Saturday, October 26, 2013

தங்கர்பச்சன் பதட்டமும் என் கேள்விகளும்








தமிழ் வழிக்  கல்வி குறித்து தங்கர்பச்சன் பதட்டமடைந்திருக்கும்
செய்தி மகிழ்ச்சிக்குரியது.
பதட்டத்தையும் அதற்கான காரணத்தையும் அவர்  இவ்வாறு சொல்லி இருக்கிறார். 

"வெளிநாடு சென்றிருந்த நான் சில நாட்களுக்கு முன்பு தான் சென்னை திரும்பினேன். கடலூர் மாவட்டப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி வகுப்பில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற செய்தியைப் படித்தவுடன் மிக வருத்தமாக இருந்தது. புகைப்படத்தில் பத்திரக்கோட்டை தொடக்கப்பள்ளி என்பதை பாத்தபோது மேலும் அதிர்ந்தேன். காரணம் அது நான் படித்த பள்ளி. அந்தப் பள்ளியின் அரசமர நிழலில் 'அ' என்ற எழுத்தை எழுதி எனது கல்வியைத் தொடங்கினேன். ஆலமர இலைகளைத் தைத்து அதில் மதிய உணவுடன் கல்வியையும் சேர்த்து உண்டு வளர்ந்தவன் நான். அந்த சாதாரணப் பள்ளியில் பயின்று தான் நான் ஒரு இயக்குனராக உயர்ந்துள்ளேன். எனது முதல் படமான 'அழகி', சமூகத்தில் முன்னேறியுள்ள பலர் தாங்கள் படித்த பள்ளிகள் குறித்த நினைவுகளையும் அவற்றை தரமுயர்த்த தங்களாலான உதவிகளைச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தையும் விதைத்த 'பள்ளிக்கூடம்' என்ற படத்தை இயக்க எனக்கு ஆதாரமாக இருந்தது அந்தப் பள்ளிதான். இன்றுள்ள சிந்தனையாளர்கள், படைப்பாளிகள் அனைவரும் இதுபோன்ற பள்ளிகளில் இருந்து வந்தவர்கள் தான். மொத்தமே 3,000 பேர் இருக்கும் பத்திரக்கோட்டையில், ஒருவர் கூட தங்கள் குழந்தைகளை தமிழ்வழிக் கல்வியில் சேர்க்க ஆர்வம் காட்டவில்லையே என்பது தான் என் பதற்றதுக்குக் காரணம்."


உங்கள் பதட்டத்தையும் அதற்கான காரணத்தையும் மிகவும் மதிக்கின்றேன். அதே நேரத்தில் உங்களைப்  போல திரைப்படங்கள் எல்லாம் எடுத்து எவ்வித பிரபலமும் அடையாத என் போன்ற
சாதாரண தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சில கேள்விகளையும் இந்தப் பதட்டத்துடன் சேர்த்து
நீங்கள் பார்த்தாக வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

இந்த வேண்டுகோளை வைப்பதற்கு எனக்கு மற்றவர்களை விட மிக அதிகமான தகுதி  இருக்கிறது என்பதை நீங்கள் முதலில்   தெரிந்து கொள்ள வேண்டும்..

தமிழ் தமிழ் என்று நீங்கள் பேசும் அ தே தமிழை சற்று உரக்கப் பேசிய ஒரு தலைமுறையின்
வாரிசுகள் இந்தக் கேள்வியை முன்வைப்பதில் இருக்கும் நியாயத்தை நீங்கள் புரிந்து கொண்டாக வேண்டும்.

நியாயங்கள்:

1)  தலைவர்கள் பேசிய தமிழால் தொண்டர்களின் பிள்ளைகள் எல்லாம் தமிழ் படித்தார்கள். தமிழில் படித்தார்கள். தமிழர்களாகவே இன்றுவரை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் தலைவர்களின் பிள்ளைகள் யாரும் தமிழ்ப் படிக்கவில்லையே! ஏன்?
அவர்கள் நாடாளுமன்றம் போகவும் மத்தியில் அமைச்சராகவும் இந்தி பேசக் கற்றுக் கொண்டது கூட
ஒரு காரணமாகச் சொல்லப்பட்ட தே! அப்போதெல்லாம் நீங்கள் பதட்டப்படவில்லை.
தொண்டர்களின் பிள்ளைகள் தான் தமிழைக் காப்பாற்ற வேண்டுமா என்ன?
போதும் தங்கர்பச்சன், கொஞ்சம் மாற்றிக் கொள்வோம். தலைவர்களின் பிள்ளைகளை
தமிழால் அரசாள வந்தவர்களை கொஞ்சம் தமிழ் படிக்கச் சொல்லுங்கள், தமிழில்  படிக்கச் சொல்லுங்கள்.

2) அது என்ன அரசுப்பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகள் மட்டுமே தமிழைக் காப்பாற்ற வேண்டும் என்று
எதிர்பார்க்கின்றீர்கள்?  அவர்கள் மட்டும் தான் தமிழர்களா? புற்றீசல் போல ஆங்கில வழிக்கல்வி
நிலையங்கள் திறக்கப்பட்டதும் கல்வி நிறுவனங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் போட்டிப் போட்ட
போதும் பதட்டப்படாத நீங்கள் இப்போது எதற்கு பதட்டப்படுகின்றீர்கள்?

 3) அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் எல்லோரும் சாதி ரீதியாகவும் வர்க்க ரீதியாகவும்
அடித்தட்டு நிலையில்  இருக்கும் மக்கள். அவர்கள் குழந்தைகள் ஆங்கிலம் படித்துவிட்டுப் போகட்டுமே!
தலைவர்கள், சிந்தனையாளர்கள், அறிவுஜீவிகள் என்று ஊடகங்கள் வெளிச்சப்படுத்தும் அனைவரும்
தங்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கிலம் வழிக் கல்வியில் அனுப்பி தங்கள் தரத்தை மேம்படுத்திக் கொண்டிருப்பதாக பாவனை / அல்லது தக்க வைத்துக் கொண்டிருக்கிக்கும் நினைப்பு.  இ ந்த வெளிச்சத்தைப் பார்க்கும்
எங்கள் குப்பனும் சுப்பனும் தன் பிள்ளைகள் ஆங்கில வழிக் கல்வி கற்க ஆசைப்படுவது தவறா
தங்கர்பச்சன்,?  சொல்லுங்கள்!

4) மேற்கண்ட குற்றச்சாட்டுகள் இன்றி இன்னார், இந்த தலைவர் இருக்கின்றார், இந்த அறிவுஜீவி
இருக்கின்றார் என்று நீங்கள் ஒருவரை அடையாளப்படுத்தினால்,
 தங்கர்பச்சன் அவர்களே, வாருங்கள் போராடுவோம், மும்பையிலிருந்து சில இலட்சம்
இளைஞர்களை அழைத்துவர நான் தயாராக இருக்கின்றேன்.


நம் தமிழ்நாட்டில் யார் தமிழ்ப் படிக்க வருகிறார்கள் என்று கூர்ந்து கவனித்துப் பாருங்கள்,
வேறு துறைகளில் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், மிகக்குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள், 
அப்புறம் பெண்கள்/ அதிலும், 
பெண்கள் அதிகமாக படிக்க வருவது கூட ' சரி திருமணம் வரை ஏதாவது படிச்சிட்டு இருக்கட்டும் என்ற நினைப்பும் திருமண அழைப்பிதழில் டிகிரி போட வேண்டிய அந்தஸ்த்து கருதியும் தான் படிக்கிறார்கள்.
இவ்வாறு படிக்க வந்தவர்கள் தமிழைக் காப்பாற்றிவிடுவார்கள் என்று எப்படி நம்புவது?

இன்னொரு செய்தி தெரியுமா தங்கர்பச்சன்? தமிழில் முனைவர் பட்டம் பெற்ற 95% பேருக்கு
33 வயதுக்கு மேல்தான் திருமணம் நடைபெறுகிறதாம்!
வெறும் பதட்டங்கள் , போராட்டங்கள், ஆவேச உரைகள் எங்களுக்கு அலுத்துவிட்டது.
இந்தக் கல்வி முறையில் மாற்றம் தேவை. 

இந்த நாட்டில் ஐடி துறையில் வேலைப்பார்ப்பவர்களுக்கு அதிக அளவு மன அழுத்தம் இருப்பது ஏன்?
மிகக் கேவலமாக இந்த சமூகத்தால் பார்க்கப்படும் தமிழ்ப் படித்தவன் எவனாவது தற்கொலை செய்து கொண்டதாக கேள்விப் பட்டிருக்கின்றோமா? அவன் படாத என்ன அவமானத்தை இந்த ஐடி அதிகச் சம்பளக்காரன் அனுபவித்துவிட்டான். ????
பனிரெண்டாம் வகுப்பு வரை மனப்பாடம் செய்து மார்க் வாங்கும் மாண்வன் தான் சுயமாகச் சிந்திக்க ஆரம்பிக்கும் வயதில் தன் பண்பாடு சார்ந்த மொழியைக் கற்பதில்லையே! பணம் சம்பாதிக்கும்
படிப்பை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அதை மட்டுமே படித்து வெளியில் வருபவன்
வாழ்க்கையைக் கற்றுக் கொள்ளவில்லை, அப்படி ஒரு கல்வியைக் கொடுக்கும் கல்வி முறை நம்மிடம் இல்லை.

இது ஒரு பக்கம் என்றால் தமிழ்ப் படிக்கிறவனின் நிலையும் தகுதியும் வெளியில் சொன்னால் வெட்ககேடு! பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்று
இவர்களால் எதாவது செய்ய முடியுமா?  தமிழில் படிக்கிறவன் என்றால் மொழிகள் பல தெரிந்தவன் என்ற நிலை வராத வரை தமிழில் படிப்பதை வெளியில் சொல்ல வெட்கப்படும் நிலைத்தான் தொடரும்.

தமிழ்ப்படிக்கிறவனுக்கெல்லாம் இந்தியோ, ஆங்கிலமோ, பிரஞ்சோ , சரி அதை எல்லாம் விடுங்கள்
குறைந்த அளவு மலையாளம், கன்னடம் , தெலுங்கு தெரிந்திருக்க வேண்டும், இரண்டாவது மொழியாக
இரண்டு மொழிகள் இருக்க வேண்டும் என்று மாற்றிப் பாருங்கள். தமிழ் வளரும். தமிழன் வாழ்வு
உயரும்.

சிலர் மரங்களை வெட்ட மாட்டார்களாம். வெட்டினால் வெளிப்படையாக தெரிந்துவிடும் அல்லவா?
அதனால் மரத்தில் அடியில் நஞ்சு கலந்து மண்ணொடு மண்ணாக வைத்துவிடுவார்களாம்!
அப்படித்தான் தமிழ் என்ற மரத்தின் அடியில் நஞ்சு கலந்திருக்கிறது.
அவர்கள் மண்ணைத் தோண்டிய போதெல்லாம் ஏ ன் தோண்டுகின்றாய்? என்ற கேள்வியை நாம்
கேட்கவில்லை?  உரம் வைப்பவனையும் நஞ்சு வைப்பவனையும் பிரித்தறியும் நுண்ணரசியல்
நம்மிடம் இல்லை. மரத்தின் இலைகள் வாடி விட்டன. அங்கு கூடு கட்டி இருந்த பறவைகளைக் காணவில்லை. இதோ  இந்த மரத்தில் கூடு கட்டி இங்கிருந்து தான் நான் பறக்க ஆரம்பித்தேன்,
எங்கே போய்விட்டன எம் பறவைகள்? என்று பதட்டப்படுகின்றீர்கள்.
பறவைகளைக் குற்றம் சொல்லி என்ன பயன் தங்கர்பச்சன்?

Tuesday, October 22, 2013

தேவனே...!



நான் நாடகம் எழுதினேன்
ரசித்தவர்கள் என்னை நடிக்க வைத்தார்கள்
நடிப்பு ஒரு அற்புதமான கலை
ஒப்புக்கொண்டேன்.

வசனங்கள் மனப்பாடம் ஆனது.
ஒத்திகைகள் தேவையில்லை 
மேடை ஏறிய தருணங்களில்
நாக்குகள் கீரிடங்களாக 
ஒளிவட்டங்களாக 
 தலையைச் சுற்றி
ஓடிக்கொண்டிருந்தன.
திரைவிலகிய நேரம்
ஒப்பனைகள் 
கர்த்தாக்களைக் கொலை செய்தன.

நிஜங்கள் நிழல்களின் ராஜ்யத்தில்
அடிமைகளாக இருந்ததை
உணர்ந்த தருணம் அது.
சாத்தான்கள் வேதம் ஓதலாம்
வேதங்களே சாத்தான் ஆகலாமா?

சிலுவையைச் சுமந்தபடி
ரத்தக்கறையுடன்
தொடரும் பயணத்தில்
பாவமன்னிப்புகள்
மறுக்கப்பட்டன.
சுயம் காயடிக்கப்பட்டது.
இந்தக் கல்லறையிலிருந்து
மீண்டும் விழித்தெழ
அந்த தேவனின் ராஜ்யம்
"பரிசுத்தப்படுவதாக"
ஆமென்.






Sunday, October 13, 2013

கனவுகள் விழித்திருக்கின்றன







சகலமும் நொறுங்கிய புள்ளியில்
உன் அவதாரம்
என்னில் ஜனித்தது.

வெறுமையிலிருந்து
நீ வெளியில் வந்தாய்
என்னையும் சேர்த்து
இழுத்துக்கொண்டு.


நான் யாரென்று
அறியாத பயணத்தில்
நீ
வெறும் கற்பனையோ
என் கனவுகளில்
பச்சைப்பாவாடையில்
பக்கத்தில் ஓடிவந்த
அவளோ?
அவள் பிம்பமோ?
யாரென்று
நான் சொல்ல?

விழிகள் திறந்துவிட்டால்
விளையாடும் மேகங்கள்
களைந்துப் போய்விடுமோ?
அச்சத்தில்
கண்மூடிக்கிடக்கின்றன
விடிவெள்ளிகள்.

விழித்திருப்பதாக
இதுவரை ஆடிய
ஆட்டம்
தோற்றுப்போனது.

இரவு விழிகள்
களவாடியக் கனவுகள்
இன்னும் தூங்கவில்லை
விழித்திருக்கின்றன
எனக்காக.

Wednesday, October 9, 2013

கண்ணனின் குழலோசையில் மயங்காத எருமைகள்



எருமைமாடுகள் எல்லாம் சோகம் ததும்பும் தங்கள் கதையை
கவிதையாக எழுதிக்கொண்டிருந்தன. நித்தமும் சகதியில்
புரண்டுக் கொண்டிருப்பதையே குளியலாகக் கொண்டிருக்கும்
வாழ்க்கையின் அவலத்தை எருமைகளை விட எவரால் எழுதிவிட முடியும்?

எருமைகளின் எழுத்துகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் அந்தச் சகதியின் ஈரம் யானைகள் குளித்துவிட்டு வந்ததில் விழுந்த
நீரின் ஈரமல்ல. பன்னிகள் கூட்டமாக காடுகளில் உலவிவிட்டு
வந்து செருமிய எச்சிலில் பட்டுத் தெறித்த ஈரமும் அல்ல.
அந்த ஈரம் எருமைகளுக்கு மட்டுமே உரியது. சகதியில்
இறங்கி முழங்கால் அளவுக்கு சீலையை தூக்கிக் கட்டிக்கொண்டு
நாற்று நடும் பெண்ணுக்கு எருமையின் ஈரம் தெரியும்.
அவள் எருமையை வெறுப்பதில்லை. எருமையின் கவிதைகளை
அவள் வாசித்ததைவிட எருமைகளுடன் பேசிப் பேசி எருமைகளைப் பற்றிய நாட்டுப்புறப் பாடல்களை அவள் தன்
வலி தீர பாடிக்கொண்டுதான் இருக்கிறாள்.
ஆனால் என்ன செய்வது?
மீண்டும் பசுக்களுக்கே வெற்றி உறுதியானது.
பசுவின் பால் வெள்ளையாக இருப்பதை உலகமே வியந்து பாரட்டியதுடன் இது பசுவாக்கும், பார்க்க அழகாக இருக்கிறது,
பால் கொடுக்கிறது என்றெல்லாம் போற்றிப் புகழ்ந்து ஒரு
டாகுமெண்ட்ரி ஃபிலிம் எடுக்கும் அளவுக்குப் புகழ் சேர்த்துவிட்டார்கள்..






நரேந்திர மோதிக்கு ஒரு ஏஜன்சி இருக்கிறது. அந்த ஏஜன்சி மோதியின் புகழ்ப் பாடுவதில் பல்வேறு வழிமுறைகளைக் கையாளுகிறது.



இதைக் கேள்விப்பட்ட எருமை
என்ன விலை கொடுத்தேனும் அந்த ஏஜன்சியின் கஸ்டமராக
வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது.

எவ்வளவோ எருமையிடம் சொல்லிப்பார்த்தேன். எருமை
கேட்கத் தயாராயில்லை.
எருமைக்கு எப்படியும் புகழ்ப்பெற்ற பத்திரிகைகளில்
கவர் ஸ்டோரியாக வர வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது.


எருமையிடம் கேட்டுப் பார்த்தேன் உன் ஒரே காதல் கணவன் எமராஜனை நீ வெறுத்து ஒதுக்க வேண்டும்.
அவன் உனக்கு எவ்வளவு கொடுமைகள் செய்கிறான் என்று
நீ சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்று
முதல் அட்வைஸ் சொன்னேன்.

அய்யய்யோ.. எங்க எமராசாவை அப்படி எல்லாம் குறை சொல்ல முடியாதே! ரொம்ப நல்லவராச்சே, முடியாது என்று
மறுத்துவிட்டது..

'ஃபேர் அன்ட் லவ்லி போட்டு உன் கலரை மாத்தி ஆகனும்.
இது என்ன கறுப்பு! அவலட்சணம்.. உன் கலர் தான் உனக்கு எதிரா இருக்கும் பிரச்சனையே! மைக்கல் ஜாக்சன் மாதிரி
உன் தோல் நிறத்தை மாற்றி ஆபரேஷன் செய்து பசுக்களின்
தோலை உன் மீது ஒட்டிவிடலாமா? கேட்டேன்.

'அய்யய்யோ வேண்டாமே... அப்புறம் எங்க பெருமை எல்லாம்
பசுவின் பெருமையாகிவிடும்... முதலுக்கே மோசம் வந்திடும்..
வேறு வழி சொல்லுங்கள்" என்றது எருமை.

இருந்தாலும் இந்த எருமைக்கு தன் கறுப்புக்கலரின் மீது இவ்வளவு அசட்டுத்தனமான பெருமை இருக்க வேண்டாம்
என்று மனசில் நினைத்துக் கொண்டேன்!

எருமை கொஞ்சம் புத்திசாலியாக இருப்பதாகவே பட்டது.
சரி, கவனமாக பேச வேண்டும் என்று முடிவு செய்துக்கொண்டேன்.

சரி, எருமையைப் பற்றி ஒரு டாகுமெண்ரி எடுத்து
டிஸ்கவரி சேனலிலோ அல்லது அனிமல்ப்ளாநெட்
சேனலிலோ போட்டு ஒளிபரப்பி விட்டால் நம் எருமையின்
பெருமை உலகம் எங்கும் பரவி விடும். அதன் பின்
இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா ஐரோப்பா
கண்டத்திலும் எருமை தான் கவர் ஸ்டோரியாகும் என்று
கற்பனை செய்துக் கொண்டு எருமையைப் பற்றி
டாகுமெண்ரிக்கு தயார் ஆனோம்.

எருமை குட்டையில் குளித்துவிட்டு எழுந்துவரும்,
அதை அப்படியே க்ளோஸப்பில் காட்ட வேண்டும்.
இதுதான் என் குளியல் என்று சொல்லிவிட்டு
எருமை ஓவென்று அழ வேண்டும், அந்தக் காட்சியைக்
காட்டும் போது அப்படியே பசு எப்படி ஓடும் நதியிலோ
குளத்திலோ குளிக்கிறது என்பதையும் மற்ற பிராணிகள்
ஓடும் நதியில் குளிப்பதையும் காட்ட வேண்டும் என்று
நினைத்தேன். எருமை குட்டையில் குளித்துவிட்டு
முகம் நிறைய சந்தோஷத்துடன் அசைந்து தேர் போல
எழுந்து வந்தது.
எவ்வளவோ சொல்லியும் குட்டையில் குளித்துவிட்டு
அழ வரவில்லை எருமைக்கு.
எனக்கு நடிக்கவெல்லாம் தெரியாது, திஸ் இஸ் வாட்
ஐயம் என்று திமிராக வேறு எருமை சொல்லி
என்னை வெறுப்பேற்றியது.

அந்த ஐடியாவையும் கை கழுவி விட்டேன்.

எருமையிடம் நீ எமனை டைவர்ஸ் செய்துவிட்டு சிவனை
லவ் பண்ணினால் பரபரப்பான செய்தி ஆகிவிடும் என்று
சொன்னேன். கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தது எருமை.
பிறகு தலையை ஆட்டிக்கொண்டு
ம்கூம் முடியாது; என்றது.

என் எமனிடம் இல்லாத என்னது சிவனிடம் இருக்கு,
அவனை லவ் பண்ண?
ஊருக்கு ஒரு வப்பாட்டி வச்சிக்கிர ஆளு அவன்,
எனக்கு அவனை லவ் பண்ற மாதிரி கற்பனை செய்யக் கூட
முடியல என்று கையை விரித்துவிட்டது.

எருமை எழுதி இருக்கும் புத்தகங்களை எல்லாம் வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன், வயலில் சகதியில் இறங்கி நாற்று நடும் பெண்,
அவள் தாலாட்டு, வயக்காட்டில் அவள் பெத்தெடுக்கும் பிள்ளை,
குளக்கரை ஓரம் காரில் வந்து இறங்கி கறுப்புக் கண்ணாடியைக் கழட்டாமல் புகைப்படம் எடுக்கும் பெண்மணி , எதைப் பற்றியும்
கவலைப்படாமல் இருக்கும் ஞானயோக சித்தியை அடைவது எப்படி என்று இப்படியாக என்னவெல்லாமோ எழுதி வைத்திருந்தது அந்த எருமை. அந்த எருமையின் எழுத்தில்
எங்குமே ஒரு மருந்துக்கு கூட இல்லை...

கண்ணனின் குழலோசையும் அந்த இசையில் மயங்கிய ஆயர்குல ஆடு மாடுகளும் நிர்வாணமாக நின்ற கோபியர் கதைகளும்.
ஆமாம் ... கண்ணனின் குழலோசையில் மயங்கியதாக
எருமைகள் காட்டப்படவே இல்லையே ...
ஏன்?
அப்போது ஆயர்பாடிகளில் எருமைகள் இல்லையா?
எருமைகள் எங்கிருந்தன அப்போது?

எனக்கு அழுகை வந்தது.
எங்கிருந்தன என் எருமைகள் அப்போது?
காற்றில் கலந்து வந்த கண்ணனின் குழலோசையை
என் எருமைகளுக்கு எட்டாமல் ஆக்கியது யார்?
கண்ணனா...? கண்ணணின் ஆயர்பாடிக் கூட்டமா?
கண்ணனின் கீதையைக் கொண்டாடும்
நீங்களா?
யார்?


எருமைகளைப் பற்றிய என் தேடல் இருக்கட்டும்.
நேற்று எனக்கு அறிவுரை என்ற பெயரில்
எனக்கு ரொம்ப வேண்டியவர் ஒருவர் எழுதியிருந்த
டிப்ஸ்கள் சில... (எருமைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்
என்று கேட்காதீர்கள். எருமையைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கும் போது இதுவும் வந்தது என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை
என்று சத்தியமாக சொல்கிறேன்)


பேரும் புகழும் அடைய ....

இலக்கிய உலகத்தில் பிதாமகன்களின் செல்லப்பிள்ளையாக இருக்க வேண்டும், நெருக்கமாக இருக்க வேண்டும்
அதிலும் குறிப்பாக சில பதிப்பகங்களுக்கும் பத்திரிகைகாரர்களுக்கும்!
(இதெல்லாம் நமக்குத் தெரிந்தச் செய்திதான்.
வலைத்தளத்தில் எழுதிக்கொண்டிருக்கும் பலர் வெவ்வேறு
பெயர்களுடன் தாங்கள் எழுதியிருப்பதற்கு தாங்களே
மறுவினை/எதிர்வினை எழுதிக் கொண்டே இருக்கின்ற
இன்னொரு டெக்னிக்கும் பலர் அறிந்த ஒன்றுதான்.
ஆனால் இப்படி எழுதிக்கொண்டிருப்பவர்களில் பலர்
இந்தமாதிரி எழுதப்படுவதை கண்டுபிடிக்க முடியும் என்பதை
அறிந்துதான் எழுதுகின்றார்களா? தெரியவில்லை!)

உங்களுக்குத் தெரிந்ததாக நீங்கள் சொல்லும் பெரியமனிதர்கள்
எல்லோரும் வெஸ்ட் பேக்கேஜ். அவர்களை வைத்து உங்களுக்கு எதுவும் நடக்காது. ..

உங்கள் கணவர் வேறு அநியாத்திற்கு நல்லவரா இருப்பதாக
சொல்லிக்கொள்கிறீர்கள். அது எனக்குப் பிடிக்கவில்லை மாதவி.
அப்படி எல்லாம் இருக்கிறமாதிரி ஒரு எழுத்தாளர் சொல்லப்பிடாது! ஆண்கள் என்றைக்காவது பெண் விடுதலையை ஆதரித்ததாக உண்டா? உங்கள் பெரியார் என்ன சொல்லி இருக்கிறார்? நினவிருக்கிறதல்லவா? எனவே உங்கள் கணவர் ரொம்ப கொடுமைக்காரர், நீங்கள் எழுதுவதை அவர் ஆதரிக்கவில்லை, அப்புறம் நீங்க பாத்ரூமில் உட்கார்ந்து
லேப்டாப்பில் எழுதிக்கொண்டிருப்பதாகச் சொல்ல வேண்டும்,
நீங்க லேட்டஸ்ட்டா எழுதியிருக்கும் ஒரு கதையை வாசித்தேன்.
ஒரு பெண் தொழிலாளி பற்றிய கதை. அதில் வீட்டிலும் வேலைப்பார்க்கும் இடத்திலும் அவள் பட்ட கஷ்டங்களை
எழுதி இருக்கின்றீர்கள். அதில் நீங்கள் தலைமுடியை பிடித்து
இழுத்து இடுப்பில் உதைத்தான் என்ற வரிகளில் தலைமுடி
என்பதற்குப் பதில் 'முலை' என்றும் இடுப்பு என்பதற்குப் பதில்
"யோனி" என்றும் மாற்றிவிட்டேன், இப்போது வாசித்துப் பாருங்கள் கதை சூப்பராக இருக்கிறது..

(தலைமுடியைப் பிய்த்துக் கொண்டேன். கதையை சூப்பர் கதையாக்கும் உத்திகள் இப்படி எல்லாம் இருக்கிறது என்று
எவரும் சொல்லவில்லையே என்று!)

ஒரு நேர்க்காணலுக்கும் ஏற்பாடு செய்கிறேன்.. அந்த நேர்க்காணலில் நீங்கள் தாராவியில் ரொம்பவும் கஷ்டப்பட்டதாகச் சொல்ல வேண்டும், அப்புறம் உங்கள் கணவர் எப்படி எல்லாம் உங்கள் எழுத்துக்கு எதிராக இருந்தார் என்பதை அம்பலப்படுத்த வேண்டும், தேவைப்பட்டால் உங்கள் நண்பர்கள்
யாராவது உங்களுக்கு ரகசியமாக ஆறுதலாக இருந்ததாகச் சொல்லவேண்டும். உங்கள் நண்பருக்கும் அதனால் லாபம் தானே! அதன் பின் தாராவியில் கடற்கரையோரம் இருந்த அந்தக் குடிசையின் மாலா (குடிசைப்பகுதியின் மாடி) விலிருந்து நீங்கள்
பார்த்துக்கொண்டிருந்த வோப்பன் தியேட்டர் தான் நீங்கள் பார்க்க கிடைத்த உலகம் என்று சொல்ல வேண்டும்.
என்று அந்தக்கடிதம் நிறைய வழிமுறைகளை எழுதியிருந்தார்.
பல பிரபலங்களை உருவாக்கியவர் எழுதியக் கடிதம் அது.
அதனால் தான் அதைப் பற்றி எழுதியாக வேண்டிய
நிலை எனக்கு ஏற்பட்டிருக்கிறது!.

நண்பர்களே... அக்கடிதத்தில் எழுதி இருக்கும் எந்த வழிமுறைகளையும் என்னால் பின்பற்ற முடியாது!
ஏனேனில் அம்மாதிரியான பொய்முகங்களை அணிய வேண்டிய
அவசியம் எனக்கில்லை.
நான்குத் தலைமுறையாக இந்த மும்பை
மண்ணில் வாழ்ந்தக் குடும்பப் பின்னணியில் சமூக வெளியில்
தாராவியின் ஒவ்வொரு சந்தும் என்னைப் பற்றி சகலமும் அறியும். என்னைப் பற்றி யாரும் குறும்படம் எடுக்கவில்லையே என்றெல்லாம் எனக்கு வருத்தப்பட நேரமில்லை.

தலையில் இட்லி பாத்திரத்துடன் இரண்டு தூக்குச்சட்டியில் சட்னியும் சாம்பாரும் வைத்துக்கொண்டு விற்றுப்பிழைக்கும் என் அண்ணன் தம்பிகள் ஆயிரமாயிரம் பேர் இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு பல இலட்சம் இட்லிகளை விற்கும் அவர்களைப் பற்றி யாராவது குறும்படம் எடுக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.

தாராவியின் ஒவ்வொரு முகமும் என்னில் புதைத்து வைத்திருக்கும் கதைகள் பலகோடி. என் மக்களுக்கு நான் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. அதற்காக ஓடவே எனக்கு நேரமில்லை.

எப்படி புகழ் அடைவது?
இன்னாருக்கு இன்னார் எழுதிக் கொடுக்கிறார்.என்று தண்ணி அடித்து விட்டு உலறும் கிசுகிசுக்கள்
ஆங்கிலப் பத்திரிகைகள் எழுதும் கவர் ஸ்டோரி
அதற்குப் பின்னால் இருக்கும் சில காரணிகளும் காரணங்களும்..
நீங்கள் அறியாதது அல்ல.
தொடர்ந்து என்னிடம் புலம்பித் தீர்க்கும் உங்கள் கவலை
எனக்குப் புரிகிறது.


பாவம் நீங்கள் ..
உங்கள் ஆதங்கத்தை நான் புரிந்து கொள்கிறேன்.

ஆனால் உங்களுக்கு எப்படி புரியவைப்பது..?
வாழ்க்கை உங்களுக்கு ஒலிம்பிக் பந்தயம்.
வாழ்க்கை எனக்கும் என் எழுத்துகளுக்கும் என் மக்களுக்கும்
தங்கள் இருத்தலுக்காக எடுத்து வைக்கும் அடி.என்பதை.

(இதைக் கட்டுரைப் பிரிவில் சேர்க்கவா அல்லது
கதைப் பிரிவில் சேர்க்கவா என்று குழப்பமாக இருக்கிறது.
வாசிப்பவர் விருப்பத்திற்கு விட்டுவிட்டேன்)