Friday, March 14, 2014

பயமுறுத்தும் வெற்றிகள்




தோல்விகளைக் கண்டு நான் பயப்படுவதில்லை.
அதிலும் குறிப்பாக அரசியல் தோல்விகளை.
சீனிவாசன் என்ற மாணவனுடன் தேர்தலில் போட்டியிட்ட
பெருந்தலைவர் காமராசர் தோல்வி அடைந்தார்.
அவருடைய தோல்வியை விட சீனிவாசனின் வெற்றி
நம்மைப் பயமுறித்தியது! பெருந்தலைவர் தோற்றதில்
அவருக்கு தனிப்பட்ட முறையில் எந்த இழப்பும் இல்லை.
சீனிவாசன் என்ற அன்றைய மாணவர் அந்த வெற்றிக்குப்பின்
என்னவானார்? எனக்குத் தெரியாது. ஆனால் காமராசர் தன் தோல்விக்குப்
பின்னரும் அரசியலில் தனிப்பெரும் ஆளுமையாக நின்றார். இன்றும் நிற்கிறார்.


தமிழ்நாட்டின் அரசியல் கூட்டணி ..யாருக்கு வெற்றி?
தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை இதைப் பற்றிப் பேசிப்பேசி
ஊடகங்கள் தங்கள் ஒலி ஒளிக் கற்றைகளை நிரப்பிக் கொள்ளலாம்.
தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் நாடறிந்த ஊழல் பேர்வழியாக இருக்கலாம்.
மதக்கலவரத்தைத் தூண்டிவிட்டவராக இருக்கலாம்.
இந்துக்களை இசுலாமியர்களை குண்டு வைத்து அழித்த
இந்து தீவிரவாதியாகவோ இசுலாமிய தீவிரவாதியாகவோ இருக்கலா.ம்
இப்படி இருக்கலாம்...
இருக்கலாம்..
இருக்கிறார்கள்
ஆமாம்..இருக்கிறார்கள்
அதனாலென்ன?
நாளை அவர்களே வெற்றி பெறலாம்.
அப்போது...?!!!



இப்போதெல்லாம் தோல்விகளை விட
வெற்றிகளைக் கண்டே
எனக்கு அச்சமாக இருக்கிறது!
தோல்விகளை மன்னித்துவிடலாம்.
வெற்றிகள் ரொம்பவும் கொடூரமானவை.
நியாயத்தின் நாடி நரம்புகளை அறுத்து எடுத்து
ரத்தம் குடிக்கும் காட்டேறியாக
வெற்றி ஊளையிடுகிறது.
சங்கீதம் என்று அதையும் கொண்டாட
ஒரு கூட்டம் காத்திருக்கிறது.
இமைகளைப் பிடுங்கிய இரவில்
கனவுகள் தற்கொலை செய்துக் கொண்டதற்காக
அழவும் முடியவில்லை.
தோல்விகளை விட வெற்றிகளே
என் கோப்பையில் விஷமாய்....

1 comment:

  1. உண்மைதான் சில வெற்றிகள் மிகவுமே பயமுறுத்தத்தான் செய்கிறது. குறிப்பாக அரசியலில்!

    ReplyDelete