Saturday, October 6, 2007

எங்கள் தேசப்பிதாவே


எங்கள் தேசப்பிதாவே
-------------------------
எங்கள் தேசப்பிதாவைக்
காணவில்லை
கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு
மும்பை மாநகரை
முழுசா கொடுக்கிறொம்
எங்கள் தேசப்பிதாவை
தொலைத்துவிட்டோம்

குண்டு மழையில்
குருதி வெள்ளத்தில்
மிதக்கிறது
எங்கள் சுதந்திர பூமி

தண்டவாளங்களில்
வெடித்துச் சிதறுகிறது
அஹிம்சைத் தேவியின்
அனாதைக் கனவுகள்

எங்கள் தேசப்பிதாவை
தொலைத்துவிட்டோம்
கண்டு பிடித்து கொடுப்பவருக்கு
அரபிக்கடலை ஆஸ்தி ஆக்குவோம்

அமெரிக்க வல்லரசின்
அணு ஆயுத ஒப்பந்தங்களின்
சாட்சியாக
செங்கோட்டையில்
பறக்கிறது
எங்கள் மூவர்ணக்கொடி

மித்தி நதியின்
குடிசை வானத்தில்
செயற்கை கோள்கள்
சீறிப்பறக்கின்றன.

எங்கள் தேசப்பிதாவை
தொலைத்துவிட்டோம்
கண்டு பிடித்து கொடுப்பவருக்கு
இமயப் பெருமலையை
எடுத்துக் கொடுத்திடுவோம்

திருவிழாவில்
குழந்தைகளைத் தொலைத்த
பெற்றவர்கள் உண்டு
நாங்களொ
தந்தையே
சுதந்திர தேவியின்
மணிவிழா மண்டபத்தில்
உன்னைத் தொலைத்துவிட்டோம்.

முன்னாபாயின்
முகவரியில் இருப்பதாய்
வெள்ளித்திரையில்
விளம்பரம் போட்டார்கள்
எட்டிப் பார்த்து
ஏமாந்து போனோம்

எங்கள் தேசப்பிதாவை
காணவில்லை..
கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு
இந்திய தேசத்தையே
இனாமாய்க் கொடுக்கிறோம்
எங்கள் தேசப்பிதாவைத்
தொலைத்துவிட்டோம்....


எங்கள் தேசப்பிதாவே...
வெள்ளையரின் ஆட்சியில்
விடிவெள்ளியாய் நீ
கொள்ளையரின் ஆட்சியில்
இருண்டு போனாய்.

கோட்சேயின் குண்டுகளில்
உயிர்த்து எழுந்த உன்னை
ராமபிரானின் அம்புகளால்
எங்கள் அரசியல்வாதிகள்
சிலுவையில் அறைந்துவிட்டார்கள்.

எங்கள் தேசப்பிதாவே
எங்கள் தலைவர்களை
மன்னித்துவிடு
அவர்களைத் தலைவர்களாக்கிய
எங்களையும் மன்னித்துவிடு.


-------------------------------------------------------

எங்கள் தேசப்பிதாவே
நீ எங்களுடன் இருந்தால்
எதையும் சாதிக்கலாம்
அரசியல் வாதியை
அடியாள் ஆக்கலாம்
கூட்டணிக்குள்
கூட்டணி அமைக்கலாம்
எம்.பி , எம்.எல்.ஏக்களை
விலைக்கு வாங்கலாம்
எங்கள் சுதந்திர இந்தியாவில்
இந்து இசுலாம்
கிறித்தவன் சீக்கியன்
யாராக இருந்தாலும்
உன் புன்னகைக்காகவே
தவமிருக்கிறார்கள்
கறுப்பு வெள்ளையாய்
எப்போதும் புன்னகையுடன்
இந்திய தேசத்தின்
மதிப்பாய் வாழும்
எங்கள் தேசப்பிதாவே
உனக்கு எங்கள் அஞ்சலி.

------------------------------------------