பரமு சித்தப்பா டோம்பிவலியில்தான் இருக்கிறாராம். கேள்விப்பட்டதிலிருந்து அவரைப் போய் எப்படியும் பார்த்துவிட்டு வர வேண்டும் என்ற ஆசை அதிகமானது. டோம்பிவலி ஒரு குட்டி மெட்ராஸ். அவரோட அட்ரஸ் இல்லை. அவர் என்ன செய்கிறார் என்றெல்லாம் எந்த விவரமும் இல்லை. பரமு சித்தப்பா வீட்டில ட்யுஷன் போகிறாளாம்
என்னோட ப்ரெண்டோட மகளோட பிரண்டுக்கு மகள்.. அதுவும் இந்தி
டியுஷனாம்! பரமு சித்தப்பா வீட்டில இந்தி டியுஷனா என்ற மாபெரும்
சரித்திர கேள்விக்கு விடை தெரியாட்டி தலை சுக்கு நூறா வெடிச்சிடும்போல ஆயிடுச்சி நிலைமை.
பரமு சித்தப்பாவும் இந்தி டியுஷனும் என்பது எம்புட்டு பெரிய ஷாக் நியுஷ், ப்ரேக் நியுஷ்னு பரமு சித்தப்பா பற்றி தெரிந்தவர்களுக்குத்தான் தெரியும். அதுக்கு கொஞ்சம் ப்ளாஷ் பேக் தேவைப்படும். ப்ளாஸ்பேக்கில் பரமு சித்தப்பாவைக் காட்டினா தானே எனக்கு ஏன் பரமு சித்தப்பாவைப் பார்த்தே ஆகனும்னு பரபரப்பா இருப்பது புரியும்!
பரமு சித்தப்பா அந்தக் காலத்தில எங்க ஊரு ஹீரோ. அவரு தலைமுடியை நெற்றிக்கு மேலே ஒரு நத்தைக்கூடு மாதிரி சுருட்டு விட்டிருப்பாரு. எப்பவும் இப்படித்தான் அவரு முடி சுருண்டிருக்குமானு அவர் தூங்கி எந்திருக்கிறப்போ பார்த்தவங்களுக்குத்தான் சொல்ல முடியும். அது என்னவோ தெரியல.. அவரு முடியை சுருட்டி சுருட்டி வாரியதில அவரு வாய்க்காலில் குளிச்சிட்டு தலையைத் துவட்டினா கூட முடி அதே மாதிரி முன்னாலே சுருண்டிடும்னு எங்க பக்கத்துவீட்டுக்கார ரத்தினம் சித்தி அடிக்கடி சொல்லும்.
ரத்தினம் சித்திக்கு ரெண்டு பிள்ளைங்க. சித்தப்பா துபாய்ல. சித்திக்கு பரமு சித்தப்பா மேலே ஒரு ‘இது’ . தன் புருஷன் துபாயிலிருந்து கொண்டுவந்த செண்டுபாட்டில், டீஷர்ட், பாட்டு கேசட்டு, கூலிங்க்ளாஸ் .. இப்படியா எதையாவது பரமு சித்தப்பாவுக்கு கொடுக்கும்.
இது ஊர்ல எல்லாருக்கும் தெரியத்தான் செய்யும்.. எப்போதாவது தெருச்சண்டை வந்தாதான் இந்தக்கதை எல்லாம் வெளியில வரும். இல்லாட்டி கண்டும் காணாம அவுங்கவுங்க பாடுஜோலியைப் பார்த்திட்டு இருப்பாங்க எங்கத்தெரு பொம்பளங்க.
எங்கத் தெருவில இருந்து ஸ்கூலுக்குப் போற பிள்ளைங்க எல்லாருக்குமே பரமுதான் லீடர். அரைமணி நேரம் நடந்துதான் ஸ்கூலுக்குப் போகனும். நாங்க நடப்போம். பரமு சித்தப்பா அப்போவே ஸ்டைலா சைக்கிளில்தான் ஸ்கூலுக்குப் போவாரு. அவரு சைக்கிள் பின்னால மற்ற பசங்க சைக்கிள் போகும். என்னவோ ஒரு மந்திரி பின்னால வண்டிகள் போறமாதிரி இருக்கும். படிப்பும் நல்லா படிப்பாரு. அதிலும் கணக்கு நல்லா போடுவாரு. இங்கிலீஷ் பேசுவாரு.
எங்கத் தெருவில அவரோடு குடும்பம்தான் அந்தக் காலத்திலேயே படிச்சக் குடும்பம். வக்கீலு குடும்பம்னு பேரு. வக்கீல்னு சொன்னவுடனே என்னவோ கறுப்பு அங்கியை மாட்டிக்கிட்டு கோர்ட்டு வாசலில் நடக்கும் எல் எல் பி வக்கீலானா கேட்டிடாதீங்க. அப்படி எந்தக் கோர்ட்டு வாசலிலும் எட்டிப்பார்க்காத வக்கீலு குடும்பம். பரமு சித்தப்பாவோட அப்பா அந்தக் காலத்திலேயெ இலங்கைப் போயி வெள்ளைக்காரங்கிட்டே வேலைப்பார்த்தவரு. வெள்ளைக்காரதுரைக்கு மனு எழுதறது, கலைக்டர் ஆபிஸ்க்கு மனு எழுதிக்கொடுக்கறது, அப்புறம் சட்டப்படி என்ன செய்யலாம்னு ஊர்ப்பஞ்சாயத்தில அட்வைஸ் செய்யறது, அவரு வக்கீல் மாதிரி பாயிண்ட் பாயிண்ட்டா பேசுவாராம். ஆதலால் அவரு எங்க ஊரு வக்கீலானாரு. அவரோட வீடு தான் வக்கீல் வீடு. அவரோட குடும்பமே வக்கீல குடும்பம்னு ஆயிடுச்சி. அவருக்கு 14வது பிள்ளையா அவரோடு மூணாவது பொண்டாட்டிக்கு பிறந்தவரு பரமு சித்தப்பா.
பரமு சித்தப்பாவை எப்படியும் உண்மையான வக்கீல் தொழிலுக்கு படிக்கவச்சிடனும்னு கிழவனுக்கு ஆசை இருந்திச்சி. எல்லாம் இந்த 65 ல இந்திப்போராட்டம் வந்து கெடுத்திடுச்சி.. அதுவரை அவரு பெரியார் கட்சியில இருந்தவருதான்.. கட்சி மாறி காங்கிரசுக்குப் போயிட்டாரு.. இதெல்லாம் எங்க ஊரு போராட்டத்தில் நடந்த உபகதைகள்.
இந்தி ஒழிக , தமிழ் வாழ்க .. மாணவர்கள் போராட்டம் .. ஸ்கூல் காலேஜ் எல்லாம் காலவரையறையின்றி மூடப்போறதா அறிவிப்பு வரப்போவதுனு செய்திவருது. மூடிட்டா எப்படி போராட்டம் நட்த்தறதுனு பரமு சித்தப்பா டீம் யோசிக்கிறாங்க. போராட்டம் ஆரம்பிச்சிடறாங்க. எந்த ஒரு முன் அறிவிப்பு ப்ளான் எதுவும் கிடையாது. ஆனால் போராட்டம் பத்திக்கிடுச்சி. ஸ்கூலுக்கு வெளியே இருந்து கிளம்பின வரிசை அப்படியே ஸ்கூல் எல்லையைத் தாண்டி மெயின்ரோடு வந்து பஸ் ஸ்டாண்டுக்கு வருவதற்குள் பேரணி பெரிசாயிடுச்சி. மாணவர்களோடு சேர்ந்து ரோட்டில நின்னவுங்க கட்சிக்காரங்க வேடிக்கையா கலந்துக்கிட்டு வரிசையில வந்தவுங்கனு வரிசையில் தலைகள் எண்ணிக்கை கடல் அலைமாதிரி வந்திட்டே இருந்திச்சி. கலைக்டர் ஆபீஸ்க்குப் போகணும். அதுதானே ஸ்ட்ரைக் பேரணி முடியற இடமா இருக்கும்.
போகிற வழியில தான் போலீஸ் ஸ்டேஷன். கூட்டத்திற்கு போலீஸ் ஸ்டேஷனைப் பார்த்தவுடனே வீரம் வெறியா மாறிடுச்சி.. யாரு முதல்ல கல்லை எறிஞ்சானு யாருக்கும் தெரியாது. ரோடு போட ரோட்டோரம் இருந்தக் கல்லே ஆயுதமாச்சு.. சரமாரியா கல்லைத்தூக்கி வீசுனாங்க.போலீஸ் வெளியில வந்து கூட்டத்தைக் கலைஞ்சிப் போகச்சொல்லி அடிக்க ஆரம்பிச்சாங்க. .. புகைவெடியை வீசினவுடனே கூட்டம் கலைஞ்சிடுச்சி.. மாணவர்கள் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தார்கள். பத்து நிமிடம் ஓட்டம்.. எதிரே வாய்க்கால். வாய்க்காலைத் தாண்டினா அக்கிரஹாரம். கூட்ட்த்தில லீடரா இருந்தவுங்களத்தான் போலீஸ் குறிவைச்சதா செய்தி வந்திச்சு. இருக்கலாம். பரமு சித்தப்பாவை விரட்டுனதில அவரு ஓடிப்போயி வாய்க்காலைத்தாண்டி எதிரே இருக்க அக்ரஹாரத்து கொள்ளைப்புறத்தில சுவரேறி குதிச்சிருக்காரு.
கதையில இந்தக் காட்சிதான் க்ளைமாக்ஸ். அவரு குதிச்சப்போ இந்தி வாத்தியாரு பொண்ணு விசலாட்சி குளிச்சிட்டு இருந்திருக்கு. அம்புட்டுத்தான்.
அது திடீர்னு குதிச்சவனைப் பார்த்து அலற.. ..
வேறென்ன..! அதோடு முடிஞ்சிப்போச்சு எல்லாமும்.
சினிமாவில காட்டறமாதிரி இந்தப் பரமு சித்தப்பா விசாலம் வாயைப் பொத்தி இருக்கலாம். அப்புறம் அதுவே காதலா மாறி எங்க ஊரு வாய்க்காலில் “வேதம் புதிது” அப்பவே வந்திருக்கும். . சவத்தே..அப்படி எல்லாம் எதுவும் நடக்கல. இதில பரமு சித்தப்பா ஒரு ஹீரோ அந்தஸ்த்தை இழந்திட்டாருனு தோணிச்சு.
பவாம்.. விசாலாட்சிதான். அவ இந்தி வாத்தியார் பொண்ணா வேற போயிட்டாளா.. கதையை டுவிஸ்டு பண்ணி பெரிய ப்ரேக் நியுஸ் ஆக்கிட்டாங்க.
விசாலம் கத்தினதை கமுக்கமா வச்சிருக்கனும். ஆனா பாவம் அந்த இந்தி வாத்தியாரும் ஏழைதான். வாத்தியாரு ஆத்து மாமி அக்ரஹாரத்தில நல்லது கெட்டதுக்கு எல்லா ஆத்திலேயும் போய் கூடமாட உதவி செய்வாளாம். விசாலாட்சி சொல்லி இருக்கு. பிரைவேட் ஸ்கூல். இந்தி வாத்தியாருக்கு வேற பாடம் எதுவும் சொல்லிக்கொடுக்கவும் தெரியல. அதனால ஸ்கூலில் அவருதான் ஹெட்மாஸ்டருக்கு கையாளுமாதிரி எல்லா வேலையும் செய்வாரு. மனுஷன் இந்தி சொல்லிக்கொடுக்கறதிலேயும் குத்தம்சொல்ல முடியாது. கொஞ்சம் சாதுவானவருதான்.
விசாலம் கத்தினப்போ பக்கத்து வீட்டு மாமிதான் அதை அக்ரஹாரத்திற்கே செய்தி ஆக்கிட்டா.
“ஏன் டீ,, நீ குளிச்சிட்டிருக்கிறப்போ குதிச்சானா.. இல்லை குளிச்சி முடிச்சப்போ குதிச்சானானு எதுவும் விவரமா கேட்கவே இல்லை! “
கேட்கும் போதே.. “ஏன் டீ.. பார்த்திட்டானா.. பார்த்திட்டான்லியோ.. கர்மம்” தலையில அடிச்சிக்கிட்டு மாமி கேட்கும்போது விசாலத்தின் அழுகை சத்தம் இன்னும் அதிகமானது. அதனால வேற மாமி இன்னும் அதிகமா அதே காட்சியை விரிவாக்கிட்டா.
“ பொட்டுத்துணி இல்லாம குளிச்சாலாமே விசாலம்,”
“அப்போன்னா அந்தப் பிள்ளை எட்டிப்பார்த்துட்டான்’
‘அது எப்படி.. கரெக்டா .. விசாலம் குளிக்கறப்போ அந்த
சுவத்தை ஏறி குதிச்சானாம்.. டவுட்டா இருக்குதுனோ’’
‘ பாரோன்..தாயும் மகளும் ஊமை மாதிரி இருந்திட்டு
என்ன காரியம் செய்திருக்கா , பாருங்கோ’
“எப்பவும் துணி இல்லாம குளிக்கப்பிடாதுனு சொல்லியாச்சு.
அது என்ன அம்மண குளிப்போ! யாரு கண்டா விவஸ்தை கெட்ட
ஜென்மங்கள்’
அக்ரஹாரமே இந்தி வாத்தியாரு பொண்ணுப்பத்தி இப்படியாக வாய்க்கு வந்தப்படி எல்லாம் பேச ஆரம்பிடுச்சி. இந்திப் பாடமே ஸ்கூலில் கிடையாதுனு அறிவிச்சிட்டா.. பாவம் .. இந்தி வாத்தியாருக்கு வேலையும் போயிடுமோனு பயம் வந்திடுச்சி.. மாமியையும் இப்போதெல்லாம் யாரும் எந்த உதவிக்கும் கூப்பிடறதில்ல. என்ன நடந்திச்சோ.. மனுஷன் என்ன நினைச்சாரோ .. இந்தி வாத்தியாரு தூக்கில தொங்கிட்டாரு.. பெத்த பொண்ணு மானம் போயிடுச்சினு தூக்கில தொங்கிட்டதாதான் அக்கிரஹாரமே சொல்லிச்சே தவிர அந்த தெரு மனுஷாள் எல்லாம் வாத்தியாரை ஒதுக்கிவைச்சியே கொன்னுட்டதை ஒத்துக்கலை.
இந்தி வாத்தியார் தற்கொலைனு தந்திக்காரன் கொட்டை எழுத்துல செய்தி போட்டு தெரிஞ்சவா தெரியாதவா எல்லாருக்கும் விசாலாட்சி குளிச்சக்கதையைப் பரப்பிவிட்டா. அதனாலே அதிகமா.. ரோஷம் வந்திடுச்சி வக்கீலுக்கு.
சிலம்பம் ஆடற கம்பாலா சுழட்டி சுழட்டி பரமு சித்தப்பாவை அடிச்சித் துவைச்சிட்டாராம். அப்பன் மகனுக்கு எப்போ சண்டை வந்தாலும் அப்பன்னு பார்க்காம எதிர்த்து கையை ஓங்கற பரமு சித்தப்பா அன்னிக்கு மட்டும் கிழவரு கொடுத்த அடியை தலையை நிமிர்ந்துப் பார்க்காம வாங்கி கிட்டாராம். ஒரு வார்த்தை ஐயாவை எதிர்த்து பேசலியாம். அதை எப்பவும் பக்கத்து வீட்டு ரத்தினம் சித்தி சொல்லி சொல்லி பரமுவை இந்த ஊரே விரட்டுடுச்சினு சொல்லும்.. அதுக்குப்பிறகு பரமு சித்தப்பா படிப்பை பாதியிலேயே விட்டுட்டு பம்பாய்க்கு டிரெயின் ஏறிப்போயிட்டாருனு கேள்வி.
இப்போ பம்பாயி மும்பை ஆகி கதை எல்லாம் பழைய கதையாகிப் போனப்பிறகு இதே கதையில இப்படி ஒரு திகில் திருப்பம்தான் பரமு சித்தப்பாவைத் தேடிக் கண்டுப்பிடிக்க வேண்டிய அவசியத்தை உருவாக்கி இருக்கு..
இதைக் கேள்விப்பட்டதிலிருந்து விதம்விதமா கனவுகள் வேறு வந்து தொலைக்குது..
கனவு 1:
பரமு சித்தப்பா இந்தி வாத்தியாரு தூக்கில தொங்கினதினாலே மனசு பாதிச்சி அதுக்குப் பிராயசித்தமா இந்தி படிச்சி அவரே இந்தி வாத்தியாராயிட்டாராம்!
இந்தி வாத்தியாருக்கு கணக்குப்பாடமும் நல்லா வரும் , அதில அந்தக் காலத்திலேயே அவரு இங்கிலீசு பேசின ஆளுங்கிறதால இந்தியோட சேர்த்து கணக்கும் இங்கிலீசும் டியுஷன் எடுக்கறதால அவரு டியுஷன் ஃபேமஸ் ஆயிடுச்சி. நம்ம தமிழ்ப்பிள்ளைங்களுக்கு இந்த 3 பாடமும் கொஞ்சம் வீக் என்பதால அவரு காட்டில வருஷம் பூரா மழையாம்.
கனவு 2:
பரமு சித்தப்பா டாக்சி ஓட்டினாராம். அப்பொ அவரோட டாக்சியில விசாலம் ஏறிச்சாம். பரமு கண்டுப்பிடிச்சிட்டாராம். இது நம்ம இந்தி வாத்தியாரு பொண்ணு விசாலமாச்சேனு. ஆனா விசாலம் பரமுவை அடையாளம் கண்டுக்கலியாம்.. இப்படியா பல நாளு டாக்சி ஸ்டாண்டில விசாலத்திற்காக காத்திருந்து கூட்டிட்டுப்போயி .. எப்படியோ நான் தான் பரமுனு சொல்ல
அப்படியே அந்தக் கனவு பாதியில முடிஞ்சிப்போச்சு….ச்சே..
என்னவெல்லாமோ தொடரும்போது கனவு மட்டும் தொலைக்காட்சி தொடர்மாதிரி தொடரக்கூடாதா என்ன?! அதே கனவின் தொடர்சி மறுநாள் பகல்கனவா வந்திச்சி.. அதில …
கனவு 3:
பரமு சித்தப்பா சொல்றாரு “ விசாலம், செளக்கியமா இருக்கியா? என்னைத்தெரியுதா , நான் தான் பரமு” அப்படினு
விசாலம் ஒண்ணுமே சொல்லாம உட்கார்ந்திருக்கு. ஸ்கூல் வந்தவுடனே விசாலம் காரிலிருந்து இறங்கும்போது
” தெரியும் , நீதான் பரமுனு முதல் நாளே தெரியுன்மு” சொல்லிட்டு இறங்கியாச்சு.
கனவு கட் கட் கட்.
அதன்பிறகு கனவு தொடரலை. அதனாலே கதை ரொம்ப சஸ்பென்சா இருக்கு.
பரமு சித்தப்பாவை எப்படி தேடிக் கண்டுப்பிடிப்பதுனு தெரியல.
டோம்பிவலி தமிழ்ச்சங்கம் நெல்லைப் பைந்தமிழிடம் விசாரிச்சதில
டோம்பிவலியில் முக்குக்கு முக்கு டியுஷன் நடக்கு. ஒவ்வொரு பில்டிங்க்லேயும் எதாவது ஒன்றிரண்டு வீடுகளில் டியுஷன் நடந்திட்டு இருக்கும். வேறு எதாவது க்ளு கொடுங்கனு சொல்றாரு.
எங்க ஊரு ஆட்கள் ஒன்றிரண்டு பேரிடம் நைசா விசாரிச்சதில்
பரமு சித்தப்பா முழுப்பேரு பரமு இல்லையாம். பரமானந்தம், பரமேஸ்வரன், பரசுநாதன், பிரம்மானந்தம் இப்படியாக பல பெயர்களைச் சொல்கிறார்கள்.
வக்கீலு மகன் பரமுனு ஊர்ல கேட்டா இப்போ அந்த வீட்டுக்கதையைத் தெரிஞ்ச யாரும் உசிரோட இல்லை. பக்கத்து வீட்டு ரத்தினம் சித்தியும் மண்டையைப் போட்டாச்சு. அது உயிரோட இருக்கும்போதே கேட்டிருந்தா அவரோட பெயராவது உருப்படியா தெரிஞ்சிருக்கும்.
என்னவோ.. இப்போதும் பரமு சித்தப்பா எனக்கு ஹீரோ அந்தஸ்தில முடி நரைச்சிப்போன தல தள அஜீத் மாதிரி இருக்காரு. விசாலம்தான் யாருனு இன்னும் சரியா முகம் நினைவுக்கு வர மாட்டேங்கு. அதனால என்ன இப்போ..!
இந்தக்கதையை இப்படி எந்த முடிவும் சொல்லாம முடிக்கறதில எனக்கும் விருப்பமில்ல. அதுக்காக பரமு சித்தப்பாவும் விசாலமும் எங்க ஊரு வாய்க்காலில் நீந்திக்கொண்டே டூயுட் பாடற மாதிரியோ இல்ல டோம்பிவலி ஸ்டேஷனில் டிரெயின் ஓடிட்டு இருக்கும் பின்னணியில் நாலாவது ப்ளாட்பாரத்திலிருந்து இரண்டாவது ப்ளாட்பாரத்திற்கு பாடிக்கொண்டே ஸ்லோமோஷனில் வருகிறமாதிரியோ கதையை முடிச்சிட முடியுமா என்ன! ம்கூம்.. முடியாதுங்கறேன்.
எப்படியும் பரமு சித்தப்பாவை கண்டுப்பிடிக்கிற வரைக்கும் கதை சஸ்பென்ஸாகவே இருக்கட்டும்.!
(ஐவருமாய் தொகுப்பிலிருந்து)
No comments:
Post a Comment