொண்டு வர முடியாது.

வேள்பாரி தோழர் வெங்கடேசன் அறியாததா என்ன?

வாழ்த்துகள் தோழர்.

ஒரு பிரமாண்டமான வேள்பாரியை ஓடிடியில் பார்க்கும் நாளுக்காக நானும்.


#வேள்பாரி

#நாவல்சினிமா

#LiteratureCinema

#புதியமாதவி_13072025

Wednesday, June 18, 2025

கவிதையாகவே வாழ்ந்த தம்பதியர்


 கவிதையாகவே வாழ்ந்த தம்பதியர்.

மரணப்படுக்கையிலும் அவள் கவிதை வாசித்தாள்.அவன் புன்னகைத்தான்..!

இது எதோ கற்பனை அல்ல.

அவள் வாழ்வின் தருணங்கள்.

❤️❤️❤️


17 வயதில் அவரைத் திருமணம் செய்து கொண்டேன். அது இளமைக்கால காதலா என்றால் அக்காலத்தில் என்னை விரட்டி விரட்டி காதலித்தவர்கள் பலருண்டு. ஆனால் நான் இவரைத்தான் காதலித்தேன். இவர் கவிதைகள் ஒரு காரணம் என்றால் இவர் ஒரு மார்க்சிஸ்ட் என்பதும் இன்னொரு காரணம்.

மார்க்சிஸ்ட் கவிஞர்கள் நல்ல மனிதர்கள் என்ற நம்பிக்கை என் தந்தையின் வழியாக எனக்கு ஏற்பட்டது. என் பெற்றோர்கள் மார்க்சிஸ்டுகள்!

அவர் நல்ல மனிதர்தான். ஆனால் என் நடுத்தர வர்க்க

மதிப்பீடுகள் அவருடைய கட்டுப்பாடற்ற வாழ்க்கைமுறையுடன்

 எப்போதும் மோதிக் கொண்டே இருந்தது.

நாங்கள் இருவரும் எங்கள் நிலைப்பாடுகளில் பிடிவாதமாக இருந்தோம்.


அவர் என்னையும் எங்கள் திருமணத்தையும் விரும்பினார். நான் அவரை மட்டும் விரும்பினேன். அவர் திருமண உறவின் பாதுகாப்பையும் விரும்பினேன்.அவருக்கோ உலகம்தான் குடும்பம்.

அவரின் அந்தக் குடும்பத்திலிருந்து யார் எப்போது வந்தாலும் சமைத்துப் போட்டு கவனிப்பது என் கடமையானது. அதற்கான பணம் பற்றி அவர் கவலைப்பட்டதே இல்லை!அதை ஒரு மனைவி எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்?

அவர் கையில் எப்போதாவது பணம் வந்தால் அதை இயக்கத்திற்கும் பேரணிகளுக்கும் போராட்டங்களுக்கும் செலவு செய்துவிடுவார்.

இவை ஒருபோதும் எனக்கு திருப்தியாக இல்லை. ஆனாலும் எங்கள் மகன் அசுதோஷுக்காகவும்..  கவிதைகளுக்காகவும் நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தோம். 


" நீ இல்லாதபோது எனக்குள் ஒரு பாதுகாப்பற்ற உணர்வு தோன்றுகிறது. " என்பார் அவர். என் மனம் அதில் நெகிழ்ந்து விடும்.

இன்னும் சொல்லப்போனால் இரவெல்லாம் வால்ட் விட்மண் மற்றும் சதாநந்ந் ரேகே கவிதைகளை ஒருவருக்கொருவர் வாசித்து கேட்டுக் கொண்டிருப்போம்.

சில நேரங்களில் எங்கள் கவிதைகளை நாங்கள் பகிர்ந்துக் கொண்டோம். எங்கள் கவிதைகளின் முதல் வாசகராக நாங்களே இருந்தோம்.


அவர் மருத்துவமனையில் இருந்தப்போது இரவு இரண்டு மணியாக இருந்தாலும் காலை ஆறு மணியாக இருந்தாலும் நான் அவருக்கு கவிதைகள்  வாசிப்பேன். சில சமயங்களில் அவர் புன்னகைப்பார். சில சமயங்களில் அவர் மெளனமாக தலை அசைப்பார்.

💥💥💥💥💥

கவிதையாக வாழ்ந்த அவரும் அவளும்..

அவர் பெயர் நாம்தேவ் தசல். அவள் மல்லிகா அமர்ஷேக்.

#நாம்தேவ்தசல்

#NamdeoDhasal

#MallikaAmarsheikh

#MallikaNamdeo

Saturday, June 14, 2025

தலித் அரசியல்

 


இதை அவ்வளவு எளிதாக என்னால் கடந்து செல்ல முடியவில்லை! 

காரணம் திரு. தொல். திருமாவளவன் மீதிருக்கும் நம்பிக்கையும் எதிர்பார்ப்புகளும் மட்டுமல்ல. அதற்கும் அப்பால் நாம் கவனிக்க வேண்டிய அரசியல் இது.


* தலித் அரசியல் / ஒடுக்கப்பட்டோர் தலைமைத்துவம் என்பது தனித்துவமானது. அது எல்லாவகையிலும் சமத்துவம் மற்றும் சம உரிமைக்கான அரசியல்.


*அப்படியான அரசியலை முன்னெடுத்து செல்லும் கட்சியும் அதன் தலைவரும் ஒரு முதலாளித்துவ அரசியல் செயல்பாடுகளை நகல் எடுப்பதும் நிலவுடைமை அதிகார பிம்பத்தை ' போல செய்வதும்' ( copy) கவலை அளிக்கிறது.


*தங்களின் அடிப்படை கோட்பாடுகளை இலட்சியங்களை மறந்து ' மேனிலை ஆக்கத்தின்' உத்திகளை உள்வாங்கும் செயல்பாடுகள் தலித்திய அரசியலை நீர்த்துப் போக செய்துவிடும்.


*தலித் அரசியல் மட்டுமல்ல, ஜனநாயக தேசத்தில் எந்த அரசியல் கட்சியோ அதன் தலைவர்களோ கூட எதைச் செய்யக்கூடாது என்று இன்றைய ஜனநாயக பொதுச்சமூகம் எதிர்பார்க்கிறதோ.. அதை நோக்கிச் செல்வது ஆபத்தானது.


*அதிகார வர்க்க அரசியலைப் போலவே நாங்களும் செயல்படுவோம் என்றால் அவர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு?!!


We are different.

We are unique.

We prove that in our ever step.

#தலித்அரசியல்

#dalithpolitics

#விசிக

#தொல்திருமாவளவன்

Wednesday, May 28, 2025

எங்க ஊரு ராபின் குட்

 எங்களுக்கு இவருதான் ராபின் குட். எங்களோட ரியல் அமர் அக்பர் அந்தோணி!

தென்மாவட்டங்களில் செம்புலிங்கத்தை அறியாதவர்கள் இருக்கவே முடியாது. எங்கள் பாட்டிகளின் கதைகளில் அவன்தான் எங்கள் ' ராபின் குட்' 

பிற்காலத்தில் நம்ம வாத்தியார் நடித்த மலைக்கள்ளன் சினிமாவில் நாங்கள் கண்டதெல்லாம் எங்க செம்புலிங்கத்தைத்தான்.

வண்டி மாடு வைத்திருப்பவர்கள்

கூண்டு வண்டி வைத்திருப்பவர்கள் இவர்களிடம் எல்லாம் செம்புலிங்கத்தைச் சந்தித்ததாக ஒரு கதை இருக்கும். 


21 அடி கிணற்றைத் தாண்டியவன். தாண்டும் போது , நடுக் கிணற்றில்,  சட்டெனக் கிணற்றுக் குருவி ஒன்று உள்ளிருந்து மேலே பறந்ததைக் கண்ணுற்ற செம்புலிங்கம் அதையும் கையில் பிடித்த படியே பாய்ந்து கிணற்றைக் கடந்து ஒன்றரையடி தூரத்தில் வெளியே குதித்து நின்றானாம்!


இப்படியாக மலைக்கள்ளன் மக்கள் கதாநாயகன் போல செம்பு லிங்கமும் ஒரு கதாநாயக பிம்பமாக எங்கள் பாட்டி தாத்தா கதைகளில் வலம் வந்தும் கொண்டிருந்தான்.


 செம்புலிங்கம் ஒரு ஹிந்து. அவன் இரு இணைபிரியாத நண்பர்கள் காசியும் துரையும். காசி ஒரு கிறிஸ்தவன். துரைவாப்பா ஒரு முஸ்லிம். 💥




எங்களோட அமர் அக்பர் ஆண்டனி இவுங்க தான். மலைக்கள்ளனுமா இவருதான். ராபின் குட் ரேஞ்சுக்கு இவருக்கு எங்க ஊரு பெரிசுக ஒரு பிம்பத்தை தங்கள் கதைகளில் சொன்னார்கள். 🙂

Sunday, May 11, 2025

சத்திய மேவ ஜெயதே



பொய்களின் இழைகள்

ஊடும் பாவுமாக

நெய்த வாழ்க்கை!

பளிச்சென மின்னிய

காமிரா கண்களில்

அனாதையான அசல்.

குப்பைத்தொட்டியில்

கருக்கலைப்பு வாசனை.


கோடையிலும் மழை வரலாம்.

தலைகுனியுமோ விசும்பு?

சிறுதுளி நெருப்பு

அக்னிப் பிரவேசம்

தலைகுனியும் சீதைகள்.

துரோகத்தின் கருகிய வாசனை.

ஆரம்பமாகிறது

உண்மையின் நிர்வாணம்.

அதிபயங்கர விசுவரூபம்.


சத்ய மேவ ஜெயதே.


#புதியமாதவி_12052025

#PuthiymaadhaviPoems 

Wednesday, May 7, 2025

கவரி மா ? கவரிமான்

 



தான் நேரில் பார்க்காத கவரிமா குறித்து திருவள்ளுவர் பேசுவது ஏன்?

 

தமிழ்ச் சமூகத்தின் இலக்கிய வெளி அதன் முதற்பொருள் தெற்கே குமரியும் வட எல்லை வேங்கடமும் தாண்டி விரிகிறது. அந்தக் குதிரைப் பாய்ச்சலில் தமிழ்மண் அறியாத கருப்பொருள்களும் இடம்பெறுகின்றன. காரணம் அக்கருட்பொருட்கள் தமிழ்ச் சமூகத்தின் பொதுவெளி அறிந்ததும் அதைப் பற்றிய நம்பிக்கைகளைக் கொண்டிருந்தது என்பதும் தெளிவாகிறது.


உண்மையில் கவரிமான் என்கிற மான் வகை தமிழ் நாட்டில் உள்ளதா?

இல்லை…


காலப்போக்கில் கவரிமா என்ற சொற்றொடர், ‘கவரிமான்’ ஆகிவிட்டது. கவரியை, மான் இனத்தில் ஒன்றாகக் கருதிவிட்டனர்.


"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின் "

(அதிகாரம்:மானம் குறள் எண்:969)


பொழிப்பு: தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர் வாழாத கவரிமாவைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.


கவரிமா என்பது என்ன?

கவரி என்றால் மயிர். மா என்றால் விலங்கு. பனி மலையில் வாழும், எருமைபோல் தோற்றமுள்ள, யாக்(Yak) என்று அறியப்படுவதையே கவரிமா என்று இலக்கியங்கள் குறிப்பதாக இன்றைய ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.


இதன் உடம்பு முழுக்க மயிர் வளர்ந்து அதன் முதுகு, மார்பு, வயிறு ஆகியவை மூடினாற் போல் காட்சியளிக்கும். மூடிக் கிடப்பதால் இந்த மயிர் கவரி என்று சொல்லப் பட்டது. கவரியைக் கொண்ட மா கவரிமா ஆகும். இமயமலையில் வாழும் இந்த விலங்கு, உடம்பில் மயிரை இழந்துவிட்டால், குளிரைத் தாங்க முடியாமல் இறந்துவிடும். இதைத்தான் வள்ளுவர் இக்குறளில் குறிப்பிட்டார் என்பது அறிஞர்களின் கூற்று.


கவரி இமயமலையில் வாழ்கின்ற விலங்குகளில் ஒன்று என்பதற்கு புறநானூற்றுப்பாடலும் பதிற்றுப்பத்துப் பாடலும் சான்று பகர்கின்றன.


நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி,

குவளைப் பைஞ் சுனை பருகி, அயல

தகரத் தண் நிழல் பிணையொடு வதியும்

வடதிசை யதுவே வான்தோய் இமயம்(புறநானூறு: 132) இதில் இமயமலையில் வாழும் கவரி என்ற குறிப்பு உள்ளது.

மேலும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் எனும் புலவர், இமயம் முதல் குமரி வரை பரந்து கிடக்கின்ற நின்புகழாகிய செல்வத்தை இனிது கண்டோம் என்று வாழ்த்திய பாவில் கவரியைக் குறிப்பிடுகிறார்:

(பதிற்றுப்பத்து 11:21 – 24)


மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர், பரிமேலழகர் இவர்கள் அனைவரும் கவரிமா என்றனர். பரிதியார் அதைக் கவரிமான் என்று தம் உரையில் கூறினார். மு.வை.அரவிந்தன் 'காலப்போக்கில் கவரிமா என்ற சொற்றொடர், ‘கவரிமான்’ ஆகிவிட்டது. கவரியை, மான் இனத்தில் ஒன்றாகக் கருதிவிட்டனர்!' என்கிறார்.


மணக்குடவர் 'ஒரு மயிர் நீங்கின் உயிர்வாழாத கவரிமாவைப் போன்ற மானமுடையார்' என்றும்

பரிதியார் 'ஒரு மயிர் சிக்கினால் பிராணனைவிடும் கவரிமான் போல' என்றும் காலிங்கர்: தனக்கு அலங்காரமாகிய மயிர்க் கற்றையின் ஒரு மயிர் போகின் மானித்துப்பின் உயிர் வாழாது. அம் மயிர் துவக்குண்ட இடத்துநின்று, வற்றிவிடூஉம் கவரிமா அன்ன' என்றும்

பரிமேலழகர்: தன் மயிர்த் திரளின் ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமாவை ஒப்பார் என்றும் உரை கூறினர்.

வ சுப மாணிக்கம் 'மயிர் பறிப்பின் இறக்கும் கவரிமான் போன்றவர்' என்று தன் உரையில் 'பறிப்பின்' என்ற சொல்லை ஆள்கிறார்.

‘மயிர்’ என்று திருவள்ளுவர் பொதுவாகவே கூறியுள்ளார். ஆனால், பழைய உரையாசிரியர்கள் அனைவரும் ஒரு மயிர் என்றே பொருளுரைத்தனர்.


"காட்டில் வாழும் கவரிமான் தன்னிடமுள்ள நீண்டமுடியில் ஒரு முடி அற்று விழுந்து விடுமேயானால், அதற்கு மானம் பொறாமல் தன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் இயல்புடையதாகும், இவ்வியல்பைத் தெரிந்த வேடர்கள் அம் மான் செல்லும் வழியில் அடர்ந்த முள்ளைக் கொண்டு போட்டிருப்பார்களென்றும் கவரிமான் அவ்வழியாகச் செல்லும்பொழுது அதன் நீண்ட முடி அம்முள்ளில் சிக்கிக் கொள்ளுமென்றும் அவ்வாறு சிக்கிக் கொண்டமுடி சிதைந்தாலும் அறுந்தாலும் அம் மான் அவ்விடத்திலேயே உயிர் துறக்குமென்றும் கூறுகின்றார்கள்." என்கிறார் ரா.பி. சேதுப்பிள்ளை.


குன்றக்குடி அடிகளார் "கவரிமான் என்பது மான் வகையில் ஒரு சாதி. இந்த கவரிமான் காடுகளில் ஓடித் திரிந்து வாழும். அப்படி ஓடித் திரிந்து வாழும் அந்தக் கவரிமான் ஒரு வேலியைத் தாண்டும்பொழுது வேலியில் கவரிமான் உடம்பிலுள்ள ரோமம் ஒன்று உதிர்ந்துவிட்டாலும் கவரிமான் பொறுத்துக் கொள்ளாதாம்!" என்று குறித்துள்ளார்.


கவரிமா, மானம் மிக உடைய விலங்கு என்று கருதி ஒரு மயிரை இழந்த மானக்கேட்டால் அந்த இடத்திலேயே உயிர்விடுகின்ற இனம் என்று உரையாசிரியர்கள் மொழிந்தனர்.


 வள்ளுவருக்குப் பின் வந்த புலவர்களுள் திருத்தக்க தேவர் ‘மானக்கவரி’ (சிந் - 2120) என்றார்; கம்பர் ‘மானமா’ என்றார். புகழ்பெற்ற இப்புலவர் பெருமக்களும் கவரிமாவை மானத்துக்கு உவமையாகக் கொண்டனர். மேலும் வான்மயிர் துடக்கின் தானுயிர் வாழாப் பெருந்தகைக் கவரி என்று பெருங்கதை (35, 233, 4) கூறியது


வள்ளுவர் காலத்துக்கு முந்திய நூல்களான புறநானூறும் பதிற்றுப்பத்தும் கூறிய செய்திகளின் அடிப்படையில் கவரிமா என்றது இமயமலையில் வாழும் விலங்கு பற்றியே என்று முடிவு கொள்ளலாம். ஆனால் அது மயிர் நீங்கினால் வாழ இயலாது என்று வள்ளுவரே முதலில் கூறியதாகத் தோன்றுகிறது. கவரிமா ஒருமயிர் நீங்கினால் உயிர்விடும் என்று பெரும்பான்மையினரும், மொத்த மயிற்கற்றையும் உடலில் இருந்து போய்விடுவதால் உயிர் நீக்கும் என்று சிலரும் மயிர்க்கற்றை சிக்கினால் இறந்துபடும் என்று மற்றவரும் கூறியுள்ளனர். இவை எவற்றிற்கும் சான்றுகள் இல்லை.


தன் மயிர் உதிர்வதால் உயிர்விடுகின்ற விலங்கு இருக்க முடியாது; இது இயற்கைக்குப் பொருந்தாதது என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுவர்.


முகர்ந்தாலே வாடிவிடக்கூடிய அனிச்சமலர், 

  பாலைமட்டுமே பிரித்து அருந்தும் நுட்பம் கொண்ட அன்னப்பறவை, 

சிங்கம் போன்ற உருக்கொண்ட யாளி, பெரும் உருவும் வலிவும் கொண்ட டைனோசர், முகர்ந்தாலே வாடிவிடக்கூடிய அனிச்சமலர் போல காலப்போக்கில் அழிந்து போயிருக்கலாம். எனவே மயிர் இழப்பால் உயிர் நீங்கிய கவரிமா என்றொரு விலங்கினமே கிடையாது என்று கூறமுடியாது.


திருவள்ளுவர் தமிழ்க்குடியின் மானமாக குடியியல் பேசும்போது தமிழ்க்குடியின் நம்பிக்கைகளை தன் குறட்பாவில் கையாண்டிருக்கிறார்.

💥💥💥💥

#கவரிமா_கவரிமான்

#புதியமாதவி_கவரிமான்.


Tuesday, May 6, 2025

வேங்கை வயல் வாழ்க்கை

 



'வேங்கைவயல் மலநீரில்

மிதக்கிறது வாழ்க்கை'

😭😭😭😭


அசிங்கத்தின் முகத்தை அடையாளம் காட்டுவது எளிது.

துரோகத்தின் கதையை அப்படியே எழுதுவதும் எளிது.

ஆனாலும் சில காலம்

என்னோடு வாழ்ந்த அதே முகம்.

என் கற்பனைக்கு எட்டாத 

அவள் காமக்கதைகள்

கிளுகிளுப்பு ஊட்டுபவை அல்ல.

வாழ்க்கையின் மீதும்

மனிதர்கள் மீதும்

உறவுகளின் நம்பிக்கை மீதும்

அவள் எறிந்த மலம்.

நான் சமைத்து ஊட்டிய

அன்னத்தின் கழிவு தான்,

என்றாலும்

அதை இனி பரிமாற முடியுமா?

வேங்கைவயல் மலநீரில்

மிதக்கிறது வாழ்க்கை.

அதைக் குடித்த அவள் புதல்வர்களையேனும்

காப்பாற்றி ஆக வேண்டும்.

தேவி...

பிரத்யங்கார தேவி

நரசிம்மி

அதர்வண காளி

ஆயுதங்கள் வேண்டாம்.

கொலை வேண்டாம்.

பழிக்குப் பழி வேண்டாம்.

எங்கள் அனாதைப் பிள்ளைக்கு சப்த கன்னியாய்க் கூட

நீ வர வேண்டாம்.

உன் மீதும் என் மீதும்

நம் புதல்வர்கள் மீதும்

நிர்வாணப்படுத்தி

வாயில் திணிக்கப்பட்ட

மூத்திரமும் மலமும்

முழுதுமாக துடைத்து எடுக்க

பராசக்தி....

உன் சிவப்பு முந்தாணியைக்

கிழித்துக் கொடு.

அது போதும்..தேவி

அதுபோதும்.

🔥🔥🔥🔥🔥


It is easy

to point out the face of disgrace.

It is just as easy

to write the tale of betrayal as it is.

Yet, for a while,

it was the same face that lived with me.

Her tales of lust,

beyond the reach of my imagination,

are not titillating stories—

they are filth hurled

at life,

at humanity,

at the trust between relationships.

What she discarded

was the very rice I cooked and fed her.

Yet—

can it ever be served again?

Life now floats

in the sewage of Vaengaivayal.

At least,

her children who drank from it—

must be saved.

Devi...

Pratyangira Devi,

Narasimmi,

Atharvana Kali—

no weapons,

no killings,

no revenge for revenge.

Do not even come

as the chaste maiden

to our orphaned children.

Instead—

to wipe away entirely

the urine and feces

forced into our mouths,

into theirs—

yours, mine, and our children’s—

O Parasakthi,

just tear your red sari

and hand it to us.

That is enough, Devi.

That is enough.

#புதியமாதவி_30042025

#PuthiyamaadhaviPoems


இதையும் எழுதி புத்தகம் போடு

 "இதையும் எழுதி புத்தகம் போடு"


எழுத்துப் பயணத்தில்

மறுபிறவி.


ஃ உனக்கு கவிதை எழுதறது தவிர வேறு என்ன தெரியும்?


ஃ நீ ஒரு வேஸ்ட்.


ஃ நீ எழுதி கிழிச்சி என்னத்தைக் கண்ட?


இதெல்லாம்  பழகிப் போச்சு!

நேற்று நீ வாசலில் நின்று

என்னைக் கேட்ட கேள்வி..

"இதையும் எழுதி புத்தகம் போடு "


இதைச் சொன்ன நீயும் ஒரு பெண். ஒரு தாய். 

நான் எழுதியதும் போராடியதும்  உனக்காகவும் சேர்த்துதான்!


எனக்கு பூஜைகள் தெரியாது.

எவன் காலடியிலும் ஆன்மீகத்தின் பெயராலும் விழத்தெரியாது.

யார்க்குடியும்

கெடுத்ததில்லை.

இதெல்லாமே எளிதாகிப் போன உன் கூட்டத்திலிருந்து

வீசப்படும் கற்களை

சேமித்து வைக்கிறேன்.

என் அன்னை

சாவித்திரிபாய்

என்னைப் பார்த்து சிரிக்கிறாள்.


பிறவியின் கருப்பை சுமந்த அக்னிக்குஞ்சு.

வலியோடும்

நிர்வாணத்தின் அலறலோடும்

பனிக்குடம் உடையும் தருணம்.

எழுத்தின் உயிர்த்துளி

ஜனனம்.


தேவி..

ஆதிபராசக்தி

கடைக்கண் திறக்கட்டும்.

உன்னை மறப்பதும் மன்னிப்பதும்

என் வசமில்லை.

மனிதர்கள் எழுதிய சட்டங்களை விட  வலுவானது

இப்பிரபஞ்சத்தின் சூத்திரக்கயிறு.


#புதியமாதவி_03052025


#puthiyamaadhavipoem

Tuesday, April 29, 2025

சாதியும் அரசு அதிகாரங்களும்

 சாதியும் அரசு அதிகாரங்களும்

🔥🔥🔥🔥









நம் மதம் சாதி காப்பாற்றும் மதம்

நம் மொழி சாதி காப்பாற்றும் மொழி

நம் அரசு சாதி காப்பாற்றும் அரசு 

- தந்தை பெரியார்.

“ இந்தியாவில் சாதி காற்றிலும் கலந்திருக்கிறது “ என்று  ரெய்ஸ்லி எழுதியது ஒரு சத்தியவாக்கு மூலம். 


“அந்த நாட்டில் (இந்திய நாட்டில்) மதத்தின் விதிகள், நாட்டின் சட்டங்கள், கெளரவ நெறிகள் ஆகியன எல்லாம் ஒன்றில் ஊன்றி இருக்கிறது. அந்த ஒன்று மனிதனை  நிலையாக என்றென்றைக்கும் தன்னோடு பிணைத்து வைத்து இருக்கிறது. அதன் பெயர் சாதி ‘ என்று இந்திய சமூகத்தை மிகச் சரியாக சாதி அடையாளமாக கண்டவர் எட்மண்ட் புரூக்.


தமிழ்ச் சமூகத்தில் சாதி என்ற சொல்  நம் சொல்லகராதியில் இல்லை என்றாலும் மேலோர், கீழோர் என்ற பாகுபாடுகளும் அவர்களின் வாழ்க்கை முறைகளும் சடங்குகளும் கொண்ட ஒரு சமூக நிலை உருவாகிவிட்டது என்பதை தொல்காப்பியம் பொருளதிகாரமும் பிற்கால சங்க இலக்கியப் பாடல்களும்  உறுதி செய்கின்றன. “ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ” என்ற திருவள்ளுவரின் வாசகத்தை நாம் தமிழரின் பெருமைமிகு அடையாளமாக சொல்லிக்கொண்டாலும் அந்த வாசகத்தின் உட்பொருளாக ‘பிறப்பொவ்வாமை’

என்ற நிலை வந்துவிட்டதையும் பிறப்பால் உயிர்களுக்கு இடையில் பிரிவினைகள் கோலோச்ச ஆரம்பிக்கும் காலத்தில்தான் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றதொரு கலகக்குரலின் தேவை எழுகிறது என்பதையும் சேர்த்த வாசித்தாக வேண்டும்.

         சாதி எப்போது தோன்றியது என்பதை எவராலும் அறுதியிட்டு சொல்லிவிட முடியவில்லை. ஆனால் அது எப்படி இந்திய மண்ணில் காலூன்றியது என்பதை அரசியலும்  மானுடவியலும் ஆய்வு செய்திருக்கின்றன. சாதியை இந்திய மண்ணில் நிலை நிறுத்தியதில் “மனு’ முக்கியமானவர். அவர் எழுதிய ‘மனுதர்ம சாஸ்திரம் இன்றுவரை சாதியின் அறுபடாத கயிறாக இருக்கிறது. ‘ அதன் சரித்திரப் பூர்வமான தகுதி எதுவாக இருந்தாலும், இந்திய சமூகத்தின் அடிப்படையைப் புரிந்து கொண்டு அதனைச் செயல்படுத்துவது என்ற நோக்கில் இந்நூலுக்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கிட்டிய சட்ட முக்கியத்துவம் அதற்கு முன்பிருந்த தகுதியிலிருந்து முற்றிலும் மாறுபட்டதொரு தகுதியை சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஏற்படுத்தியது. சாதியை மானுடவியலாக மட்டுமே அணுகும் வலதுசாரி பார்வையின் உள் நோக்கத்தை சாதியின் சமூக அரசியல் பார்வை வெளிப்படுத்தியது.

சாதி எவ்வாறு காப்பாற்றப்பட்டு வருகிறது ? சாதியை முடிவுக்கு கொண்டுவருவது எப்படி ? என்றாய்வு செய்தவர்கள் அனைவருமே சாதியைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது இந்திய அக மண உறவுகள், அதாவது சொந்தச் சாதியிலேயே திருமணம் செய்து கொள்வது என்ற கருத்தையே முன்வைத்தனர். ஆண் பெண் உறவில் இயல்பாக ஏற்படும் காதலும் திருமண உறவும் கூட சாதியைக் காப்பாற்றும் வகையில் நவீன யுக காதலாகவே வளர்த்தெடுக்கப்பட்டிருப்பதை கவிஞர் மீரா அவர்கள் கிண்டலாக எழுதினார். 

உனக்கும் எனக்கும் ஒரே ஊர்

வாசுதேவ நல்லூர்.

நீயும் நானும் ஒரே மதம்

திருநெல்வேலி சைவப்பிள்ளைமார்

வகுப்பும் கூட.

உன்றம் தந்தையும்

என்றன் தந்தையும்

சொந்தக்காரர்கள்..

மைத்துனன்மார்கள்.

எனவே,

செம்புலப் பெயல் நீர் போல

அன்புடன்  நெஞ்சம் தாம்கலந் தனவே”

( குறும்புத்தொகை) 

. யாயும் ஞாயும் யாராகியரோ, எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்.. என்றெல்லாம் பேசப்பட்ட  சங்க காலக் காதல் அல்ல இன்றைய காதல். 

இது  நவயுகக் காதல், வேறு  வகையானது.  சாதி மதம் வர்க்கம் எல்லாம் பார்த்துதான்  காதலும் வருகிறது. எனவேதான் சாதி ஒழிப்புக்கு காதல் திருமணங்களை வரவேற்போம் என்பதைவிட சாதி மறுப்பு திருமணங்களை வரவேற்போம் என்றார்கள் தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும்.


சாதி மறுப்பு திருமண உதவிகள் :

சாதி ஒழிப்பைக் கருத்தில் கொண்டே அரசு சாதி மறுப்பு திருமணத்திற்கு உதவிகளை பல திட்டங்கள் மூலம் அறிவித்து செயல்படுத்துகிறது. அவற்றுள் முக்கியமானவை :

அம்பேத்கர் திட்டம்

டாக்டர் சவிதாபென் அம்பேத்கர் உதவி திட்டம்

டாக்டர் முத்துலெட்சுமி நினைவு திட்டம்


இத்திட்டங்களில் உதவி பெற மணமகன் – மணமகள் இருவரில் யாராவது ஒருவர் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது. பொதுவாக இந்த உதவிகளைப் பெறுவதற்கு அரசு அதிகாரி யாராவது ஒருவரின் சான்றிதழும் தேவைப்படுகிறது. சில திட்டங்களில் உதவித்தொகை இரு தவணைகளில் வழங்கப்படுகிறது, சில ஆண்டுகள் இடைவெளிகளுடன் இரண்டாவது தவணை வழங்கப்படுகிறது.  தமிழ் நாட்டின் திட்டத்தில் பெண்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது தனித்துவமானதும் சிறப்பானதுமாகும்.

அப்பெண் 10 ஆம் வகுப்புவரை படித்திருக்க வேண்டும் என்ற விதி பெண் கல்வியின் முக்கியத்துவத்தை மட்டுமின்றி அப்பெண் எடுக்கும் முடிவுகளின் சுயத்தையும் வெளிப்படுத்துகிறது. இத்திட்டங்கள் அனைத்திலும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பணமாக வழங்கப்படும் ஒரு குறிப்பிட்ட உதவித்தொகையாக மட்டுமே இருக்கிறன. 

உதவித்தொகைகளும் அதன் தேவையும் முக்கியமானது என்றாலும் சாதியை ஒழிப்பதில் அதன் பங்களிப்பு என்பது பூஜ்யமாகவே இருக்கிறது. காரணம் இத்திட்டங்கள் எல்லாமும் தொலைநோக்குப் பார்வையுடன் உதவியதாக தெரியவில்லை. இன்றையை இந்தப் பொழுதை எப்படி கடந்து செல்வது என்பதாக மட்டுமே இருக்கின்றன.  திருமண வாழ்க்கை என்பது நிகழ்காலமாக மட்டும் இருப்பதில்லை. எதிர்காலத்தைக் கணக்கில் கொள்ளாமல் எந்த உறவுகளும்  நிலைப்பதில்லை. நம் இந்திய சாதி சமூகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு சமூகத்தின் ஆதரவோ குடும்பத்தின் ஆதரவோ இருப்பதில்லை. போராட்டம் நிறைந்த அவர்களின் வாழ்க்கையின் நிரந்தரமான ஒரு பாதுகாப்பு வழங்கும் வகையில் திட்டமிட்டு சாதி மறுப்பு திருமண திட்டங்கள் தீட்டப்படவில்லை. அம்மாதிரியான ஒரு திட்டமோ யோசனையோ கூட இருப்பதாக தெரியவில்லை. அதனால்தான், இந்திய அளவில், பெரியாரின் மண் என்று போற்றப்படும் தமிழ் நாட்டில் சாதி மறுப்பு திருமண விகிதம் பிற 

மாநிலங்களைவிட குறைவு. ! மேலும் ஆணவக்கொலைகள் தமிழ் நாட்டில்

சாதி மறுப்பு திருமணங்களின் தலைகளின் மீது தொங்கிக் கொண்டிருக்கும் வெட்டரிவாள், எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சாதியின் பெயரால் இங்கே நடக்கும்.. அதை எதிர்கொள்ள அரசு வழங்கும் சிறு தொகை உதவியோ தாலிக்கு கொடுக்கும் தங்கமோ காப்பாற்றிவிட முடியாது.

அப்படியானல் என்னதான் தீர்வு ?


உதவித்தொகையும் நடைமுறை சிக்கல்களும் :

2022- 23ல் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பித்தவர்கள் 2,873. 2018 முதல் 2023 வரை உதவித்தொகை விண்ணப்பித்தவர்கள் 12,846.  ( as per social welfare department) இதில் 10,349 விண்ணப்பதாரர்கள் பயன் அனுபவித்தவர்கள். அதாவது ஓராண்டுக்கு சற்றொப்ப 2000 பேர்,

     சாதி மறுப்பு திருமணங்களுக்கு அரசு வழங்கும் உதவித் தொகையைப் பெறுவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களை அரசு கவனிக்க வேண்டும்.

உதவித் தொகை பெறுவதற்கு தேவையானவை என்று அரசு சில விதிமுறைகளை வைத்திருக்கிறது. அவை: 

1) திருமணம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

2) திருமண சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.

3) திருமண சான்றிதழ் முகவரியும் திருமணம் செய்தவர்களில் ஆண் பெண் யாராவது ஒருவர் முகவரியாக இருக்க வேண்டும்.

4) சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான வரி சான்றிதழ் தேவைப்படும்.

5) சாதி மறுப்பு திருமண சான்றிதழ் வேண்டும். அதை ரெவென்யு ஆபிஸிலே ஆன்லைனிலோ பெறலாம்.

6) மேற்கண்ட ஆவணங்களுடன் திருமணப் புகைப்படம் இணைக்கப்பட வேண்டும்.

7) இந்த விண்ணப்பங்கள் கிராமப்புற பஞ்சாயத்து துறை (Rural Development and Panchayat Raj Department) வழியாகவே அனுப்பப்படும்.

8) இத்தனைக்கும் பிறகு, சமூக நலத்துறை ஒரு சர்ட்டிபிகேட் கொடுக்க வேண்டும். No Objection certificate !!!!!


இதெல்லாம் சரியாக இருந்தால், அதாவது இந்த வழிமுறைகள் பின்பற்றப்பட்டால் அரசு இதற்கான உதவித்தொகை ஒதுக்கப்பட்டவுடன் விண்ணப்பதாரருக்கு உதவி வழங்கும்.

இதில் நாம் கவனிக்க் வேண்டியது சாதி மறுப்பு திருமணங்களுக்கு சமூகத்தில் வரவேற்பில்லை என்பது மட்டுமல்ல, அதை மாபெரும் குற்றமாகவே கருதுகிறார்கள்/ இச்சூழலில்தான் பஞ்சாயத்திலிருந்து சான்றிதழ் பெற சொல்கிறது அரசு. சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களில் குறிப்பாக பெண்கள் தங்கள் கல்வி சான்றிதழோ சாதி சான்றிதழ் பெறுவதோ ஆதார்/ரேஷன் அட்டையை வைத்திருப்பதோ இல்லை. நடைமுறையில்  இச்சிக்கல்கள் சாதி மறுப்பு திருமணம் செய்யும் பலருக்கு பலவிதமான பிரச்சனைகளை உருவாக்குகின்றன.  எனவே பலர் விண்ணப்பம் செய்வதில்லை.

எதிர்கால உத்திரவாதம்:

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு உதவி செய்வதற்கென்று மாவட்டம்தோறும் காவல்துறையில் ஒரு தனிப்பிரிவு வேண்டும். அது அவர்களுக்குப் பாதுகாப்பு தருவதில் முழு கவனம் செலுத்த வேண்டும். 

 சாதிமறுப்பு திருமணங்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை விட முக்கியமானது சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும், என்ற திட்டம். அதற்கான இட ஒதுக்கீடு கொண்டுவர வேண்டும் .  அவ்வாறு அரசு வேலை ஒதுக்கீடு செய்யும்போது இருவரில் யார் ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்தவரோ அவருக்கு அரசு வேலை என்பதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். 

புதிய சாதி உருவாக்கம் :

கலப்பு மணங்கள் நடக்கும்போது அவர்களின் வாரிசுகள் புதியதொரு சாதியாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள். இந்தியாவில் நூற்றுக்கணக்கான சாதிகளும் சாதிகளுக்குள் இருக்கும் உட்பிரிவுகளும்  கலப்பு திருமணங்களால் உருவானவை. காரணம், எந்த வருணத்தினரும் வர்ணத்திலிருந்து வெளியேற்றப்பட்டால் அதன்பின்  அவனும் அவனுடைய சந்ததியினரும் தங்களது பழைய வருணத்திற்குத் திரும்ப முடியாது. அவர்கள் சமூகத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்டவர்களாகி விடுவார்கள். அதன்பின் அவர்கள் சமூகத்தின் பிற பிரிவனருடன் கலப்பதும் தடை செய்யப்பட்டுவிடும். இப்படியாகத்தான் வர்ணக்கலப்பு தடை செய்யப்பட்டதுடன், அவ்வாறு தடை செய்யப்பட்ட வர்ணம் தாழ்த்தப்பட்டவர்களாக ஊர்க்கோடியில் ஒதுக்கப்பட்டதும்  நடந்திருக்கிறது. சாதி மேல் கீழ் அடுக்குகளை மாற்றும் சிறிய அசைவுகளும் பெரும் தண்டனைக்குரியதாகவே கருதப்பட்டன. ஒவ்வொரு சாதி தனக்கும் கீழ் இன்னொரு சாதியை உருவாக்கி தன்னை ஆளப்பிறந்தவனாக நினைக்கும் மன நிலையை சாதி சமூகம் அனைத்து சாதியினருக்கும் அவரவர் படி நிலைக்கு ஏற்ப வழங்கி இருக்கிறது. எனவே, சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களின் சந்ததிக்கு சாதி கிடையாது என்பதே சாதி சான்றிதழாக ஏற்றுக் கொள்ளும் வகையில் நம் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். 

     அரசு வேலையில் இருப்பவர்கள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களாக இருப்பதும் அவர்களின் அடுத்த தலைமுறை சாதியற்ற தலைமுறையாக வளர்த்தெடுக்கப்படுவதுமான சூழல் மூன்று தலைமுறைகளுக்குப் பின் சாதியை ஓட ஓட விரட்டிவிடும். 

சாதியும் பண்பாடும்:

    தமிழ்ச் சமூகத்தின் பண்பாடும் கலாச்சாரமும் கூட சாதி அடையாளமாகவே வெளிப்படுகின்றன. எனவே சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் வாரிசுகள் தந்தையின் சாதியாகவே சமூகத்தில் கருதப்படுகிறார்கள். ஆண்மைய சமூக நிலையும் இதற்கு சாதகமாகவே இருக்கிறது. இன்னும் சில இடங்களில், சாதி மறுப்பு திருமணம் செய்தல் என்பது சாதி ஒழிப்பாக மாறுவதில்லை. ஆண் பெண் இருவரின் யார் சாதி உயர்ந்த சாதியோ அந்தச் சாதியின் அடையாளங்களை தங்கள் வாரிசுகளின் சாதி அடையாளமாக காட்டும் போக்கு இருக்கிறது. சடங்குகள் பண்டிகைகள் வழிபாடுகள் நம்பிக்கைகள்  உணவு முறைகள் என்ற பல கலாச்சார அடையாளங்களில் சாதி மறுப்பு திருமண உறவுகள் மேனிலை ஆக்கத்தையே பின்பற்றுகின்றன.  சாதிய மனப்பாங்கை வளர்த்துக் கொள்வதில் காட்டும் ஆர்வத்தை சாதி ஒழிப்பு, சாதியற்ற வாரிசுகள் என்பதில் காட்டுவதில்லை. வேஷ பிராமணர்கள், தலித் பிராமணர்கள் என்று இவர்களை சமூக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். 


பண்பாட்டு அரசியல்:

   சட்டங்களால் மட்டுமல்ல, வலுவான பண்பாட்டு அரசியலும் சமூக பொது ஜன உளவியல் மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை மிக்கவை. தந்தை பெரியாரின் பகுத்தறிவும் சுயமரியாதையும் ஏன் அவர் முன்வைத்த கடவுள் மறுப்பும் கூட சாதி ஒழிப்பின் அடிப்படைதான். ஆனால் அதை மேனாட்டு நாத்திகவாதமாக மட்டுமே முன்னெடுத்து சென்றதால் பண்பாட்டு நிலையில் அதற்கான அசைவுகளைப் பெற முடியவில்லை. திராவிட அரசியல் தேர்தல் அரசியலின் காரணமாக  சமரசங்களின் ஊடாக தன் பண்பாட்டு அரசியலில் தோற்றுப் போய்விட்டதா? என்ற கேள்வி முன்பு எப்போதையும் விட இப்போது எழுகிறது. காரணம், இந்தியா இந்து தேசம், ஒரே தேசம் ஒரே மொழி என்ற அரசியல் துணை தேசிய அரசியலின் குரல்வலையை நெறித்துக் கொண்டிருக்கும்போது பண்பாட்டு அரசியல் பின்வாங்குகிறது. பண்பாட்டு அரசியலை முன்வைக்க வேண்டிய கலை இலக்கிய உலகமும் ஊடகங்களும் ஆட்சி அதிகாரத்திடம் அடிபணிந்துக் கிடக்கின்றன. 

      தொலைக்காட்சி ஊடகம் இந்தியாவின் தென் கோடியில் வாழும் இந்தியனுக்கும் மகா கும்பமேளாவை எடுத்துச் செல்வதில் காட்டும் ஆர்வத்தை வேங்கை வயல் பிரச்சனைகளுக்கு காட்டுவதில்லை.! 

திராவிட அரசியலும் பண்பாட்டு தளத்தில் வலுவாக இயங்கவும்  தன் உண்மையான பலத்தை  வேறு சில மாற்று வழிகள், உபாயங்கள் மூலம் மீட்டெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்..


சாதி ஒழிப்பே நம் இலக்கு.

சாதி மறுப்பு திருமணம்

 அதற்கான பாதை.

சாதியற்ற சமூகம் 

நம் எதிர்காலம்.


(பாசறை முரசு சிறப்பு மலரில் இடம்பெற்றிருக்கும் கட்டுரை)